Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞான சித்தியார் பகுதி- 2.8

136. அவ்வவயோனிதோறும் அவ்வவ உலகந் தோறும்
செவ்விதின் அறிந்து கன்மம் சேர்ந்திடா; சீவன் சேரா;
இவ்வகை தம்மிற் சேர்வும் இறைசெயலானால் செய்த
எவ்வுருவும் தம் கன்மான் மாற்றுவன் இறைவன்தானே.

வினைகள் அறிவற்றவை ஆகையினால் அவை தாமாகவே தமது பயனுக்கு ஏற்ப உடல்களையும் அவ்வுடல்கள் வாழும் உலகங்களையும் சென்று சேரமாட்டா. உயிர்கள் அறிவுடையன ஆயினும் அவற்றின் அறிவு சிற்றறிவு ஆதலாலும் அவை உணர்த்த உணரும் தன்மை உடையன ஆதலாலும் வினைப் பயன்களைத் தாமே அறிந்து எடுத்துக் கொண்டு நுகரமாட்டா. ஆதலால் மாயை வினைகளைச் செயல்படுத்தி அவற்றை உயிர்களுக்கு ஊட்டுதல் இறைவன் திருவருளே என்பது பெறப்பட்டது. இறைவன் தானே உயிர்களுக்குக் கொடுத்த எவ்வகை உடல்களையும் அவற்றின் வினை வழியே மாற்றுவதற்கும் உரியவன் ஆவான்.

மேலே 112-வது பாடலில் ஒழிபு அளவையின் அடிப்படையில் இறைவனே வினைகளின் பயனை உயிர்களுக்கு ஊட்டுவான் என்று ஆசிரியர் எடுத்துரைத்ததை இங்கும் பொருத்திக் காணுதல் வேண்டும்.

137. மாறி இவ்வுருவம் எல்லாம் வருவது எங்கே நின்று? என்னின்
கூறிய சூக்குமத்தாம் உருவெனின் குறி ஒன்று என்னின்
வேறு ஒரு குறி ஆம் ஆரம் வீரசங்கிலியும் ஆகும்;
தேறுநீ ஒருவனால் இச் செயல் எலாம் சிவனால் ஆகும்.

இவ்வாறு உயிர்கள் பிறவி தோறும் உருவம் மாறித் தோன்றும் எனின் அவை எங்கிருந்து தோன்றும் என்ற வினா எழும். தூல உடம்பு முற்கூறிய நுண்ணுடம்பிலிருந்தும் தோன்றுவதாகும். இவ்வாறு விடையிறுத்தால் மற்றொரு வினா எழும் பல்வகைப்பட்ட பருஉடம்புகள் ஒன்றே ஆகிய நுண்ணுடம்பிலிருந்து தோன்றும் என்று கூறுவது உள்ளதே தோன்றும் என்ற சற்காரிய வாதத்துக்கு முரண் பட்டதன்றோ என்பதே அவ்வினா. பொன்னிலிருந்து மாலை வீர சங்கிலி போன்ற அணிகலன்கள் அவற்றைச் செய்வானது ஆற்றலால் வெவ்வேறாகச் சமைக்கப்படுகின்றன. அவ்வாறே ஒப்பற்ற ஆற்றலுடைய சிவபெருமானால் ஒரு நுண்ணுடம்பு பல்வேறுபட்ட பரு உடம்புகளாய்த் தோன்றுதல் கூடும் என்று தெளிவாயாக.

138. சூக்குமம் கெட்டுத் தூலம் தோன்றிடா சூக்குமத்தின்
ஆக்கி ஓர் உடல் கிடப்பது இன்று உடல் ஆக்கும் தன்மைக்கு
ஓக்கிய சத்தி உண்டாய் உடல்தரும் காலம் உற்று
நீக்கிட மரம் பின்வேர் ஓர் நீள்மரம் நிகழ்த்து மாபோல்.

நுண்ணுடம்பிலிருந்து பரு உடம்பு எவ்வாறு தோன்றும் என்பது இதனை அடுத்து எழுகின்ற வினா ஆகும். விதை கெட்டு மரம் ஆவது போல சூக்கும உடல் கெட்டுப் பருஉடல் தோன்றுவது அன்று. திங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகக் கலைகள் தோன்றுவதைப் போன்று பரு உடல் தோன்றுவது அன்று. அதற்கு உவமை யாது எனின் பல்லாண்டுகள் வாழ்ந்த ஒரு மரத்தினை வெட்டி நீக்கிய பிறகு அந்த மரத்தின் வேரினின்று மற்றொரு மரம் உண்டாதலே உவமையாகும். நுண்ணுடம்பில் தூல உடம்பிற்குத் தகுதியான ஆற்றல்கள் தங்கியிருந்து தோன்றுவனவாகும்.

இப்பாடலுக்கு உரை எழுதிய சிவஞான முனிவர் இதனை அடுத்து வரும் பாடலின் கருத்தையும் உட்கொண்டு உரை கண்டார். யோக்கியம் என்பது ஓக்கியம் என மருவிற்று எனவும் முனிவர் கூறினார்.

139. விதிப்படி சூக்குமத்தே உருவரும் வினையால் இங்கே
உதித்திடா உருவமாக உருவரும் மரங்கள் வித்தில்
கதித்து எழும் மரமும் வித்தும் கழியும் பின் அழியும் சூக்கம்
மதிக்கு எழு கலைகள் போல வருவது போவதாமே.

உருவமாய் வளர்ந்து ஓங்கி விளங்குகின்ற மரங்கள் வித்திலிருந்து தோன்றிப் பருத்து எழுந்தவை ஆகும். அதுபோலவே உயிர்களின் வினைக்கு ஏற்ப இறைவனது ஆணையால் பரு உடம்புகள் நுண்ணுடம்புகளில் இருந்தும் தோன்றும். இங்கே ஒரு ஐயம் எழுப்பப்படும். மரம் அழியும் போது அதற்கு மூலமாகிய வித்தும் அழிதலைக் காண்கிறோம். அது போலவே பரு உடம்பு அழியும் போது அதற்குக் காரணமான நுண்ணுடம்பும் அழியுமா என்பது ஐயம். அவ்வாறு அன்று வித்திலிருந்து மரம் தோன்றும் என்னும் உவமை நுண்ணுடம்பிலிருந்து பரு உடம்பு தோன்றுவதற்கு ஒரு புடை ஒப்புமையே அன்றி முற்றுவுவமை அன்று. இங்கே பொருந்துகின்ற உவமை எது எனில் திங்களின் பதினாறு கலைகளில் ஒன்று அழியாமல் நிற்கும். அதுவே காரணமாகிய மற்றக் கலைகள் முறையே தோன்றுதலும் ஒடுங்குதலுமாக வளர்வதும் தேய்வதும் நிகழ்கின்றன. அது போல நுண்ணுடம்பு அழியாது நிற்க அதிலிருந்து பரு உடம்பு தோன்றுவதும் ஒடுங்குவதும் நிகழும்.

இவ்வாறு அருந்தா பத்தி அளவையால் பரு உடம்புகள் தமக்கு ஒரு முதல் இல்லாத வழி உருவமாகத் தோன்றிடா என்று ஆசிரியர் வலியுறுத்தினார்.

140. தூலமாம் உருவினுக்குச் சூக்குமம் முதல் அதற்கு
மூலம், மான்; அதற்கு மூலம் மோகினி அதன் முதல்தான்
மேலதாம் விந்து சத்தி சிவம் இவை மிசை யாம் எல்லாம்
சால இன்று ஆகும்- ஆன்மாச் சிவத்தினைச் சார்ந்த போது.

பரு உடம்பிற்கு முதற் காரணமாக அமைந்தது நுண்ணுடம்பு. நுண்ணுடம்பிற்கு முதற் காரணமாக அமைந்தது மூலப்பகுதி. அதற்கு முதற்காரணமாக அமைந்தது மோகினி. மூலப் பகுதிக்குக் காரணமாகிய மோகினியே யாவற்றுக்கும் பரம முதற்காரணம் எனப்படும். இவற்றுக்கு மேலானது குண்டலினி சத்தி. அது தூய்மையே வடிவாய் இவை அனைத்திற்கும் வியாபகமாய் விளங்கும். உயிர் சிவத்தினைப் பொருந்தும் போது இவை யாவும் இலவாய்ப் போகும். உயிர் கட்கு நிலையிலே இருக்கும் வரைக்கும் இவையும் உள்ளனவாம்.

ஒவ்வொன்றுக்கும் முதற்காரணத்தை முறையே சொல்லிக் கொண்டு வருகிறார். பரு உடம்புக்கு நுண்ணுடம்பும், நுண்ணுடம்புக்கு மூலப் பகுதியும், மூலப்பகுதிக்குத் தூவாமாயையும் காரணம் என்கிறார். மான் என்றது மூலப்பகுதியை, மோகினி என்றது தூவாமாயையை. இது அசுத்தமாயை எனவும் படும். மற்ற உரையாசிரியர்கள் எல்லாம் மோகினிக்குக் காரணம் சுத்தமாயை என்னும் விந்து என்றும் பொருள் கண்டனர். சிவஞான முனிவர் இவர்களிலிருந்து மாறுபட்டு உரை காண்கிறார். அவருடைய உரை பின் வருமாறு. அதன் முதற்றானென்பது அம்மூலப் பகுதிக்கு முதலாகிய தானென இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாய் மோகினியின் மேனின்றது. அதன் முதற்றானென்று அனுவதித்து மேலதாம் எனப் பரம முதற்காரணமாதல் கூறப்பட்டது. இவ்வாறன்றி முதல் என்ற தனை எழுவாயாக வைத்து உரைப்பார்க்கு, றகரம் இரட்டித்தல் பொருந்தாமையும் சித்தாந்தத்திற்கு ஏலாமையும் உணர்க.

அது போலவே சால இன்றாகும் என்பதற்கு மற்றைய உரையாசிரியர்கள் ஆன்மா சிவத்திலே சார்ந்த போது இவை முற்றிலும் இல்லாமல் போகும் என்று உரை கண்டனர். சிவஞான முனிவரோ இப்பகுதிக்கு உரை எழுதும் போது ஆன்மா சிவத்தினைச் சார்தற்கு ஏதுவாகிய பக்குவ காலம் அமைதற் பொருட்டு இப்பெத்த காலத்து உளவாவன என்க என்று உரை வரைந்தார்.

141. அரன்விதி அருள தென்றே அறைந்தனன் அதுவும் முன்னே
தரை நரகு அருந்துறக்கம் தனுகரணாதி எல்லாம்
வருவதும் செய்து அநாதி மலங்கள் இம்மருந்தால் தீர்த்து
பரகதியதுவும் தந்து பாத பங் கயமும் சூட்டும்,
சிவபெருமானுடைய செயல்கள் யாவும் அவனுடைய திருவருளே ஆகும் என்று முன்பே கூறப்பட்டது. இந்நில உலகம், நிரயம், துறக்கம் முதலிய உலகங்களில் சென்று ஆங்காங்கு உள்ள வினைப்பயன்களை உயிர்கள் நுகர்வதற்கு உரிய உடல் உறுப்புகள் முதலியவற்றையும் இறைவனே அவற்றுக்குப் படைத்து அளித்தான். தொன்று தொட்டே உயிர்களைப் பற்றிய ஆணவமலம், கன்மமலம் ஆகிய நோய்களை இத்தகைய மருந்துகளினால் தீர்த்து அதன் பின்னர் பரஞானத்தை விளக்கி அதன் பின்னர் தன்னுடைய திருவடி மலர்களையும் இறைவனே அளித்தருளுவான். மேலே 105-வது பாடலில் எக்கிரமத்தினாலும் இறை செயல் அருளே என்றும் என ஆசிரியர் கூறியதனை இங்கே மீண்டும் நினைவுறுத்தினார். மலமும் கன்மமும் ஆகிய நோய்களைத் தீர்ப்பதற்காக மாயையின் விளைவான உடல், கருவி, உலகு, நுகர்ச்சிப் பொருள் ஆகியவற்றை இறைவன் அவற்றுக்கு வழங்குகிறான்.

142. எழும் உடல் கரணம் ஆதி இவை மலம் மலம் மலத்தால்
கழுவுவன் என்று சொன்ன காரணம் என்னை? என்னின்
செழுநவை அறுவை சாணி உவர் செறிவித்து அழுக்கை


மாயையிலிருந்து தோன்றுவனவாகிய உடல் கரணம் முதலிய யாவும் மலமேயாம். அவ்வாறு இருந்தும் இறைவன் மாயையாகிய மலத்தைக் கொண்டு ஆணவமலம், கன்மமலம் ஆகியவற்றை நீக்குவான் என்று கூறுவது பொருந்துமோ என்று சிலர் தடை எழுப்புவர். சலவைத் தொழிலாளர்கள் துணியில் உள்ள அழுக்கைச் சாணியையும் உவர் மண்ணையும் பயன்படுத்தியே போக்குவர். அதே போல இறைவனும் மாயையைக் கொண்டு உயிர்களைப் பற்றியுள்ள மலங்களை ஒழிப்பான்.

முள்ளைக் கொண்டே முள்ளை எடுப்பது போல இறைவன் மாயையாகிய மலத்தைக் கொண்டு மலங்களை நீக்குவான் எனக் கொள்க.

143. நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத்திற்கோர்
வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய் புவன போகம் தனுகரணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யும் அன்றே.

உலகிற்கு முதற்காரணம் எனப்படுகிற மாயை என்பது நித்தப் பொருளாகியும், அருவமாகியும், ஒன்றாகியும், உலகத் தோற்றத்திற்கு வித்தாகியும், அறிவற்ற சடமாகியும், எவ்விடத்தும் நிறைந்தும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கிய இறைவனுக்கு வைப்பாற்றலாகியும், உயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்ச்சிப் பொருள்களாக விரிவடைகின்ற மலமாகியும், சில நேரங்களில் மயக்கத்தைத் தருவதாயும் விளங்கும்.

நித்தம்- நிலையான பொருள். ஏக நிலையதாய்- ஒன்றேயாகிய பொருள். வியாபியாய்- எங்கும் பரந்திருக்கும் பொருள். விமலனுக்கு ஒரு சத்தி என்பது இறைவனுக்கு வைப்பு ஆற்றலாய் விளங்கும் என்பதைக் குறித்தது. இதனை வடமொழியில் பரிக்கிரக சத்தி என்பர். இச்சத்தி இறைவனோடு எப்போதும் இருப்பினும் அவனால் வேண்டும் போது மட்டும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

இப்பாடலில் சைவசித்தாந்தத்தின்படி மாயையின் இயல்புகள் யாவும் ஒருங்கே தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

144. மாயையில் காலமோடு நியதி பின் கலாதி தோன்றும்;
ஆய அக்காலம் மூன்றாய் ஆக்கியும் அளித்தும் போக்கிக்
காயமோடு உலகுக்கு காலசங்கையினைப் பண்ணி
நாயகன் ஆணையாலே நடத்திடும் சகத்தை எல்லாம்

மாயையிலிருந்து காலம், நியதி என்னும் தத்துவங்களும் அதன் பின்னர் கலை முதலிய தத்துவங்களும் தோன்றும். காலதத்துவம் நாயகனாகிய சிவபெருமான் ஆணையினால் இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலம் என்று மூன்று வகைப்படும். காலதத்துவம் உலகத்தைப் படைத்து நிலை நிறுத்தியும் ஒடுக்கியும் உடம்பொடு கூடிய உயிர்களுக்குக் காலத்தை வரையறுத்தும் உலகனைத்தையும் நடத்தி வரும்.

காலசங்கை- காலவரையறை. நாயகன் ஆணையாலே என்ற தொடரை தத்துவங்களைப் பற்றி எடுத்துரைக்கின்ற பாடல்கள் அனைத்தோடும் பொருத்திப் பொருள் காண வேண்டும்.

145. நியதிபின் தோன்றி கன்ம நிச்சயம் பண்ணி நிற்கும்;
அயர்வு இலாக் கலை பின்தோன்றி, ஆணவம் ஒதுக்கி சித்தின்
செயல்புரி கிரியாசத்தி தெரிவிக்கும் சிறிதே; வித்தை
உயர்கலை யதனில் தோன்றி அறிவினை உதிக்கப் பண்ணும்,

காலம் தோன்றிய பிறகு மாயையிலிருந்து தோன்றுவது நியதி தத்துவம் எனப்படும். உயிர்கள் ஒவ்வொன்றும் செய்த வினையின் பயனை அதுவதுவே நுகருமாறும் அந்த நுகர்ச்சியில் மிகுதியோ, குறைச்சலோ இல்லாதவாறும் செய்வதனால் அது நியதி தத்துவம் எனப்பட்டது. அதன்பின் மாயையிலிருந்து கலை என்னும் தத்துவம் தோன்றும். கலை ஆணவமலத்தின் மறைப்பைச் சற்றே நீக்கி உயிரின் தொழில் ஆற்றலை விளக்கும். மேலும் வினைக்கு ஈடாக வரும் நுகர்ச்சியில் செலுத்தும். கலை என்பதிலிருந்து வித்தை என்னும் தத்துவம் தோன்றும். இது உயிரின் அறிவாற்றலை விளக்குவதாகும். இதனால் நுகர்வுகளைப் பொருந்திய உயிர்கள் நுகர்வுகளை அறியும் திறனும் பெறும்.

146. விச்சையில் அராகம் தோன்றி வினைவழி போகத் தின்கண்
இச்சையைப் பண்ணி நிற்கும்; தொழில், அறிவு, இச்சை மூன்றும்
வைச்சபோது, இச்சா ஞானக் கிரியைமுன் மருவி, ஆன்மா.
நிச்சயம் புருடன் ஆகி, பொதுமையின், நிற்பன் அன்றே.

வித்தை என்னும் தத்துவத்திலிருந்து நாயகன் ஆணையால் அராகம் என்னும் தத்துவம் தோன்றும். இது உயிரின் விழைவு ஆற்றலை விளக்கி வினைக்கு ஈடாக நுகர்வுகளில் செலுத்தும். கலை உயிரின் தொழிலாற்றலையும், வித்தை அறிவாற்றலையும், அராகம் விழைவு ஆற்றலையும் முறையே விளக்கிய போது புருட தத்துவம் என்னும் பெயர் பெற்றுப் பொதுவான நிலையில் நிற்கும்.

இந்நிலையில் உயிர், காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்து சட்டைகளுடன் நிற்கும் என்று கூறப்படும். இவற்றைப் பஞ்சகஞ்சுகம் என்பர். இவ்வாறு நிற்கும் நிலை பொதுமையாகும், சிறப்பு வகையால் புருடதத்துவம் என நிற்றல் மூலப்பகுதியில் தோன்றும் அவிச்சை முதலிய பஞ்சக்கிலேசமும் உடைத்தாய வழி என்பார். ஈண்டு பொதுமையில் நிற்பன் என்றார் என்பது சிவஞான முனிவர் உரை.

147. வரும்குண வடிவாய் மூலப்பிரகிருதி கலையில் தோன்றித்
தரும்குணம் மூன்றாய், ஒன்றில்தான் மூன்றாய் மும்மூன்று ஆகும்
இருங்குண ரூபமாகி இயைந்திடும், எங்கும் ஆன்மா;
பெருங்குண வடிவாய், போக சாதனம் பெந்தமாமே.

கலை என்னும் தத்துவத்திலிருந்து தோன்றுவது மூலப்பகுதி எனப்படும். இது சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூன்று குணங்களைத் தன்னுள் அடக்கியதாக விளங்குவது. குணங்கள் மூன்றும் வெளிப்பட்டுத் தோன்றும் போது அது குணதத்துவம் என்ற பெயரால் அழைக்கப்படும். மூன்று குணங்களும் ஒவ்வொன்றும் மூன்று வகைப்பட்டு ஒன்பதாகும். நுகர்வுக்குரிய சாதனமாய் அதனிடத்துத் தோன்றும் புத்தி முதலிய தத்துவங்களும் பெரிதாகிய குணவடிவே ஆக உயிர்களைக் கட்டுக்குள் அகப்படுத்தும். அதனால் உயிர் நுகர்கின்ற காலத்தில் அக்குணவடிவாகவே விளங்கும்.

மூலப்பகுதி- மூலப் பிரகிருதி. மூலப்பகுதியில் குணங்கள் வெளிப்பட்டுத் தோன்றாது இருப்பதனால் அதற்கு அவ்வியக்தம் என்றும் பெயர் உண்டு குணங்கள் மூன்றும் சாத்துவிகத்தில் சாத்துவிகம், சாத்துவிகத்தில் இராசதம், சாத்துவிகத்தில் தாமதம் என்று இவ்வாறு மூன்று வகைப்படும். இதனால் ஒன்பது வகை கூறப்பட்டது.

148. சித்தமாம் அவ்வியத்தம் சிந்தனையதுவும் செய்யும்;
புத்தி அவ்வியத்தில் தோன்றிப் புண்ணிய பாவம் சார்ந்து,
வத்துநிச்சயமும் பண்ணி, வரும் சுக துக்க மோகப்
பித்தினின் மயங்கி, ஞானக் கிரியையும் பேணி நிற்கும்,

மூலப்பகுதியிலிருந்தும் சித்தம் தோன்றும். அது உயிர்களுக்கு நுகர்விற்கு உரிய சிந்தனையையும் தோற்றுவிக்கும். மூலப்பகுதியிலிருந்தே புத்தி எனும் தத்துவமும் தோன்றும். உயிர்களின் புண்ணிய பாவங்கட்கு ஏற்ப ஒரு பொருளை இன்னது என நிச்சயிக்கும். அதன் பின்னர் இன்பம், துன்பம், மயக்கம் ஆகிய உணர்வுகளைத் தோற்றுவித்தும் உயிரின் அறிவையும், தொழிலையும் பேணியும் நிற்கும்.

சித்தாமம் அவ்வியத்தம் என்ற தொடருக்கு உரை எழுதும் போது மாதவச் சிவஞான முனிவர் குணதத்துவத்துக்குக் காரணம் என சித்திக்கப்பட்டதாகிய மூலப்பகுதி என்று உரைகண்டார். அவ்வாறு உரை வகுத்ததற்கான காரணத்தையும் தனது உரையின் பிற்பகுதியில் விளக்கினார். இந்தப் பகுதி நயமுடையது. வத்து நிச்சயம்- வஸ்து- நிச்சயம்; பொருளை நிச்சயித்தல்.

149. ஆங்காரம், புத்தியின் கண் உதித்து, அகந்தைக்கு வித்தாய்,
ஈங்கு ஆர்தான் என்னோடு ஒப்பார் என்று, யான் என்னது என்றே
நீங்காதே நிற்கும்; தானும் மூன்றதாய் நிகழும் என்பர்.
பாங்கு ஆர்பூதாதி, வைகாரிகம், தைசதந்தான் என்றே.

புத்தி தத்துவத்திலிருந்து அகங்காரம் தோன்றும். இதுவே அகந்தைக்கு வித்தாகும். இங்கு என்னை ஒப்பவர் யார் என்ற தருக்கும் யான் எனது என்ற, இருவகைப் பற்றுக்களும் உயிரோடு வேற்றுமை இல்லாமல் நிற்பதற்கு அகங்காரமே காரணமாகும். இது மூன்று வகையாகப் பகுக்கப்படும். அவை முறையே பூதாதி அகங்காரம், வைகரி அகங்காரம், தைசத அகங்காரம் என்பனவாம்.

150. மனமது தைசதத்தின் வந்து, ஒரு பொருளை முந்தி
நினைவதும் செய்து அங்கு ஐய நிலைமையின் நிற்கும்; ஆங்கே,
இனம்மலி சோத்திராதி, கன்மஇந்திரியம் எல்லாம்,
முனம் உரை செய்தவைகா ரிகம் தரும் என்பர் முன்னோர்.

தைசத அகங்காரத்தினின்றும் மனம் தோன்றும். மனம் என்பது தனக்கு எதிர்ப்பட்ட ஒரு பொருளை இது யாதோ என்று நினைத்து ஐயம் கொள்ளும். மனத்தின் பின்னர் அறிவுப் பொறிகளும் தைசத அகங்காரத்திலிருந்தே தோன்றும். வைகரி அகங்காரத்திலிருந்து தொழிற் பொறிகள் ஐந்தும் தோன்றும் என்பர் முன்னோர்.

151. நல்செவி, துவக்குக், கண், நா, நாசிஐந்தினையும், நல்லோர்,
புத்திஇந் திரியம் என்று புகன்றனர்; இவை தமக்குச்,
சத்த, நற் பரிச; ரூப, இரத, கந்தங்கள் ஐந்தும்,
வைத்தனர், விடயமாக அடைவினின் மருவும் என்றே.

காது, மெய், கண், நா, மூக்கு, ஆகிய ஐந்தினையும் அறிவுப் பொறி என்று நல்லோர் கூறினர். இவற்றுக்குப் புலப்படுவனவாக ஓசை ஊறு உருவம் சுவை மணம் என்ற ஐந்தினையும் முறையே கூறுவார்கள்.

உடலில் உள்ள அறிவுப் பொறிகள் ஐந்தாகும். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும். இங்கு அவற்றை மாற்றி அமைத்ததற்குக் காரணம் அவற்றுக்குப் புலனாகின்ற பொருள்களாகக் கூறப்படுகின்ற சத்த பரிச ரூப இரச கந்தம் என்ற வைப்பு முறை பற்றி என்க. வடமொழியில் அறிவுப் பொறிகள் ஞானோந்திரியம் என்று கூறப்பெறும். செவியை சோத்திரம் என்றும், மெய்யைத் துவக்கு என்றும், கண்ணை சட்சு என்றும் நாவை சிங்குவை என்றும், மூக்கை ஆக்கிராணம் என்றும் வடநூலார் வழங்குவர்.

152. வாக்கொடு பாதம் பாணி பாயுவோடு உபத்தம் ஐந்தும்
நீக்கினர் முன்னே கன்மேந்திரியங்கள் என நினைந்தே;
ஆக்கிய வசன, கமன, தானமும் விசர்க்க ஆனந்தம்
ஊக்கமார் ஐந்தும் ஐந்தின் தொழிலென ஓதினாரே.

தொழிற் பொறிகள் என்பன வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்ற ஐந்துமாகும். இவற்றை நல்லோர் மேற் கூறப்பட்ட அறிவுப் பொறிகளில் இருந்து வேறுபட்டன என்று தனித்து வைத்தனர். இங்குக் கூறப்பட்ட தொழிற் பொறிகள் ஐந்தினுக்கும் உரிய தொழில்கள் முறையே சொல்லுதல், நடத்தல், இடுதல், கழித்தல், மகிழ்தல் என்றும் அமைத்தனர்.

வாக்கு- சொல், பாதம்- கால், பாணி- கை, பாயுரு- எருவாய், உபத்தம்- கருவாய், வசனம்- சொல்லுதல், கமனம்- நடத்தல், தானம்- இடுதல், விசர்க்கம்- கழித்தல், ஆனந்தம்- மகிழ்ச்சியைத் தருதல்.

153. வாயாதி சோத்திராதி புறத்து வாழ் கருவி ஆகும்.
ஓயாத மனாதி காயத்து உணரும் உட்கருவி ஆகும்.
ஆய்வார்கட்கு அராகம் ஆதி அவற்றின் உட்கருவி என்பர்.
மாயாள் தன் வயிற்று, இவற்றால் துடக்குண்டு வாழும் ஆன்மா.

சொல் முதலிய தொழிற் பொறிகளும் காது முதலிய அறிவுக் கருவிகளும் உடம்பின் புறத்தே உள்ள கருவிகள் ஆகையால் இவை பத்தும் புறக்கருவிகள் என்று கூறப்படும். எதிலும் நிலைத்து நில்லாத ஓய்வறியாத மனம் முதலியன உடம்பின் உள்ளே நின்றும் செயற்படுகின்ற கருவிகள். ஆகையினால் அவற்றை அகக் கருவிகள் என்று கூறுவார்கள். நுண்மையாக ஆராய்பவர்களுக்கு மனம் முதலிய அகக் கருவிகளுக்கும் அகக் கருவிகளாய் அராகம் முதலியன செயல்படுகின்றன என்பது புலனாகும். இங்குக் கூறப்பட்டயாவும் மாயையின் வயிற்றில் பிறந்து உயிரைத் தளைப்படுத்தி நிற்பனவாகும்.

154. ஓசை நன் பரிச ரூப இரத கந்தங்கள் என்று
பேசுமாத்திரைகள் ஐந்தும் பிறக்கும் பூ தாதி கத்தின்
நேச இந்திரியங்கட்கு நிகழ் அறிவு இதனாற் காண்டும்,
ஆசைசேர் மனாதி தன்மாத்திரை புரி அட்டகந்தான்,

பூதாதி அகங்காரத்திலிருந்து ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்ற ஐந்து தன் மாத்திரைகளும் தோன்றும். இவை மேலே கூறப்பட்ட பொறிகளைத் தூண்டிப் பொருள்களை அறியும் விருப்பத்தினை அவற்றுக்கு ஊட்டுவனவாகும். விழைவைத் தோற்றுவிக்கின்ற மனம் புத்தி அகங்காரம் ஆகிய மூன்றும், இங்குக் கூறப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்தும் ஆகிய எட்டும் சேர்ந்த கூட்டமே புரியட்டக உடல் எனப்படும்.

செய்யுளின் மாத்திரை என்று குறிக்கப்பட்டது தன் மாத்திரை என்னும் சொல்லின் தலைக்குறையாகும். முன்னர் 151-வது பாடலில் கூறப்பட்ட ஐந்தும் விடயங்கள் என்று கூறப்படும். அவற்றுக்கும் இங்கே கூறப்பட்ட ஓசை ஊறு உருவம் சுவை மணம் ஆகிய வற்றுக்கும் வேறுபாடு உண்டு. இவ்வைந்தும் மிக நுண்ணியவாய் இருத் தலின் இவற்றைத் தன்மாத்திரை என்றனர் பெரியோர்.

155. சாற்றிய பஞ்ச தன்மாத்திரைகளின் சத்தம் முன்னாத்
தோற்றும், வான், வளி, தீ, நீர், மண்; தொடக்கியே ஒன்றுக்கு ஒன்று அங்கு
ஏற்றமாம் ஓசை ஆதி இருங்குணம் இசைந்து நிற்கும்
ஆற்றவே விடயம், பூதம், அங்காங்கி பாவத்து ஆமே.

ஓசை ஊறு உருவம் சுவை நாற்றம் என்று கூறப்பட்ட தன்மாத்திரைகள் ஐந்திலிருந்தும் முறையே வான் வளி நெருப்பு நீர் மண் என்னும் ஐம்பெரும் பூதங்களும் தோன்றும். அவற்றிலிருந்து தொடங்கி ஒவ்வொன்றாகக் கூடி ஓசை முதலிய ஐந்து குணங்களும் இசைந்து நிற்கும். ஐம்பெரும் பூதங்களும் அவற்றுக்குக் கூறப்பட்ட குணங்களும் உடலும் உயிரும் போலப் பொருந்தி வரும்.

தன் மாத்திரைகளிலிருந்து ஐம்பெரும் பூதங்கள் குணங்களைப் பொருந்தித் தோன்றும் என்பது பாடலில் கூறப்பட்டது. விண் காற்று நெருப்பு நீர் மண் ஆகிய இவற்றின் குணங்கள் ஒன்றற்கு ஒன்று கூடினதாக அமையும் என்றார். விண், ஓசை மட்டுமே உடையது. காற்று, ஓசையும் ஊறும் உடையது. தீ, ஓசை, ஊறு, ஒளி மூன்றையும் உடையது. நீர், ஓசை ஊறு, ஒளி, சுவை நான்கினை உடையது. மண், ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐந்தொடும் கூடியதாகும். இவை யாவும் அகப்பூதம், அகப்புறப்பூதம், புறப்பூதம், என்று மூன்று வகைப்படும். இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலே புறப்பூதங்களுடைய இயல்பு ஆசிரியரால் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment