Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.11

201. அருவுரு என்னில், ஆன்மா அருஉரு ஆவது இன்றாம்;
உருஅரு ஆகா தாகும்; ஒருபொருட்கு, இரண்டு தன்மை
வருவதும் இல்லை; காட்ட வன்னிபோல் மருவும் என்னில்,
உருவமும் காண வேண்டும்; உண்மையும் ஒழிந்து போமே.

உயிர் அரு உருவப் பொருள் என்று சிலர் வாதிடுவர். அருவப் பொருளாயின் அதற்கு உருவம் தோன்றாது. உருவப் பொருளாயின் அது அருவமாதல் கூடாது. தம்முள் மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒரு பொருளுக்கு உண்டாவதில்øலை. விறகுக்குள்ளே இருந்த தீ அருவமாக இருந்தே பின்னர் எரிகின்ற போது உருவமாகத் தோன்றுவதைப் போன்றது உயிரின் தன்மை என்று இவர்கள் உவமை கூறுவர். விறகுக்குள்ளே இருந்த நெருப்பு பற்றிக் கொண்ட போது வெளிப்பட்டு அதன் பின்னர் இரண்டுமே இல்லாது அழிந்து போகின்றன. எனவே இந்த எடுத்துக்காட்டு இங்கே பொருந்தாது.

202. சந்திரன் வடிவு போல தான்அரு உருவம் என்னின்
வந்துநங் கண்ணில் தோன்றும் வடிவுஉள தாம் உயிர்க்கும்;
இந்தஊன் உருவம் தானாய் எழுவதும் உயிரே என்னின்
பந்தமாய் அசித்தாய் ஆன்மாப் பவுதிகம் ஆகும் அன்றே.

வளர்பிறையின் முதல் நாளில் திங்கள் நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் அது முறையாக வளர்ந்து முழு நிலா நாளில் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது அன்றோ? அது போலவே தாயின் கருப்பையில் கருவாய்க் கிடந்த உயிர் முறையே வளர்ந்து உருவாகி நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. எனவே உயிர் அரு உருவம் என்பது பொருந்தும் என்று அவர்கள் கூறுவர். இவ்வாறு கொண்டால், உயிரின் இயல்பு அறிவுடையதும் தளையில் கட்டுப்பட்டு விடுபடுவதும் நித்தமாய் இருப்பதும் என்பனவற்றுக்கு மாறாக அறிவற்றதும் ஐம்பூதத்தின் காரியமும் தளைப்படுவதுமாகிய உடம்பே என்று கூற நேரிடும்.

203. அருஅவி காரி ஆன்மா ஆகாயம் போல, என்னின்
உருவினைக் கட்டி ஆட்டி ஓட்டி மீட்டு உலாவப் பண்ணி
மருவிநிற் பித்து இருத்தி கிடத்தி மண் புரட்டி மற்றும்
பெருவிகா ரங்கள் எல்லாம் தருவது என்? பேசி டாயே !

உயிர் என்பது ஐம்பூதங்களுள் ஒன்றாகிய வானைப் போல அருவமாகவும் வேறுபாடுகளுக்கு உட்படாததாகவும் இருக்கும் என்பர் சிலர். உருவமாகிய உடம்பைக் கட்டியும் ஆட்டி வைத்தும் ஓட்டுவித்தும் உலாவச் செய்தும் நிறுத்தியும் இருத்தியும் கிடத்தியும் மண்ணில் புரட்டியும் இவ்வாறு பல வேறுபாடுகளுக்கு உட்படுத்தி வருவதாகிய உயிர் அருவம் ஆதல் எவ்வாறு? என்று வினவி அவர்களை மறுக்க. இக் கொள்கை பாதஞ்சலர் கொள்வதாகும்.

204. அசித்தெனின் உணராது ஆன்மா அசித்துச்சித்து ஆகும் என்னின்
அசித்துச்சித்து ஆகா தாகும்; சித்தசித்து ஆவது இல்லை;
அசித்துஒரு புறமாய் ஒன்றில் சித்துஒரு புறமாய் நில்லாது;
அசித்துஉறாச் சித்தே என்னின் அசித்து அடைந்து அறிவது இன்றாம்.

உயிர் அறிவற்ற பொருள் எனில் அது எதனையும் அறியாது. வைசேடிகர் உயிரை அறிவற்றது என்று கொண்டு, ஆயினும் உயிர் மனத்தோடு கூடிய போது அது சித்தாக அறியும் என்பர். இக்கொள்கை பொருந்தாது. அது போலவே சைவரில் ஒரு சாரார் ஒரு வகையால் உயிர் அறிவுடையதாகவும், மற்றொரு வகையால் அறிவற்றதாகவும் இருக்கும் என்பர். இதுவும் பொருந்தாத கூற்றே. பட்டாச்சாரியர் உயிர் கருவிகளோடு பொருந்தாமலே அறியும் தன்மை உடையது என்பர். இவர் கொள்கையும் பொருந்தாதாகும். அசித்துப் பொருள் ஒரு போதும் சித்தாகாது என்று வைசேடிகர் கொள்கையை மறுத்தல் வேண்டும். மாறுபட்ட இரண்டு தன்மைகள் ஒரே பொருளுக்கு ஒரே நேரத்தில் இருக்க இயலாது என்று சைவரில் ஒரு சாராரை மறுத்தல் வேண்டும். கருவிகளின் துணை இன்றி உயிர் எதனையும் அறிவதில்லை என்பது கண்கூடு. எனவே உயிர் தனித்து நின்று அறியும் என்ற கொள்கை அடாது என்று கூறிபட்டாச்சாரியரை மறுத்தல் வேண்டும்.

205. உயிரினை அணுவது என்னின் உடல் பலதுவாரம் ஓடும்;
பயில்வுஉறக் கட்டு ணாது பாரமும் தரித்துச் செல்லாது
அயர்வுறும் அசித்தாய் பூத அணுக்களின் ஒன்றதாகும்;
இயல்புஉறும் அவய வத்தால்- அணுஉரு- இறக்கும் அன்றே.

உயிர் அணு அளவினதாய் உடலில் நிற்கும் என்று கூறுவர் சிலர். உடலிலே பல ஓட்டைகள் உள்ளன. உயிர் அணு அளவினதாயின் அது அந்த ஓட்டைகளின் வழியாக ஓடி விடும். மேலும் அவ்வுயிர் தான் புகுந்த உடலை இயக்கி அதற்குள்ளே கட்டுண்டு நில்லாது. அணுவளவாகிய உயிர் உடம்பு என்ற சுமையைத் தாங்கி நடத்த இயலாது. உயிர் அணுவளவினது என்றால் அது அழியக் கூடியது; அறிவு அற்றது; பூத அணுக்களில் ஒன்று என்றெல்லாம் கொள்ள நேரிடும். அணுக்களுக்கும் உறுப்புக்கள் உண்டு. ஆகையினால் அதற்கும் உருவம் உண்டு. ஆதலால் அதுவும் அழியும் என்று கொள்ளுதல் வேண்டும்.

உயிருக்கு அணுத்தன்மை கொள்பவர்கள் பாஞ்சராத்திரிகள் எனப்படும் வைணவர்கள் ஆவார்கள். அவர்கள் கொள்கையிலே உள்ள பொருந்தாமை ஆசிரியரால் இப்பாடலில் விளக்கப்பட்டது.

206. உடலினில் ஏக தேசி உயிர்எனின் உருவாய் மாயும்;
படர்வுறும் அறிவுஇன்று எங்கும் சுடர்ஒளிப் பண்பது என்னின்
சுடர்தொடின் சுடுவது எங்கும் தொட்டிடம் அறிவுஉண் டாகும்;
அடர்புல னிடத்தும் ஒக்க அறிவு எழ வேண்டும் அன்றே.

உயிர் என்பது உடம்பில் உள்ள இதயத்தில் இடம் பெற்றுப் புல்லின் நுனியில் உள்ள நீர்த்துளி போல நிற்கும் எனவும் அவ்வாறாயினும் விளக்கு ஒளிபோல அவ்வுயிரின் அறிவு எங்கும் படர்ந்து செல்லும் என்றும் சிலர் கூறுவர். இக் கொள்கை பொருந்தாது. ஏனெனில் உயிருக்கு உருவம் உண்டு என்று கொண்டோரின் கொள்கையில் உள்ள குற்றங்கள் யாவும் இங்கும் பொருந்துவனவாகும்.

விளக்கின் ஒளி என்பது விளக்கின் நுண்வடிவமே அன்றி அதன் குணம் அன்று. ஆகையால் இவ்வுவமை இங்குப் பொருந்தாது. விளக்கின் சுடர் தொட்டாலன்றிச் சுடாது. உயிரின் அறிவோ தொட்ட இடம் எங்கணும் அறியும் ஆற்றல் உடையது. விளக்கு ஓரிடத்தில் இருந்தவாறே தன்னைச் சூழ இருக்கும் எல்லாப் பொருள்களையும் விளக்கமுறச் செய்யும். இங்குக் கூறிய உவமை பொருந்துமானால் உயிர் ஐம்புலன்களையும் ஒருங்கே அறிதல் வேண்டும். அவ்வாறு நிகழக் கண்டதில்லை. எனவே இக்கொள்கை ஏற்புடையதன்று.

இங்கே கூறி மறுக்கப்பட்டது மிருதி நூலாரின் உயிர் பற்றிய கொள்கையாகும்.

207. உருவினில் நிறைந்து நின்று அங்கு உணர்ந்திடும் உயிரது, என்னின்
மருவிடாது உறக்கம் வாயில் அறிவு ஒக்க வழங்க வேண்டும்;
பெருகிடும் சுருங்கும் போதம் பேர்உடல் சிற்று டற்கண்;
வரும்உடல் குறைக்க ஒக்கக் குறைந்து பின் மாயும் அன்றே.

உயிர் என்பது உடம்பின் அளவுக்கு ஏற்ப அதனுள் நிறைந்து நின்று அறியும் என்று சிலர் கூறுவார்கள். உடல் முழுக்கவும் உயிர் நிறைந்திருக்கும் என்றால் அதற்கு உறக்கம் என்ற ஒரு நிலை பொருந்துதல் கூடாது. அது மட்டுமன்றி உடல் முழுதும் நிறைந்துள்ள உயிர் ஐம்பொறிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் அறிதல் வேண்டும். அவ்வாறு நிகழ்வதில்லை. மேலும் பெருத்த உடம்பின் உயிர் பெரிது ஆகையால் அது பேரறிவு உடையதாகவும் சிறிய உடம்பின் உயிர் சிறியது ஆகையால் அது சிற்றறிவு உடையதாகவும் இருத்தல் வேண்டும். உடம்பில் ஓர் உறுப்பை வெட்டி எறிந்து விட்டால் உயிரும் அந்த அளவுக்குக் குறையும் என்று கொள்ள வேண்டும். உடம்பு அழியும் காலத்து உடம்பு முழுவதும் நிறைந்திருந்த உயிரும் அழியும் என்று கொள்ள வேண்டும். எனவே இக்கருத்துப் பொருந்தாதது ஆகும்.

உயிரைப் பற்றிய இக்கருத்துக்கள் சமணர்களின் கொள்கைகளாகும். அவர்களது கொள்கையால் நேரிடுகின்ற பிழைகளை எடுத்துக்காட்டி ஆசிரியர் மறுத்தார்.

208. எங்கும்தான் வியாபி யாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின்
தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும்
பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாய்ப் பார்த்திடல் பகரல் வேண்டும்;
இங்குஎலாம் ஒழிந்தால் நிற்பது எங்ஙனம்? இயம்பல் வேண்டும்.

உயிர் எங்கும் வியாபகமாகி நிறைந்த அறிவாகும் என்று சிலர் கொள்வார்கள். அவ்வாறாயின் உயிர் எவ்வாறு நிலைவேறுபாடுகளை அடைகிறது என்பதை விளக்கியாக வேண்டும். ஏனெனில் உறக்கம் பேருறக்கம் உயிர்ப்பு அடங்கல் ஆகிய மூன்று நிகைளிலும் உயிருக்கு அறிவு நிகழ்தல் வேண்டும். உயிர் தன் வினைக்கு ஏற்பத் துறக்க நிரயங்களுக்குச் சென்று திரும்பும் என்பர். எங்கும் நிறைந்த பொருளாயின் இது எவ்வாறு கூடும் என்று விளக்குதல் வேண்டும். உயிர் எங்கும் நிறைந்த தாயின் ஐம்பொறிகளில் நிறைந்ததாக ஒரே நேரத்தில் பொருந்தி நிற்பதாகும். ஆனால் ஐம்பொறிகளில் இருந்தும் வருகின்ற அறிவை உயிர் ஒவ்வொன்றாய் அறிவதன்றி ஒருங்கே அறிவதில்லை. இது எங்ஙனம் கூடும் என விளக்குதல் வேண்டும். எங்கும் நிறைந்திருக்கின்ற உயிர் தன் வியாபகத்தை ஒழித்து எப்படி ஓர் உடலில் தங்கி நின்றது என்பதையும் இயம்புதல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் விடை இன்மையின் இக்கொள்கை பொருந்தாது.

209. சுத்தமாம் ஆன்ம சித்தைத் துகள் உடல் மறைத்தது என்னின்
வைத்துறாது உடற்கண் வாயில் கரணங்கள் வழியால் ஞானம்;
ஒத்துறும் மலம்; அற்றாலும் உறும்மலம் வீடும் இன்றாம்;
பெத்தமும் அடையான்; முத்தனாய்ப்பிர காச னாமே.

உயிர் என்பது தோற்றமில் காலந் தொட்டே தூய அறிவு வடிவாக விளங்குவது. இடைப்பட்ட காலத்தில் உயிரை வந்துபொருந்திய மாயையின் காரியமாகிய உடலே உயிரின் தூய அறிவினை மறைத்தது என்பர் சிலர். மாயையின் காரியங்களாகிய உடல் கருவி முதலியன அறிவை விளக்குவனவே அன்றித் தடை செய்வன அல்ல. தூய நிலையில் இருந்த உயிரறிவை எந்தக் காரணமும் இல்லாமல் மாயையின் காரியங்கள் வந்து தடை செய்தன என்பதும் பொருத்தமற்றது. ஏனெனில் காரணமில்லாமல் உயிரைப்பற்றிக் கொண்ட மாயை வீடு பேறு அடைந்த போதும் மீண்டும் அதனைக் காரணமின்றியே பற்றுதல் கூடும். எனவே முத்தி என்ற நிலையே இல்லாது போகும். உயிர் வீடு பேறு பெற்ற பிறகு மாயை பற்றாது என்று அவர்கள் வாதிடின் தோற்றமில் காலத்திலேயே தளைக்குட் படாமல் உயிர் முத்தனாய் விளங்குதல் வேண்டும்.

210. அசித்து அருவியாப கம்போல் வியாபகம் அருவம் இன்றாய்
வசித்திட வரும்வி யாபி எனும் வழக்கு உடையன் ஆகி
நசித்திடா ஞானச் செய்தி அநாதியே மறைத்து நிற்கும்
பசுத்துவம் உடையன் ஆகிப் பசு என நிற்கும் ஆன்மா.

ஆன்மாவுக்கு மாயையினிடத்திலே வியாபகத் தன்மை உண்டு. ஆன்மா அருவமானது. ஆனால் அதனுடைய அருவமும் வியாபகத் தன்மையும் மாயையின் தன்மைகளைப் போன்றது அல்ல. ஆன்மா எப்பொருளைப் பற்றி நின்றதோ அதுவதுவாய் நிறைந்து நிற்கும் இயல்புடையது. ஆன்மாவின் அறிவு என்பது ஒரு போதும் அழிவதில்லை. ஆயினும் ஆணவ மலம் ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களைத் தோற்றமில் காலந்தொட்டே மறைத்து நிற்பாதம். ஆதலால் ஆன்மா பசுத்தன்மை பெற்று நிற்கும்.

பசுத்துவம்- கட்டுக்குள் அகப்படும் தன்மை. பாசத்தால் கட்டுப்பட்டு நிற்பது எதுவோ அதுவே பசு. இங்கே உயிர் ஆணவமலத்தில் கட்டுண்டு இருப்பதால் பசு எனப் பெற்றது.

211. மாயையின் வயிற்றுள் மன்னி வருஞ்செயல் ஞானம் இச்சை
ஏயும் அக் கலாதி மூன்றால் ஏகதே சத்தில் ஏய்ந்து இங்கு
ஆயும் முக்குணங்கள் அந்தக் கரணங்கள் ஆதி எல்லாம்
காயம் பெத்தங்கள் ஆகி கலந்து உடன் நிற்கும் ஆன்மா.

பசுத்துவம் உடையது என்று கூறப்பட்ட உயிர் தூவா மாயையில் தத்துவங்களைப் பொருத்தி அதில் தோன்றும் கலை வித்தை அராகம் ஆகிய மூன்றோடும் கூடிப் பொதுவாக விளக்கம் பெற்று நிற்கும் அதன் பின்னர் இம்மூன்றினையும் சிறப்பு வகையால் கூடி உட்கரணங்கள் முக்குணங்கள் ஆகியவற்றோடும் பொருந்தி மேலும் விளக்கம் பெற்று நிற்கும். கலாதி மூன்றும்- கலை வித்தை அராகம் என்ற மூன்றும்- காயபெத்தம்- உடல் ஆகிய கட்டு.

212. சூக்கும தேகி ஆகித் தூலரூ பத்தின் மன்னி
சாக்கிர முதலா யுள்ள அவத்தையுள் தங்கி எங்கும்
போக் கொடு வரவும் எல்லாம் புரிந்து புண்ணியங்கள் பாவம்
ஆக்கியும் பலன்கள் எல்லாம் அருந்தியும் நிற்கும் ஆன்மா.

உயிர் மேற்கூறியவாறு உட்கருவிகளுடன் கூடி நுண்ணுடம்பைப் பெறும். அதன் பிறகு வினைக்கேற்ற பரு உடம்பில் தங்கும். பருஉடம்போடு பொருந்திய நிலையில் உயிருக்கு ஐந்து வகைப்பட்ட நிலை வேறுபாடுகள் உளவாகும். பரு உடம்போடு எங்கும் சென்றும் வந்தும் செயல் புரிந்தும் செயல்களாகிய புண்ணிய பாவங்களை ஈட்டியும் அவற்றின் விளைவாகிய இன்பத்துன்பங்களை நுகர்ந்தும் வரும்.

213. மருவுஆ னந்தம் விஞ்ஞானம் மனோபிராணன் அன்னமயம்
உருவாம் தன்மை உண்டாய் முன்ஒன்றுக்கு ஒன்று சூக்குமமாய்
வருமாம் அன்னமயம் பற்றி; மாயை முதற்காரணமாகும்,
அருவாய் ஆன்மா ஐங்கோசத்து ஆர்ப்புண்டு அவற்றின் அகம்புறமாம்.

ஆன்மாவுக்கு ஆனந்தமயகோசம், விஞ்ஞான மயகோசம், மனோமயகோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் என்று ஐந்து உறைகள் உண்டு என்பர். இவ்ஒவ்வொன்றும் முறையே ஒன்றிலிருந்து ஒன்று உளதாகும். இவற்றுள் முதலில் தோன்றுவது நுட்பமாகவும் அதன் பின்னர்த் தோன்றுவது அதனினும் பருமையாகவும் விளங்கும். இவ்வைந்து உறைகளையும் தனித்தனி உடல்களாகக் கூறுவர். இவை யாவற்றுக்கும் முதற் காரணமாக விளங்குவது தூவாமாயை ஆகும். அருவமான ஆன்மா இவ்வாறு ஐந்து உறைகளால் பிணிக்கப்பட்டு அதுவதுவாய் அவற்றோடு நின்று போக்கும் வரவும் புரியும்.

கோசம்- உறை. இந்த ஐந்து உறைகளுக்கும் காரண உடல், கஞ்சுக உடல், குண உடல், நுண்ணுடல், பருஉடல் என்றும் பெயர்கள் வழங்கும்.

214. தோற்பாவைக் கூத்தும் தொல்லை மரப்பாவை இயக்கமும் சீர்த்
தேர்ப்பாரின் செலவும் வேறாய்ச் செலுத்துவோர் செய்தி தானும்
பார்ப்பாய வேடம் கட்டி ஆடுவோர் பரிசு போலும்
ஆர்ப்பாய காயந் தன்னை ஆன்மா நின்று ஆட்டும் ஆறே.

உயிரினைப் பதிந்து நிற்கும் மேற் கூறப்பட்ட ஐந்து உடல்களையும் வேற்றுமை இன்றி நின்றே உயிர் செலுத்தும் என்பதற்கு ஐந்து உவமைகள்- கூறலாம். அவை முறையே சிறப்பான தேரை நிலத்தின் மீது செலுத்துவோர் தன்மையும், மரப் பாவையினை இயக்குவோர் தன்மையும், தோல் பாவையினை ஆட்டுவோர் தன்மையும், தன்னுடலை விட்டு இன்னொரு உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்வார் தன்மையும், பற்பல வேடங்களைப் புனைந்து நடிப்போர் தன்மையும் என்ற ஐந்துமாம்.

பாடலில் கூறப்பட்டுள்ள உவமைகளை இடம் மாற்றி உரை எழுதினார் சிவஞானமுனிவர். அவ்வாறு எழுதியதற்கு இவை ஐந்தும் முறையே ஒன்றற்கொன்று அந்தரங்கமாய் அவ்ஐங்கோசங்களிலும் ஆன்மா நின்று செய்யும் ஆற்றிற்கு உவமை ஆமாறு தெரிந்து உணர்ந்து கொள்க. செய்யுளாகலின் முறை பிறழ வைத்தார் என்று காரணமும் காட்டினார். இங்கே சிவஞானமுனிவர் கூறிய வரிசை அன்னமய கோசம் பிராணமய கோசம் மனோமய கோசம் விஞ்ஞான மய கோசம் ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்திலும் ஆன்மா நின்று செலுத்து முறைமையை உணர்த்திற்று

215. என்உடல் பொறி பிராணன் கரணம் என் உணர்வு என்றக்கால்
தன்னின்வே றாகும் நீ என் தன்மனை என்ற எல்லாம்
நின்னின் வேறாகும்; என்னின் நீங்கிடா இவை இங்கு என்னின்
உன்னின் ஆகும் நீயாம் உகிர்மயிர் உகவும் காண்டி.

என் மனைவி, என் கணவன் என்று உன்னோடு வேற்றுமையற்று நீ கூறி வந்தன யாவும் ஆய்ந்து பார்க்கும் போது அவர்கள் உனக்கு வேறானவர் என்பது புலப்படும். அது போலவே என் உடல் என் பொறிகள். என் மூச்சு எனது கரணங்கள் என்று நீ கூறுபவை யாவும் ஆய்ந்து பார்க்கில் உன்னிலிருந்து வேறாகும். அவ்வாறு அன்று; என் மனைவி என்ற போது அவள் என்னிலும் தனித்தவள். ஆனால் உடம்பும் பொறிகளும் கரணங்களும் என்னை விட்டு நீங்கா என்று நீ கூறுதல் கூடும். அவையும் உனக்கு வேறானவையே. உனது நகமும் உனது தலை மயிரும் உன்னை விட்டு நீங்குவன அன்றோ? எனவே ஆன்மாவாகிய நீ இவற்றிலிருந்தும் வேறானவன் என்பதை அறிக.

216. பொன் அணி ஆடை மாலை போது மேலான போது இங்கு
என் அணி யான் என்று உன்னி இருந்தனை; பிரிந்த போது
நின் அணி நீயும் அல்ல ஆயினை; காயம் நின்னின்
அன்னியம் ஆகும்; உன்னை அறிந்து நீ பிரிந்து பாரே.

பொன்னால் செய்த அணிகலன்கள், உடுத்திய ஆடை, அணிந்த பூமாலை இவற்றை எல்லாம் நீ அணிந்து கொண்ட போது அவை உன்னோடு வேற்றுமையற்றன என்றே கருதியிருந்தாய். உன்னில் ஒரு தொகுதி என்று எண்ணியிருந்தாய். ஆனால் அவற்றை நீ களைந்த போது அவை வேறு நீ வேறு என்பதனை உணர்ந்தாய். அது போலவே உடம்பும் உன்னிலிருந்து வேறானது. இந்த உண்மையை அறிந்து அவற்றை விட்டு நீ நீங்கி நிற்பாயாக.

217. உடல்யான் அல்லேன் ! இந்த உணர்வுயான் அல்ல ஆன
கடன்யாதென்னின் வேறு கண்டு உணர்வு என்னது என்கை
இடர்இலா என்தன் ஆன்மா என்றபோது ஆன்மா வேறோ?
திடனதா உயிரை வேறு கண்டிடார் செப்பலே தாண்.

உடல் யான் அல்லேன் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அதனாலே என் ஆன்மா என்று கூறும் போது நான் என்பது ஆன்மாவின் வேறோ? என் உணர்வு என்பதும் என்னிலிருந்து வேறானதோ? என்று சிலர் ஐயம் எழுப்புதல் கூடும். இவ்வாறு வழங்குகிற வழக்கு உயிரை மற்றவற்றிலிருந்து பிரித்துக் காணும் தெளிவு இல்லாதவர்களுடைய கூற்றேயாகும்.

இந்த உணர்வு யான் அல்லவான கடன் யாது என்னில் என்ற பகுதிக்கு உரை எழுதிய சிவஞானமுனிவர் விஞ்ஞான மய கோச ஆனந்தமய கோசங்கள் யான் அல்லேன் ஆகிய முறைமை யாது என்னில் என்று எழுதினார். உயிர் ஐந்து உறைகளில் பொருந்தி இருக்கும் என்பது முன்பே கூறப்பட்டது. அந்த ஐந்தனுள்ளும் விஞ்ஞானமய கோசமும் ஆனந்தமய கோசமும்- உயிருக்கு மிக நெருங்கியன. ஆதலால் அவையும் உயிரின் வேறோ என்ற வினாவிற்கு விடை கூறியதாயிற்று. இங்கே விஞ்ஞானமய கோசம் மட்டிலுமே கூறப்பட்டது எனினும் இனம் பற்றி ஆனந்தமயகோசமும் உயிரிலிருந்து வேறானது என்பது பெறப்படும்.

218. புந்தியை மனமது என்றும் மனமது புந்தி என்றும்
சிந்தையைச் சீவன் என்றும் சீவனைச் சிந்தை என்றும்
முந்தனை ஆன்மா என்றும் ஆன்மாவை முந்தன் என்றும்
வந்திடும்; எந்தன் ஆன்மா என்றது மற்று ஒற்றைக்காண்.

புத்தியை மனம் என்று வழங்குவர். மனத்தை புத்தி என்று வழங்குவர். சித்தத்தை உயிர் என்று வழங்குவர். உயிரைச் சித்தம் என்று வழங்குவர். இறைவனை உயிர் என்றும் உயிரை இறைவன் என்றும் வழங்குவர். இது எவ்வாறு எனில் ஒன்றனோடு இயைபு உடைய பிறிது ஒன்றினை ஆகு பெயராகக் கொண்டு உரைப்பதாகும். எனவே எனது ஆன்மா என்று கூறும் பொழுது தன்னோடு இயைபு உடைய பிறிதொன்றுக்கு ஆகு பெயராயிற்று என்று அறிக. முந்தன்- இறைவன், பரம காரணன் ஆதலால் இப்பெயர் பெற்றான்.

219. அறிவு உடல் சிந்தை ஆன்மா அணைதலால் ஆன்மா என்பர்
எறிசுடர் விளக்கு இருக்கும் இடத்தையும் விளக்கு என்றாற்போல்
பொறிபுலன் கரணம் எல்லாம் புலப்படும் அபேதமாகிப்
பிறிதராது அறிவது ஆன்மா அறிபொருள் பின்னம் ஆமே.

ஆன்மாவின் வேறாகிய அறிவு முதலிய ஐந்து கோசங்களையும் ஆன்மா பொருந்தி நிற்றலால் அவற்றையும் ஆன்மா என்று கூறுவர். இது எவ்வாறு எனில் ஒளியைத் தருகின்ற விளக்கு இருக்கிற தகழியையும் விளக்கு என்றே கூறுவது போன்றது. அவ்வாறே பொறி புலன் கரணம் யாவும் அபேதமாகப் பிரிப்பின்றி அறிவதாகிய ஆன்மாவும் அவற்றிலிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில் அறிகின்ற ஆன்மா அறியப்படுகின்ற பொருள்களாகிய அப்பொருள்களில் இருந்து வேறுபட்டதாகும்.

உபநிடதங்களில் சில இடங்களில் ஐந்து கோசங்களையும் ஆன்மா என்று கூறப்பட்டதன் உட்கருத்து இது என்று இப்பாடலில் விளக்கினார்.

220. கண்டுஉணர் புருடன் வேறு கனவு கண்டு ஒடுங்கிக் காயம்
உண்டியும் வினையும் இன்றிக் கிடந்து உயிர்த்திட உணர்ந்து
கண்டிடும் கனவும் சொல்லி ஒடுக்கமும் கருதி வேறாய்
உண்டியும் வினையும் உற்று இங்கு உணர்த்திட உணரா நிற்கும்

உயிர் அன்னமய கோசம் முதலிய நான்கினையும் ஒன்றொன்றாக விடுவதன் மூலம் ஐந்து நிலைவேறுபாடுகளுக்கு உட்படும். கனவு நிலையில் நுகர்வும் தொழிலும் இல்லாமல் கிடந்த உயிர் விழித்த பின் தான் கண்ட கனவைச் சொல்லும். உறக்கத்தில் இருந்து எழுந்த பிறகு நன்றாகத் துயின்றேன் என்று கருதி உணரும். பேருறக்கமும் உயிர்ப்பு அடங்கலும் சித்தமும் கூடாத நிலை ஆகையினால் அவற்றைச் செயலும் தொழிலும் ஆகிய மறுதலையில் வைத்து உயிர் அறியும். இவ்வாறு நனவு நிலையில் மற்றைய நான்கு நிலைகளையும் உயிர் உணர்ந்து வரும். எனவே பொறி புலன் முதலியவற்றின் வேறாய் நின்று அறியும் தன்மை உடையது உயிர் என்று அறிதல் கூடும்.

இங்கு ஒடுக்கம் என்ற சொல் உறக்கத்தைக் குறித்தது. கனவு நிலையைப் போல உறக்கத்தைச் சொல்ல இயலாது. ஆகையால் ஒடுக்கமும் கருதி என்றார். பேருறக்கமும் உயிர்ப்படங்கலும் ஆகிய இரண்டு நிலைகளிலும் சித்தம் செயல்படாமையினால் அவற்றைக் கருதியும் உணர இயலாது. அதன் மறுதலையில் வைத்தே உணர்தல் வேண்டும். எனவே வேறாய் உண்டியும் வினையும் உற்று உணரா நிற்கும் என்றார் ஆசிரியர்.

221. புருடனே அறிவனாகில் பொறிபுலன் ஆதி போதம்
தருவதுஎன்? அறிவு மாயா தனுகர ணாதி பற்றி
வருவது இங்கு; அநாதியாக மலத்தினின் மறைந்து நிற்பன்
அருவனவாய்; இவற்றோடு ஆளும் அமைச்சரும் அரசும் போல்வன்.

இங்கே ஒரு வினா எழும். உயிரே அறிய வல்லது என்று கூறினால் பொறி புலன்கள் முதலியன உயிருக்கு அறிவைத் தருவன என்று ஏன் கொள்ள வேண்டும்? என்பது அந்த வினா. ஆன்மா தோற்றமில் காலந்தொட்டே ஆணவ மலத்தில் மறைந்து அருவமாய் நிற்கும். எனவே ஆன்மாவுக்கு மாயையின் காரியங்களாகிய உடல் கருவிகள் ஆகியவற்றின் துணை வேண்டப்படுகிறது. அமைச்சரின் துணை கொண்டு ஆளுகின்ற அரசனைப் போல் உடல் கருவிகளின் துணை கொண்டு உயிரும் பொருள்களை அறிந்து வரும்.

இறைவன் முற்றறிவினன். அவனுடைய அறிவு வாலறிவு ஆகையினால் அவன் மாயா காரியங்களைப் பற்றி அறிதல் வேண்டா. உயிர் அவ்வாறு அன்றி மாயா காரியங்களைப் பற்றி நின்றே அறியும். ஆதலால் உயிர் அநாதியே ஆணவ மலத்தில் மறைந்து நின்றது என்பது பெறப்படும் என்பது சிவஞான முனிவரின் உரை.

மூன்றாம் அதிகரணம்

222. படைகொடு பவனி போதும் பார்மன்னன் புகும்போது இல்லில்
கடைதொறும் விட்டுவிட்டு காவலும் இட்டுப் பின்னர்
அடைதரும் தனியே அந்தப்புரத்தினில்; அதுபோல் ஆன்மா
உடலினில் அஞ்சு அவத்தை உறும் உயிர் காவலாக.

அரசன் உலா மேற்கொள்ளும் போது அமைச்சர் படைத்தலைவர் முதலிய பரிவாரங்களுடன் செல்லுவான். அவன் மீண்டும் அரண்மனைக்குள் புகும்போது அவர்கள் அனைவரும் அவனுடன் புகமாட்டார்கள். ஒவ்வோரிடத்தினில் ஒவ்வொரு தகுதி உடையவர்களை நிறுத்திப் பிறர் யாரும் புகா வண்ணம் காவலும் இடுவான். இறுதியாக அரசன் தான் மட்டும் அந்தப் புரத்துக்குள் செல்வான். அது போலவே உடல் கருவிகளுடன் கூடிப் பொருள்களை அறிந்து நுகரும் உயிரும், உடலுக் குள்ளே ஒடுங்கும் போது தனக்குத் துணையாக நின்ற கருவிகளை விட்டு நீங்கி உந்தியில் உயிர்க் காற்றைக் காவலாக நிறுத்தி மூலாதாரமாகிய அந்தப்புரத்துக்குள் தான் சென்று தனியாய் விடும். இவ்வாறு உயிர் ஐந்து நிலைவேறுபாடுகளை எய்தும்.

உயிரின் நிலைவேறுபாடுகள் ஐந்தவத்தை எனப்படும். அவற்றின் இயல்புகளும் இடமும் கூடும் கருவிகளும் ஆகிய விரிவுகள் இனிவரும் பாடல்களில் ஆசிரியரால் விளக்கப்படுகின்றன.

223. சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்; கனவு தன்னில்
ஆக்கிய இருபத்தைந்து களத்தினில்; சுழுனை மூன்று
நீக்கிய இதயம் தன்னில் துரியத்தில் இரண்டு நாபி;
நோக்கிய துரியா தீதம் நுவலின் மூலத்தின் ஒன்றே.

நனவு நிலையில் உயிர் புருவ நடுவை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் முப்பத்தைந்து. கனவு நிலையில் உயிர் கழுத்தை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் இருபத்தைந்து, உறக்க நிலையில் உயிர் இதயத்தை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் மூன்று மட்டிலுமே. பேருறக்க நிலையில் உயிர் உந்தியை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் தொழிற்படும் கருவிகள் இரண்டு ஆகும். உயிர்ப்பு அடங்கல் நிலையில் உயிர் மூலாதாரத்தை இடமாகக் கொண்டு தங்கி நிற்கும். அந்நிலையில் உயிர் மட்டிலுமே தொழிற்படும்.

நனவு நிலையில் தொழிற்படும் கருவிகளாவன; அறிவுப் பொறிகள் ஐந்து. செயற் பொறிகள் ஐந்து புலன்கள் ஐந்து. செயற் பொறிகளின் செயல்பாடு ஐந்து, உயிர்க்காற்று முதலிய காற்றுகள் பத்து, உட்கருவிகள் நான்கு, உயிர் ஒன்று. ஆக முப்பத்தைந்து. கனவு நிலையில் அறிவுப் பொறிகள் ஐந்தும் செயற் பொறிகள் ஐந்தும் ஆகிய பத்தும் நீங்கி விடுகின்றன. எனவே கனவு நிலையில் தொழிற்படுவன இருபத்தைந்து கருவிகளாகும். உறக்க நிலையில் செயற்படும் கருவிகள் மூன்றேயாகும். அவை சித்தம், உயிர்க் காற்று, உயிர் என்பன. பேருறக்க நிலையில் சித்தமும் தொழிற்படாது நீங்கிவிட உயிர்க்காற்றும் உயிரும் ஆகிய இரண்டே தொழிற்படும். உயிர்ப்படங்கல் நிலையில் உயிர் ஒன்றே தனித்துச் செயல்படும்.

களம்- கழுத்து. நாபி- உந்திச்சுழி

224. இருவகை சாக்கிராதி அவத்தைகள் இயல்புதானும்
ஒருவகை கீழே நூக்கி உற்பவம் காட்டும்; ஒன்று
பெருகமேல் நோக்கித் தீய பிறப்பு அறுத்திடும் ! யோகில்
தருவதோர் சமாதி தானும் தாழ்ந்து பின் சனனம் சாரும்.

முந்திய பாடலில் கூறிய நனவு முதலிய ஐந்து நிலைவேறுபாடுகளும் இரண்டு வகையாகக் கூறப்படும். அவற்றுள் முதல்வகை கீழ் நோக்கிச் சென்று ஒடுங்கும் முறைமையும், மற்றொரு வகைமேல் நோக்கித் தோன்றும் முறைமையும், உணர்த்தும் என்றார். இவற்றுள் கீழ்நோக்கி ஒடுங்குகின்ற முறை பிறவிக்கு வித்தாகும். மற்றொன்று பெருக மேல் நோக்கிச் செல்லுவதனால் தீய பிறப்பினை அறுத்திடும். யோக நிலையும் கூட அதுபோல ஒடுங்கியும் தோன்றியும் அவ்வாறே பயனைத் தரும்.

சிவஞான முனிவர் இச்செய்யுளில் கூறிய மூன்று பேதமும் முறையே சகலத்தில் கேவலம், சகலத்தில் சகலம், சகலத்தில் சுத்தம் எனப்படும் என்க என்று சிறப்புரை வரைந்தார்.

225. அறிதரு முதல் அவத்தை அடை தரும் இடத்தே ஐந்தும்
செறிதரும் கரணம் தன்னில் செயல்தொறும் கண்டு. கொள் நீ
பிறிவிலா ஞானத் தோரும் பிறப்புஅற அருளால் ஆங்கே
குறியொடும் அஞ்சு அவத்தை கூடுவர், வீடு கூட

மேற்கூறிய ஐந்து நிலைவேறுபாடுகளில் எல்லாக் கருவிகளோடும் கூடி உயிர் அறியும் என்று கூறப்பட்ட நிலை நனவு ஆகும். அதுவே முதல் அவத்தை என்றும் கூறப்பெறும். அது நிகழ்வது புருவநடுவில் என்றும் கூறப்பட்டது. அங்கேயும் மேற்கூறிய நனவு முதலிய ஐந்து நிலைவேறுபாடுகளும் நிகழும். இவ்வாறு நிகழ்கிறது என்பதைக் கருவிகளின் துணையோடு பொருள்களை அறியும் ஒவ்வொரு செயலிலும் நுணுக்கமாக உற்றுக் கவனித்தால் நீயே உணர்ந்து கொள்ளுதல் கூடும். இத்தகைய அவத்தைகளைத் தவிர கேவலம் சகலம் இரண்டும் நீங்கிய மெய்ஞ்ஞானத்தை அறிந்தோரும் வீடு பெறற் பொருட்டு இவ்வாறு ஐந்து நிலை வேறுபாடுகளைக் கொள்ளுவர்.

சிவஞான முனிவர் கேவல சகலங்கள் நீங்கிய சுத்தத்தில் உளதாகிய ஐந்து அவத்தைகள் உண்மை அதிகாரத்துள் உணர்த்த நின்றன என்று குறிப்பிட்டுச் சொல்லுகிறார்.

No comments:

Post a Comment