Friday 18 August 2017

ஆடி அமாவாசை - பித்ரு தோஷம் தீர்க்கும் முன்னோர் ஆராதனை

                          ஏன்? எதற்கு? எப்படி?

மது எதிர்காலம் சிறக்கவும், நம் சந்ததியினர் சிறப்புற வாழவும் நம் முன்னோர்களின் ஆசியும் அருளும் மிக அவசியம். வாழ்வில் கடன் பிரச்னைகள், புத்திரப் பாக்கியம் இல்லாமை, பிணிகள் முதலான இடர்ப்பாடுகளுக்கு, பித்ருக்களாகிய முன்னோரை முறைப்படி வழிபடாததும் ஒரு காரணமாகும் என்கின்றன ஞான நூல்கள். ஆகவே, வாழ்வில் இன்னல்கள் நீங்க முன்னோரை வழிபடுவது அவசியம்.

நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது:  
தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசநம்

குல ஸ்ந்தாரகம் சேதி ச்ராத்த மாஹீர் மநீஷிண:

ஆம்! பித்ருக்களை நினைத்து நாம் செய்யும் தர்ப்பண பூஜைகள் நமக்குப் பொருளையும், ஆயுளையும், சுவர்க்கப் பேறு முதலான சுப பலன்களையும் கொடுக்கும். பகைவர்களை ஓடச்செய்து, நமது குலத்தைத் தழைத்தோங்கச் செய்யும்.    
பித்ரு தோஷம் என்றால் என்ன?

நமக்கு உயிரையும் உடலையும் தந்த முன்னோர்களை... அவர்கள் இருக்கும்போது, உரிய மரியாதைகளை, உபசாரங்களை முறைப்படி அளித்து பராமரிக்க வேண்டும்.மறைந்துபோன முன்னோரை, ஞான நூல்கள் வழிகாட்டியபடி முறைப்படி ஆராதனைகள் செய்து வழிபட வேண்டும். 

இவற்றைச் செய்யாமல் விட்டுவிடும்போது முன்னோர்களின் மனவருத்தத்துக்கு ஆளாவோம். அவர்களின் மனக்குறையே பித்ரு தோஷமாக நம்மைப் பீடிக்கும்.

மனிதன் ஒருவனுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய பலவகை தோஷங்களைக் குறித்து ஜோதிடம் விளக்குகிறது. அவற்றைக் கண்டறிந்து உரிய பரிகாரத்தைத் தேடாவிட்டால், நமது மகிழ்ச்சி கெடும் என்பது பெரியோர்கள் வாக்கு. அப்படி நம்மை வாட்டும் தோஷங்களில் ஒன்று பித்ரு தோஷம்.

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகு - கேதுக்களோடு எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டாகும்.    
1, 5, 7, 9 ஆகிய இடங்களில் ராகு - கேதுக்கள் இருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. சூரியனும் சனியும் சிம்மத்தில் சேர்ந்திருக்க, ராகுவும் உடன் இருந்தால், பித்ரு தோஷம் மூன்று தலைமுறைக்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் மோட்ச ஸ்தானத்தில் சனி, ராகு - கேதுக்கள் வரும்போது சூரியனின் சேர்க்கை ஏற்பட்டால் பித்ரு தோஷம் வரக்கூடும்.  ஜோதிட விதிகளின்படி 9-ம் இடத்துக்கு பித்ரு ஸ்தானம், பித்ரு தோஷ கர்ம ஸ்தானம், பந்து (உறவினர்) கர்ம ஸ்தானம் என்று பெயர்கள் உண்டு.

பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை இருந்தால் அவர்களது வாழ்க்கையில் பித்ருக்களின் அதிருப்தியால் சிரமங்கள் உண்டாகலாம்.

நம் முன்னோர்களுக்கு வரக்கூடிய சிராத்த திதி நாள் தெரிந்தும் அன்று எள்ளும் நீரும் விடாமலும், தானம் கொடுக்காமலும், காக்கைக்கு அன்னமிடாமலும் மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டு அலட்சியமாக இருப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பித்ரு தோஷம் பற்றிக்கொள்ளும்.

இந்த மனிதப் பிறவி சகல வளங்களையும் பெற்று வாழ, பித்ருக்களை உரிய நாளில் வழிபட்டு, அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டக் கூடாது.

யாரெல்லாம் பித்ரு வழிபாட்டில் அலட்சியம் காட்டுவார்கள்?

பித்ரு ஸ்தானமாகிய 9-ம் இடத்தில் பாவர்கள் அமர்ந்து, பாவ கிரகங்களின் பார்வை பட்டால், அந்த ஜாதகர் முன்னோர் வழிபாட்டை முறையாகச் செய்ய மாட்டார்.

12-ல் சனியும் சுக்கிரனும் சேர்ந்து அமைந்திருக்கும் ஜாதகருக்கு கர்மங்கள், தோஷங்கள் முதலான விஷயங்களில் நம்பிக்கைக் குறைவாக இருக்கும். ஆகவே அவற்றைச் செய்யாமல் விட்டுவிட வாய்ப்பு உண்டு.

குடும்பத் தலைவருடைய ஜாதகத்தில் பித்ரு கர்ம தோஷம் இருந்து, அவற்றை உரிய பரிகாரம் செய்து விலக்காவிட்டால், 16 தலைமுறைக்கு அந்தத் தோஷத்தின் தாக்கம் இருக்கும் என்கின்றன ஞான நூல்கள். 

கன்னி ராசியில் புதன் இருக்க பிறந்தவர்களுக்குப் பித்ரு பூஜைகளைச் செய்வதில் நம்பிக்கை ஏற்படும். ஆனால் வழிபாட்டை செய்துவிட்டு, அதை கேலி செய்யும் மனோபாவமும் அவர்களுக்கு இருக்க வாய்ப்பு உண்டு. 12-ம் வீட்டில் சூரியன் அமர்ந்திருந்தால் மதம் தொடர்பான விரோதப் போக்கு தென்படலாம். 

இதுபோன்ற ஜாதக அமைப்பைக்கொண்டிருக்கும் அன்பர்களும் ஜாதகத்தின் தங்களின் நிலையை அறிந்துகொண்டு, கடும் பிரயத்தனப்பட்டாவது பித்ரு வழிபாட்டை செய்து, முன்னோரின் ஆசியையும் அருளையும் பெற வேண்டும்.

வருடத்துக்கு எத்தனை தர்ப்பணங்கள்?

சிராத்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகிய அனைத்தும் ஒன்றையே குறிப்பனவாகும். சிராத்தம், ஒவ்வொரு வருடமும் நம் முன்னோர் இறந்த திதியில் செய்யப்படுவது. தர்ப்பணம் என்பது ஒவ்வோர் அமாவாசை அன்றும் செய்யப்படுகிறது. படையல் என்பது வருடத்துக்கு ஒருமுறை செய்யப்படுவது. இவை அனைத்துமே இறந்த முன்னோர்களுக்காகச் செய்யப்படுகிற சடங்குகள். இவை நம் முன்னோர்களைச் சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்வித்து, நமக்கு அவர்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.

வருடத்துக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். 

இவை அனைத்தையும் செய்ய முடியவில்லை என்றாலும் ஆடி மாதம், தை மாதம் வரும் அமாவாசை தினங்களில் அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதேபோல் மஹாளயபட்ச அமாவாசை தினத்திலும் தர்ப்பணம் செய்வது மிக அவசியம்.     
எள்ளும் தர்ப்பையும் எதற்கு?

பூமியில் பலவகை புற்கள் முளைத்துவந்தாலும் தர்ப்பைக்குத் தனி சிறப்புண்டு. விசேஷ குணம் நிரம்பிய தர்ப்பை ஆகாயத்தில் தோன்றியதாக ஒரு நம்பிக்கை உண்டு.  இதன் ஒரு முனையில் பிரம்மனும், மறு முனையில் சிவனாரும், நடுவில் பெருமாளும் வாசம் செய்வதாக நம்பிக்கை. தர்ப்பைக்குத் திருப்புல், தெய்வப் புல், அமிர்த வீர்யம் ஆகிய பெயர்கள் உள்ளன. 

மனித முயற்சிகள் அதிகமில்லாமல், சுயம்புவாகத் தோன்றும் தர்ப்பை, நிலத்தில் வாடி விடாத, நீரில் அழுகிவிடாத தன்மையுடையது. 

ஆன்மா தோன்றுவது போன்று தானே தோன்றி, தானே வளரும் தர்ப்பையில் ஆன்மாவை ஆவாஹனம் செய்து வழிபடுவார்கள். அதிக உஷ்ணத் தன்மைகொண்ட தர்ப்பை அமாவாசை மற்றும் கிரகணக் காலங்களில் அதிக வீர்யத்துடன் திகழும் என்பதால், தர்ப்பணத்துக்குத் தர்ப்பைப் புல்லை மட்டுமே பயன்படுத்துவார்கள்.

அதேபோல், எள்ளாகிய கரிய நிற விதை, பெருமாளின் வியர்வைத் துளியிலிருந்து வெளிவந்த பரிசுத்தமான தானியம் என்பது வேதங்களின் கூற்று. பித்ருக்களுக்குச் செய்யப்படும் தர்ப்பண வழிபாட்டில் கறுப்பு நிற எள்ளைப் பயன்படுத்துவதால், பித்ரு லோகத்தில் முன்னோர்கள் தாகம் தீர்ந்து மகிழ்ச்சி அடைகின்றனர். 

கறுப்பு எள் தானியம் குறித்து ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது, மஹாளயபட்சம் வருவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாகவே, வீட்டில் பானையில் கொட்டிவைக்கப்பட்டிருக்கும் எள் தானியம் நிமிர்ந்து நின்று, பித்ருக்கள் வருவதை முன்கூட்டியே உணர்த்தும் என்றொரு நம்பிக்கை உண்டு.

இனி, தர்ப்பணம் செய்யும் முறையைத் தெரிந்துகொள்வோம். 
தர்ப்பணம் செய்யும் முறை

மொத்தம் 16 தர்ப்பைகளைப் பயன்படுத்துவது முறை. அவற்றில் 8 தர்ப்பைகளைக் கொண்டு செவ்வக வடிவில் கட்டம் அமையுங்கள். பிறகு, 5 தர்ப்பைகளை கூர்ச்சமாகச் செய்துகொள்ள வேண்டும். 

மூன்று நுனி தர்ப்பைகளைப் பயன்படுத்தி பவித்ரம் (மோதிரம் போன்று) செய்துகொள்ள வேண்டும். இவை போக இன்னும் இரண்டு குட்டையான தர்ப்பைகளைக் கையில் இடுக்கிக்கொண்டு பவித்ரத்தையும் அணிந்துகொண்டு தர்ப்பணத்துக்குத் தயாராக வேண்டும்.

அதாவது...

தர்ப்பை மோதிரம் - பவித்ரம் 

செவ்வக வடிவிலானது - பரிஸ்தரணம்

நடுவில் முடிச்சுடன் கூடியது  - கூர்ச்சம்

இவை தவிர, காலுக்குக் கீழே ஆசனம் என்ற பெயருக்கு உதிரி தர்ப்பைகளைப் போட்டுக்கொள்வது விதி.     
இனி அன்றைய திதி, வாரம், நட்சத்திரம் சொல்லியபடி கலசத்தில் உள்ள நீரில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகள் எல்லாம் எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும்.   
சங்கல்பத்தில்

`ஓம்! மேவிடும் பரதகண்டம் மேருவின் தென்பால்

தேவரும் விரும்பும் புண்ணிய நாட்டில் பொலிவுறு

எந்தன் வீட்டில் பித்ருக்கள் தெய்வங்கள் எழுந்து

ஆஷாட மாதத்து புனர்பூச விண்மின் நிலவும் நாளில் 

தர்ப்பணம் செய்வதை ஏற்க  குறிக்கோள் பகர்ந்திட்டேன்' 

என்று கூறி சங்கல்பிக்க வேண்டும்.

தொடர்ந்து...

`தேவர்களே, பித்ருக்களே, மகரிஷிகளே தர்ப்பையில் அமர்ந்திடுக' 

என்று கூறி மும்முறை எள் இடவேண்டும்.

அடுத்து, 

`தேவர்களே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன்

பிரம்மனே உமக்குத் தர்ப்பணம் விடுகிறேன்

மகரிஷிகளே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன்' 

என்று கூறி மூன்று முறை விரல் நுனி வழியாக தர்ப்பணம் இட வேண்டும்.

பின்னர்...

அப்பா - அப்பாவுக்கு அப்பா- அப்பாவின் தாத்தா ஆகியோரின்  பெயரைச் சொல்லி, கோத்திரம் சொல்லி எள்ளும் நீரும் விட வேண்டும். 

எப்படியென்றால், கோத்திரத்தின் பெயரைச் சொல்லி... 

அதாவது, ‘(கோத்திரத்தின் பெயர்) -------  கோத்திரத்தில் வந்த --------- (உரியவரின் பெயர்) பித்ரு உருவங்களே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன்’ என்று கூறியபடி மூன்று தலைமுறையினருக்குத் தர்ப்பணம் இட வேண்டும்.
 
அதேபோல் அம்மா வழிக்கும் தர்ப்பணம் இட வேண்டும். இதில் அம்மா, தந்தையின் அம்மா, தாத்தாவின் அம்மா ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டு தர்ப்பணம் இட வேண்டும்.

அடுத்து, ஆத்ம பிரதட்சணம் செய்ய வேண்டும். பின்னர், தர்ப்பையைப் பிரித்துவிட்டு, எள் - நீர் வைத்துக்கொண்டு...    
`ஏக்ஷாம் ந மாதா ந பிதா ந பந்துகு நான்ய கோத்ரின:

திருப்தி மாயந்து மயோத்ருஷ்டை குசோதகை'

என்று மும்முறை கூற வேண்டும். அதாவது, இந்தத் தர்ப்பணத்தின் மூலம் என் தாய் - தகப்பன், உறவினர்கள், கோத்திர வழி வந்த அனைவரும்... நான் விடும் எள் நீரால் பரம திருப்தியடைந்து என்னை ஆசீர்வதிக்கட்டும் என்று பொருள்.

மூன்று பிண்டங்கள்...


பச்சை அரிசி சாதத்துடன் எள், பால் கலந்து பிசைந்து மூன்று உருண்டைகளாகப் பிடித்து வைப்பார்கள். அடுத்து ஒரு தட்டில் வாழை இலை வைத்து, அதில் மூன்று நுனி தர்ப்பைகளை 
வடக்கு நுனியாக வைத்து எள் நீர் தெளித்துக்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து...

`பிதுர் பிதாமகம் ததாமி - என் தகப்பனாருக்குச் சமர்ப்பணம்

பிதுர் பிரபிதாமகம் ததாமி - பாட்டனாருக்குச் சமர்ப்பணம்

பிதுர் பிரபிதாமகம் ததாமி - என் முப்பாட்டனாருக்குச் சமர்ப்பணம்' 

என்று கூறி, தேங்காய் உடைத்து, தாம்பூலம் வாழைப் பழத்துடன் தூப - தீபம் காட்டி வணங்குதல் வேண்டும். பிறகு ஆத்ம பிரதட்சணம் செய்து மீண்டும் கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.   
பெண் பிள்ளைகள் தர்ப்பணம் செய்யலாமா?

பெண்கள் பவித்ரம், தர்ப்பை மோதிரம் அணிந்துகொண்டு பித்ரு தர்ப்பணம் செய்யக் கூடாது என்ற எந்த விதிமுறையும் கிடையாது. முற்காலத்தில் திதி செய்பவர்களுக்குச் சொத்தில் பங்கு உண்டு என்பதை ஏற்காத சிலர், வேற்று நடைமுறைகளுக்கு வித்திட்டு விட்டனர். ஆகவே, பெண்கள் பவித்ரம் அணிந்து, நதி, குளக்கரை, கடற்கரைகளில் தர்ப்பண பூஜை செய்யலாம். வீட்டில் படையலிட்டு பித்ரு துதியைப் படிக்கலாம்.

திதி - தர்ப்பண நாளில் தானம்


காராம்பசு, குதிரை, எள், யானை, தேர், அன்னம், வீடு, கன்னிகை, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை வழங்குவதற்கு மகா தானம் என்று பெயர். அன்னம், கல்வி, கன்னிகை ஆகிய மூன்றையும் விருப்பப்படுகிறவர்களுக்கே கொடுக்க வேண்டும்.
திதி நாளில் அன்னம் அளிப்பதும் வஸ்திர தானம் செய்வதும் சிறந்தது. வஸ்திர தானத்தால் எல்லா தேவதைகளின் அருளும் கிடைக்கும். தானத்தை உறவினர்களுக்குக் கொடுக்கக் கூடாது.

ஆயிரம் வகை காய்கள்!

திதி, சிராத்த, தர்ப்பணக் காலங்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது. பாகற்காய் 100 வகை காய்களுக்கும், பிரண்டை 300 வகை காய்களுக்கும், பலாக்காய் 600 வகை காய்களுக்கும் சமம் என்பார்கள்.  
காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சதம் த்ரயம்

பநஸ: ஷட்ஸதம் ப்ரோக்தம் ச்ராத்த காலே விதியதே:

இதில் காரவல்லி என்பது பாகற்காய், வஜ்ரவல்லி - பிரண்டை, பநஸம் - பலாக்காய். இவற்றைச் சேர்ப்பதால் 1000 வகை காய்கறிகளைச் சேர்த்ததற்குச் சமம். ஆக, இந்த மூன்று காய்களையும் அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயையும் சேர்ப்பது அவசியம்.

தென்முகமாக தர்ப்பணம்...

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை முதலான காலங்களில், பெரும்பாலும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தர்ப்பணம் செய்வதே வழக்கம். எனினும் தெற்கு நோக்கி அமர்வது சிறப்பு.

திசைகளில் கிழக்கு தேவர்களுக்குரியது. மனிதர்கள் மேற்கை எடுத்துக் கொண்டனர். வடக்கை ருத்ரர்களும், தெற்கை பித்ருக்களும் எடுத்துக்கொண்டனர். அத்துடன், பித்ருக்கள் உலகின் தலைவனான எமதர்மனின் சம்யமினீ என்ற அரசாங்கம் தெற்கில் உள்ளதால், பித்ரு பூஜையை தென்முகம் நோக்கிச் செய்ய வேண்டும்.     
பித்ரு தர்ப்பண விதி வகைகள்

கருட புராணம், லிங்க புராணம் ஆகிய ஞானநூல்கள், பித்ரு தர்ப்பண விதிகளை 18 வகைகளாக்கி விளக்குகின்றன. 

பிரம்ம பதம்: பதவி உயர்வு தரும்.

இந்திர பதம்: அரசாங்க அனுகூலம் உண்டாகும்.

தட்சிணாக்னி பதம்: காசி யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

பத்ய பதம்: துர்சக்திகள், சூன்யங்கள் விலகும்.

ஆஹவனீய பதம்: கடன் தொல்லைகள் தீரும்.

ததீசி பதம்: திருஷ்டிகள் நீங்கும்.

ஸப்ய பதம்: நல்லதொரு பரம்பரை உருவாகும்.

ஆவஸத்ய பதம்: வழக்கு, சிறைவாசம், அவப்பெயர் ஆகியன நீங்கும்.

சூர்ய பதம்: தேக ஆரோக்கியக் கூடும்.

கார்த்திகேய பதம்: செவ்வாய் தோஷ நிவர்த்தி கிட்டும்.

அகஸ்திய பதம்: மதிப்பு உயரும்.

கிரெளஞ்ச பதம்: ருணமாகிய கடன் தீரும்.

கணேச பதம்: முயற்சிகள் வெற்றி பெறும்.

கண்வ பதம்: துர்மரணங்கள் தொடராது.

காஸ்யப பதம்: பித்ரு தோஷங்கள் அகலும்; முன்னோரின் ஆசி கிடைக்கும்.

கஜகர்ண பதம்: தடைகள் நீங்கும் இந்த விதிகள் ஒவ்வொன்றுக்கும் உரிய விதிமுறைகள் உண்டு. முன்னோருக்கான பித்ரு பூஜை செய்யும்போது அந்த விதிகளைப் பயன்படுத்தலாம்.     
`இத்தனை மந்திரங்கள், விதிமுறைகளைப் பயன்படுத்தி தர்ப்பணம் செய்ய இயலாதே' என்ற மலைப்பில், தர்ப்பணம் செய்யாமல் விட்டுவிடாதீர்கள். ஏற்கெனவே கூறியது போன்று தர்ப்பைச் சட்டம் அமைத்து, அதில் 16 முறை கீழ்காணும் வாசகங்களைச் சொல்லியபடி எள்ளும் நீரும் விட்டு, வழிபட்டாலும் பலன் உண்டு. 

`விண்ணில் இருக்கும் முன்னோரே ------------- (இந்த இடத்தில் எவருக்குத் தர்ப்பணம் செய்கிறோமோ அவரின் பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவீர் ---- (திதி நாளில்) என்னால் இடப்படும் எள்ளையும் தண்ணீரையும் ஏற்றுக்கொண்டு, நாங்கள் நன்றாக வாழ வாழ்த்துங்கள்; நல்லருள் புரியுங்கள்' என்று கூறி ஆராதிக்கலாம்.

கோத்திரம் தெரியணுமா?

பள்ளியில் பாடம் படிக்க சூத்திரங்கள் இருப்பது போன்று, தர்ப்பணத்துக்குக் கோத்திரம் முக்கியம். வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டு, கோத்திரத்தைத் தெரிந்து வைத்துக்கொள்ளலாம். அல்லது சிவ கோத்திரம் என்றோ, விஷ்ணு கோத்திரம் என்றோ சொல்லலாம்.

பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்ட மகரிஷிகளின் பெயர்களே கோத்திரத்தின் பெயர்களாகத் திகழ்கின்றன. இங்கே, நட்சத்திரத்தின்படி வரும் கோத்திரத்தை அறியலாம்.

மரீசி மகரிஷி கோத்திரம்: அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி.

அத்ரி மகரிஷி கோத்திரம்: மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்.

வசிஷ்ட கோத்திரம்: ஆயில்யம், மகம், பூரம், உத்திரம்.

ஆங்கிரஸ கோத்திரம்: அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்.

புலஸ்திய கோத்திரம்: அனுஷம், கேட்டை, மூலம், பூராடம்.

புலக மகரிஷி கோத்திரம்: உத்திராடம், திருவோணம், அவிட்டம்.

கிருது மகரிஷி கோத்திரம்: சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

வேகம் நிறைந்த இன்றையச் சூழலில் இதுபோன்ற தர்ப்பணக் காரியங்களைச் செய்ய நேரமில்லை என்று சாக்குபோக்குகள் சொல்லி, தர்ப்பணக் காரியங்கள் செய்வதைத் தவிர்க்கக் கூடாது.   
`தடுமாறியவனுக்கு தை அமாவாசை, ஆட்டம் கண்டவனுக்கு ஆடி அமாவாசை மறந்துவிட்டவனுக்கு மஹாளய அமாவாசை,  ஓடிப்போனவனுக்கு ஒன்றுமே இல்லை’ என்றொரு சொல்வழக்கே உண்டு. ஆக, இந்தப் புண்ணிய தினங்களிலாவது நம் முன்னோர்களை நினைத்து, அவர்களுக்கு உரிய ஆராதனையை உளமாரச் செய்து அவர்களது ஆசியையும் அருளையும் ஒருங்கே பெற்று மகிழ்வோம்.

பித்ரு ஸ்துதி எனும் முன்னோர் வணக்கப் பாடல்!

பித்ரு ஸ்துதி எனும் இந்த துதிப் பாடல், நான்முகனின் திருவாக்காகக் கிடைக்கப்பெற்றது என்பர். முன்னோர் ஆராதனை நாளில் இப்பாடலைப் பாடி ஆராதிப்பதால், அவர்களின் பரிபூரண அருளைப் பெற்று மகிழலாம்.    
எங்கள் முன்னோரே ஏற்றத்தின் நாயகரே

எங்கும் சுகம் தரவே தேவராய்த் தோன்றுவோரே

பிறவிக்கடன் தீர்க்கப் போற்றுகிறோம் உந்தனையே

உறவோரின் தூதுவராய் வேற்றுலகு செல்வோரே

வேள்விகளின் உருவாக தோன்றும் உயர்நிலையே

அள்ளும் சுக உணர்வாய் நலம்காக்கும் நாயகரே

கருணைக் கடலாகக் காட்சித்தரும் முன்னோர்காள் 

திருவாகத் திரண்டு வரும் ஏழுலகின் நீர்வடிவே

சிவ வடிவாய் எப்போதும் பாவமதை விரட்டிடுவாய்

தவசீலர் மனம்போலே மனமாசை மன்னிப்பாய்

எப்போதும் பிழை பொறுத்து இன்பம் சுரப்பவரே

தப்பாமல் வழிபட்டோர் தயைபெற்று உயர்வாரே

மானுடப் பிறவியதன் மாண்பினைக் கருத்தாக்கி

தேனூறும் கனிபோலே திரவியங்கள் தேடவைப்பாய்

உண்மையும் அன்பும் உடன்நின்று காப்பவரே

கண்ணுள் விழிபோல் எமைக் காக்க வந்தோரே

புனிதமாம் பெருந்தீர்த்தம் ஆடுவோரை அணுகும் நீர்

கனி வாழ்வு எட்டும் வழி தவமென்று பகர்பவரே

திருநீறு இடுவோர்க்குத் திருபலவும் தந்திடுவாய்

குருவாகிக் குவலயத்தில் உயர்வடையச் செய்பவரே

எப்போதும் உரைப்பவரோ வணக்கம்கோடி செய்திடுவோம்

முப்போதும் ஓதிவிட்டால் ஆயிரம் குதிரை வேள்விப் பயன்

பேறுகள் பலவுண்டாம் மானுடர்கள் தவமிடவே

நூறு பலனுண்டு திதிப்பொழுதில் செவிசாய்க்க

உறவோர்கள் மூத்தோர்கள் எழுந்துவரும் நாளதனில்

பேறுகள் பலவுண்டு பாவங்களும் மறைந்திடுமே

ஊறுகள் எதிர்வரினும் ஏற்றமாய் மாறிடுமே

வேறு பல யாகதவம் கடன் செய்வோர் பலன் சேர்ப்பர்

கருமங்கள் கழிப்போரும் வழிதேடி விழிப்போரும்

தருமத்தின் வழிசெல்ல சாத்திரம் தேடுவோரும்

ஆன்மநிலை துறந்து மறுபிறப்பு மறுப்போரும்

சொன்னால் மெய்மணக்கும் முன்னோர் வணக்கமிட!

No comments:

Post a Comment