Sunday 12 November 2017

வேடீஸ் ஸ்பெஷல் - ஹெல்த்தி ரெசிப்பிகள்

ஆரோக்கிய வாழ்வுக்கு உணவுதான் அடிப்படை

ணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர். 
பெண்கள் வயதுக்கு வந்ததும், இடுப்பு எலும்பு வலுவாக உளுத்தங்களி, உடல் உஷ்ணத்தைக் குறைக்க மணத்தக்காளி, உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி, வலுவைக் கூட்ட கொள்ளு எனப் பெண்களுக்கு பிரத்யேகமான சமையல் அம்மாவின் கைமணத்தில் மணக்கும். ஆனால், இன்றைய டீன் ஏஜ் பெண்களோ, நம் பாரம்பரிய உணவுச்சத்துக்களின் மகத்துவம் தெரியாமல், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். இதனால், இளம் வயதிலேயே ஒபிசிட்டி, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகித் தவிக்கின்றனர். நாம் நன்றாக இருந்தால்தான், நம்மைச் சார்ந்தவர்களும் நன்றாக இருக்க முடியும் என்பதை, ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும். 
மாதவிடாய், கர்ப்பம், தாய்மை, மெனோபாஸ் என, உடலின் மாற்றங்களை எதிர்கொள்ள, பெண்களுக்கு அதிக பலமும் சக்தியும் தேவை. அந்த சத்துக்களை உணவின் மூலமே பெற முடியும். கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு இவை ஐந்தும், தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பெண்களின் உடல் நலனுக்கு அவசியமான, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு ரெசிப்பிகளை செய்து காட்டியிருக்கிறார், சமையல் கலைஞர் கிருஷ்ணகுமாரி. அந்த உணவுகளின் பலன்களை சொல்லியிருக்கிறார் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.
பாலக் சோயா கிரேவி
தேவையானவை: பாலக் கீரை - ஒரு கட்டு, சோயா உருண்டைகள் - 10 - 15, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 2, பால் - 4 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் சோயா உருண்டைகளைப் போட்டு, 10 நிமிடங்கள் வேகவிட்ட பிறகு, குளிர்ந்த நீரில் இரண்டு முறை அலசி, பிழிந்துகொள்ளவும். பாலக் கீரையுடன் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து, ஆறியதும், விழுதாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து, சோயா உருண்டைகளைப் போட்டு வதக்கவும். உப்பு சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். சோயா வெந்ததும், அரைத்த பாலக் விழுது சேர்த்துக் கிளறி, ஒரு கொதிவந்ததும், பால் சேர்த்துக் கிளறி இறக்கவும். பாலக், சோயா கிரேவி ரெடி. சப்பாத்தி, நான், ரொட்டி, தோசையுடன் சாப்பிட ஏற்றது.
பலன்கள்: அசைவ உணவில் இருக்கும் முதல் தர புரதச்சத்தும் குறைவான மாவுச்சத்தும், சோயாவில் இருக்கின்றன.  உடல் வளர்ச்சிக்கு நல்லது. பாலக் கீரையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், நார்ச்சத்து உள்ளன. பீட்டா கரோட்டின், வைட்டமின் சி ஓரளவு இருப்பதால், கண்களுக்கு நல்லது. இதில், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்கும். 
முளைப்பயறு காய்கறி சாமை சாலட்
தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், தக்காளி, வெங்காயம், கேரட் - தலா 1, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், வேகவைத்த சாமை - கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பொடித்த வேர்க்கடலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: தக்காளி, வெங்காயம், கேரட்டைப் பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறை, ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள், முளைப்பயறு, வேகவைத்த சாமை அரிசி சேர்த்துக் கலக்கவும். எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத் தூள், ஆலிவ் எண்ணெய் இவற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கி, இதனுடன் புதினா, கொத்தமல்லி பொடித்த வேர்க்கடலை தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: முளைகட்டிய பயறில் வைட்டமின் சி, புரதம் மிக அதிகமாகவும், வைட்டமின் கே, இரும்பு, கால்சியம் சத்து ஓரளவும் இருக்கின்றன. எலுமிச்சை சேர்ப்பதால், இரும்புச்சத்து கிரகிக்கப்படுவது எளிதாக இருக்கும். சாமையில் மாவுச்சத்து மற்றும் பீட்டா கரோட்டின் ஓரளவு இருக்கின்றன. போதிய வளர்ச்சி இன்றி இருக்கும் பெண் குழந்தைகளுக்கு, இந்த சாலட் தினமும் செய்துகொடுக்கலாம்.  உடல் வளர்ச்சிக்கு உதவும். பெண்களுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கும். 
பேரீச்சை பாதாம் லட்டு
தேவையானவை: பேரீச்சம் பழத்துண்டுகள் - ஒரு கப், பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா கால் கப், தேன் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பேரீச்சம் பழத்துண்டுகள், பாதாம், முந்திரி, பிஸ்தா, தேன் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்தக் கலவையை  சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். 
பலன்கள்: நல்ல கொழுப்பு, புரதச்சத்து இதில் அதிகம் இருக்கின்றன. பேரீச்சை, தேன் சேர்ப்பதால் இரும்புசத்து கிடைத்து, உடலுக்கு நல்ல வலுவைத் தரும். இதனால், பெண்களுக்கு ரத்தசோகை வராது. உடல் வளர்ச்சிக்கு உகந்தது. பெண்கள், தினமும் ஒரு லட்டு சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். 
கொள்ளு சப்ஜி
தேவையானவை: வேகவைத்த கொள்ளு - ஒரு கப், தக்காளி, வெங்காயம் - தலா 1 (அரைத்துக் கொள்ளவும்) இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் - ஒன்றரை டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், புதினா, கொத்தமல்லி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கொள்ளை வறுத்து, நான்கு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து அரைத்த தக்காளி, வெங்காய விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது, மல்லித் தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், வேகவைத்த கொள்ளைச் சேர்க்கவும். புதினா, மல்லி சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: புரதச்சத்து நிறைந்தது. ஓரளவு பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் உள்ளது. தோலுடன் சேர்ப்பதால் நார்சத்தும் கிடைக்கும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதால், உடலுக்கு வலுவைக் கூட்டும். உப்புச்சத்து உடலில் குறைவாக இருப்பவர்கள் சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்கள் மசாலாவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கல் பிரச்னையே வராது. உடல் பருமனான பெண்கள், வாரம் ஒருமுறை ரசம், துவையலாக செய்து சாப்பிடலாம். தேவையற்ற கொழுப்பை நீக்கும். உடலுக்கு வலுவைக் கூட்டும்.  
உளுந்தங்களி
தேவையானவை: வறுத்து அரைத்த கறுப்பு உளுந்து மாவு, பச்சரிசி மாவு - தலா அரை கப், கருப்பட்டி - ஒரு கப், நெய்  அல்லது நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியைக் கரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். கடாயில் கரைத்துவைத்துள்ள அரிசி, உளுந்துக் கலவையை சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும், கருப்பட்டிக் கரைசலை வடிகட்டிச் சேர்க்கவும். நன்றாக சேர்ந்து வரும்போது, நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, கிளறி இறக்கவும்.
பலன்கள்: நெய் சேர்ப்பதால் புரதமும் கொழுப்பும் நிறைவாகக் கிடைக்கும். கருப்பட்டி சேர்ப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். கார்போஹைட்ரேட் இதில் அதிகம். பெண்கள் பூப்பெய்தும்போது, ரத்தம் அதிக அளவு வெளியேறும். அப்போது, உடலை சோர்வு அடையாமல் வைத்து, நல்ல சக்தியைத் தரக்கூடியது. உடல் வளர்ச்சிக்கும் நல்லது. இடுப்பு எலும்பை உறுதியாக்கும். 
கறுப்பு உளுந்து தோசை
தேவையானவை: இட்லி அரிசி - அரை கப், கறுப்பு உளுந்து - ஒரு கப், சீரகம் - கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசி, கறுப்பு முழு உளுந்து இரண்டையும் தனித்தனியே நான்கு மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு, இதனுடன் சீரகம், இஞ்சி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து, தோசையாகச் சுடலாம். புளிக்கத் தேவை இல்லை. தோசை  சுடுவதற்கு நல்லெண்ணெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.  இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய்ச்சட்னி, தக்காளி சட்னி நன்றாக இருக்கும்.
பலன்கள்: புரதம், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், இரும்புச்சத்து இதில் அதிகமாக உள்ளன. வளரும் குழந்தைகள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு மிகவும் நல்லது. தோலுடன் அரைத்துச் செய்வதால், நார்ச்சத்து அதிகம் கிடைக்கும். 
குடமிளகாய் சட்னி
தேவையானவை: குடமிளகாய் - 2, வெங்காயம் - 1, பூண்டு பல், பச்சை மிளகாய் - தலா 2, புலி - கோலிகுண்டு அளவு, கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயைத் தீயில் சுட்டு, மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் விதைகளை எடுக்கவும். இதனுடன், உப்பு, புளி, பச்சைமிளகாய் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன், அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுச் சாப்பிடலாம். சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
பலன்கள்: வைட்டமின் சி, தாது உப்புக்கள் நிறைந்தது. நார்ச்சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. குடமிளகாயில் கொழுப்பின் அளவு குறைவு என்பதால், பெண்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையைக் குறைக்க உதவும் சட்னி இது.
ராகி மாம்பழ ஸ்மூத்தி
தேவையானவை: ராகி மாவு - 5 டேபிள்ஸ்பூன், மாம்பழம் - 1, தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, பால் - கால் கப்.
செய்முறை: ராகி மாவை ஒரு டம்ளர் நீரில் கரைத்து, கொதிக்கவைத்து, கஞ்சியாகத் தயார் செய்யவும். இதில், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். மாம்பழத் துண்டுகள், தயிர், ஆறவைத்த ராகி கஞ்சி, பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து, குளிரவைக்கவும். கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த கலவையை ஊற்றி, மாம்பழத் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும்.
பலன்கள்: எலும்புக்கு உறுதியைத் தரும், கேழ்வரகில் கால்சியமும், மாம்பழத்தில் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ளன.  நார்ச்சத்தும் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை தவிர்க்கப்படும். மாதவிடாய் கோளாறு இருக்கும் பெண்களுக்கு கேழ்வரகு நல்ல தீர்வைத் தரும்.
பீட்ரூட் புலாவ்
தேவையானவை: சாதம், பீட்ரூட் துருவல் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1, இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 3, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, பிரியாணி இலை - தலா 1, சோம்பு - கால் டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும்.  பீட்ரூட்டைத் துருவிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.  நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, கீறிய பச்சைமிளகாய், துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறவும். புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். நன்றாக சேர்ந்து வந்ததும். உதிராக வடித்த சாதத்தை ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும். இதற்கு, கேரட் தயிர் பச்சடி ருசியாக இருக்கும். 
 
பலன்கள்: பீட்ரூட்டில் கோலின் சத்து அதிகம் இருக்கிறது. இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் உள்ளன. நெய் சேர்ப்பதால், ஓரளவு கொழுப்பும், அரிசியால் மாவுச்சத்தும் கிடைத்துவிடும். கோலின், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை நரம்புகளைத் தூண்டி சுறுசுறுப்பாக்கும். எனவே கர்ப்பிணிகள் தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.
பப்பாளி பருப்பு அடை
தேவையானவை: கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு - தலா ஒரு கப், உளுந்து - 4 டேபிள்ஸ்பூன், குதிரைவாலி அரிசி - ஒரு கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, சோம்பு, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4,  பாதி பழுத்த பப்பாளி துண்டுகள் - ஒரு கப், வெங்காயம் - 1, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: சுத்தம் செய்த அரிசி, பருப்பு, உளுந்து வகைகளை மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன், சோம்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பப்பாளி துண்டுகள், உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கி, அடைகளாகச் சுட்டுஎடுக்கவும். இதற்கு, தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன்.  
 
பலன்கள்: பருப்பு வகைகளால் புரதமும், மாவுச்சத்தும் சேரும். பப்பாளியில் பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து பார்வைத்திறனுக்கு நல்லது. நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை வராது. பப்பாளி, மாதவிடாய்  குறைபாட்டை நீக்கும். நோய்த்தொற்று ஏற்படாமல், உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். பிரசவித்த பெண்கள், பப்பாளிக்காய் கூட்டாக செய்து சாப்பிட, தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
சோயா கட்லெட்
தேவையானவை: சோயா உருண்டைகள் - 20, வேகவைத்த உருளைக்கிழங்கு - 2, கேரட் துருவல் - கால் கப், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலா - தலா ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, பிரெட் தூள் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 
செய்முறை: சோயா உருண்டைகளைக் கொதி நீரில் போட்டு, 10 நிமிடங்கள் மூடிவைக்கவும். பிறகு, நீரில் இரண்டு முறை அலசி பிழியவும். இதை, மிக்ஸியில் போட்டு துருவிக்கொள்ளவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளவும். எண்ணெய் தவிர மற்றப் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டிய பிறகு, வட்ட வடிவமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தவாவில் போட்டு எடுக்கவும்.
பலன்கள்: மாவுச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்பு ஓரளவு உள்ளது. காய்கறிகள் சேர்ப்பதால் நார்ச்சத்தும் பீட்டா கரோட்டினும் சேரும்.  சோயாவில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்யும்.
ராகி பூரி
தேவையானவை: ராகி மாவு - அரை கப், கோதுமை மாவு - கால் கப், வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1, மிளகாய்த் தூள், ஓமம் - ஒரு டீஸ்பூன், உப்பு, தவிட்டு எண்ணெய் - தேவையான அளவு. 
செய்முறை: ராகி மாவு, கோதுமை மாவு, மசித்த உருளைக்கிழங்கு, ஓமம், உப்பு, மிளகாய்த் தூள் இவற்றுடன், வெதுவெதுப்பான நீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். சிறு சிறு பூரிகளாகத் திரட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.  ராகி பூரி ரெடி.
பலன்கள்: கேழ்வரகில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு, பல் வளர்ச்சிக்கு நல்லது. கோதுமை மாவு, உருளைக்கிழங்கு சேர்ப்பதால், மாவுச்சத்தும் புரதமும் ஓரளவு கிடைக்கும். மேலும், தவிட்டு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் இருப்பதால், கெட்ட கொழுப்பைக் குறைக்க வல்லது. பெண்களுக்கு வயதான காலத்தில், எலும்புகள் தேய்மானம் அடைவதைத் தடுக்கும். கேழ்வரகை ஏதேனும் ஒரு வடிவத்தில் பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் உறுதியாகும்.
நெல்லி கொத்தமல்லி சட்னி
தேவையானவை: நெல்லிக்காய் - 3-4, கொத்தமல்லி - ஒரு கட்டு, எலுமிச்சைப் பழம் - 1 (சாறு எடுக்கவும்), வெல்லம் - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 3, கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: சுத்தம் செய்த கொத்தமல்லி, பொடியாக நறுக்கிய நெல்லிக்காய், பச்சைமிளகாய் இவற்றுடன் வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் தாளித்து, சட்னியில் சேர்க்கவும். புளிப்பும் தித்திப்பும் மிக்க சட்னி தயார்.
பலன்கள்: நெல்லிக்காயில் வைட்டமின் சி உள்ளது. பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, தாது உப்புக்கள் கொத்தமல்லியில் நிறைவாக உள்ளன. வாய்க் கசப்பால், சரியாகச் சாப்பிடாமல் இருக்கும் பெண்கள் எடுத்துக்கொள்வதன் மூலம், சுவையை உணர முடியும்.  பசியைத் தூண்டும். உடல், தோல், கண்கள், எலும்புகளுக்கு மிகவும் நல்லது. ராகி பூரிக்கு இந்த சட்னியைத் தொட்டுச் சாப்பிடலாம். கொத்தமல்லி, வாயுத் தொல்லையை நீக்கும். செரிமானத்துக்கு நல்லது. கொத்தமல்லியுடன் நெல்லிக்காயும் சேர்ப்பதால், பெண்களுக்கு மாதவிடாய் தசைப்பிடிப்பு, ஹார்மோன் கோளாறுகள் சரியாகும். அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீ்ர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலை நீக்கும்.
ஸ்ட்ராபெர்ரி வாழைப்பழ ஸ்மூத்தி
தேவையானவை: ஸ்ட்ராபெர்ரி பழம் - 5-6, வாழைப்பழம் - 1, சர்க்கரை, தேன் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பால் - 2 கப், ஐஸ்கட்டிகள் - தேவையான அளவு.
செய்முறை: நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை, தேன் பால் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.  ஐஸ் துண்டுகள் சேர்த்து, நன்கு அடிக்கவும். பெரிய டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும். 
பலன்கள்: கால்சியம் நிறைந்த ஸ்மூத்தி இது. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது.  பீட்டா கரோட்டின் சிறிதளவும், தாது உப்புக்களும் இருக்கின்றன.  பாலில் சேர்க்கும்போது ஓரளவு புரதம் கிடைக்கும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர, தேவையற்ற கொழுப்பு கரையும். வாழைப்பழத்தில் மாவுச்சத்து அதிகம் என்பதால், உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். எலும்பு வளர்ச்சிக்கும் உதவும்.
நெல்லி மோர்
தேவையானவை: நெல்லிக்காய் - 1, மோர் - ஒரு டம்ளர், புதினா இலை - 4, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
 செய்முறை: மோருடன் புதினா, நறுக்கிய நெல்லிக்காய், இஞ்சித் துருவல், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். இதை, கண்ணாடி டம்ளரில் ஊற்றி, ஐஸ் துண்டுகள், புதினா இலை சேர்த்து, அலங்கரித்துப் பருகவும். வெயிலுக்கேற்ற சத்தான மோர் தயார்.
பலன்கள்: மோரில் புரதம் குறைவு.  கால்சியம் ஓரளவு இருக்கிறது.  வயிற்றைக் குளுமையாக்கும்.  நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி ஜீரண சக்தியைக் கொடுக்கும். தோலுக்கு நல்லது.  எலும்புகளை உறுதியாக்கும்.  சிறுநீர் நன்றாகப் பிரியும். உஷ்ணத்தால், பெண்களுக்குச் சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறுவது நிற்கும். சருமத்தைப் பொலிவாக்கும். எலும்புகள் வலுவடையும். குளிர்ச்சியைத் தரும்.
மஷ்ரூம் மசாலா
தேவையானவை: காளான் - 200 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மல்லித் தூள் - தலா ஒரு டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, சோம்பு, மிளகுத் தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், முந்திரி, கசகசா அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி, உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, பட்டை, சோம்பு, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய்த் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சிறிது நீர் விட்டு, கொதிக்கவிடவும். பிறகு, சுத்தம் செய்து நறுக்கிய காளானை உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். முந்திரி, கசகசா விழுது சேர்க்கவும். எல்லாம் நன்றாகச் சேர்ந்து வரும்போது, மிளகுத் தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி, பரிமாறவும். சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என எல்லாவற்றுக்கும் ஏற்ற சைடு டிஷ் இது.
பலன்கள்:  நார்ச்சத்து, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. காளான் ரத்தத்தில் படிந்துள்ள அதிக கொழுப்பைக் கரைத்துச் சுத்தப்படுத்தும். மலட்டுத்தன்மை, கருப்பை நோய்கள், மார்பகப் புற்று நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பவர்கள், காளானை அதிகம் பயன்படுத்தக்கூடாது. மற்றபடி, அனைவரும் சாப்பிடலாம். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கும். கர்ப்பப்பையில் வரும் பிரச்னைகளை விரட்டும்.
கார்ன் புரோகோலி சூப்
தேவையானவை: வேகவைத்து மசித்த ஸ்வீட் கார்ன், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - தலா 4 டேபிள்ஸ்பூன், தக்காளி - 1, இஞ்சித் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன், புரோகோலி - 12 பூக்கள், மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பால், ஃபிரெஷ் கிரீம், உப்பு - தேவையான அளவு. 
செய்முறை: பாத்திரத்தில் வெண்ணெயைப் போட்டு சூடாக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி, புரோகோலி, இஞ்சித் துருவல், மசித்த ஸ்வீட்கார்ன் விழுது சேர்த்து வதக்கவும். மூன்று டம்ளர் நீர் விட்டு, கொதிக்க விடவும். உப்பு சேர்த்து, புரோகோலி வெந்ததும், வேகவைத்த சோள முத்துக்கள், பால் சேர்த்துக் கலக்கி,ஓரு கொதி வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன்பு மிளகுத் தூள், விருப்பபட்டால் ஃபிரெஷ் க்ரீம் சேர்க்கவும்.
பலன்கள்: நார்ச்சத்து, கால்சியம், புரதம், தாது உப்புக்கள், பி காம்ப்ளக்ஸ்  வைட்டமின்கள் உள்ளன.  புரோகோலியில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கண்களுக்கு மிகவும் நல்லது.  வெண்ணெய் சேர்ப்பதால் உடலில் ஓரளவு கொழுப்புச் சேர்ந்து, பசியைத் தூண்டும். உடலில் சக்தி இல்லாமல் இருக்கும் பெண்கள், இந்த சூப்பை உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாப்பிடலாம்.  இதய நோயாளிகள் வெண்ணெயைத் தவிர்க்கலாம். சோளத்தில் நார்ச்சத்து இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.  எளிதில் ஜீரணத்தைக் கொடுக்கும்.
கேரட் பீட்ரூட் டிலைட்
தேவையானவை: பீட்ரூட், கேரட் - தலா 1, தக்காளி - அரை, மிளகு, சீரகத் தூள் - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, இளநீர் வழுக்கை - சிறிதளவு, உப்பு - கால் டீஸ்பூன், ஒரு எலுமிச்சைச் சாறு.
செய்முறை: பீட்ரூட், கேரட், புதினா, தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். இதனுடன், உப்பு, மிளகு, சீரகத் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். இளநீர் வழுக்கையைப் பொடியாக நறுக்கி, சேர்த்துக் கலக்கவும். ஐஸ் துண்டுகள் போட்டு, பருகவும்.
பலன்கள்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.  பார்வைத் திறனுக்கு நல்லது. பீட்ரூட்டில் மூளை நரம்புகளைத் தூண்டும் கோலின் சத்து இருப்பதால் கருவிலேயே மூளை வளர்ச்சி அதிகரிக்கும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். இளமையைத் தக்க வைக்கும்.
மணத்தக்காளி கீரை மண்டி
தேவையானவை: மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு, பூண்டு பல் - 4, சின்ன வெங்காயம் - 6-7, காய்ந்த மிளகாய் - 4, அரிசி களைந்த நீர் - ஒரு கப், சீரகம், வெந்தயம், கடுகு, உளுத்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை, தேங்காய்ப் பால் - கால் கப், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
 
செய்முறை: கீரையைச் சுத்தம் செய்து நறுக்கவும். பூண்டு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். கீரை சேர்த்துக் கிளறி, அரிசி களைந்த நீரை ஊற்றி, வேகவிடவும். உப்பு, பெருங்காயத் தூள் சேர்க்கவும். கீரை வெந்ததும், தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
பலன்கள்: பி காம்ப்ளெக்ஸ் இதில் அதிகம் இருப்பதால், வயிற்றுப் புண், வாய்ப் புண்ணுக்கு நல்லது.  கால்சியம், இரும்புச்சத்து இதில் அதிகம். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். தேங்காய் பால் சேர்ப்பதால் கொழுப்பும் உடலில் சேரும். கருவுக்கு நல்ல வலிமையைத் தரக்கூடியது மணத்தக்காளி. மாதவிடாயின்போது ஏற்படும் உஷ்ணத்தைக் குறைக்கும். வயிற்றைக் குளுமையாக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராது.
டிரை ஃப்ரூட்ஸ் ரெய்த்தா
தேவையானவை: முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், பேரீச்சம் பழத்துண்டுகள் - தலா 2 டீஸ்பூன், தயிர் - அரை கப், மிளகுத் தூள், மிளகாய்த் தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - சிட்டிகை.
செய்முறை: தயிரில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் வகைகளைப் பொடியாக நறுக்கவும். இதனுடன், தயிர் சேர்க்கவும். பேரீச்சம் பழத்துண்டுகளைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து, மேலாக, மிளகாய்த் தூள் தூவிப் பரிமாறவும்.
பலன்கள்: அக்ரூட்டில் ஒமேகா 3 இருப்பதால் இதயத்துக்கு நல்லது.  பெண்களுக்கு மூட்டு தொடர்பான பிரச்னைகள் வராமல் காக்கும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து கிடைப்பதால் உடலுக்கு நல்ல எனர்ஜியைத் தரக்கூடியது.

காய்களைச் சாப்பிடுங்கள்... நோய்களை விரட்டுங்கள்!

காய்கறிகளில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நன்மை தருவதும் சுவை மிகுந்ததுமான காய்கறிகளின் முக்கியத்துவம்,  அதில் உள்ள சத்துக்கள் பற்றி விரிவாக விளக்குகிறார் `அப்போலோ மருத்துவமனை' தலைமை டயட்டீஷியன் புவனேஸ்வரி.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைப்படி,  ஒருவர் ஒரு நாளைக்கு 300 கிராம் காய்கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில், 50 கிராம் முட்டைகோஸ், புரோகோலி போன்ற பச்சை நிற, இலை வகையைச் சேர்ந்த காய்கறிகள். 50 கிராம் கேரட், பீட்ரூட் போன்ற வேர்க் காய்கறிகள். 200 கிராம் நாட்டுக் காய்கறிகளாக இருக்க வேண்டும். ஒருவரின் வயது, பாலினம், அவரது ஒருநாள் உடலுழைப்பு எவ்வளவு, ஏதேனும் நோய் இருக்கிறதா என்பதைப் பொருத்து, அவர் என்னென்ன காய்கறிகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அளவு மாறுபடும்!

ஏன் சாப்பிட வேண்டும்?
காய்கறிகளில் சோடியம், கொலஸ்ட்ரால் மற்றும் கலோரி குறைவாகவே இருக்கும். எனவே, காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால்கூட, உடல் எடை அதிகரிக்காது. அது ஆற்றலைத் தருவதோடு, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களும், வைட்டமின் ஏ,பி,சி,கே போன்ற சத்துக்களும் தரும். மேலும், ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவையும் போனஸ்.
காய்கறிகளில்  பைட்டோநியூட்ரியன்ட்ஸ் (Phytonutrients) சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை, இதய நோய்கள், சர்க்கரை நோய், ஸ்ட்ரோக், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருக்க உதவுகின்றன. அன்றாடம் உணவில் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஒவ்வொரு காய்கறியிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது.  எனவே, ஒரே காய்கறியைத் தொடர்ந்து சாப்பிடாமல், அனைத்துக் காய்கறிகளையும் சாப்பிடப்  பழகிக்கொள்ள வேண்டும்.

எப்படிச் சமைப்பது?
வ்வொரு காய்கறியும் வெவ்வேறு விதமான மணம், சுவை மற்றும் சத்துகளைக்  கொண்டது. காய்கறிகளை தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைப்பது, நீராவியில் வேகவைப்பது, வறுப்பது, கடைவது என, நான்கு வகைகளில் சமைக்கலாம். காய்கறியில் இருக்கும் சத்துக்கள் வெளியேறாமல் இருக்க, முறையாகச் சமைப்பது அவசியம். தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைப்பது, கடைசலாகச் செய்வது போன்றவற்றால் சில சத்துக்கள் நீங்கிவிடும். எண்ணெய் சேர்த்து வறுப்பதால், கலோரிகளும் அதிகரிக்கும். எனவே, காய்கறிகளை நீராவியில் வேகவைப்பதே மிகவும் சிறந்த முறை. இதனால், சத்துக்கள் அதிகம் வெளியேறுவது தடுக்கப்படும். காய்கறிகளைச் சமைக்கும்போது முடிந்தவரை தண்ணீர், எண்ணெய் போன்றவற்றைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். மிதமான வெப்பநிலையில் சமைப்பதே சிறந்தது.

எப்படிச் சாப்பிடுவது?
கூடுமானவரை காய்கறிகளைச் சமைக்காமல் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. பச்சையாக சாலட் செய்து சாப்பிடலாம். 
காய்கறிகளை அவசியம் நீரில் கழுவிவிட்டு சாப்பிடவும். அவற்றை நறுக்குவதற்கு முன்பே தண்ணீரில் கழுவிவிட வேண்டும். நறுக்கிய காய்கறிகளைத் தண்ணீரில் கழுவுவது தவறு.
பெரும்பாலான காய்கறிகளை நன்றாகக் கழுவியதும், தோலை நீக்காமல் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது. காய்கறிகளின் தோல் பகுதியில்தான் பல்வேறு சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.
காய்கறிகளை நீண்ட நேரம் சமைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக சில நிமிடங்கள்  கூடுதலாக வேகவைத்தால், பெரும்பாலான சத்துக்கள் நீங்கிவிடும்.
காய்கறிகளை நன்றாக மென்று, அரைத்து, பொறுமையாக விழுங்க வேண்டும். இதுவே செரிமானத்துக்குச் சிறந்த வழி.

காய்கறிகளைக் குழந்தைகள் சாப்பிட
குழந்தைகளுக்குக் காய்கறிகளின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தர, பெற்றோர்கள் தங்களது உணவின் பெரும்பகுதியில் காய்கறி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காய்கறி மார்க்கெட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வொரு காயை எடுக்கும்போதும், அதன் சத்துக்களையும் பலன்களையும் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இதனால், வாங்க ஆர்வமாக உதவுவதுடன், விரும்பிச் சாப்பிடவும் செய்வார்கள்.      
காய்கறிகளைச் சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்றவற்றைக் கற்றுக்கொடுங்கள். படிக்கும் குழந்தையைச் சமைக்கச் சொல்வதா என எண்ண வேண்டாம். சமையலில் ஈடுபடும் குழந்தைகள், உடலுக்குக் கேடு விளைவிக்கும் துரித உணவுகள் பக்கம் திரும்ப மாட்டார்கள்.
குழந்தைகளுக்குக் காய்கறிகளை மட்டும் தனியாகச் சாப்பிடக் கொடுக்கவும். காய்கறிகளை உணவுடன் கலந்துவிட வேண்டாம்.
காய்கறிகளை ஒரு தட்டில் வைத்து, அலங்கரித்துக் கொடுங்கள். எலுமிச்சை, கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி போன்றவற்றால் உணவை அலங்காரம் செய்துகொடுத்தால், காய்கறிகளை  குழந்தைகளுக்கு எளிதில் பிடித்துவிடும்.

எப்படிச் சுத்தப்படுத்துவது?
காய்கறிகளைக் கழுவும்போது, ஒரு பாத்திரத்தில் வைத்துக் கழுவாமல், குழாய் நீரில் கழுவ வேண்டும்.
காய்கறிகளில் ஏதேனும் ஓட்டை, பூச்சிகள் இருந்தால், அந்தப் பகுதியை நீக்கிவிட்டு, நன்றாகக் கழுவிய பிறகே சமைக்கவும்.
காய்கறிகளைக் கழுவியதும், சுத்தமான துணியில் நன்றாகத் துடைத்து, பிறகு நறுக்கவும்.
ஃப்ரிட்ஜில் காய்கறிகளை வைக்கும்போது, சமைக்காத அசைவ உணவுகளான கோழிக்கறி, மீன் போன்றவற்றின் அருகில் வைக்க வேண்டாம். ஃபிரிட்ஜில் காய்கறிகளை அதிக நாட்கள்  வைக்கக் கூடாது. அன்றாடம் காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.

கலர்ஃபுல் காய்கறிகள்
காய்கறிகளைச் சாப்பிடும்போது, வெவ்வேறு வண்ணக் காய்கறிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு நிறக் காய்கறிக்கும் ஒவ்வொரு விதமான ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து இருக்கும். முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற  வெள்ளை நிறக் காய்கறிகளில் ஆன்தோஸான்தின்ஸ் (Anthoxanthins) அதிக அளவு இருக்கும்.
தக்காளி, சிவப்புக் குடமிளகாய் போன்ற சிவப்பு நிறக் காய்கறிகளில் லைக்கோபீன் (Lycopene) சத்து அதிகமாக இருக்கும்.
கேரட்,  பரங்கி போன்ற ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறக் காய்கறிகளில் கரோட்டீனாய்ட்ஸ் (Carotenoids) அதிகம் இருக்கும்.
பச்சை நிறக் காய்கறிகளான வெண்டைக்காய், புரோகோலி, வெள்ளரிக்காய் போன்றவற்றில் லூட்டின் (Lutien) குளோரோபில் (Chlorophyll)  போன்றவை அதிகம் இருக்கும்.
நீலம் மற்றும் கருநீலக் காய்கறிகளில் (கத்திரிக்காய் - ஊதா நிற முட்டைகோஸ்) ஆன்தோசயனின் (Anthocyanin) அதிக அளவில் இருக்கும்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?
ஒவ்வொரு பருவகாலத்திலும் எந்தக் காய்கறி அதிகம் விளையுமோ, அதை வாங்கிச் சாப்பிடுவதே சிறந்தது.
காய்கறிகள் நல்ல வண்ணத்தில், மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.  ஆனால், பூச்சிகள் நுழையாத, அடிபடாத காய்கறிகளாகப் பார்த்து வாங்கவும். காய்கறிகளில் ஓட்டை இருந்தால், நுண்கிருமிகள் இருக்கும்.
ஒரே வகையான காய்கறிகளையே தொடர்ந்து சாப்பிடுவது, சலிப்பை ஏற்படுத்தும். எனவே, வெவ்வேறு விதமான காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்தவும்.
பச்சை, வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, நீலம், வெளிர் நீலம், சிவப்பு எனப் பல வண்ணக் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணக் காய்கறிகளை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம்.

உடலுக்குத் தேவை ஆன்டிஆக்ஸிடன்ட்!
செரிமான மண்டலம் சீராக இயங்க, உடலில் உள்ள செல்களுக்கு இடையே ஏற்படும் எரிச்சல் காரணமாக ஏற்படும் வீக்கம் (Inflammation) வராமல் இருக்க, கால்சியத்தை உட்செறிக்கும் திறன் மேம்பட, கெட்ட கொலஸ்ட்ரால் குறைய, பார்வைத் திறன் மேம்பட, உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சிறுநீரகத் தொற்று வராமல் தடுக்க, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து உதவுகிறது.

வெண்டைக்காய்
நீரில் கரையும் மற்றும் கரையாத தன்மை கொண்ட இரண்டு வகை நார்ச்சத்துகள் வெண்டைக்காயில் இருக்கின்றன. இதைச் சீராக உணவில் சேர்த்துவந்தால், செரிமானக் கோளாறுகள் வராது. மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்். வெண்டைக்காயில் இருக்கும் ஃபோலேட் சத்து, குழந்தைகளுக்கு நரம்பு மண்டலங்களில் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும். எனவே, கர்ப்பிணிகள் வெண்டைக்காயை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு
வாழைத்தண்டில் நார்ச்சத்து மிக அதிகம் இருக்கிறது. எளிதில் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். அதிக அளவு உணவு எடுத்துக்கொள்பவர்கள், வாழைத்தண்டை உணவில் சேர்த்துவருவது நல்லது. உடல் எடையைக் குறைக்கும். இதயத் தசைகள் சீராக இயங்கத் தேவையான, பொட்டாசியம் இதில் இருக்கிறது. வைட்டமின் பி6 சத்தும் இதில் இருக்கிறது. சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கவும், உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க, வாழைத்தண்டு மிக அவசியம். வாழைத்தண்டை சாறாக எடுத்தும் அருந்தலாம். வாரம் ஒரு முறை வாழைத்தண்டை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

பாகற்காய்
கசப்புச்சுவை மிகுந்த பாகற்காய், குறைவான கலோரி கொண்டதாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து மிகுந்தது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் பிரச்னை வராமல் தடுக்க, பாகற்காயை அனைவரும் சாப்பிடலாம். உடல் எடை குறையவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் பாகற்காயைச் சமையலில் சேர்ப்பது அவசியம். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் சாப்பிடுவது, உடலுக்கு மிகவும் நல்லது. இதை எண்ணெய் சேர்த்து வறுவலாகச் சாப்பிடுவதால், கலோரி அதிகரிக்கும். எனவே, வேகவைத்துச் சமையலில் சேர்த்துக்கொள்வதே நல்லது.

முள்ளங்கி
கால்சியம் சத்து நிறைந்த முள்ளங்கியில், வைட்டமின் சி நிறைய உள்ளன. கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, அதைச் சுத்தப்படுத்துகிறது. நார்ச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருப்பதால் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சாப்பிடலாம். நுரையீரல் தொற்று உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் முள்ளங்கியை அதிக அளவில் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும்.

வெங்காயம்
வைட்டமின் சி, பொட்டாசியம் சத்துக்கள் நிறைய உள்ளன. சிறுநீரகக் கோளாறுகள் வராமல் தடுக்க, முக்கியப் பங்காற்றுகிறது. சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் வளராமல் இருப்பதற்கும் இதை அவசியம் சமையலில் சேர்க்க வேண்டும். நார்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், செரிமானக் குறைபாட்டை நீக்கும். வெங்காயத்தைப் பச்சையாக, சாலட் செய்து சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும். சின்ன வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்காமல், அப்படியே சாப்பிடலாம் அல்லது சமையலுக்குப் பயன்படுத்தலாம். வெங்காயத்தை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

தக்காளி
தமிழர் சமையல்களில் பெரும்பாலும் தக்காளியின் பயன்பாடு அதிகம். சமைக்காமலும் சாப்பிடலாம். இதைச் சமையலில் சோக்காதவர்கள் தினமும் ஒரு தக்காளியை பச்சையாகவே சாப்பிட வேண்டும். வைட்டமின் ஏ, சி, கே ஆகிய சத்துக்களும் பொட்டாசியம், நார்ச்சத்து, லைக்கோபீன் ஆகியவையும் அதிக அளவில் இருக்கின்றன. எலும்புகள் வலுப்பெறவும், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், வாய்ப் புற்றுநோயைத் தடுக்கவும் தக்காளி உதவுகிறது. தினமும் ஏதாவது ஒரு வகையில் இதைச் சிறிதளவு எடுத்துக்கொள்வது நலம்.

பரங்கிக்காய்
வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள பரங்கிக்காய் கண்களுக்கு  நலம் பயக்கும் காய்கறிகளில் ஒன்று. ஒரு கப் பரங்கிக்காயில், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ஏ அளவைக் காட்டிலும், இரண்டு மடங்கு வைட்டமின் ஏ இருக்கிறது. தவிர, வைட்டமின் கே, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இதய நோய்கள் வராமல் தடுப்பதில் வைட்டமின் கே முக்கியப் பங்காற்றுகிறது. வைட்டமின் ஏ, கே நிறைவாக உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி பரங்கிக்காய் சமைத்துக்கொடுக்க வேண்டும். பரங்கி விதையில் டிரிப்டோபான் (Tryptophan) எனும் அமினோ அமிலம் இருக்கிறது. தொடர்ந்து பரங்கிக்காய் சாப்பிட்டுவந்தால், நல்ல உறக்கம் வரும்.

வாழைப்பூ
நார்ச்சத்து அதிகமாகவும், கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்களும் வாழைப்பூவில் இருக்கின்றன. மாதவிடாய்க் காலத்தில் ரத்தப்போக்கு காரணமாக பெண்களுக்கு வலி ஏற்படும்போது, ஒரு கப் சமைத்த வாழைப்பூவைச் சாப்பிட்டுவந்தால் பிரச்னை சரியாகும். வாழைப்பூவை நன்றாகச் சமைத்து, தயிர் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், புரோஜெஸ்ட்ரான் அதிகமாகச் சுரந்து, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். இரும்புச்சத்து, புரதச்சத்து இருப்பதால் வளர் இளம் பருவத்தினர் வாரம் ஒரு முறையாவது, வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, வாழைப்பூவை எண்ணெய் அதிக அளவில் சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

வாழைக்காய்
மாவுச்சத்தும் நார்ச்சத்தும் வாழைக்காயில் அதிக அளவில் இருக்கின்றன. எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் சத்தும் இருப்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது. வைட்டமின் கே சிறிதளவு இருக்கிறது. வாழைக்காயை பொறியலாகவோ குழம்பில் சேர்த்தோ சாப்பிடலாம். வாழைக்காயை வறுவலாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. இது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடல் எடை அதிகரிக்க விரும்புகிறவர்கள், இதைச் சீரான இடைவேளையில் எடுத்துக்கொள்ளலாம்.

பீட்ரூட்
பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ ஆகியவை பீட்ரூட்டில் அதிகம் இருக்கின்றன. அதிக அளவு நார்ச்சத்தும் குறைந்த அளவு கலோரியும் கொண்டது. கொழுப்பைக் குறைக்கும்.  எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், பீட்ரூட்டை உணவில் சேர்ப்பது அவசியம். உடலில் உள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றி,  உடலைச் சுத்தப்படுத்துவதில், பீட்ரூட் முக்கியப் பங்காற்றுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பீட்ரூட் மிகவும் நல்லது. இதில் கரோட்டின் சத்து உள்ளது. இது புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட்டைக் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்குச் சிறு வயதில் இருந்தே ஏதாவது ஒரு வகையில் பீட்ரூட்டைச் சமைத்துக்கொடுக்க வேண்டும்.

முருங்கைக்காய்
முருங்கைக்காய் எளிதில் செரிமானம் ஆகும். புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் சி ஆகியவை இதில் நிறைந்திருக்கின்றன. இரும்புச்சத்து நிறைவாக உள்ளதால், ரத்தசோகை வராமல் தடுக்கவும், கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால், எலும்பின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் துணைபுரிகிறது. முருங்கையில் இருக்கும் துத்தநாகம் உடலில் முடி வளரவும், ஆண்களுக்கு விந்து கெட்டிப்படவும் உதவுகிறது. உடலில் அதிகப்படியாக உள்ள கார்பன் டை ஆக்ஸைடு நீங்கவும், சில நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கவும் முருங்கைக்காய் முக்கியப் பங்காற்றுகிறது. இதன்  தோலில் சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால், நன்றாக மென்று சாப்பிடுவது அவசியம்.

காலிஃபிளவர்
புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் காலிஃபிளவரில் உள்ளது. சாலையோரக் கடைகளில் காலிஃபிளவரை எண்ணெயில் பொறித்து விற்கின்றனர். இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிப்பதால் ஆன்டிஆக்ஸிடன்ட் நீங்கிவிடும். எனவே, காலிஃபிளவர் கூட்டு, சாம்பராக வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சி, ஃபோலேட் (Folate) ஆகிய சத்துக்கள் இதில் இருக்கிறன்றன. உடலில் ரத்த ஓட்டம் சீராகவும், உடல் எடை குறையவும், இதயநோய்கள் வராமல் தடுக்கவும், பக்கவாதம் வராமல் தடுக்கவும் காலிஃபிளவரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கேரட்
கேரட்டில் அதிக அளவு  பீட்டா கரோட்டின் உள்ளது. கால்சியம், ஃபோலிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. வைட்டமின் ஏ மிக அதிக அளவில் இருப்பதால் பார்வைத் திறன் மேம்படவும், கண் நோய்கள் வராமல் தடுக்கவும், தினமும் ஒரு கேரட் சாப்பிடலாம். வைட்டமின் கே கேரட்டில் அதிக அளவில் இருப்பதால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கும் ஆற்றல் கேரட்டுக்கு உண்டு. சருமம் பொலிவுறும். வயது அதிகரிப்பதால் சருமம் மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பைத் தாமதப்படுத்தும். சமைத்துச் சாப்பிடுவதற்குப் பதில், கேரட்டை நன்றாகக் கழுவி, கடித்துச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த முறையில் சாப்பிடுவதே சிறந்தது.

புடலங்காய்
புடலங்காயில் அதிக அளவு நீர்ச்சத்து இருக்கிறது. குறைவான கலோரி கொண்டது. கொழுப்புச்சத்து இல்லை. எனினும், புடலங்காய் சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கும். உடல் எடையைக் குறைக்க, டயட் கடைப்பிடிப்பவர்கள் தங்கள் மெனுவில் கட்டாயம் புடலங்காயைச் சேர்க்க வேண்டும். இதில், ஏ, பி, சி வைட்டமின்களும் அயோடின் உள்ளிட்ட தாதுஉப்புக்களும் இருக்கின்றன. நரம்பு மண்டலம் சிறப்பாகச் செயல்பட புடலங்காய் துணைபுரிகிறது. இரும்புச்சத்து 22 மி.கி என்ற அளவில் இருப்பதால், ரத்தசோகையைத் தடுக்கும். பெண்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

முட்டைகோஸ்
வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்தது முட்டைகோஸ். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு மற்றும் செரிமானக் குறைபாட்டைப் போக்கும். நெஞ்சு எரிச்சல், அல்சர் இருப்பவர்கள், இதை அவசியம் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முட்டைகோஸ் உதவும். வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளன. சமைத்துச் சாப்பிடுவதைக்காட்டிலும் சமைக்காமல் சாலட்டாக சாப்பிடுவது நல்லது. இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் அடிக்கடி முட்டைகோஸை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை, மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி முட்டைகோஸைச் சேர்த்துக்கொள்ளலாம்.

நூல்கோல்
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. வைட்டமின் சி, மாங்கனீஸ், பொட்டாசியம் சத்து ஆகியவை உள்ளன. நூல்கோலைச் சமைக்காமல் சாப்பிடுவது, செரிமான சக்தியை மேம்படுத்தும். கால்சியம் நிறைவாக உள்ளதால் வளரும் இளம் பருவத்தினர், பெண்கள் அதிக அளவில் இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். நூல்கோலை சாம்பார் செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது இதைச் சமைத்துக் கொடுப்பது நல்லது.

கோவைக்காய்
கோவைக்காயில், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றன.  இது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் சக்தி கொண்டது. ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். அலர்ஜி மற்றும் நுரையீரல் பிரச்னை போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு, கோவைக்காய் மிகவும் நல்லது. பீட்டா கரோட்டின் நிறைவாக உள்ளதால், புற்றுநோய் செல்கள் வளர்வதைத் தடுக்கும். வளர் இளம் பருவத்தினருக்கு கோவைக்காயைச் சீரான இடைவெளியில் சமைத்துக்கொடுப்பது நல்லது.

கத்திரிக்காய்
கத்திரிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால், அதிக அளவில் மற்ற உணவுகளைச் சாப்பிட முடியாது. எளிதில் உணவு உண்ட திருப்தி கிடைத்துவிடும். சர்க்கரை நோயாளிகள் கத்திரிக்காயை, வேகவைத்தோ அல்லது குழம்பில் சேர்த்தோ சாப்பிடுவது மிகவும் நல்லது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும் திறன் கத்திரிக்காய்க்கு இருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கக் கூடாது.  கத்திரிக்காயை வறுவலாகச் சாப்பிட வேண்டாம். வாரத்துக்கு இரு முறை என்ற அளவில் சாம்பாரில் சேர்த்துச் சாப்பிடலாம். கத்தரிக்காயைச் சமையலில் சேர்க்கும்போது, அதன் காம்பையும் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

குடமிளகாய்
அயல்நாடுகளில் தினமும் சமையலில் குடமிளகாய் சேர்ப்பார்கள். ஏனெனில், குடமிளகாயில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை, அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ, சி , ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் இருக்கின்றன. ரத்தசோகை வராமல் தடுக்கவும், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய்கள் மற்றும் புற்றுநோய் போன்றவற்றைத் தடுக்கவும், பார்வைத் திறனை அதிகரிக்கவும் குடமிளகாய் துணைபுரிகிறது. சாலட்டில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய். பச்சை, சிவப்பு குடமிளகாயில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன.

சேனைக் கிழங்கு 
வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், ஆகியவை இதில் இருக்கின்றன. மாவுச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் உள்ளன. பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுஉப்புகளும் சேனைக் கிழங்கில் இருக்கின்றன. அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இதை, வறுவலாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாதம் ஒரு முறை சேனைக் கிழங்கை உணவில் சேர்த்துக்கொண்டாலே போதும்.

அவரைக்காய்
புரதச்சத்து நிறைந்துள்ள அவரைக்காயில், பொட்டாசியம், மக்னீசியம் அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்களும் இதில் அதிகம். உடலில் உள்ள எலும்புகளின் உறுதிக்கும் ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் இதயம் சீராகச் செயல்படவும் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும் அவரைக்காய் உதவுகிறது. அவரைக்காயை வாரத்துக்கு மூன்று நாட்களாவது சாம்பார், பொரியல் என ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்ந்த சுண்டைக்காய்
வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்ந்த சுண்டைக்காயில் எலும்புகள், நரம்புகள் சீராக இயங்க உதவும். டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமானக் குறைபாட்டைப் போக்கும். உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். மேலும், வயிறு, செரிமான மண்டலத்தில் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கவும், வயிற்றைச் சுத்தம் செய்யவும், சுண்டைக்காய் துணைபுரிகிறது. தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள், இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். மற்றவர்கள் வாரத்துக்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

உருளைக் கிழங்கு
மாவுச்சத்து நிறைந்த கிழங்கு வகைகளில் மிகவும் பிரபலமானது உருளைக் கிழங்கு. இதில் இருக்கும் தாது உப்புகள் உடலில் உள்ள எலும்புகளின் உறுதித்தன்மைக்குத் துணைபுரியும். நரம்பு இயக்கங்கள், தசைகள் வலுப்பெறவும் இது உதவிபுரிகிறது.  மாவுச்சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு எளிதில் சக்தி கிடைக்கும். ஃபோலேட், வைட்டமின் சி, சிறிதளவு நார்ச்சத்தும் இதில் இருக்கின்றன. எளிதில் செரிமானம் ஆகும். புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. உருளைக் கிழங்கை வறுவலாகச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வேகவைத்துச் சாப்பிடுங்கள். அதிக அளவில் உருளைக் கிழங்கு சாப்பிடுவது, எடை அதிகரிக்கச் செய்யும். எனவே, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் குறைவாகவே சாப்பிட வேண்டும்.