Wednesday 30 August 2017

ஐந்து பிரதோஷங்கள்... ரோஜாப்பூ மாலை... கல்யாண பிரார்த்தனை!


நந்தி ரூபத்தில் சிவபெருமான் காட்சி தந்த திருத்தலம்


ங்கடங்களைத் தீர்க்கும்  மும்மூர்த்திகளில் ஒருவரான   எம்பெருமான் சிவனுக்கு எண்ணிலடங்காத ஆலயங்கள் இருக்கின்றன. அப்படி, சிவனின் புகழ்பாடும் புண்ணியத் தலங்களில், சென்னை - ஆதம்பாக்கத்தில் இருக்கும் ஆவுடைநாயகி உடனுறை  நந்தீஸ்வரர்  ஆலயமும் ஒன்று. 

``பன்னெடுங்காலத்துக்கு முன், இந்தப் பரங்கிமலையில் சிவனாரின் எண்ணற்ற பக்தர்களும் அடியார்களும் வாழ்ந்து வந்தார்கள். அப்போது, சிவபக்தரான பிருங்கி முனிவர் சிவபெருமானைக் காண  இந்த மலையில் கடும் தவம் புரிந்திருக்கிறார். பிருங்கிமுனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், நந்திரூபத்தில் காட்சி அளித்து, மோட்சம் நல்கியிருக்கிறார். 

இந்தத் திருக்கதையை அங்கு வாழ்ந்து வந்த மக்கள் கூற, அப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் ‘ஆதணி’ என்பவன் கேட்டு மெய்சிலிர்த்து, சிவனாருக்குக் கோயில் எழுப்பினான் என்கிறது தலவரலாறு. ‘ஆதணி’  என்ற அந்த மன்னனின் பெயரைத் தாங்கிய இந்தப் பகுதி ஆதணிபாக்கம் என அழைக்கப்பட்டு, அது பின்னர் திரிந்து ‘ஆதம்பாக்கம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது . இத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இங்கு அருளோச்சும் மூலவரின் திருப்பெயர் - அருள்மிகு நந்தீஸ்வரர்; அம்பாளின் திருநாமம்- அருள்மிகு ஆவுடைநாயகி. கோயிலின் வரலாற் றைச் சொல்லும் கல்வெட்டுக்கள் இன்றும் கோயிலின் பிராகாரங்களில் கம்பீரமாக மிளிர்கின்றன” என பக்தியுடன் தலவரலாற்றை விவரித்தார் கோயிலின்  குருக்கள் சீதாராம்.

இங்கு மூலவர் ஸ்ரீ நந்தீஸ்வரர் 4 அடி உயரத்தில், பிரமாண்ட லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்புரிய, இறைவி ச்ரஆவுடைநாயகி தென்திசை நோக்கியவண்ணம் தன் கருணைக் கடாக்ஷத்தை பக்தர்களுக்கு நல்குகிறாள். 

அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் ஒரே திருத்தலம்  இது என்பது சிறப்பு. தவிர, இங்கு மும்மூர்த்தியரான சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருப்பதும் சிறப்பு என்கின்றனர் உள்ளூர் பக்தர்கள். 

மிகவும் பழைமையான கோயில். உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணமுடிகிறது. சற்று உள்ளே நுழைந்தால், நந்தி, ஸித்தி விநாயகர், நர்த்தன விநாயகர், பாலமுருகன், தக்ஷிணாமூர்த்தி, சுந்தர விநாயகர், பைரவர், சூரியன், நாகதேவதை, ராகு, காளஹஸ்தீஸ்வரர், கேது, மஹாவிஷ்ணு, வள்ளி தேவசேனா சமேத  சிவசுப்பிரமணியன், பிரம்மா, துர்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகிய பரிவாரத் தெய்வங்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. பிராகாரத் தூண்களில் மீன் சிற்பம், கண்ணப்ப நாயனார், காமதேனு, மாருதி, நரசிம்மர் எனப் பல சிற்பங்கள் இருப்பது, தலத்தின் பழைமையைப் பறைசாற்றுகிறது.
“இங்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் எல்லா ஸோம வாரமும், ருத்ர த்ரிசதி அர்ச்சனையும் மஹா தீபாராதனையும்  சிறப்பாக நடைபெறு கின்றன. பிரதோஷத்தின்போது, இங்கு பசு வலம் வருவது அற்புதமான நிகழ்ச்சி! உற்ஸவ மூர்த்திகள் திருவுலா,வேதபாராயண முற்றோதுதல், உபன்யாசங்கள் ஆகியவை சிவனுக்குரிய உற்ஸவ நாட்களில் சிறப்பாக நடைபெறுகின்றன. இதைப் பார்ப்பதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஆலயத்துக்குக் கிழக்கு - தெற்கு என இருபுறமும் வாசல் இருப்பதைக் காணலாம்” என்று பூரிப்புடன்  நம்மிடம் கூறினார் பக்தர் பாலச்சந்தர்.

ஆலயத்தின் மூலவர் வரப்பிரசாதி. குறிப்பாக, ஐந்து பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்கு வந்திருந்து மூலவருக்கும் நந்திக்கும் ரோஜாப்பூ மாலைகளைச் சமர்ப்பித்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும் என்கிறார்கள். இங்கு கோயிலின் தலவிருட்சமான வில்வ மரத்தில், பெண்கள் குழந்தை வரம் வேண்டி, தொட்டில் கட்டிப் பிரார்த்தித்துக்கொண்டால்,  குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சகல செல்வங்களையும், திருமணத் தடை நீக்கும் வரத்தையும் தரும் ஆதம்பாக்கம் ஸ்ரீஆவுடைநாயகி உடனுறை ஸ்ரீ நந்தீஸ்வரரைச் சென்று தரிசித்து, கல்யாண வரம் பெற்று வாருங்கள்.

உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: ஸ்ரீ நந்தீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீ ஆவுடைநாயகி

தலவிருட்சம்:
 வில்வம்

ஆலயச் சிறப்பு: அம்பாள் ஆவுடையாகவும், இறைவன் நந்தியாகவும் பெயர்கொண்டு விளங்கும் திருத்தலம்

சிறப்பு வழிபாடு: ஐந்து பிரதோஷ தினங்கள் இங்கு வந்து ஸ்வாமிக்கும் நந்திதேவருக்கும் ரோஜாப்பூ மாலை அணிவித்து வழிபட்டால், கல்யாண 
வரம் கைகூடும்.

எப்படிச் செல்வது?: சென்னை-தாம்பரத்தில் இருந்து பரங்கிமலை செல்வதற்கு ரயில் மற்றும் பேருந்து வசதிகள் உண்டு. பரங்கிமலை ரயில் நிலையத்தின் அருகிலேயே உள்ளது (ஆதம்பாக்கம்) நந்தீஸ்வரர் ஆலயம். 

நடை திறந்திருக்கும் நேரம்:
 விழாக் காலங்கள் தவிர, அனைத்து தினங்களிலும் காலை 6:30 மணி முதல் 10:30 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயிலின்  நடை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment