Wednesday 30 August 2017

வைப்பூருக்கும் சென்று வாருங்கள்!


‘தடை நீங்க நடைபோடலாம் திருமருகலுக்கு’- சோழ மண்டல கிராமப்புறங்களில் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கும் சொல்வழக்கு இது. சீர்காழிச் சிவக் கொழுந்தாம் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, அதனால் மகிழ்ந்த சிவபெருமான், செட்டிப்பெண் ஒருத்தியின் தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேற திருவருள் புரிந்த தலம் திருமருகல். இந்தத் தலத்துக்கு வந்து ஸ்வாமியை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி எழுந்ததே மேற்காணும் சொல்வழக்கு.

திருமருகல் மட்டுமின்றி வேறொரு தலத்துக்கும் இந்தத் திருக் கதையுடன் தொடர்பு உண்டு. அதுபற்றி அறியுமுன், திருமருகலின் மகிமையையும், செட்டிப் பெண் அருள்பெற்ற திருக்கதையையும் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

நாகை மாவட்டத்தில், தெற்கே புத்தாறும் வடக்கில் முடி கொண்டான் ஆறும் பாய்ந்தோட, இந்த நதிகளால் வளம் கொழிக்கும் ஊராகத் திகழ்கிறது திருமருகல். இங்கே, அருள்மிகு செளந்திரநாயகியுடன் திருக்கோயில் கொண்டிருக்கிறார், அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய தேவார மூவராலும் பாடல்பெற்ற இந்தத் தலத்தின் விருட்சம், வாழை. இந்த மரத்தின் கன்றுகளை கோயிலைத் தவிர வேறெங்கு பயிரிட்டாலும் வளராது என்பது, அதிசயம்! இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம், அருள்மிகு சுரம்தீர்த்த விநாயகர். இவரைப் பிரார்த்தித்துக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால், சுரநோய் நீங்கும் என்கிறார்கள். 

அதுமட்டுமா? இங்குள்ள தீர்த்தங்களும் மகத்துவம் மிக்கவை யாய் திகழ்கின்றன. வரலட்சுமி நோன்பு நாளில் லட்சுமி தீர்த்தத்தில் மூழ்கி மாணிக்கவண்ணரை தரிசித்தால், கடன் தொல்லை தீரும். சீராளன் தீர்த்தத்தில் நீராடி வேண்டிக்கொண் டால் புத்திரப் பேறு வாய்க்கும். சந்திரபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால், சகல நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இவ்வூரின் எல்லைக்குள் பாம்புகள் தீண்டி எவரும் இறந்தது இல்லை என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்கள், உள்ளூர் பக்தர்கள்.
முன்னொரு காலத்தில் குசகேது என்ற மன்னன் இந்தப் பகுதியை ஆண்டுவந்தான். அப்போது, மழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டது. குடிமக்கள் செய்தொழில் இல்லாமல் பசி, பட்டினியால் வாடினர். அரசனோ மழை வேண்டி அன்னதானம், சொர்ண தானம் யாவும் செய்தான். பூஜைகள் செய்து வேத பாராயணம் செய்தான். அடியாரை வழிபட்டான். சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி முதலிய விரதங்கள் மேற்கொண் டான் எனினும் மழை பொழியவில்லை. 
 
மனம் ஒடிந்த மன்னன் தற்கொலை செய்துகொள்ள முயன் றான்.  மக்களுக்காக மன்னன் தன் உயிர்துறக்க துணிந்ததை கண்டு இறைவன் திருமருகலைச் சுற்றி ரத்தினம், மாணிக்கம், முத்து, நெல் என மழையாய் பொழிவித்தார். ரத்தின மழை பொழிந்ததால் இங்குள்ள சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
பதிகமும் பரமனின் திருவருளும்!

திருமருகல் அருகில் உள்ள வைப்பூரில் வாழ்ந்த தாமன் செட்டியாருக்கு ஏழு அழகான பெண் பிள்ளைகள் இருந்தார்கள்.  அவர்களில் ஒருவரை முறைமாமனுக்கு திருமணம் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்த தாமன் செட்டியார் பொன், பொருளை வாங்கிக் கொண்டு, கெட்டவராக இருந்தாலும் வேறு மாப்பிள்ளைகளுக்கே ஆறு பெண்களையும் மணம் முடித்துக் கொடுத்தான்.  பொருள் ஆசையால் சொல் தவறி, முறை தவறி தந்தை நடப்பதை என்னி வருந்திய ஏழாவது பெண்ணான ‘கன்னி’ இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல், தன் முறைமாமனுடன் திருமருகலுக்குச் சென்றாள்.  அங்கு ஒரு மடத்தில் தங்கிய இருவரும், ஒருவர் மீது ஒருவர் விரல் படாமல் இருக்க நடுவில் ஒரு தர்ப்பையை வைத்துவிட்டு உறங்கினர்.  ஆனால், விதியின் விளையாட்டால் முறைமாமனை பாம்பு தீண்ட அவன் இறந்து கிடந்தான்.  விடிந்து கண் விழித்துப் பார்த்த கன்னி, அப்போதும் அவனை தொடாமல் இறைவனை நெஞ்சுருக வேண்டி `ஆலகால விஷத்தை உண்டவனே... உன்னை நம்பி மணமாலை சூடவந்த எனக்கு ஏன் இந்த கொடுமை? மருகல் பெருமானே! நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்' என்று கதறி அழுது, பரமனைத் தொழுதாள்.
அந்த  தருணத்தில் அங்கு வந்த திருஞான சம்பந்தர் அவளது கதையை கேட்டு வருந்தி, `இச்சூழ்நிலையிலும் இந்த பெண் இறைவனை எண்ணியே ‘தடையாய்,  விடையாய், மருகலு டையாய், வீரக் கழல் அணிந்த வேம்பே என்றேல் லாம் இறைவனை பாடுகிறாளே... இவள் இன்னலை தீர்த்திட வேண்டும்’ என்று எண்ணிப் பாடுகிறார்,

சடையா யெனுமால் சரணி யெனுமால்
வுடையா யெனுமால் வெருவா விழுமால்

மடையார் குவளை மலரும் மருகல்

உடையாய் தகுமோ இவளுள் மெலிவே 

என்று தொடங்கி 11 பாடல்களை அவர் பாடி முடித்தபோது, முறைமாமன் கண் விழித்து எழுந்தான்.  விரும்பிய முறைமாமனுடன் செட்டிப் பெண்ணின் திருமணம் இனிதே அத்தலத்தில் நடந்து முடிந்தது.  இன்றைக்கும் கோயிலில் செட்டிப் பெண், செட்டிப் பிள்ளை திருமணம் நடந்த மண்டபம் தனியே அமைந்திருக்கிறது. இருவருக்கும் தனித் தனியே கோயிலில் சிலைகளும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரைப் பெருவிழா பத்தாவது நாளில் செட்டிப் பெண் கல்யாணம் நடைபெறுகிறது. மணக் கோலத்தில் பல்லாக்கில் வீதியுலா நடைபெறுகிறது.  திருவிழாவைக் காண திரளான மக்கள் கூடு கிறார்கள்.  திருமண தடை அகற்றும் திருத்தலம் என்ற நம்பிக்கையோடு இறைவனைத் தரிசித்து பயனடைகிறார்கள்.

செட்டிப் பெண் வாழ்ந்து தினமும் பூஜித்த ஜம்புநாதர் சுவாமிக் கோயில், திருமருகல் அருகே வைப்பூர் எனும் ஊரில் உள்ளது.  அங்கு சென்ற போது, பழைமையான அந்த கோயிலின் திருப்பணி ஆரம்ப நிலையில் இருந்தது. கிராம நிர்வாக அலுவலராக இருந்து ஓய்வுபெற்றும், கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்காக ஓய்வின்றி உழைத்து வரும் அன்பர் இராமலிங்கத்தைச் சந்தித்தோம், 

“செட்டிப் பெண் வாழ்ந்த இத்தலம் சிதிலம் அடைந்து பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. கோயிலின் சுற்றுப்புறங்கள் திறந்தவெளி கழிப்பிட மாகவும், குடிமகன்களின் களியாட்ட கூடமாகவும் மாறியதை கண்டு வேதனை அடைந்தோம்.
  
நல்லவர்களின் துணையோடு கோயிலை புதுப் பிக்கும் முயற்சியில், பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு பகுதி செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார். மீதி செலவுக்கு என்ன செய்வது என்று தெரியலை.  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் புதுப்பொலிவு பெறுவது, எந்நாளோ?” என்று ஏக்கத்துடன் முடித்தார்.  

திருமருகல் கோயிலில் செட்டிப் பெண் மண்டபத்தில் தடை நீங்கி திருமணம் செய்யும் புதுமணத் தம்பதியினர் அப்படியே வைப்பூருக்கும் சென்று தரிசித்து, ஐயனின் திருகோயில் புதுப் பொலிவு பெற பிரார்த்திக்கலாமே!


உங்கள் கவனத்துக்கு

திருமருகல்

ஸ்வாமி: அருள்மிகு ரத்னகிரீஸ்வரர் 

அம்பாள்:
 அருள்மிகு செளந்திர நாயகி.

சிறப்பு பிரார்த்தனை:
 இத்தலத்துக்கு வந்து ஸ்வாமி-அம்பாளைத் தரிசித்து வழிபட, திருமணத் தடைகள் நீங்கும். மேலும் நோய்கள் நீங்க சுரம் தீர்த்த விநாயகரையும், கடன் தொல்லைகள் நீங்க மணிவண்ணரையும் வழிபட்டுச் செல்கிறார்கள்.

பாடியவர்கள்:
 அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர்

நடை திறக்கும் நேரம்: காலை 7 முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது?:  
மயிலாடுதுறை திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையி8ல் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் கங்களாஞ்சேரி எனும் ஊர் அமைந்துள்ளது. இந்த இடத்தில் இருந்து இடப் புறமாக கிளைபிரிந்து செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வைப்பூரை அடையலாம். இங்கே தரிசனத்தை முடித்துவிட்டு திருமருகலுக்குச் செல்லலாம். இரண்டு கோயில்களும் சுமார் 4 கி.மீ. தூர இடைவெளியில் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment