திருக்கயிலாய மலையில், பார்வதியன்னையின் பசுந்தோள்களைப் பற்றியபடி அமர்ந்திருந்த சிவனார், பூமிப்பந்தைப் பார்த்து புன்னகைத்தார். 'பூமியின் அழகே அழகு! நீலக்கடலும் பச்சை நிலமும் போட்டிப் போட்டுக் கொண்டு... அடடா, அந்தப் பந்து சுழல்கிற சுழற்சி, உன் அண்ணன் கையிலிருக்கிற திருவாழிச் சக்கரம் சுழல்வது போலவே இருக்கிறது தேவி’ எனச் சிலாகித்துச் சிரித்தார் சிவனார். அதைக் கேட்டு ரசிப்பதா, கோபப்படுவதா எனப் புரியாமல் மெள்ளச் சிரித்தாள் அன்னையார்! அவளின் முகச் சலனத்தை அறிந்த பரமனார், 'என்ன தேவி?’ என ஆதுரத்துடன் கேட்டார்.
''அண்ணனின் கைச் சக்கரமும் சங்கும், இப்போது வேலையின்றி இருப்பதாக அறிந்தேன்'' என்றாள். உடனே அவர், ''பின்னே... அண்ணனின் ஆயுதங்களை நீ ஏந்திக் கொண்டு, விஷ்ணுதுர்கையாகி நிற்கிறாய். அவர் என்ன செய்வார், பாவம்?'' என்று சொல்ல... ''கிண்டலை விடுங்கள்; அண்ணனின் பஞ்சா யுதங்களும் தற்போது பணி யற்றுக் கிடப்பது உங்களுக்குத் தெரியாதா, என்ன?'' எனக் கோபம் கொண்டாள்.
சங்கும் சக்கரமும், நந்தகமும், சார்ங்கமும் மூலைகளில் முடங்கிவிட்டன. பரமபதநாதனின் பச்சைத் திருமேனியின் வளமையால், பூமிப்பந்தும் பச்சைப் பசேலனப் பரிமளிக் கிறது. செங்கண்மால் சுருங்கிக் கொண்டதால், அவரது ஆழிச்சக்கரமெனச் சுழலும் அழகு பூலோகமும் அசைவை நிறுத்திவிடும்; நீலக்கடலும் பச்சைமலையும் கொண்டல் மேகங்களும் கோல மலர்களும் அவரின் திருமேனி விளக் கங்களே அல்லவா!'' என்றார் சிவனார்.
''அப்படியிருக்க, எந்த முயற்சி யும் எடுக்காமல், சிரித்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்றாள் தேவி. அதற்கும் சிரிப்புதான் வந்தது சிவனாருக்கு! பிறகு அவரே, ''உன் அண்ணனின் தவத்தைப் பரிகசித்துச் சிரிக்கவில்லை. அவர் எதற்காகத் தவம் செய்கிறார் என அறிந்து, இதென்ன... விபரீத விருப்பம் என்றே நகைத்தேன்'' என்றார்.
அவளும் விடவில்லை. ''அப்படியென்ன விபரீதத்தைக் கண்டீர்கள்?'' என வினவினாள். உடனே ஈசன், ''உன் அண்ணனுக்கு சிவ சாரூபம் வேண்டுமாம். அதற்காகத்தான் இந்தத் தவம்'' என்றார். இதைக் கேட்டு மெள்ள நிமிர்ந்தாள் உமையவள். ''அப்படி யெனில்... அண்ணனுக்கு... தங்களைப் போன்ற வடிவம்... வேண்டும் என்று...'' என மெள்ள இழுத்தாள் தேவி.
''ஆமாம். சிவ சாரூபம். அதாவது, சிவனைப் போன்ற வடிவம்; சிவனுக்கு அணுக்கமான வடிவம் வேண்டுமாம்! உன் அண்ணனாயிற்றே! ஆஹா ஓஹோ வென்று ஏதாவது சொல்லியிருப்பாய். அதுதான் இப்படியரு ஆசை வந்து விட்டது, அரங்கனாருக்கு!'' என்றார்.
உடனே அவள், ''என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள். நீங்கள் இரண்டுபேரும் அடிக்கிற கூத்து, உலக மக்களைக் கேட்டால், கதை கதையாகச் சொல்வார்கள். நீங்கள், பாம்பைப் பிடித்துக் கழுத்தில் போட்டுக் கொண்டு கூத்தாடுவீர்கள். அவரோ, அதன் மீதே படுத்துக்கொண்டு, பாசாங்கு செய்வார். நீங்கள், குதிரை ஓட்டிக் கொண்டு மதுரைக்குப் போவீர்கள்; அவர், குதிரைகளை மேய்ப்பதற்காக, குருக்ஷேத்திரத்துக்குச் செல்வார். அதெல்லாம் கிடக்கட்டும்... அவரது தவத்தை, விரைவாக நிறைவு செய்ய உதவுங்கள். உண்பதையும் உறங்கு வதையும் விட்டுவிட்டு, மலர்மகளும் நிலமகளும் கவலையில் இருக்கின் றனர்'' என்றாள் பார்வதிதேவி.
''பார்வதி, உன் அண்ணனின் தவத்தை இப்போதே நிறைவு செய்ய வைக்கலாம். ஆனால் அவர் கேட்பதை இப்போது கொடுக்க இயலாது. ஆண்டவனைவிட அடியார்களே அதிகமாக அருளமுடியும் தேவி. சிவனே தராத சிவ சாரூபத்தைச் சிவநாமமும் சிவனடியார்களின் பெருமையுமே தரும் என்பதை உலகுக்குப் புரியவைக்கவே அரங் கனும் அடியேனும் இந்த விளையாட லைத் துவங்கியுள்ளோம். அதனால் அவருக்கு சிவ சாரூபம் இப்போது இல்லை'' என்றவர் தொடர்ந்தார்...
''திருநாவுக்கரசர் பூவுலகைப் பாடல்களால் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்து, ஞான சம்பந்தப் பிள்ளை வரும். அந்தப் பிள்ளையின் பாடலைக் கேட்டால், பரந்தாமனுக்குச் சாரூபம். அதுவும், அம்பிகையான நீ அருளாட்சி செய்யும் காஞ்சியில்தான் நிகழும். தங்கையின் ஆட்சி மீது, அண்ண னுக்கு எல்லையில்லா நம்பிக்கை'' என அன்னையைச் சீண்டியபடியே ஆனந்தித்தார் சிவனார்!
ஞானசம்பந்தர் எனும் பெயரைக் கேட்டதும், அன்னையின் முகம் விகசித்து விரிந்தது. என்ன இருந்தாலும், ஞானப்பால் அருந்தவிருக்கும் அழகுப் பிள்ளையல்லவா! ''அந்தப் பிள்ளையின் பாடலென்றால், அகிலத்துக்கே சிவ சாலோகம் கிடைக்கும். சரிசரி... தங்களின் நாடகத்தைத் தொடருங்கள். கண்டு சுவைக்க நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்'' என அன்புடன் அன்னை ஆணையிட, கைகட்டி வாய்பொத்தி, சென்னி பணிந்த சிவனார், திரிசூலத்தைத் தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டே அங்கிருந்து அகன்றார்.
சிவ சாரூபம் வேண்டித் திருமால் தவமியற்றிய தலம், அவரிடம் ஞானசம்பந்தர் வரும்போது அவரது பாடலைக் கேட்டால் சாரூபம் கிடைக்கும் என சிவனார் வரம் வழங்கிய தலம், திருமாலும் சிவலிங்க ஸ்வரூபத்தில் காட்சி தருகிற தலம், மேற்கு நோக்கியபடி சிவனார் காட்சி தரும் தலம், நூற்றெட்டு ருத்திரர்கள் பூசித்த தலம்... அந்த அற்புதத் தலத்தைத் தரிசிக்க வேண்டுமா? வாருங்கள், காஞ்சிபுரத்துக்கு!
காஞ்சிபுரத்தின் பாடல்பெற்ற தலங்கள் ஐந்தில், திருக்கச்சி மேற்றளியும் ஒன்று. மேற்கு + தளி (தளி என்றால் கோயில்). காஞ்சியின் மேற்குப் பகுதியில் உள்ள கோயில். ஸ்வாமிக்கு மேற்றளீஸ்வரர் என்றே திருநாமம். கோயில் இருக்கும் வீதிக்கு மேற்றளீஸ்வரர் தெரு என்று பெயர். ஆனால், இப்போது மக்களிடையே, இந்தப் பெயர்கள் அவ்வளவாகப் புரியவில்லை. மேட்டீஸ்வரர் என்றும் தெருமேட்டீசர் (திருமேற்றளீஸ்வரர் என்பதன் 'திரு’ தான் அப்படி அநியாயமாகச் சிதைந்திருக்கிறது) என்றும் பலர் கூறுகிறார்கள். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ளது இந்தக் கோயில். ஆளுடையபிள்ளையாரான திருஞானசம்பந்தர் வந்து பாடியதால், பிள்ளையார்பாளையம் எனும் பெயர் அமைந்ததாம்!
மேற்றளீஸ்வரர் தெருவின் கிழக்கு முனையில் ஞானசம்பந்தர் ஆலயம் இருக்கிறது; மேற்கு முனையில் மேற்றளீஸ்வரர் ஆலயம். பழைமையான கோயில். கிழக்கிலுள்ள மூன்று நிலை ராஜகோபுரமே, பிரதான வாயில். கோபுரத்தின் இருபுறமும் விநாயகர் மற்றும் முருகர் சந்நிதிகள்.
முதலில், திருஞானசம்பந்தரை கண்ணாரத் தரிசிப்போம். பிறகு மேற்றளீஸ்வரர் கோயிலுக்குள் நுழைவோம்!
திருஞானசம்பந்தரின் பாடலைக் கேட்டு உருகி, திருமால் சிவ சாரூபம் பெற்றார் என்கிற வரலாறு சொல்லப்பட்டாலும், ஞானசம்பந்தரின் குறிப்பிட்ட பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஞானசம்பந்தர் கோயிலிலிருந்து மேற்றளியைக் காணும்போது, சற்று எட்டத்தில், இடப்புறம் மற்றொரு கோயிலும் தெரிகிறது. அது என்ன?
அங்கு எழுந்தருளியிருப்பவர், அருள்மிகு உற்றுக்கேட்ட முக்தீசர். திருஞானசம்பந்தப் பெருமான் கிழக்குக் கோடியில் நின்று பாடினாராம்; சின்னக் குழந்தையன்றோ! அதனால் அவர் குரல் சரியாகக் காதில் விழவில்லையாம். அதனால் சிவனார், மேற்றளி விட்டு அருகாக எழுந்தருளி உற்றுக்கேட்டாராம். ஆகவே, உற்றுக்கேட்ட முக்தீசர் ஆகிவிட்டார்.
சின்னஞ்சிறிய கோயில். மூலவர் சந்நிதியைச் சுற்றி சிறிய பிராகாரம்; விநாயகர், சுப்ரமணியர், கால பைரவர், சூரியன் சந்நிதிகள். அற்புத தரிசனம்!
இனி, மேற்றளி ஆலயத்தைத் தரிசிக்கலாம். கோயிலுக்குள் நுழைந்தால், விசாலமான இடம். ஏதோ கிராமத்துக்குள் வந்துவிட்டது போன்ற அசாத்திய அமைதியுடன், அழகாக இருக்கிறது. இன்னும் உள்ளே செல்ல... பலி பீடம், நந்தி. நமக்கு வலப் புறத்தில் வில்வ மரம், நாகர்கள். எதிரே நோக்கினால், இடப் புறத்தில் ஒரு மண்டபம்; சொற்பொழிவு மண்டபம்
என்றே பெயரிடப்பட்டிருக்கிறது. வலப் பக்கம் திரும்பினால், நவக்கிரக சந்நிதி. இதற்கும் மேற்காக ஒரு தனிக்கோயில் தெரிகிறது. வலமாகச் சென்று காண்கிறோம்.
ஆஹா! இதுதான் திருமேற்றளீஸ்வரர் சந்நிதி. மேற்குப் பார்த்ததாக உள்ள இதுவே, ஆலயத்தின் மூலட்டானம். மூலவருக்கு முன்னால், பலிபீடம், நந்தி உள்ளன. சிறிய முகப்பு மண்டபமும், அர்த்த மண்டபமும் அமைந்த சிறிய சந்நிதி. மூலவர் திருமேற்றளீஸ்வரர். வட்ட வடிவ ஆவுடையாரோடு அழகுற மிளிர்கிறார்.
செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றைசூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க் கொன்றைசூடிக்
கல்வியைக் கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே
- என்று அப்பரால் போற்றப்பெற்ற சிவனார் இவர்.
கச்சி ஏகாம்பரேஸ்வரரை தரிசித்த பின்னர், இங்கு வந்த அப்பர் பெருமான், இவரைப் பாடினார். 'வேதங்களைப் பாடிக்கொண்டே போய்ப் பிச்சை ஏற்பவர்; காஞ்சியில் உறைபவர்; ஓயாது ஆடல்பாடல் செய்பவர்’ என்று சிவனைப் பாடுகிறார்.
மறையது பாடிப் பிச்சைக்கு என்றகம் திரிந்து வாழ்வார்
பிறையது சடைமுடிமேல் பெய்வளையாள் தனோடும்
கறையது கண்டம் கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே
பிறையது சடைமுடிமேல் பெய்வளையாள் தனோடும்
கறையது கண்டம் கொண்டார் காஞ்சிமாநகர் தன்னுள்ளால்
இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே
சுந்தரரும் இந்தத் தலத்துக்கு வந்தார்...
உற்றார் சுற்றமெனும் அதுவிட்டு நுன் அடைந்தேன்
எற்றால் என்குறை என் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திருமேற்றளி உறையும்
பற்றே நுன்னை அல்லால் பணிந்தேத்த மாட்டேனே
எற்றால் என்குறை என் இடரைத் துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திருமேற்றளி உறையும்
பற்றே நுன்னை அல்லால் பணிந்தேத்த மாட்டேனே
- என்று இறைவனைப் போற்றினார்.
அடியார்கள் அடிபணிந்த மேற்றளீஸ்வரரைக் கண்ணாரக் கண்டு நிற்கிறோம். இந்தச் சந்நிதியின் கோஷ்டங்களில் ஸ்ரீதுர்கை, ஸ்ரீபிரம்மன், ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர் ஆகியோரைத் தரிசிக்கலாம். மேற்கு நோக்கிய சந்நிதி என்பதால், கோஷ்ட மூர்த்தங்களின் நிலைகளில் சிற்சில மாறுபாடுகள். தட்சிணாமூர்த்தி வடிவம், சிறியதென்றாலும் கொள்ளை அழகு!
சொற்பொழிவு மண்டபத்தின் உள்பகுதியில், அம்மன் சந்நிதி. பராசக்தி அம்மன். நின்ற திருக்கோலத்தில் உயரமான மூலத் திருவுருவம். அருள்மிகு திருமேற்றளி நாயகி என்றும் திருநாமம் வழங்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களுக்கும் தனித்தனியே அம்பாள் கிடையாது. அம்பிகை காமாக்ஷியே மூலத் திருவாட்டி. இந்த மண்டலம் முழுமையும் அவளுடைய ஆட்சியே! ஆகவே, இந்தக் கோயிலில் அம்மனின் திருமேனி பிற்காலப் பிரதிஷ்டையாக இருக்க வேண்டும்.
இந்த அம்மன் சந்நிதிக்கு முன்பாக இருக்கும் சொற்பொழிவு மண்டபத்தில் தான்... அருள்மிகு கச்சபேசர் திருக்கோயில் பெருவிழாவின் 5-ஆம் நாள் நிகழ்ச்சிகளில், உற்ஸவ அம்பாள் எழுந்தருள்வாளாம்; வீதியுலாவும் இங்கிருந்து புறப்படும். அருகிலேயே சிறிய அலுவலகம்.
அம்மன் சந்நிதிக்கும் மூலட்டானத் துக்கும் இடையில் ஓர் உள் வாயில். இதன் அருகில், வடக்கு நோக்கியவாறு சைவ நால்வர். உள்வாயிலுள் புகுந்தால், பெரியதான கோயில். அடடா, இதென்ன கோயில்?! இது அருள்மிகு ஓதவுருகீசர் சந்நிதி. இவர் யார் என்கிறீர்களா?
சிவ சாரூபம் வேண்டி திருமால் தவம் செய்தார் இல்லையா? அவருக்குக் காட்சி தந்த சிவனார், 'ஞானசம்பந்தர் அவ்வழி வரும்போது, அவர் பாடலைக் கேட்டால் சிவ சாரூபம் கிடைக்கும்’ என்று அருளினார். அதை ஏற்றுக்கொண்ட திருமால், அங்கேயே தங்கி தவத்தைத் தொடர்ந்தார். காலம் கனிய, திருஞான சம்பந்தரும் அவ்வழி வந்தார். அவருடைய பாடல்களைக் கேட்ட திருமால், அப்படியே உருகிப் போனார். வடிவமெல்லாம், உள்ளமெல்லாம் உருக உருக... நீலமேக சியாமள வண்ணனான திருவடிவம் மாறி, பொன்னார்மேனியனாம் சிவலிங்கத் திருவடிவம் பெற்றார். தேவாரப் பாடல்களை ஓதியதைக் கேட்டு உருகியவர் என்பதால், ஓதவுருகீசர்.
இது கிழக்கு நோக்கிய சந்நிதியாகத் திகழ்கிறது. வலம் வருவோமா? தென்மேற்கு மூலையில் ஸ்ரீசெல்வ விநாயகர்; வடமேற்கு மூலையில் ஸ்ரீசுப்ரமணியர். முன்னர் இந்தச் சுற்றில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் சந்நிதியும் இருந்ததாம். கிழக்குச் சுற்று வாயிலருகே, சூரியன். இந்தச் சந்நிதியைக் கிழக்குச் சுற்று வழியாக அடையமுடியாது. அங்கு ஒரு சாளரம் மட்டுமே உள்ளது. சாளரத்துக்கு முன்பாகச் சிறிய நந்தி, பலிபீடம். அதன்வழியாக உள்ளிருக்கும் தெய்வத் திருமேனி யைக் காணலாம். ஆனால், முழுமையாக வழிபட, தெற்குச் சுற்றின் பக்கவாட்டு வாயில் வழியாக உள்நுழைகிறோம்.
ஆணாகிப் பெண்ணாகி, மண்ணாகி விண்ணாகி, முதலாகி முடிவாகி நடுவுமாகி நிற்கும் இறைவனின் அற்புத விளையாடல்கள் எப்படியெல்லாம் நம்மை ஆட் கொள்கின்றன என்று வியந்து கொண்டே, மீண்டும் வலம் வருகிறோம். கோஷ்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
மேற்றளி அதிசயத்தை எண்ணியபடியே வெளியில் வருகிறோம். 'செம்பவள வாயனை அம்புயக் கண்ணனைச் சிவ லிங்கமாக்கி வைத்தாய்’ என்று இந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, சமீபகாலங் களில் அடியார் ஒருவர் பாடி வைத்திருக் கிறார். அதை ரசித்தபடியே ஆலயத்திலிருந்து வெளிவருகிறோம்.
மேற்றளீஸ்வரர் தெருவில் நின்றபடியே மேற்றளி, உற்றுக் கேட்டவர் கோயில், ஆளுடையபிள்ளையார் கோயில் ஆகிய மூன்றையும் ஒருசேரக் காணும்போது, நம்முடைய உள்ளமும் உருகித்தான் போகிறது. அடியார்களை உயர்த்துவதில் ஆண்டவனுக்குத்தான் எத்தனை ஆனந்தம்!
கச்சி ஏகம்பனைத் துதித்துவிட்டு இங்கு வந்த நாவுக்கரசர், இந்தப் பகுதியிலேயே திருமடம் அமைத்து, தினந்தோறும் மேற்றளி வந்து வழிபட்டதாகச் சொல்கிறார்கள். அதற்கேற்ப, நாவரசர் திருமடம் ஒன்று அருகிலேயே உள்ளது. சைவ நால்வர் பெரு மக்களின் திருவுருவங்களும் விநாயகர், ஸ்ரீதண்டபாணி திருவுருவங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நாள்படி பூஜைகள் வழுவில்லாமல் நடைபெறுகின்றன.
'மேற்றளிவாழ் ஆனந்த வீட்டுறவே’ என்று வள்ளல் பெருமான் அழைத்தது நெஞ்சில் மேலோங்க, அந்த நினைப்புகளுடனே பிள்ளையார்பாளையம் விட்டு அகல்கிறோம்.
No comments:
Post a Comment