Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.10

176. மும்மலம், நெல்லி னுக்கு முளையொடு தவிடுஉமிப்போல்,
மம்மர்செய்து, அணுவின் உண்மை வடிவினை மறைத்து நின்று,
பொய்மைசெய் போக பந்த போத்திருத் துவங்கள் பண்ணும்,
இம் மலம் மூன்றி னோடும் இருமலம் இசைப்பன், இன்னும்.

மும்மலங்களும் நெல்லிற்கு முளை, தவிடு, உமி போன்றன. கன்மமலம் முளை போன்றது. மாயை தவிடு போன்றது. ஆணவ மலம் உமி போன்றது. இம்மும்மலங்களும் உயிர்களுக்கு மயக்கத்தைத் தருவனவாகும். மேலும் உயிரின் உண்மையான தன்மையாகிய அறிவினை இவை மறைப்பனவாகும். முறையே பொய்மையான நுகர்வுகளையும், கட்டினையும் நுகர்வுக்கு வினை முதலாகும் தன்மையையும் இவை தோற்றுவிக்கும். இங்குக் கூறப்பட்ட மும்மலங்களையும் தவிர மேலும் இரண்டு மலங்கள் உள்ளன என்பர் பெரியோர். அவை அடுத்த பாடலில் கூறப்பட்டுள்ளன.

இங்கே கூறப்பட்ட முளை, தவிடு, உமி என்பன பந்தத்திற்கும், காரணமாதல் மாத்திரைக்கும், உவமையாயின என்பது சிவஞான முனிவரின் உரை.

177. மாயையின் காரி யத்தை மாயேய மலமது என்றும்,
ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும்
தூயவன் தனது ஓர் சத்தி திரோதான கரியது என்றும்
ஆய்வர்;இம் மலங்கள் ஐந்தும், அணுக்களை அணைந்து நிற்கும்.

மாயையிலிருந்து விளைவனவற்றை மாயேயமலம் என்று கூறுவர். பொருந்திய மும்மலங்களையும் அதனதனுக்கு உரிய தொழிலில் செலுத்தி உயிர்களைப் பக்குவப்படுத்தி வரும் சிவசத்தியை மறைத்தலைச் செய்தலாகிய திரோதாயி என்று ஆராய்ந்து கூறுவர். முந்திய பாட்டில் கூறிய மூன்றும் இங்குக் கூறிய இரண்டும் ஆக மலங்கள் ஐந்து என்பர். இவ்வைந்து மலங்களும் உயிர்களைக் கட்டி நிற்பனவாகும்.

தூயவன்- இயல்பாகவே பாசங்களில் நீங்கிய சிவபெருமான். திரோதானம்- மறைப்பு. கரி- செய்வது. திரோதானத்தைச் செய்வது என்னும் பொருட்டாகிய வடசொல் என்பார் சிவஞான முனிவர்.

178. மலம், மாயை கன்மம், மாயே யம், திரோ தாயி மன்னி,
சலமாரும் பிறப்பு இறப்பில் தங்கிஇத் தரைகீழ் மேலும்,
நிலையாத கொள்ளி வட்டம் கறங்குஎன நிமிடத் தின்கண்
அலமாரும், இறைவன் ஆணை யால், உயிர் நடக்கும் அன்றே.

ஆணவமலம் மாயை கன்மம் மாயேயம் திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் பொருந்திய உயிர் வஞ்சனையுடைய பிறப்பு இறப்புகளில் உழன்று, நில உலகம், கீழ் உலகம், மேல் உலகம் ஆகிய மூவுலகங்களுக்கும் சென்று வரும்; நிலையற்ற கொள்ளி வட்டத்தினைப் போலவும் காற்றாடியைப் போலவும் பொடிப் பொழுதில் மேலும் கீழும் சென்று இறைவனின் ஆணையின் வழி உயிர்கள் அலமரும்.

கொள்ளி வட்டம் என்பது ஒரு கயிற்றின் நுனியில், கரிப்பொடி முதலியவற்றைச் சேர்த்து அதில் தீ இட்டுச் சிறுவர்கள் வேகமாகச் சுழற்றும் போது தோன்றுகின்ற வட்டமாகும். கறங்கு என்பது காற்றாடி. அலமரும் என்பது எதுகை நோக்கி அலமாரும் என நீண்டது.

179. அண்டசம், சுவேத சங்கள், உற்பிச்சம், சராயு சத்தோடு
எண்தரு நால், எண் பத்து நான்குநூ றாயி ரத்தாய்
உண்டுபல் யோனி எல்லாம் ஒழித்துமா னுடத்துஉ தித்தல்
கண்டிடில், கடலைக் கையால் நீந்தினன் காரி யம்காண்.

முட்டையில் பிறப்பன, வியர்வையில் பிறப்பன, வித்திலிருந்து மேல் நோக்கி எழுவன, கருப்பையிலிருந்து பிறப்பன என்று இவ்வுலகினில் உயிர்கள் நான்கு வகையாகத் தோன்றும். அவற்றின் பிறப்புக்கள் எண்பத்து நான்கு நூறாயிரம் வகைப்படும் என்றும் பெரியோர் கூறுவர். இவற்றுள் ஒன்றாகப் பிறத்தலிருந்து தப்பி மானுடனாகப் பிறப்பது என்பது, கடலைக் கையால் நீந்திக் கடப்பது போன்ற அருமை உடையதாகும்.

அண்டசம்- முட்டையில் பிறப்பன. சுவேதசம்- வேர்வையில் பிறப்பன. உற்பீசம்- வித்திலிருந்து பிறந்து மேல் நோக்கி வளர்வன. சராயுசம்- கருப்பையில் பிறப்பன.

திருஞான சம்பந்தர் தேவாரத்தில் (1-132-4) உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேத நிரை சேரப் படைத்து என்று அருளியுள்ளமையும் காண்க.

180. நரர்பயில் தேயந் தன்னில், நான்மறை பயிலா நாட்டில்
விரவுதல் ஒழிந்து, தோன்றல் மிக்கபுண் ணியத்தான் ஆகும்;
தரையினில் கீழை விட்டுத் தவம்செய்சா தியினில் வந்து,
பரசம யங்கண் செல்லா; பாக்கியம் பண்ணொ ணாதே.

உலகத்தில் மக்களாய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது அருள் நூல்கள் வழங்காத நாடுகளில் பிறவாமல், அவை வழங்குகின்ற நாட்டில் பிறப்பது. அவ்வாறு பிறப்பது மிகுந்த புண்ணியப் பயன் உடையோர்க்கே வாய்ப்பதாகும். கீழ்மையோர் இனத்தில் பிறவாமல் தவம் செய்வதற்குரிய இனத்தில் பிறப்பது அதனினும் அரிதாகும். புறச் சமயங்களைச் சாராமல் சித்தாந்த சைவத்தைச் சார்ந்து வாழும் ஒருவனுக்கு வாயத்தல் யாவற்றிலும் மிக்க அரிதாகும்.

181. வாழ்வெனும் மையல் விட்டு, வறுமையாம் சிறுமை தப்பி,
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல், அரிது சால; உயர்சிவ ஞானத் தாலே,
போழ்இள மதியி னானைப் போற்றுவார், அருள்பெற் றாரே.

வளமிக்க வாழ்வு பெற்றதனால் தோன்றுகின்ற செருக்கினை விட்டும், வறுமையினால் தோன்றுகின்ற சிறுமையிலிருந்து நீங்கியும், பணிவு என்னும் நற்பண்பினைக் கடைப்பிடித்தும் சைவ சமயத்தை வந்து எய்துகின்ற புண்ணியத்தைப் பெறுதல் மிக அரிது. அதனினும் சித்தாந்த நெறியை உணர்ந்து சிவஞானம் பெற்று இளம்பிறையைச் சூடிய சிவபெருமானை வழிபடுவோரே சிவனருளால் வீடு பேற்றை எய்துவர்.

வாழ்வு என்ற சொல்லால் இளமை, கல்வி, செல்வம், அதிகாரம் முதலியன குறிக்கப்பெற்றன. இத்தகைய பேறு வாய்க்கப் பெற்றவர்களுக்கு வருகின்ற செருக்கினின்றும் நீங்க வேண்டும் என்றார். வறுமையின் பிடியில் அகப்பட்டோர் சிறுமைக்கு உட்படுவது உலக இயல்பு. எனவே அதிலிருந்து தப்புதல் வேண்டும் என்றார். தாழ்வு என்ற தன்மை என்றதனால் பெருமை என்றும் பணியும் என்பதனையும், உயிர் என்றும் அடிமையே என்பதனையும் இறைவன் ஒருவனே உடையான் எனப்படுவான் என்பதனையும் உணர்த்தினார் ஆசிரியர். சைவ சமயத்தைச் சார்தல் அரிது. அதனினும் அரிது சைவ சித்தாந்த நெறியினை உணர்ந்து ஒழுகுதல் என்பது இப்பாடலால் விளக்கப்பட்டது.

182. மானுடப் பிறவி தானும் வகுத்தது, மனவாக் காயம்.
ஆனிடத்து ஐந்தும் ஆடும் அரன்பணிக் காக அன்றோ?
வானிடத் தவரும் மண்மேல் வந்து, அரன் தனை அர்ச் சிப்பர்;
ஊன்எடுத்து உழலும் ஊமர் ஒன்றையும் உணரார், அந்தோ !

பெறுதற்கரிய மானுடப் பிறவியை இறைவன் வகுத்துக் தந்ததன் பயனே, ஆனைந்தும் ஆடும் சிவ பெருமானை மனமொழி மெய்களால் வழிபடுவதற்காக அன்றோ? வானுலகத்தில் உள்ள தேவர்களும் தாங்கள் உய்வதற்காக இம்மண்ணுலகத்திற்கு வந்து சிவபெருமானை மலர் தூவிப் போற்றி வழிபடுவார்கள். இவ்வுலகில் ஊன் எடுத்து உழல்கின்ற ஊமர்கள் பலர் இவற்றுள் ஒன்றனையும் உணரார் என்பது இரங்குதற்கு உரியதாகும்.

மனவாக் காயம்- மனம் வாக்கு காயம் என்ற மூன்று சொற்களும் இவ்வாறு திரிந்து நின்றன. ஆனிடத்து ஐந்து- பஞ்சகவ்வியம் எனப்படும் பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்பன.

183. கருவினுள் அழிவ தாயும், கழிந்திடாது அழிவ தாயும்
பரிணமித்து அழிவ தாயும், பாலனாய் அழிவ தாயும்,
தருணனாய் அழிவ தாயும், தான்நரைத்து அழிவ தாயும்,
உருவமே அழிவே யானால், உள்ளபோ தேபார், உய்ய.

உடம்பொடுகூடி உருவெடுத்த உயிர் அழிவது திண்ணம். சில உயிர்கள் தாயின் கருப்பையிலேயே அழிவன. சில கருப்பையை விட்டுக் கழியாமலே அழியும். சில பிறந்த உடன் அழியும். சில குழந்தைப் பருவத்தில் அழியும். இன்னும் சில இளமையில் அழியும். மற்றும் சில நரை திரை வந்த பின் மூத்து அழியும். எனவே உருவம் என்பதே அழிவில் முடிவது என்பது தெளிவாகும். ஆதலால் காலம் உள்ள போதே உய்வைத் தேடுதல் நன்று.

184. ஒருபுலன் நுகரும் போது, அங்கு ஒன்று இல்லை; ஒன்றின் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும்; எல்லாம் மாறும்
ஒரு பொழுது; உணரின் உண்டாம் அல்லஇவ் அல்லல் வாழ்க்கை
மருள்கன வதுவும் போல மாயும், பின் மாயும் அன்றே.

இங்கு உடலோடு பொருந்தியுள்ள உயிர் ஒரு புலனால் நுகரும் போது மற்றவற்றை நுகர்வதில்லை. ஒன்றினையே அறியும் போது கூட இடையீடு பட்டு அறியுமே அல்லாது எப்பொழுதும் அறியாது. அவ்வறிவும் உறக்கம் மூர்ச்சை ஆகிய நிலைகளில் முற்றிலும் இல்லையாகும். அதுவுமல்லாமல் துன்ப மிகுந்த இந்த வாழ்க்கை மயக்கம் போல உடனே அழிவதாயும், கனவைப் போலச் சிறிது காலம் நீட்டித்து அழிவதாயும் அமைவதைக் காண்கிறோம்.

185. அரிசனம் பூசி, மாலை அணிந்து, பொன் னாடை சாத்தி,
பரிசனம் பின்பு செல்ல, பாரகர் பரிக்க, கொட்ட,
வரிசின்னம் ஊத தொங்கல் வந்திட உணர்வு மாண்டு
பெரியவர் பேச்சும் இன்றிக் கிடத்தலால் பிணத்தோடு ஒப்பர்.

செல்வ வளம் பெற்றவர்கள் செருக்கோடு வீதியிலே உலாப் போவார்கள். அவ்வாறு போகுங் காலத்துச் சந்தனம் பூசி இருப்பர். மாலை அணிந்திருப்பர். பொன்னாடை அணிந்திருப்பர். அவருடைய பரிவாரங்கள் அவர் சவாரி செய்யும் சிவிகையைப் பின் தொடர்ந்து வருவர். சிவிகை தாங்கிகள் சுமக்கவும், இசைக் கருவிகள் முழங்கவும் சிலர் சின்னங்கள் ஊதவும் வெண் சாமரங்கள் நிழற்றவும், அத்தகைய செல்வர்கள் தமது அதிகாரச் செருக்கால் பேச்சும் இன்றி அச்சகவிகைக்குள் சாய்த்து கிடப்பர். ஆழ்ந்து உணரின் இவருக்கும் பிணத்துக்கும் வேறுபாடு இல்லை என்பது தெரியும். இவ்வாறு அறிய வல்லவர்கள் செல்வத்தால் வந்த செருக்கைக் கை விடுதல் கூடும்.

186. பிணத்தினை ஒத்து வாழ்வோர் பின்நடைப் பிணங்கள் போல
உணக்கியே உழல்வீர் உங்கள் உடல்உயிர் உணர்வும் எல்லாம்
கணத்திடைத் தோன்றி மாயும் காயம் என்று அறிந்து ஒருக்கால்
வணக்குறீர் அரனை; என்றும் வானவர் வணங்க வைப்பன்.

உலகத்திலே மற்றவர்கள், பிணத்தை ஒத்து வாழ்பவர்களாகிய செருக்கு மிகுந்த செல்வர்களின் பின்னே நடைப் பிணங்களைப் போலத் தம் உடல் அறிவு ஆகியவற்றைக் குறுக்கி அலைவார்கள். இந்த உடம்பு ஒரு கணத்திலே தோன்றி அழியும் இயல்புடையது என்பதை அறிந்து சிவபெருமானை ஒரு பொழுதேனும் வணங்கி வழிபடுவீராக. அவ்வாறு வழிபட்டு வரின் அமரரும் வணங்கும் ஒப்பற்ற பேற்றினைச் சிவபெருமான் உங்களுக்கு வழங்குவான்.

மூன்றாவது நூற்பா 187. உயிரெனப் படுவது இந்த உடலின்வேறு; உளதாய் உற்றுச்
செயிர்உறும்; இச்சா ஞானச் செய்திகள் உடைய தாகிப்
பயில்வுறும்; இன்பத் துன்பப் பலங்களும் நுகரும் பார்க்கில்;
துயிலொடும்; அஞ்சு அவத்தைப் படும்; உண்மை துரியா தீதம்.

உயிர் எனப்படுவது உள்ளதாகிய பொருளே. அது உடம்பு அன்று. ஏனெனில் அது உடம்பைப் பொருத்தி யான், எனது என்னும் செருக்கினை உடையது. உயிருக்கு அறிவு விழைவு ஆற்றல் என்னும் மூன்றும் உண்டு. உயிர், கனவில் நிகழ்ந்ததை விழித்த போது அறியும் இயல்புடையது. உயிருக்கு இன்ப துன்பப் பயன் கருவிகள் ஒடுங்கிய போது அல்லாமல் ஒடுங்காது விழித்த நிலையிலே நிகழ்வனவாகும். உயிர் அறியும் போது ஒரு தன்மையாய் அறியாமல் ஐந்து வகைப்பட்ட நிலைவேறுபாடுகளோடு அறிந்து வரும். எல்லாக் காரியங்களும் நீங்கிய துரியாதீத நிலையிலும் இவ்வுயிர் உளதாகும். ஆகையால் இவ்வுடலில் பொருந்தியுள்ள உயிர் இவை அனைத்துக்கும் வேறாகும்.

இந்தப்பாடலுக்கு உரை வரைந்த சிவஞானமுனிவர் பாடலின் சொற்கள் கிடந்தவாறே உரை எழுதாது முதல் நூலாகிய சிவஞான போதத்தின் மூன்றாவது நூற்பாவின் அமைப்பை ஒட்டியே உரை எழுதினார். இந்த நூற்பாவுள் மெய்கண்ட தேவநாயனார் சூனியான்மவாதி இந்திரியான்மாவதி முதலிய எழுவர் கொள்கைகளை மறுத்துள்ளார். முனிவரின் உரையும் அந்த வைப்பு முறையிலேயே அமைந்துள்ளது.

செயிர்- குற்றம். ஐந்தவத்தை என்பது உயிரின் ஐந்து நிலைவேறு பாடுகளைக் குறித்தது. அவத்தை நிலைவேறுபாடு. இவை- நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கள் என்பனவாகும். துரியாதீதம்- உயிர்ப்படங்கள். இந் நிலையில் உயிர் கருவிகளோடு கூடாமல் ஆணவத்தால் மறைக்கப்பட்டு நிற்கும்.

188. உடலின் வேறு உயிர் ஏன்? இந்த உடல் அன்றோ உணர்வது? என்னின்
உடல்சவ மான போதும் உடலினுக்கு உணர்வுண் டோதான்?
உடலினின் வாயுப் போனால் உணர்ச்சி இன்று உடலுக்கு என்னின்
உடலினின் வாயுப் போகாத உறக்கத்தும் உணர்வது இன்றே.

இந்த உடம்பின் வேறாக உயிர் ஒன்று உண்டு என்று கொள்வானேன். இந்த உடல் அன்றோ அறிவது என்று சிலர் வினவுவர். உயிர் நீங்கிய உடல் உறுப்பால் எவ்விதக் குறைபாடும் இல்லாத போதும் பிணமாக அறிவற்றுக் கிடைப்பதைக் காண்கிறோம். எனவே உயிர் வேறு என்பது புலனாகும்.

மற்றும் சிலர் வேறு வகையாகத் தடை எழுப்புவர். உடலில் இயங்கிக் கொண்டிருக்கின்ற உயிர்க்காற்று உடலை விட்டு நீங்கும் போது உணர்வும் நீங்கி விடுகிறது. எனவே உயிர் எனப்படுவது உயிர்க்காற்றே என்பது அவர்கள் கொள்கை. உறங்குங்காலத்து உயிர்க்காற்று உடலைவிட்டு நீங்குவதில்லை. எனவே அப்போதும் அவ்வுடலுக்கு அறிவு நிகழ்தல் வேண்டும். உயிர்க்காற்று இயங்கினும் உறக்க நிலையில் உடம்பு அறிவதில்லை. ஆதலால் அறிவது உடம்பு அன்று; அதனினும் வேறான உயிரே என்பது தெளிவாகும்.

189. அறிவதுஐம் பொறியே என்னின் உறக்கத்தின் அறியா வாகும்
அறிவதும் ஒன்றுஒன் றாக; ஒன்றுஒன்றாய் அறியும் என்னின்
அறிவுகள் ஒன்றை ஒன்று அங்கு அறிந்திடா; ஐந்தை யுங்கொண்டு
அறிவது ஒன்று உண்டு; அது ஆன்மா; ஐம்பொறி அறிந்தி டாவே.

வேறுசிலர் ஐம்பொறிகளே அறிவனவாகும். எனவே உயிர் என வேறு ஒன்று இல்லை என வாதிடுவர். அவர்கள் ஐம்பொறிகள் நனவின் போது அறியும் என்றும் உறக்கத்தின் போது அறியாமல் ஒடுங்கி நிற்கும் என்றும் கூறுவர். நனவின் போதும் ஐம்பொறிகள் ஒவ்வொரு பொறியாக அறியுமே அன்றி ஐந்தும் ஒரு சேர அறியா. அதுவே அவற்றின் இயல்பு என்று மேலும் கூறுவர். இக்கருத்துக்கள் பொருந்தா. ஐம்பொறிகளில் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியாது. எனவே ஐந்து பொறிகளையும் கொண்டு அறிவதாகிய ஆன்மா ஒன்று உண்டு என்பது பெறப்படும். எனவே பொறிகள் அறியா. ஆன்மாவே அறியும்.

190. அறிந்திடும், பிராண வாயு அடங்குதல் விடுதல் செய்தால்;
அறிந்திடாது உடல்உறக்கத்து அறிவின்மை, கரணம் இன்மை;
அறிந்திடும் முதலி ஆகின் அதுநிற்கக் கரணம் போக;
அறிந்திடும் பிராணன் தன்னை அடக்கியும் விட்டும் ஆன்மா

உயிர்க்காற்று உள்ளும் புறமும் சென்று இயங்கும் போதே அறிவு நிகழ்வதைக் காண்கிறோம். எனவே ஐம்பொறிகளையும் கொண்டு அறிவது உயிர்க்காற்றே. ஆன்மா அன்று என்று சிலர் வாதிடுவர். அவ்வாறு எனின் உறங்கும் போதும் உயிர்க்காற்று இயங்குவதனால் அப்போதும் அறிவு நிகழ்தல் வேண்டும். அப்படிக் கண்டதில்லை; ஆதலால் உயிர்க்காற்றே ஆன்மா என்பதும் பொருந்தாது என்று விடையிறுத்தல் வேண்டும். அதற்கு அவர்கள் உறக்கத்தின் போது கருவிகளின் துணையில்லை ஆதலால் அறிவு நிகழவில்லை என்பர். அவ்வாறானால் உயிர்க்காற்றே கருவிகளை இயக்கிடும் முதன்மை உடையதாக இருந்தும் அக்கருவிகள் ஏன் இயங்கவில்லை என்று வினாவுதல் வேண்டும். உயிர்க்காற்றை உள்ளே இழுத்தும் வெளியே விட்டும் இயக்க வல்லதாகிய ஆன்மா உயிர்க்காற்றிலிருந்தும் வேறானது ஆகும்.

நான்காம் நூற்பா 191. உணர்வன கரணம் என்னில் ஒன்றைஒன்று உணரா; வெவ்வேறு
அணைதரும்- செயல்கள் நான்கும் அறிந்து அவை அடக்கி ஆக்கிப்
புணரும்உட் கருவி ஆக்கி புறக்கரு வியினும் போக்கி
இணைதரும் இவற்றின் வேறாய் யான்எனது என்பது ஆன்மா.

மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய உட்கரணங்களே அறிவுடையன. ஆதலால் அவையே என்று சிலர் வாதிடுவர். உட்கரணங்களாகிய இவை நான்கும் தம்முள் ஒன்றனை ஒன்று உணரா.

நான்கும் நான்கு வெவ்வேறு தொழில்களைச் செய்து தன்னளவில் நிற்கும். ஆனால் ஆன்மாவோ நான்கு உட்காரணங்களையும் இயக்கி, நான்கினால் வரும் பயனையும் உணர்ந்து யான் எனது என்னும் செருக்கினையும் கொண்டு நிற்பதாகும். ஆணவமலத்துடன் கூடி நிற்பதனாலேயே ஆன்மாவுக்கு யான் எனது என்னும் செருக்கு உளதாகிறது. ஆன்மாவே அந்தக்கரணங்கள் நான்கினையும், அடக்கி உட்கருவிகளாகக் கொண்டு, வேண்டும் போது புறக்கருவிகளை நோக்கிச் செலுத்தியும் ஐந்து நிலைவேறுபாடுகளை அடைந்தும் நிற்பதாகும்.

முதல் அதிகரணம்

192. கருவிஆம் மனமும் புத்தி அகங்காரம் சித்தம் நான்கும்
மருவிஆன் மாவே என்ன வரும்; தீபம் எனத்தெ ரிந்து அங்கு
ஒருவிஆன் மாவின் உண்மை உணர்ந்தவர் தமைஉ ணர்ந்தோர்;
தரும்இது பசுஞா னம்பின் சிவஞானம், தனக்கு மேலாம்.

உட்கரணங்களாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கும் ஆன்மாவோடு பொருந்தி அவையே ஆன்மா என்று கருதும் வண்ணம் நிற்கும். இவ்வாறு பிறழ உணராமல், காணும் தன்மை உடைய கண்களுக்கு விளக்கு கருவியானாற் போல, அறியும் இயல்புடைய ஆன்மாவிற்கு உட்கரணங்கள் கருவிகளாம் என அறிதல் வேண்டும். இவ்வுண்மையை அறிந்து உட்கரணங்களிலிருந்து நீங்கி ஆன்மாவின் உண்மையான இயல்பை அறிந்தவர் யாரோ அவரே பசுஞானம் பெற்றவராவர். இவ்வாறு தம்மை உணர்ந்தவர்கள் தமக்கு மேலாகிய சிவஞானத்தைப் பெறும் தகுதி உடையோராவர்.

193. அவ்வுடன் உவ்வும் மவ்வும், மனம், புத்தி, அகங்கா ரங்கள்,
செவ்விய விந்து நாதம், சித்தமோடு உள்ளம் ஆகும்;
ஒவ்வெனும் எழுத்தாம் ஐந்தும் உணர்வுஉதித்து ஒடுங்கு மாறும்
பவ்வமும் திரையுங் போலும்; பார்க்கில், இப் பண்பும் தோன்றும்.

அகரம் அகங்காரத்தைச் செலுத்தும் உகரம் புத்தியைச் செலுத்தும். மகரம் மனத்தையும், வித்து சித்தத்தையும், நாதம் உள்ளத்தையும் செலுத்தும். இந்த ஐந்து எழுத்துக்களாலும் உயிரின் அறிவு தோன்றியும் ஒடுங்கியும் வரும். கடலின் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறித் தோன்றியும் ஒடுங்கியும் வருவதைப் போலவே உயிரின் அறிவும் தோன்றியும் ஒடுங்கியும் வரும். ஆய்ந்து பார்த்தால் இத்தன்மைகள் நன்கு விளங்கும்.

அகார உகாரம் அகங்காரம் புத்தி மகாரம் என்று சிவஞான போதம் நான்காவது நூற்பா மூன்றாவது எடுத்துக்காட்டு வெண்பாவில் முதல் நூல் ஆசிரியர் குறிப்பிட்டார். எனவே இங்கே கூறப்பட்டுள்ள முறை எதிர் நிரல் நிறை என்று கொள்க என்று சிவஞான முனிவர் உரை எழுதினர். அகர உகர மகரம் விந்து நாதம் ஆகிய ஐந்தும் கூடிப் பிரணவமாகும். ஆயினும் பாடலில் இம்மந்திரத்தை வெளிப்படையாகக் கூறாமல் ஒவ்வும் என்று குறுக்கிச் சுட்டினார்.

பாடலில் பார்க்கின் என்ற சொல்லால் நிவிருத்தி முதலிய கலைகளைப் பற்றி ஐந்தாகத் திகழும் வாக்குகள் என்பது உணர்த்தினார். வைகரி அகரவடிவாகவும், மாத்திமை உகர வடிவாகவும், பைசந்தி மகர வடிவாகவும், சூக்குமை விந்து வடிவாகவும் அதிசூக்குமை நாத வடிவாகவும் நிற்கும் என்பர் பெரியோர்.

194. அயன் அரி அரனும் ஈசர் சதாசிவம் அதிதெய்வங்கள்
உயவரும், அவ்வோடு உவ்வும் மவ்விந்து நாதங் கட்கு;
பயன்உறும், அஞ்சில் ஆன்மாப் பரவிடில், அசித்தாம், பார்க்கில்;
சயம் உறு வளிஇ ரண்டும் தவிர்த்துறின், தானும் தோன்றும்.

அகர உகர மகர விந்து நாதங்களுக்கு முறையே அயன் திருமால் உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்பவர் அதி தெய்வங்களாவர், உட்கருவிகள் அவற்றைச் செலுத்தி நிற்கும் ஆற்றல் எழுத்துக்கள், அவற்றின் அதிதெய்வங்கள் என்று இம்மூவகைப்பட்ட ஐந்தோடும் ஆன்மா பொருந்தியபோது ஆன்மாவுக்கு அறிவு உளதாகும். இவற்றோடு பொருந்தாத போது ஆன்மா சடம் போல அறிவு இல்லாததாக நிற்கும். இவ்வியல்பு இரு வகைக் காற்றையும் அடக்கி யோகப் பயிற்சியில் நின்றார்க்கு இனிது விளங்கும்.

195. ஆன்மாவின் வடிவு தானே அநேகார்த்தக் கூட்டம் என்னின்,
பார்ப்பார்கட்கு, ஆன்மா இன்றாய்ப் பலபொருள் உண்மை ஆகும்;
சேர்ப்பாய பலவே உண்மை, என்றிடில்; சென்று இவற்றை
ஓர்ப்பான், வேறு உணர்வோர்க்கு எல்லாம் உணர்பொருள் வேற தாமே.

மேற்கூறிய வண்ணம் ஆன்மா என்பது அகக் கருவிகளும் அகரம் முதலிய ஐந்து எழுத்துக்களும் அவற்றின் அதிதெய்வங்களும் ஆகிய இவற்றின் கூட்டாலேயே அறியும் எனப்பட்டால் அது பல பொருள்களும் சேர்த்து ஒன்றாகிய கூட்டம் ஆகுமே தவிர ஆன்மாவின் தனித்த நிலையைக் குறியாது அன்றே? என்று இங்கு ஒரு தடை நிகழும். கூட்டம் என்பது ஒரு பொருள் அன்று, கூடுகின்ற பல பொருள்களும் தனித்தனியாக அறியப்படும். மேலும் அறியப்படு பொருளும் அறியும் பொருளும் தனித்தனி இருத்தல் கூடுமேயன்றி இரண்டும் ஒன்றாகா. ஆகவே இப் பதினைந்தினையும் இவை தம்முட் கூடி நிற்கும் இயல்பையும் அறிகின்ற ஆன்மா தனித்து உளது என்பது பெறப்படும்.

இரண்டாம் அதிகரணம்

196. அறிவு, இச்சை, செயல்கள் எல்லாம் அடைந்து, அனல் வெம்மையும் போல்
குறிஉற்று அங்கு, ஏக அநேக குணகுணி பாவம் ஆகி,
நெறியுற்று நிற்கும் என்னின், நிகழ்புலன் கரணம் எல்லாம்
செறிவுற்று, அங்கு அறிவு கொள்ள வேண்டுமோ, சீவ னார்க்கே

உயிர்கள் யாவும் பிரமப் பொருளில் இருந்து பரிணமித்து அறிவு விழைவு ஆற்றல் ஆகியவற்றை அடைந்து, தீயும் அதன் வெப்பமும் போலக் குணமும் குணியுமாகி நிற்கும் என்று சிலர் கூறுவர். அவர்கள் கருத்து உண்மையானால் பிரமத்தின் பரிணாமமாகிய உயிர்கள் யாவும் புலன்களும் கருவிகளும் இன்றியே அறிதல் வேண்டும். ஆனால் உயிர் பொறிகளின் துணையோடும் கருவிகளின் துணையோடும் அறிகின்றதே அன்றித் தனித்து நின்று அறியாது. எனவே உயிர் பிரமத்தின் பரிணாமம் என்பது பொருந்தாது.

இந்தப் பாடலில் பரிணாம வாதிகளின் கொள்கை மறுக்கப்படுகிறது. பிரமப் பொருளும் உயிர்களும் ஓர் வகையால் வேறாகியும் மற்றொரு வகையில் வேறு அன்றியும் நிற்பன என்பது அவர்கள் கொள்கை. அதுவே பாடலில் ஏகானேகம், குணகுணி பாவமாகி என்ற சொற்களால் குறிக்கப்பட்டது. அறிவே வடிவாகிய பிரமப் பொருளுக்குப் பொறிகள் கருவிகளின் துணை தேவை இல்லை என்பதை எடுத்துக்காட்டி அவர்களின் கொள்கையை மறுத்தார்.

197. குணங்களை இன்றி ஒன்றாம் குறிஉடைத்து ஆன்மா என்னின்,
இணங்கிடா, இச்சா ஞானக் கிரியைகள் இவை, உடற்கண்;
பிணங்கிடும் சந்தி திக்கண் எனில், பிணத்து உறக்கத்து இன்றாம்;
உணங்கிடும் கரணம் என்னில் சந்நிதி ஒழிந்தது அன்றே.

அறிவு விழைவு ஆற்றல் என்னும் குணங்கள் இல்லாமல் வெறும் அறிவு மாத்திரமாய் நிற்பதே ஆன்மா என்று கொள்ளுவர் சிலர். அவர்கள் கருத்துப்படி ஆன்மா அறிவு வடிவமாய் நிற்கும். அதன் முன்னிலையில் உடம்பில் உள்ள கருவிகள் செயற்படும். அதனால் அறிவு விழைவு ஆற்றல் முதலியன உடம்பிலே நிகழும். அவ்வாறாயின் உடல் பிணமாகக் கிடக்கும் பொழுதும் உறக்கத்தின் போதும் கருவிகள் செயல்படுவதில்லையே அது ஏன்? என்று அவரை வினவினால் அதற்கு அவர்கள் அந்நிலைகளில் கரணங்கள் செயலற்று ஒடுங்கி இருக்கும் என்று விடையிறுப்பர். இவ்வாறு கூறினால் உயிரின் முன்னிலையில் அறிவு இச்சை செயல்கள் உடம்பில் நிகழும் என்று அவர்கள் கூறிய கூற்றுப் பொருந்தாது போகும். இவ்வாறு கூறுவோர் சாங்கியர்.

இணங்கிடா- பொருந்தா, பிணங்கிடும்- பொருந்தும், சந்நிதி- முன்னிலை, உணங்கிடும்- ஒடுங்கும். 198. சந்நிதி குணம் தாகும் தான் என்போல் என்னின் காந்தம்
முன்இரும்பு என்றாய்; ஈர்க்கும் முறைமைஉண்டு அகற்றல் இன்றாம்;
உன்னுதல் ஒடுங்கல் ஓடல் இருத்தலே கிடத்தல் நிற்றல்
என்னும் இத் தொழில்கள் மற்றும் இயற்றுவது ஆன்மா என்னே?

சன்னதி என்று யாங்கள் கூறுவது வெறும் முன்னிலையன்று. அது உயிரினிடத்து உள்ள ஒரு குணச் சிறப்பு. காந்தத்தின் முன்பு வைக்கப்பட்ட இரும்பை அக்காந்தம் ஈர்ப்பது போன்றது உயிரின் குணச்சிறப்பு. எனவே நீங்கள் எழுப்பிய தடை இங்குப் பொருந்தாது என்று சாங்கியர் மேலும் வாதிடுவர். அப்படியானால் காந்தம் இரும்பைத் தன்னை நோக்கி இழுக்கும் ஆற்றல் மட்டிலுமே உடையதாகும். அகற்றும் ஆற்றல் காந்தத்துக்கு இல்லை. ஆனால் நினைத்தல் மறத்தல், ஓடல், இருத்தல், கிடத்தல், நிற்றல் முதலிய மாறுபட்ட தொழில்களை ஆன்மா எவ்வாறு செய்கிறது என்று வினவுக.

199. உரு உயிர் என்னின் இந்த உடலினுள் காண வேண்டும்;
வருவது பரிணா மத்தாய் அநித்தமாம் பூதம் ஆகும்;
கருவினில் நுழையு மாறும் காட்டிட வேண்டும்; கண்ணில்
மருவிடாது என்னின் உன்தன் வாயினால் உரு அன்று என்னே.

உயிருக்கு உருவம் உண்டு என்று சிலர் கூறுவர். அவ்வாறு உருவம் உடையது என்னில் இந்த உடலுக்குள்ளே அது காணப்படுதல் வேண்டும். அப்படிக் கண்டவர் எவரும் இலர். மேலும் கண்ணுக்குப் புலனகின்ற பொருள் உலகத்தில் காணப்படும் மற்றைய ஐம்பூதக் கூட்டாலாகிய பொருள்களைப் போலவே தோன்றி வளர்ந்து அழிதல் வேண்டும். அன்றியும் உருவம் உடையது என்று உங்களால் சொல்லப்பட்ட உயிர், தாயின் கருப்பைக்குள் எவ்வாறு வந்து புகுந்தது என்று விளக்குதல் வேண்டும். அது உருவப் பொருள்தான் ஆனால் கண்ணுக்குப் புலனாகாது என்று விடை கூறினால் அது அருவப் பொருள் என்று கூறுதலே பொருத்தமானதாகும்.

200. சூக்கும உருவது என்னில் தூலகா ரணம தாகும்;
ஆக்கிய மனாதி தன்மாத்திரை, வடிவு, அசேத னம், பின்
நீக்கிய சூக்கு மத்தே நிற்பதுஓர் உருஉண்டு என்னின்
ஆக்கிடும் உருவம்; எல்லாம் அசித்துமாய் அநித்தம் ஆமே.

உயிரினுடைய உருவம் பருவடிவாயன்றி நுண்ணுடலாய் விளங்குவது. எனவே அது காட்சிக்குப் புலனாவதில்லை என்பர் சிலர். இந்நுண்ணுடம்பின் இயல்பு இதற்கு முன்னரே விளக்கப்பட்டது. மனம் புத்தி, அகங்காரம், ஆகியனவும் தன்மாத்திரைகள் ஐந்தும் கொண்டதே நுண்ணுடல் அல்லது புரியட்டக உடல் என்று கூறப்பட்டது. இவை எட்டும் கூடி உடம்பே அன்றி உயிராகாது. ஏனெனில் நுண்ணுடல் அறிவற்றது. இதனை மறுத்து அந்த நுண்ணுடம்புக்குள்ளேயும் மீநுண்ணுடம்பு என்ற ஒன்று உண்டு. அது உருவமுடையது. அதனையே உயிர் என்கிறோம் என்பர் அவர்கள். அந்த மீநுண்ணுடம்பும் அதிலிருந்து தோன்றும் வடிவங்களும் அறிவற்றவை ஆகவும் அழியும் தன்மை உடையனவாகவும் இருப்பதால் அதனை உயிர் என்று கூறுதல் பொருந்தாது.

No comments:

Post a Comment