Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 3

மூன்றாம் நூற்பா

முந்திய இரண்டாம் நூற்பாவில், இறைவன் தன் சத்தியோடு இயைந்து நின்று, உயிர்களை அவற்றின் வினைக்கேற்பச் செயற்படுத்துவான் என்று கூறப்பட்டது. அவ்வாறு செயற்படுத்தப்படும் உயிர் என்பதுதான் எது? உடம்புதான் உயிரா? அல்லது உடம்பின் பகுதிகளுள் ஒன்று உயிரா? அல்லது, இவையனைத்திற்கும் வேறான ஒன்றா? இப்படிப் பலவாறான ஐயங்கள் மாணவர்க்கு எழுதல் இயல்பு. அவற்றை நீக்குதற் பொருட்டு இம் மூன்றாம் நூற்பாவைச் செய்கின்றார் ஆசிரியர்.

ஆசிரியர் கருத்துரை:

என்பது சூத்திரம், என் நூதலிற்றோ எனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று.

கருத்துரை விளக்கம்

ஆன்மப் பிரகாசம் என்பது ஆன்மாவைப் பற்றிய விளக்கம் எனப் பொருள்படும். அவ்விளக்கம் இரண்டு வகையாய் அமையும்.

1. ஆன்மா உண்டு என உணர்த்துதல்

2. ஆன்மாவினது இலக்கணத்தை உணர்த்துதல்

அவ்விரண்டனுள் முதலாவதாகிய, ஆன்மாவுண்டு என்பதனையே இந்த நூற்பாவால் உணர்த்துகிறார் ஆசிரியர்; ஆன்மாவின் இலக்கணத்தை நான்கு, ஏழாம் நூற்பாக்களில் உணர்த்துவார்.

உயிர் எது என்பதில் கருத்து வேறுபாடு:

உயிர் என்பது யாது என வினவினால், உணரும் தன்மையுடையது எதுவோ அஃது உயிர் என விடையிறுக்கலாம். இதனை யாவரும் ஒப்புவர். இதிலே சிக்கல் இல்லை. ஆயின், உணரும் தன்மையுடையது எது? என்று வினவும் போதுதான் அதற்கு விடை கூறுவதில் கருத்து வேறுபாடு உண்டாகிறது. உடம்பு, பொறி முதலிய வெவ்வேறானவற்றைச் சுட்டி, உணர்வுடையதாய் நிற்பது அதுவே யாகலின் அதுவே உயிர் என்கிறார்கள். அவற்றையெல்லாம் மறுத்து உயிர் அவற்றிற்கெல்லாம் வேறாய் உள்ளது என நிறுவுகிறார் ஆசிரியர்.

இந்நூற்பாவில் ஏழு வகையான மாறுபட்ட கருத்துக்களை எடுத்துக்கொண்டு மறுக்கின்றனர். எட்டாவதாகிய கொள்கையொன்றை அடுத்த நூற்பாவில் மறுப்பார்.

இந்நூற்பாவில் மறுக்கப்படும் கருத்துக்கள்:

1. ஆன்மா என்பது சூனியம்
2. பருவுடம்பே ஆன்மா
3. இந்திரியங்களே ஆன்மா
4. சூக்கும தேகமே ஆன்மா
5. பிராண வாயுவே ஆன்மா
6. பிரமமே ஆன்மா
7. அனைத்தும் கூடிய தொகுதியே ஆன்மா என்பன.

ஆசிரியர் ஏழு கூறுகளாக அமைத்துக் கொண்டு, மேற்கூறிய கருத்து ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கூறில் வைத்து மறுக்கின்றார்.

நூற்பாவின் பொருள்:

1. உடம்பின்கண் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பகுத்துப் பகுத்து ஆராய்ந்து பார்த்தும் ஆன்மா இன்னது என அறிய வாராமையால் ஆன்மா சூனியமே என்பர். அங்ஙனம் ஆராய்ந்து ஆன்மா சூனியமே எனக் கூறுகின்ற அறிவு உள்ளதேயன்றோ? அவ்வறிவைச் சூனியம் என்றால் பொருந்தாது. அவ்வறிவே ஆன்மாவாம் என்கிறார் ஆசிரியர்.

2. அறிவு உடம்பிலன்றி வேறிடத்தில் நிகழக் காணாமையால் பருவுடம்பே ஆன்மா என்பர். அதுவும் பொருந்தாது. உடம்பே ஆன்மா எனின், யான் உடம்பு என்று யாரேனும் சொல்லுகிறார்களா? அங்ஙனம் சொல்லும் வழக்கம் எக்காலத்திலும் இல்லை. எனது உடம்பு என உடம்பை உடைமைப் பொருளாகத்தான் சொல்லுகிறோம். இதனால் உடம்பிற்கு வேறாய் யான் எனப்படும் ஆன்மா உண்டு என்பது பெறப்படும்.

3. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளே புலன்களை அறிவன ஆதலின் அவைகளே அறிவாகிய ஆன்மாவாம் என்பர். இதுவும் பொருந்தாது. பொறிகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புலனை மட்டுமே அறியும்; ஏனை நான்கு புலன்களை அறியாது நிற்கும். அவை எப்படி ஆன்மாவாக முடியும்? ஐம்பொறிகளுக்கும் வேறாக இருந்து, அவ்ஐந்தையும் கருவியாகக் கொண்டு நான் கண்டேன், நான் கேட்டேன், நான் சுவைத்தேன் என இவ்வாறு ஐந்து புலன்களையும் அறிவதே ஆன்மாவாம்.

4. இனி, அகத்தே நிற்கும் சூக்கும தேகமே பொறிகளைச் செலுத்திப் புறப்பொருள்களை அறியும்; அதனால் அந்தச் சூக்கும தேகமே ஆன்மாவாம் என்பர்.

அவரது கூற்றும் பொருந்தாது. ஒருவன் சற்றுமுன் கண்ட ஒன்றை இப்பொழுது தெளிவாக நினைவு கூர்ந்து சொல்லுகிறான், அதில் அவனுக்குக் குழப்பமில்லை. சூக்கும தேகமே ஆன்மாவாயின் கனவை அறிந்த அதுவே விழித்த பின்பு அதனை மீள நினைவு கூர்கிறது. அங்ஙனமாயின் சற்று முன் கனவிற் கண்டதைக் கண்டவாறே தெளிவாய் அறிதல் வேண்டுமன்றிக் குழப்பமாக அறிதல் கூடாது. ஆனால் அன்றாட அனுபவத்தில் விழித்தெழுந்தபின் கனவு கண்டோமா இல்லையா, கனவில் இப்படிக் கண்டோமா அப்படிக் கண்டோமா என்றெல்லாம் குழம்பி அறிகிற நிலையே உள்ளது. இதனால் சூக்கும தேகம் ஆன்மா அன்று என்பது விளங்கும்.

சூக்கும தேகத்திற்கு வேறாய் இருந்து அறிகின்ற மற்றொன்று உள்ளது. அதுவே விழிப்பு நிலையில் தூல தேகத்தில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிகிறது. அத்தேகம் செயலாற்றுப் போனபோது அகத்தே சூக்கும தேகத்தைப் பொருந்திக் கனவு நிலையில் அகத்து நிகழ்ச்சிகளை அறிகிறது. பின் விழிப்பு வந்த காலை அது சூக்கும தேகத்தை விட்டு மீண்டும் தூலதேகத்திற்கு வருகிறது. இவ்வாறு இந்த இரண்டு உடம்பிற்கும் வேறாகிய ஆன்மாவே ஓரும்பை விட்டு மற்றோர் உடம்பைப் பற்றும்போது அந்த மாற்றத்தால் அத்தகைய குழப்பத்தை அடைகிறது. இதனால் ஆன்மா சூக்கும தேகத்தின் வேறாய் உள்ளது என்பது விளங்கும்.

5. பிராணவாயு (மூச்சுக்காற்று) வெளிச் சென்றும் உட்புகுந்தும் தொழிற்பட்டு ஏனைக் கருவிகளை இயக்கி அறியும் ஆகலின் அதுவே ஆன்மாவாம் என்பர். இதுவும் பொருந்தாத கூற்றே.

உறங்காத பொழுது புலன் நுகர்ச்சியும், உடம்பின் செயற்பாடும் நிகழ்கின்றன. அதற்குக் காரணம், கண் செவி முதலிய அறிகருவிகளும், வாக்கு பாதம் முதலிய செயற்கருவிகளும் இயங்குவதேயாகும். ஆனால் உறக்கத்தில் இவ்விருவகைக் கருவிகளும் இயங்காத காரணத்தால் புலனுகர்ச்சியும் உடம்பின் செயற்பாடும் இல்லையாகின்றன.

விழிப்பு நிலையில் அக்கருவிகளை இயக்கி நிற்பதும், உறக்கத்தில் அவற்றை இயக்காது மடிந்திருப்பதும் ஆகிய ஒன்று உள்ளது என்பது இதனால் விளங்குகிறது. அந்த ஒன்று எது? அது பிராண வாயுவாக இருக்க முடியாது. ஏனென்றால், அதுதான் விழிப்பு உறக்கம் ஆகிய எல்லா நிலையிலும் இயங்கிக் கொண்டிருக்கிறதே; ஒருபோதும் மடிந்திருப்பதில்லையே.

பிராணவாயு உறக்கத்திலும் சலியாது இயங்கிக் கொண்டிருக்கும்பொழுது கருவிகள் மட்டும் இயக்கமின்றி மடிந்திருக்கின்றன. பிராண வாயுவே ஆன்மாவாகிய தலைவன் என்றால், தலைவன் இயங்கிக் கொண்டிருக்க அத்தலைவனுக்குக் கீழ்ப்பட்ட கருவிகள் இப்படி மடிந்திருக்குமா? பிராணவாயு தலைவன் இல்லை என்பதை இதுவே காட்டவில்லையா?

எனவே உறங்காதபோது கருவிகளை இயக்கி நிற்பதும், உறக்கத்தில் அவற்றை இயக்காது மடிந்திருப்பதும் ஆகிய ஆன்மா பிராணவாயுவுக்கு வேறான ஒன்று என்பது தெளிவாகும்.

6. இனி அறிவாய் நிற்பது பிரமம் ஆதலின் அதனையே ஆன்மா என்றல் நிரம்பும் என ஏகான்மவாதிகள் கூறுவர். ஆன்மாவினது அறியும் தன்மைக்கும் பிரமத்தின் அறிவுநிலைக்கும் உள்ள வேறுபாட்டினை எடுத்துக்காட்டி, ஆன்மா பிரமத்தின் வேறாய் உள்ளது என நிறுவுகிறார் ஆசிரியர்.

ஆன்மா இயல்பிலே அறிவுடையதாயினும் எதனையும் தானே அறிய மாட்டாத தன்மையையுடையது. எப்பொருளை அறிவதற்கும் அதற்கு ஒரு துணை வேண்டும். துணைப் பொருள் அறிவிக்கவே ஆன்மா அறிவதாகும். துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா அறிவதாகும். துணையாகிய கருவிகள் உணர்த்தவே ஆன்மா உலகப் பொருள்களை உணர்கிறது; நல்லாசிரியரின் துணையைப் பெற்று அவர் அறிவுறுத்தியபோதே மெய்ப்பொருளை உணரவல்லதாகிறது. பிரமமே ஆன்மாவாயின், பிரமம் அறிவிக்கும் துணையைப் பெற்றே அறியும் என்றல்லவா ஆகிறது? இஃது எவ்வாற்றானும் பொருந்தாது. எனவே, அறிவித்தாலன்றி அறிய மாட்டாத ஆன்மா எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்கும் அப் பிரமத்தின் வேறாய் உள்ளது என்பது பெறப்படும்.

7. இனி, அனைத்துக் கருவிகளும் கூடிய கூட்டமே ஆன்மா என்பர் சிலர். அவர் கூற்றும் பொருந்தாது. கருவிகள் எல்லாம் சேர்ந்த தொகுதி உடம்பு ஆகுமே யன்றி ஆன்மாவாகாது. உடம்பு ஓர் இயந்திரம் போன்றது. உடம்பிலுள்ள கருவிகள் அவ்வியந்திரத்தின் உறுப்புக்கள் போன்றவை. உறுப்புக்கள் சீரான நிலையில் இருந்தாலும் இயந்திரம் தானே இயங்காது. அதனை இயக்குவோன் வேறாக இருந்து இயக்கவே இயங்கும். அதுபோல, உடம்பும் தன்னை இயக்குவதாகிய ஆன்மா வேறாக இருந்து செலுத்தவே செயற்படும். ஆதலால் உடம்பினுள் நின்று உடம்பை இயக்குகிற அறிவாகிய ஆன்மா சடமாகிய இக்கருவிகளின் கூட்டத்திற்கு வேறாய் உள்ளது என்பது விளங்கும்.

பதவுரை

இலது என்றலின் - ஆன்மா என்பதொன்று இல்லை என்று கூறும் போது, அங்ஙனம் ஆராய்ந்து கூறும் அறிவு ஒன்று இருத்தலின்

ஆன்மா உளது - அவ்வறிவே ஆன்மாவாம். ஆதலின் ஆன்மா சூனியம் ஆகாது அதனின் வேறாய் உள்ளதேயாம்.

(இது ஆன்மா சூனியம் என்பதை மறுத்தது.)

எனது உடல் என்றலின் - உடம்பை நான் உடம்பு என வழங்காமல் எனது உடம்பு என வேறாகக் குறிக்கின்ற வழக்கத்தினால்

ஆன்மா உளது - அங்ஙனம் குறிக்கின்ற ஆன்மா உடம்பு ஆகாது அதனின் வேறாய் உள்ளதாகும்.

(இது பருவுடம்பே ஆன்மா என்பதை மறுத்தது.)

ஐம்புலன் அறிதலின் - ஐம்பொறிகளுக்கு வேறாய் ஒரு பொருள் இருந்து அவ் ஐம்பொறிகளையும் கருவியாகக் கொண்டு ஓசை முதலிய ஐந்து புலன்களையும் அறிந்து வருதலால்

ஆன்மா உளது - அவ்வாறு அறிகின்ற அதுவே ஆன்மாவாம். (இது இந்திரியங்களே ஆன்மா என்பதை மறுத்தது)

ஒடுக்கம் அறிதலின் - ஐம்பொறிகளும் செயற்படாது ஒடுங்கி நின்ற கனவு நிலையில் நடந்தவற்றை விழித்தெழுந்த பின் தெளிவாக அறியமாட்டாது, கனவில் இப்படிக் கண்டோமா, அப்படிக் கண்டோமா எனப் பலவாறு குழம்பி அறிதலினால்

ஆன்மா உளது - அகத்தே சூக்கும தேகத்திற் புகுந்து கனவு அனுபவங்களை அடைந்தும், பின் விழிப்பு நிலையில் தூல தேகத்திற்கு வந்து கனவிற் கண்டவற்றை மறந்தும் மயங்கியும் நிற்பதாகிய ஆன்மா சூக்கும தேகத்திற்கு வேறாய் உள்ளது.

(இது சூக்கும தேகமே ஆன்மா என்பதை மறுத்தது.)

கண் படில் - உறக்கத்தில்

உண்டி, வினை இன்மையின் - இன்ப துன்ப நுகர்ச்சியும், வினையாகிய செயற்பாடும் நிகழாமையால்

ஆன்மா உளது - உறங்காத பொழுது நுகர்ச்சிக்கும், செயலுக்கும் உரிய கருவிகளை இயக்கி நிற்பதும், உறக்கத்தில் அக்கருவிகளை இயக்காது மடிந்திருப்பதும் ஆகிய ஆன்மா பிராணவாயுவுக்கு வேறாய் உள்ளது. (பிராண வாயு உறக்கத்தில் மடியாது இயங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் ஏனைக் கருவிகள் இயங்காது போதலை எண்ணினால், பிராணவாயு ஆன்மா அன்று என்பது புலனாகும்.)

(இது பிராண வாயுவே ஆன்மா என்பதை மறுத்தது)

உணர்த்த உணர்தலின் - தானே தனித்து நின்று ஒன்றை உணரும் தன்மையில்லாமல், அறிவிக்கும் கருவிகள் கூடி நின்று உணர்த்த உலகப் பொருள்களை உணர்ந்து வருதலினால்

ஆன்மா உளது - அங்ஙனம் அறிவித்தாலன்றி அறிய மாட்டாத ஆன்மா தானே அறியும் பேரறிவுப் பொருளாகிய பிரமத்தின் வேறாய் உள்ளது.

(இது பரம்பொருளாகிய பிரமமே ஆன்மா என்பதை மறுத்தது.)

மாயா இயந்திர தனுவினுள் - அனைத்துக் கருவிகளும் கூடிய கூட்டமும் உடம்பு எனப் பெயர் பெறுதலின்றி, ஆன்மா எனப் பெயர் பெறுதல் இல்லை. மாயா காரியமாகிய அக்கருவிகளால் கட்டி அமைக்கப்பட்ட இயந்திரம் போன்றுள்ள உடம்பின்கண்

ஆன்மா உளது - அறிவாகிய ஆன்மா சடமாகிய கருவிக் கூட்டத்திற்கு வேறாய் உள்ளது.

(இது கருவிக் கூட்டமாகிய சமூகமே ஆன்மா என்பதை மறுத்தது.)

சிறப்புரை

நூற்பாவின் இறுதியில் உள்ள ஆன்மா என்பதை எடுத்து முதலில் நிற்கும் உளது என்பதனோடு பொருத்திக் கொள்ள வேண்டும்.

இங்கு மறுக்கப்படும் கருத்துக்கள் ஏழு. அவற்றை மறுத்தற்குக் கூறும் ஏதுக்களும் ஏழாயின. அந்த ஏதுக்கள் ஒவ்வொன்றனோடும் ஆன்மா உளது என்பது சென்று இயையும்.

ஆன்மா உளது என ஒருமையாற் கூறினாரேனும் உடம்பு தோறும் வேறு வேறாய் எண்ணிறந்த ஆன்மாக்கள் உள்ளன என்பதே கருத்தாகும்.

மேற்கோளும் ஏதுவும் அமைந்துள்ள முறை:

ஏனைய நூற்பாக்களில் கூறுதோறும் மேற்கோள் வேறு வேறாய் இருத்தலைக் காணலாம். இந்நூற்பாவில் எல்லாக் கூறுகளிலும் மேற்கோள் ஒன்றேயாம். ஆன்மா வேறாய் உளது என்பதே அம் மேற்கோள்.

மேற்கோள் ஒன்றாயினும் மறுக்கப்படும் கருத்துக்கள் ஏழாயிருத்தலின் அவற்றை மறுத்தற்குக் கூறும் ஏதுக்கள் ஏழாயின.

ஏனை நூற்பாக்களில், மேற்கோளும் ஏதுவும் நூற்பாவின் கண் இல்லாமல் உரையிலேயே கொணர்ந்து கூறப்படும். இங்க அவ்வாறன்றி மேற்கோளுடன் ஏதுக்கள் நூற்பாவிலேயே சொல்லப்பட்டுள்ளன என்பதும் நோக்குதற்குரியது.

முதற் கூறு

சூனியான்மவாத மறுப்பு

ஆன்மா என்பதொன்று இல்லை எனக் கொள்பவர் பவுத்தர். அவருள் ஒரு பிரிவினர் பின் வருமாறு கூறுவர்; உலகில் யாதொரு பொருளும் உள்ளதன்று. எல்லாம் சூனியமே. அவை மயக்கத்தால் உள்ளன போல உணரப்படுகின்றன. அம்முறையில், ஆன்மா என்பதும் சூனியமே என்பர். அவர்கள் கூறுவது சூனியான்ம வாதம் எனப்படும். அதனை இம் முதற் கூறில் வைத்து மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

ஈண்டு இலது என்றலின் ஆன்மா உளது என்றது.

இதனை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

பொழிப்புரை

எவற்றினையும் அன்று அன்று என விட்டு ஆன்மா இலது என நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் - என்றது.

விளக்கம்

சூனியான்ம வாதம் கூறுவோர் பொறி, மனம் முதலியவற்றை ஒவ்வொன்றாகச் சுட்டி, இஃது ஆன்மாவா, இஃது ஆன்மாவா என வினவி, இவற்றுள் ஒன்றும் ஆன்மா ஆகாமையால் ஆன்மா இல்லை என்பதே முடிவு என்பர்.

அவர்தம் வாதத்தை மறுக்கின்றார் ஆசிரியர். ஆன்மா இலது என்னும் வழக்குரையே ஆன்மா உள்ளது என்பதை உணர்த்தும் என்கின்றார். எவ்வாறெனில், உடல் பொறி முதலியவற்றை எடுத்து ஆராய்ந்து, இஃது ஆன்மா அன்று என ஒவ்வொன்றாகக் கழித்த ஓர் அறிவு உள்ளதே அன்றோ? அவ்வறிவே ஆன்மாவாம் என நிறுவுகிறார். அவர்கள் கூறும் வழக்குரையே கொண்டு அவரை மறுத்துள்ள திறன் எண்ணி வியத்தற்குரியது.

எடுத்துக் காட்டு

வெண்பா

16. அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய்
நின்றொன்று உளது அதுவே நீ; அனைத்தும்- நின்றுஇன்று
தற்பணம்போல் காட்டலால் சார்மாயை நீயல்லை
தற் பரமும் அல்லை; தனி.

இதன் பொருள்:

உடம்பும் பொறியும் மனமும் முதலிய பொருள்கள் உயிரே எனும்படி ஒன்றி நிற்பவை. அவற்றை ஒவ்வொன்றாக இது நான் அன்று, இது நான் அன்று எனக் கண்டு அனைத்தையும் நீக்கி விட்டால் அங்ஙனம் நீக்கிய அறிவாய் ஒரு பொருள் எஞ்சி நிற்பது புலனாகும். அதுவே அஞ்செழுத்து வடிவாய் அனைத்தையும் அறிந்து வருவது. அங்ஙனம் புலனாகின்ற அந்த அறிவே நீ என உணர்வாயாக. ஆகவே நீ சூனியம் ஆகாய்

மாயையின் காரியங்களாகிய உடம்பு, ஐம்பொறிகள் முதலிய யாவும் கண்ணுக்குக் கண்ணாடி போல, தனித்து நின்று அறிய மாட்டாத உனக்குத் துணையாகி உன் அறிவை விளக்க வந்த கருவியேயன்றி அவை தாமே அறிவன அல்ல. கண் கண்ணாடியாகாது. அதுபோல நீ அம்மாயையின் காரியங்கள் ஆக மாட்டாய்.

மாயையின் துணையினால் அறிவு விளங்கப் பெற்று வரும் நீ, ஒரு துணையும் வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிபவனாய், அந்த மாயைக்கு அப்பாற்பட்டவனாய் உள்ள சிவமும் ஆக மாட்டாய்.

அவ்விரண்டும் இல்லையாயின் யான் யாது எனின். பதியாகிய சிவத்திற்கும் பாசமாகிய மாயா காரியங்களுக்கும் வேறாய் உள்ள ஒரு தனிப்பொருள் ஆவாய்.

பதவுரை:

அனைத்தும் நின்று - உடல், பொறி, மனம் முதலிய அனைத்திலும் அது அது தானாகவே நின்று

அன்று அன்று எனவிட்டு - பின்பு ஒவ்வொன்றாக இது நான் அன்று என்று கண்டு அவற்றினின்றும் நீங்கிய பின்னும்

அஞ்செழுத்தாய் நின்று ஒன்று உளது - சூக்கும பஞ்சாக்கரம் என்ப்படும் அந்த ஐந்தெழுத்தே தனது வடிவாய் நின்று, எல்லாவற்றையும் அறிந்து வந்த அறிவு நீங்காதே உள்ளது அன்றோ?

அதுவே நீ - அந்த அறிவே நீயாகும். (ஆதலால் நீ சூனியம் ஆகாய்)

அனைத்தும் - மாயையின் காரியங்கள் யாவும்

இன்று - இப்பெத்த காலத்தில்

தற்பணம் போல் நின்று - கண்ணுக்குக் கண்ணாடி போல உன்னோடு பொருந்தி நின்று

காட்டலால் - உனது அறிவை நிற்பனவேயன்றி அவை தாமே பொருள்களை அறிவனவல்லஆதலால்

சார் மாயை நீ அல்லை - நீ அம் மாயா காரியங்கள் ஆகமாட்டாய்

தற்பரமும் அல்லை - இனி அந்த மாயைக்கு அப்பாற்பட்டு நிற்கின்ற சிவமும் ஆகமாட்டாய்.

தனி - பதி, பாசம் என்னும் அவ்விரண்டின் வேறாகிய ஒரு தனிப்பொருள் ஆவாய் நீ.

விளக்கம்

அஞ்செழுத்து என்றது சூக்கும ஐந்தெழுத்தை. சூக்கும ஐந்தெழுத்தாவது நாதம் சுத்த மாயையினின்றும் தோன்றுவதாகிய நாதமே உயிரோடு நீங்காமல் ஒற்றித்து நின்று அதற்குப் பொருளுணர்வைத் தருவது. உயிர் நாதமே வடிவாய் நின்று அறிந்து வருதலின் அஞ்செழுத்தாய் ஒன்று உளது என்றார்.

உயிர் பதிக்கும் பாசத்திற்கும் வேறாகிய மூன்றாவதொரு பொருள் என்பது உணர்த்தப்பட்டது.

இரண்டாம் கூறு

தூலதேகான்ம வாத மறுப்பு:

அறிவு உடம்பினிடத்தேயன்றி வேறிடத்தில் காணப் பெறாமையால் பருவுடம்பே ஆன்மாவாம் என்பர். அவர் கூற்று தூலதேகான்ம வாதம் எனப்படும். மேலும், நான் மெலிந்தேன், நான் பருத்தேன் என்று தானே கூறுகிறோம். அவ்வழக்குகளில் நான் என்பது உடம்பைத் தானே குறிக்கிறது. ஆதலால் உடம்பே ஆன்மாவாம் எனக் காட்டுவர். அவர் கூற்றை இவ்விரண்டாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி, எனதுடல் என்றலின் ஆன்மா உளது- என்றது.

இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு.

பொழிப்புரை என் பதி, என் மனை என்றாற் போல, என் கை, என் கால் என நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம்- என்றது.

பொழிப்புரையின் விளக்கம்

பதி என்பது கணவனையும், மனை என்பது மனைவியையும் குறிக்கும். என் பதி என்று ஒருத்தி தன் கணவனைச் சொல்லுகிறாள். சொல்லுகிற அவள் வேறு, கணவன் வேறு என்பது சொல்லாமலே விளங்கும். என் மனை என்று ஒருவன் தன் மனைவியைக் குறிப்பிடுகிறான். குறிப்பிடுகிற அவன் அவளின் வேறானவன் என்பது வெளிப்படை.

என்பதி, என் மனை என்றாற் போன்றனவே என் கை, என் கால், என் உடம்பு என வழங்குவனவும்.

என் கைப்பட எழுதியது என்று உறுதி கூறுகிறோம்.

என் கால் தூசு பெறமாட்டான் என்று செருக்கிச் சொல்லுகிறோம்.

இதை உண்ண ஆசை. ஆனால் அதற்கு என் உடம்பு இடங்கொடுக்கவில்லையே என்று வருந்திச் சொல்லுகிறோம்.

இவ்வாறு என் கை, என் கால், என் உடம்பு எனச் சொல்லுகிற அறிவு அக்கை, கால், உடம்பு முதலியவற்றிற்கு வேறானது என்பது தெரிகிறது அல்லவா? அவ்வறிவே ஆன்மா ஆதலால், எனதுடல் என்ற வழக்கே ஆன்மா உடம்புக்கு வேறாய் உள்ளது என்பதைக் காட்டும்.

இனி, நான் மெலிந்தேன், நான் பருத்தேன் என்பவற்றில் நான் என்பது உடம்பையே குறித்தலால் உடம்பே ஆன்மா என வழக்கிடுவது பொருந்தாது. ஏனெனில், உயிர் உடம்பைச் சார்ந்து தான் வேறு அது வேறு என்றில்லாமல் தான் அதுவேயாய் ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அவ்வொற்றுமையால் உடம்பின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்கிறது. அது பற்றியே, உடம்பு மெலிவுற்றால் நான் மெலிந்தேன் என்கிறோம்; உடம்பு பருமையுற்றால் நான் பருத்தேன் என்கிறோம். எனவே அவற்றைக் காட்டி உடம்பே ஆன்மா என நிறுவ முயல்வது பொருந்தாது.

மேலும், உடம்பே ஆன்மாவாயின், நான் உடம்பு என்ற கூறுகின்ற வழக்கு ஓரிடத்திலேனும் உண்டா? அவ்வாறு எங்கும் கூறப்படுதல் இல்லை. என் உடம்பு என்றுதான் கூறி வருகிறோம். ஆதலின் எனதுடல் என்றலின் ஆன்மா வேறாய் உள்ளது என்பது பெறப்படும்.

எடுத்துக்காட்டு

வெண்பா

17. என்து என்ற மாட்டின் எனதலாது என்னாது
உனதலாத உன்கைகால் யாக்கை- எனது என்றும்
என் அறிவ தென்றும் உரைத்துநீ நிற்றிகாண்;
உன்னில் அவை வேறாம் உணர்.

இதன் பொருள்:

இயற்கையில் தனக்கு உரியதாகாமல் செயற்கையாய் இடையில் உரியதாகிய பொருளை எனதன்று என விட்டொழியாமல் எனது என்றே உரிமை பாராட்டி நிற்றலை உலகியலில் காணலாம்.

அதுபோல, இயற்கையில் உனக்கு உரியனவாகாமல் உன்னோடு இயைந்து நிற்கும் உனது கை, கால், உடம்பு முதலியவற்றை, அவை வேறு என்ற உண்மையை உணராமல், எனது என்றும், அவை போன்ற கருவிகள் தோற்றுவித்த அறிவையே என் அறிவு என்றும் கூறி அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றாய்.

உன் கை, கால், உடம்பு முதலியவற்றின் இயல்பை ஆராய்ந்து உணர்வாயாயின், அவை வேறாய் நீங்குவனவாம்.

பதவுரை

எனது அலாது என்னாது - இயற்கையில் உனக்கு உரியதாகாமல் செயற்கையாய் உன்னை வந்து பொருந்திய, உன்னின் வேறாகிய பொன், பொருள், மனைவி, மக்கள் முதலியவற்றை எனதன்று என்று எண்ணாமல்

எனது என்ற மாட்டின் - அவற்றோடு நீ ஒற்றுமைப்பட்டு நின்று எனது எனது என்றே உரிமை கூறி நிற்றலைப் போல

உனது அலாத - இயற்கையில் உன்னோடு ஒன்றாய் இல்லாது பின் ஒரு காலத்தில் உன்னோடு வந்து இயைந்து நிற்பனவாகிய

உன் கை கால் யாக்கை - உனது கை, கால், உடம்பு என்பவற்றை

எனது என்றும் - எனது எனது என்றும்

என் அறிவு என்றும் - அவை போன்ற கருவிகள் உன்னிடம் தோற்றுவித்த அறிவை எனது அறிவு என்றும்

உரைத்து நீ நிற்றி - (அவை வேறு என்ற உண்மையை உணராமல் அவற்றோடு ஒற்றுமைப்பட்டு நின்று) நீ கூறி வருகிறாய்

உன்னில் - கை, கால், உடம்பு முதலியவற்றின் இயல்பையும் உனது இயல்பையும் நீ ஆராய்ந்து உணரின்

அவை வேறாம் - அவை உனக்கு வேறேயாதல் விளங்கும்.

உணர் - ஆகவே நீ அவற்றின் இயல்பை உணர்வாயாக.

விளக்கம்

இவ்விடத்தில் திருமூலர் கூறிய கருத்து ஒன்றை எண்ணிப் பார்ப்போம்.

குயில் தனது முட்டையைக் கூட்டில் இட, காக்கை அதனைச் சிறிதும் வேறாக நினையாது தன் முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும்; சிறிது காலத்தில் அக் குஞ்சினைத் தன் குஞ்சு என்றே எண்ணி வளர்க்கும்.

அதுபோல இறைவன் உயிருக்கு உடம்பைக் கொடுத்தாற் பொருட்டு அவ்வுயிரைத் தாயின் கருவிலே இட, அத்தாய் அதனைச் சிறிதும் வேறாக நினையாமல், அதனைப் போக்கி விடவும் கருதாமல் பேணிக் காத்து வளர்ப்பது மயக்கத்தால் ஆகும் என்பார் அவர்.

காக்கையின் செயலைத் தாயின் செயலுக்கு உவமையாக்கினார் திருமூலர். அவ்வுவமை இவ்விடத்து உயிரின் செயலுக்குப் பொருந்துவதேயாம்.

காக்கை தனக்கு உரியதாகாத குயிலின் குஞ்சைத் தன் குஞ்சு என்றே கருதி வளர்த்தல் போல, உயிரும் தனதல்லாத உடம்பு முதலியவற்றை எனது எனது என்று பேணி வளர்த்து வருகிறது. காக்கைக்கு உண்மை தெரிந்தவுடன் அது குயிற் குஞ்சை அடித்துத் துரத்தி விடும். அதுபோல் உயிரும் உடம்பு முதலியவற்றின் உண்மையியல்பை ஆராய்ந்து உணரின், அவற்றை வேறாகக் கண்டு அவற்றின் தொடர்பை விட்டொழிக்கும் எனப் பொருத்திக் கொள்ளலாம்

மூன்றாம் கூறு

இந்திரியான்ம வாத மறுப்பு

உடம்பில் அமைந்துள்ள செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்னும் ஐம்பொறிகளே ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் ஆகிய புலன்களை அறிகின்றன. ஆதலால் அவைகளே அறிவாகிய ஆன்மாவாம் என்பர். இந்திரியங்களே ஆன்மா என்னும் அவர் கூற்று இந்திரியான்ம வாதம் எனப்படும். அதனை இம்மூன்றாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி, ஐம்புலன் அறிதலின் ஆன்மா உளது - என்றது.

இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

பொழிப்புரை

ஐம்புலனாகிய சத்தப் பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்தது ஒன்று அறியாமையின் இவ்வைந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.

விளக்கம்

ஐம்பொறிகள் ஐம்புலன்களை அறியுமாயினும், ஒரு பொறி அறிந்த புலனை மற்றொரு பொறி அறியமாட்டாது நிற்கிறது. ஓசையைச் செவி அறியுமேயன்றிக் கண் முதலியன அறியா என்பது கண்கூடு. மேலும் ஒவ்வொரு பொறியும் ஒவ்வொரு புலனை மட்டுமே அறியும். ஒவ்வொரு புலனை மட்டுமே அறிகின்ற இந்திரியங்கள் எப்படி ஆன்மாவாக இருக்க முடியும்?

இவ் ஐம்பொறிகளைக் கொண்டு ஐம்புலன்களையும் அறிவதாகிய ஒரு பொருள் உண்டு. யான் இன்ன பொருளைக் கண்டேன்; அதனைத் தொட்டேன்; அதனை மோந்தேன்; அதனை சுவைத்தேன் என இவ்வாறு ஒரு பொருளே ஐம்புலன்களையும் அறிவதாக அனுபவம் நிகழ்தலின் அவ்வொரு பொருளே ஆன்மாவாம்.

எடுத்துக்காட்ட

ு வெண்பா

18. ஒன்றறிந்தது ஒன்று அறியா தாகி உடல்மன்னி
அன்றும் புலன் ஆய் அவ் அஞ்செழுத்தை - ஒன்றறிதல்
உள்ளதே யாகில் அதுநீ; தனித்தனி கண்டு
உள்ளல் அவை ஒன்றல்லை ஓர்.

இதன் பொருள்:

ஐம்பொறிகளும் ஓர் உடம்பிலே நிலை பெற்று நின்று அறியும். ஒரு பொறி அறிந்த புலனை மற்றொரு பொறி அறியமாட்டாத இயல்பினை உடையதாகும்.

தம்முள் மாறுபட்ட சத்தம் முதலிய புலன்களை அறிகின்ற இவ்வைம் பொறிகளின் தொழிற்பாட்டினை அறிகின்ற ஒன்று உளதா? இல்லையா? கண் உருவத்தை யறிவது செவி ஓசையை அறிவது என இவ்வாறு அறிந்து நிற்கின்ற ஒன்று உள்ளதேயாகும்.

அவ்வாறு அறிவதும் ஐம்பொறியே எனக் கொண்டால் என்னை? எனில், ஐம்பொறிகள் தனித் தனியே ஒவ்வொரு புலனை இஃது ஓசை இஃது உருவம் என அறியும் அளவில் நிற்குமேயன்றி அதற்கு மேற் சென்று யான் ஓசையை அறிந்தேன். யான் உருவத்தை அறிந்தேன் எனத் தம் தொழிற்பாட்டினை அறியமாட்டா.

ஆதலால், இவ்வைம் பொறிகளைக் கொண்டு ஐம்புலன்களை அறிந்தும், அப்பொறிகளின் தொழிற்பாட்டினையும் அறிந்தும், அவற்றால் பயன்பெற்று நிற்கின்ற ஆன்மாவாகிய நீ அப்பொறிகளுக்கு வேறாவாய். இதனை ஆராய்ந்து அறிவாயாக.

பதவுரை:

உடல் மன்னி - (ஐந்து இந்திரியங்களும்) உடலில் நிலை பெற்று

ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி - ஓர் இந்திரியம் அறிந்த புலனை மற்றோர் இந்திரியம் அறியமாட்டாத இயல்பினை உடையதாகி நிற்கும்

அன்றும் - தம்முள் மாறுபட்ட

புலன் - ஓசை, உருவம் முதலிய புலன்களை

ஆய் - அறிகின்ற

அவ் அஞ்செழுத்தை - அவ் விந்திரியங்களின் தொழிற்பாட்டை

அறிதல் ஒன்று - அறிவதாகிய ஒரு பொருள்

உள்ளதேயாகில் - (அவ் விந்திரியங்களுக்கு வேறாக) உள்ளதேயாகலின்

அது நீ - அந்த ஒரு பொருளே நீயாகி ஆன்மா

அவை - அவ்விந்திரியங்கள்

தனித்தனி கண்டு உள்ளல் - புலன்களில் ஒவ்வொன்றை உணருமேயன்றி யான் ஓசையை உணர்வேன்; யான் உருவத்தை உணர்வேன் என இவ்வாறு தம் இயல்பை உணரமாட்டா ஆதலால்.

ஒன்று அல்லை - அவ்விந்திரியங்களால் உணரப்படும் புலன்களோடு, அவ்விந்திரியங்களின் இயல்பையும் நன்கு உணர்ந்து அவற்றால் பயன் எய்தி வருகின்ற நீ அவ்விந்திரியங்கள் ஆகாய்; அவற்றின் வேறாவாய்.

ஓர் - இதனை ஆராய்ந்து உணர்வாயாக

(இந்திரியங்கள் ஆன்மா அல்ல; அவை வேறாக இருந்து ஆன்மாவை மயக்குகின்றன. ஆன்மா அவற்றின் வேறாக இருந்தும் அதனை உணராமல் அவையே தானாகக் கருதி அவை காட்டும் புலன்களின் வயப்பட்டு மயங்குகின்றது. ஆன்மா தன்னை வேறாகக் கண்டு தனது உண்மையை உணர்தலே ஆன்ம ஞானம் ஆகும்.)

விளக்கம்

அஞ்செழுத்து என்றது சூக்கும ஐந்தெழுத்தாகும். அவை அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்பன. அவற்றால் செலுத்தப்படுவன இந்திரியங்கள். அவ்வொற்றுமை பற்றி, இந்திரியங்களின் தொழிற்பாட்டினை அஞ்செழுத்து என்றே குறித்தார்.

நான்காம் கூறு

சூக்கும தேகான்ம வாத மறுப்பு

புறத்தே புலப்படாமல் அகத்தில் நிற்பதாகிய சூக்கும தேகமே ஐம்பொறிகளைச் செலுத்திப் புறப்பொருள்களை அறியும். ஆகையால் சூக்கும தேகமே ஆன்மா என்று கூறுவர். அவர் கூற்று சூக்கும தேகான்ம வாதம் எனப்படும். அதனை இந் நான்காம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி ஒடுக்கம் அறிதலின் ஆன்மா உளது என்றது. இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு:

பொழிப்புரை

நனவின்கண் கனவு கண்டாம் என்றும் கண்டிலம் என்றும் நிற்பது
உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது.

விளக்கம்:

ஏதுவில் உள்ள ஒடுக்கம் என்பது ஐம்பொறிகளும் செயற்படாமல் ஒடுங்கி நிற்கும் கனவு நிலையைக் குறிப்பதாகும். ஒடுக்கம் அறிதல் என்பதன் பொருளைப் பொழிப்புரையில் சுட்டுகிறார் ஆசிரியர்.

விழித்தெழுந்தபோது சற்று முன் கண்ட கனவை நம்மால் தெளிவாக அறிந்து சொல்ல முடிவதில்லை. கனவு கண்டோமா என்பது குறித்தே சிலருக்கு ஐயம் தோன்றும். பலர் என்ன கனவு கண்டோம் என்பதை அறியாது மயங்கி நிற்பர். கனவில் இப்படி நடந்ததா, அப்படி நடந்ததா என்று சொல்லத் தெரியாமல் திகைப்பர் பலர். இவ்வாறு கனவைக் குழப்பமாக அறிதலையே ஆசிரியர் சுட்டுகிறார்.

சற்று முன்பு நடந்த நிகழ்ச்சியொன்றை அறிந்த நாம் சற்று நேரம் கழித்த பின்பும் அதனைக் குழப்பமின்றி நினைவு கூர்ந்து சொல்ல முடிகிறது. அதுபோல, சூக்கும தேகமே ஆன்மாவாயின் கனவிலே சற்று முன் கண்டவற்றை விழித்த பின்பும் தெளிவாக அறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு தெளிவாக அறிந்து சொல்ல இயலாமையினால் சூக்கும தேகம் ஆன்மாவன்று என்பது புலனாகும்.

இனி, கண்ட கனவைத் தெளிவாக அறிந்து சொல்ல இயலாமைக்கு என்ன காரணம் எனில், ஆன்மா என்பது பருவுடம்பு, சூக்குமவுடம்பு ஆகிய இரண்டுக்கும் வேறாய் உள்ளது. விழிப்பு நிலையில் அது பருவுடம்பில் நின்று புறத்து நிகழ்ச்சிகளை அறிகிறது. கனவு நிலையில் அப்பருவுடம்பு செயலற்றுக் கிடக்க, ஆன்மா அகத்தேயுள்ள சூக்கும வுடம்போடு கூடி நின்று அகத்து நிகழ்ச்சிகளை அறிகிறது.

பின் விழிப்பு ஏற்படும்பொழுது ஆன்மா சூக்கும வுடம்பை விட்டுப் பருவுடம்பிற் சென்றடைவதால் அவ்வுடல் அது சூக்கும வுடம்பில் நின்று கண்டவற்றை மறந்து விடுகிறது; அல்லது இப்படிக் கண்டோமா அப்படிக் கண்டோமா என்று குழம்பி நிற்கிறது.

ஆகவே ஆன்மா சூக்கம தேகத்தின் வேறாய் உள்ளது என்பது தெளிவாகும்.

எடுத்துக் காட்டு

வெண்பா

19. அவ்வுடலின் நின்று உயிர்ப்ப ஐம்பொறிகள் தாம்கிடப்ப
செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி- அவ்வுடலின்
வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை
மாறல் உடல் நீயல்லை மற்று.

இதன் பொருள்:

பருவுடம்பில் நின்று செயற்படுவனவாகிய ஐம்பொறிகள் செயலற்றுக் கிடக்க, அந்தப் பருவுடம்பிற்கு உள்ளே சென்று வேறோர் உடம்பாகிய சூக்கும தேகத்தை எடுத்துக்கொண்டு, அகத்து நிகழும் கனவு நிகழ்ச்சிகளில் திளைத்து, மீண்டும் அவ்வுடலை விட்டு மாறிப் பருவுடம்பை அடைதலால் நீ சூக்கும தேகம் ஆகாய்.

பதவுரை:

அவ்வுடலின் நின்று உயிர்ப்ப - முன்பு ஆன்மா அன்று என விலக்கப்பட்ட அந்தப் பருவுடம்பில் நின்று செயற்படுவனவாகிய

ஐம்பொறிகள் - ஐம்பொறிகள்

தாம் கிடப்ப - தாம் செயலற்றுக் கிடக்க

அடங்கி - அதனால் புறச்செயல் ஏதும் நிகழாது அடங்கப் பெற்று

செவ்விதின் - இயல்பாக

அவ்வுடலிற் சென்று - அப்பருவுடம்பிற்கு உள்ளே சென்று

அவ்வுடலின் வேறொன்று கொண்டு - அந்தப் பருவுடம்பைப் போல வேறோர் உடம்பை (சூக்கும தேகத்தை) எடுத்துக் கொண்டு

விளையாடி - கனவு நிகழ்ச்சிகளில் திளைத்து

மீண்டு அதனை மாறல் - மீண்டும் அந்தச் சூக்கும தேகத்தை விட்டு மாறிப் பருவுடம்பை அடைதலால்

நீ உடல் அல்லை - நீ பற்றியும் விடுத்தும் செல்லுகின்ற அவ்வுடம்புகளுள் ஒன்றாகிய சூக்கும தேகம் ஆகமாட்டாய்.

மற்று - அதனின் வேறு ஆவாய்.

ஐந்தாம் கூறு

பிராணான்ம வாத மறுப்பு:

பிராண வாயுவின் இயக்கத்தை வைத்தே உயிர் உண்டு என்று சொல்கிறார்கள்; பிராண வாயுவின் இயக்கம் நின்று போனால் உயிர் போயிற்று என்கிறார்கள். இது பற்றியே பிராண வாயுவே உயிர் என்னும் கருத்து ஏற்படலாயிற்று. அக்கருத்தினை உடையோர் பின் வருமாறு கூறுவர்.

விழிப்பு நிலையிலும், கனவு நிலையிலும், அதனைக் கடந்து உறக்க நிலையிலும் பிராணவாயுவே தொழிற்பட்டு நிற்பது. ஆதலால் அதுவே ஏனைக் கருவிகளை இயக்கி, அந்நிலைகளில் நிகழ்ந்தனவற்றை அறிந்து இன்பத் துன்பங்களை எய்தும் ஆன்மாவாம் என்பர். அவர் கூற்றுப் பிராணான்ம வாதம் எனப்படும். அதனை இவ்வைந்தாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனிக் கண்படில் உண்டி, வினை இன்மையின் ஆன்மா உளது- என்றது.
இதன் பொருளை விளக்கிப் பின் வருமாறு பொழிப்புரை செய்கின்றார் ஆசிரியர்.

பொழிப்புரை

ஒடுங்கின இடத்து இன்பத்துன்பம், சீவனம் பிரகிருதிக்கு இன்மையின், ஒடுங்காத இடத்து இன்பத்துன்பம், சீவியா நிற்பது உளது ஆகலின், அதுவே அவ்வான்மாவாம் என்றது.

விளக்கம்

உறங்குங் காலத்தில் ஓசை முதலிய புலன்களை அறிந்து அனுபவித்தல் ஆகிய புலன் நுகர்ச்சி இல்லை; கொடுத்தல், நடத்தல் முதலிய செயற்பாடுகள் உடம்பின்கண் இல்லை. உறங்காத விழிப்புக் காலத்தில் புலன் நுகர்ச்சி, உடம்பின் செயற்பாடு ஆகிய இரண்டும் நிகழ்கின்றன.

இதனால் ஓர் உண்மை புலனாகிறது. உறங்காத காலத்தில் ஓசை முதலிய புலன்களை அறிவனவாகிய செவி முதலிய அறி கருவிகளையும், கொடுத்தல், நடத்தல் முதலியவற்றைச் செய்வன வாகிய கை, கால் முதலிய செயற் கருவிகளையும் இயக்கி நிற்கின்ற ஒன்று உறங்குங் காலத்தில் அவற்றை இயக்காமல் மடிந்திருக்கிறது என்பது புலனாகிறது. அவ்வாறு ஒடுங்காதும், ஒடுங்கியும் நிற்பதாகிய அந்த ஒன்று எது? அதுவே ஆன்மாவாம்.

பிராண வாயுவே ஆன்மாவாயின், விழிப்பிற் போலவே உறக்கத்திலும் அஃது இயங்கிக் கொண்டிருப்பதால், விழிப்பில் நிகழ்கின்ற புலன் நுகர்ச்சியும் உடம்பின் செயற்பாடுகளும் உறக்கத்திலும் நிகழ்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமையால் பிராண வாயு ஆன்மா அன்று என்பதாம்.

பொழிப்புரையில் பிரகிருதி என்றது பருவுடம்பைக் குறிக்கும். சீவனம், சீவியா நிற்பது என்ற சொற்கள் இரண்டும் இயங்கி நிற்றல் என்ற பொருளில் வந்தன.

எடுத்துக் காட்டு

வெண்பா

20. கண்டறியும் இவ்வுடலே காட்டு ஒடுங்கக் காணாதே
உண்டி வினை யின்றி உயிர்த்தலால் - கண்டறியும்
உள்ளம்வேறு உண்டு; ஆய்; ஒடுங்காது உடல் நண்ணில்
உள்ளதாம் உண்டி வினை ஊன்.

இதன் பொருள்:

உறக்கத்தில், அறிதற்குக் கருவியாய் உள்ளவை செயற்படாமல் ஒடுங்கி நிற்க, அதனால் புலன் நுகர்ச்சியும் உடம்பிற்குச் செயற்பாடும் இல்லாது போக, பிராண வாயு மட்டும் இயங்கிய வண்ணம் இருக்கிறது.

பிராணவாயு இருக்கவும் அக்கருவிகள் செயலற்று மடிவதால், அக்கருவிகளைச் செயற்படுத்துவது பிராண வாயு அன்று என்பது விளங்கும். அக்கருவிகளைச் செயற்படுத்துகின்ற வேறொன்று உளது என்பதும், அஃது உறக்கத்தில் ஒடுங்கின மையால் அக்கருவிகளும் செயலற்றுப் போயின என்பதும் புலனாகும். அதுவே உயிராம்.

அவ்வுயிர் ஒடுங்கிய நிலையினின்றும் மீண்டு உடம்பில் பொருந்துமாயின் முன் போலப் புலன் நுகர்ச்சியும் கருவிகளின் இயக்கமும் உடம்பின்கண் நிகழ்வனவாம்.

ஆகவே, எல்லாவற்றையும் கண்டறிதற்கு உரிய உயிர் அந்தப் பிராண வாயுவுக்கு வேறாய் உண்டு. அதனை நீ ஆராய்ந்து உணர்வாயாக.

பதவுரை:

கண்டறியும் இவ்வுடலே - புறப் பொருள்களைக் கண்டறிதற்கு இடமாகிய இவ்வுடம்பின்கண்

காட்டு - கண்டறிதற்குக் கருவியாய் உள்ளவை

காணாதே ஒடுங்க - உறக்கத்தில் செயற்படாமல் ஒடுங்கிப் போகவும்

உண்டி வினை - அதனால் உடம்பில் புலன் நுகர்ச்சியும் யாதொரு இயக்கமும்

இன்றி - இல்லாமற் போகவும்

உயிர்த்தலால் - பிராணவாயு ஒழியாமல் இயங்குகிறது. ஆதலால் (உறக்கத்தில் பிராணவாயு இயங்கவும், கருவிகள் செயற்படாமல் ஒடுங்குதலால் அக்கருவிகளை இயக்குவது பிராணவாயு அன்று என்பது விளங்கும்)

கண்டறியும் உள்ளம் வேறு உண்டு - எல்லாவற்றையும் கண்டறிவதாகிய ஆன்மா அந்தப் பிராண வாயுவுக்கு வேறாய் உண்டு (கருவிகளை இயக்குவதாகிய அவ்வான்மா உறக்கத்தில் ஒடுங்கினமையால் அக்கருவிகள் செயற்படாமலும், உடம்பில் புலன் நுகர்ச்சியும் இயக்கமும் இல்லாமலும் போயின.)

டுங்காது உடல் நண்ணில் - அவ்வான்மா ஒடுங்கிய நிலையினின்றும் மீண்டு உடம்பிற் பொருந்துமாயின்.

ஊண் - (முன்போல) உடம்பின் கண்

உண்டி வினை உள்ளதாம் - புலன் நுகர்ச்சியும் இயக்கமும் உளதாகும்.

ஆய் - இதனை நீ ஆராய்ந்து உணர்வாயாக.

ஆறாம் கூறு

பிரமான்ம வாத மறுப்பு:

பருவுடம்பு, ஐம்பொறி, நுண்ணுடம்பு, பிராண வாயு முதலிய யாவும் அறிவற்ற சடம் ஆதலின் அவற்றுள் ஒவ்வொன்றை ஆன்மா என்றல் பொருந்தாது. ஆயின் பரம்பொருளாகிய பிரமம் அறிவாய் நிற்பது ஆதலின் அதுவே ஆன்மாவாம் என்பர்.

பிரமமே ஆன்மா என்னும் அவர் கூற்று பிரமான்ம வாதம் எனப்படும். பிரமம் பேரறிவு எனக் கூறி, அவ்வறிவே ஆன்மா என்பதனால் விஞ்ஞானான்ம வாதம் என்றும் சொல்லப் பெறும். விஞ்ஞானம் - பேரறிவு; அவ்வாதத்தை இவ் ஆறாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோளும் ஏதுவும்

இனி, உணர்த்த உணர்தலின் ஆன்மா உளது- என்றது. இதன் பொருளை விளக்கி ஆசிரியர் செய்த பொழிப்புரை வருமாறு.

பொழிப்புரை:

அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின், அதுவே அவ்வான்மாவாம்- என்றது.

விளக்கம்:

உயிர் விழிப்பு நிலையில் அறிகருவிகள், தொழிற் கருவிகள் முதலிய பலவற்றோடும் கூடி நின்று அறிவு விளங்கப் பெற்று வரும். விழிப்பு நிலையிலிருந்து கனவு, உறக்கம் முதலிய நிலைகளுக்குச் செல்லும்போது அவ்வக் கருவிகள் செயற்படாது போக, அறிவு குறைந்து துரியாதீதம் என்னும் உயிர்ப்பு அடங்கிய நிலையில் கருவிகள் எல்லாம் ஒடுங்கிப் போதலின் அறிவேயின்றிக் கிடக்கின்றது. பின் மீண்டும் அந்தந்தக் கருவிகள் கூடி அறிவிக்க அறிந்து வருகிறது.

இவ்வாறு அறிவிக்கும் கருவிகள் உள்ளபொழுது அறிவுடையதாயும், அவையில்லாதபொழுது அறிவின்றியும் நிற்றல் உயிரின் இயல்பாகும்.

பிரமப் பொருளோ பேரறிவு ஆதலின் அஃது எக்காலத்தும் எல்லாவற்றையும் தானே அறிந்து நிற்பது. அது கருவிகளின் துணையைப் பெற்றே அறியும் என்பது எவ்வகையிலும் பொருந்தாது.

ஆதலால், கருவிகள் உணர்த்த உணர்வதாகிய ஆன்மா அப்பிரமத்தின் வேறாய் இருத்தல் விளங்கும். இதுவரை கூறியது நூற்பாவில் உள்ள தொடரின் கருத்தாகும்.

இதற்குப் பிரமான்ம வாதிகள் பின்வருமாறு விடை கூறுவர்; பிரமம் தன் நிலையில் தானே எல்லாவற்றையும் அறியுமாயினும், அஞ்ஞானத்தின் வசப்பட்டுப் பந்தம் உற்றமையால் தனக்கு அறிவிக்கும் கருவிகளைப் பெற்று அறிவதாயிற்று. அதுபற்றி, பிரமமே ஆன்மா எனக் கொள்வதற்கு இழுக்கில்லை என்பர்.

பேரறிவாகிய பிரமம் அறியாமையுட்படுமா? பிரமத்தை அறியாமை பற்றியது என்றால் ஒளிமயமாகிய சூரியனை இருள் பற்றியது என்று சொல்வதற்கு ஒப்பாகும் என்று இவ்வாறு கூறி அவர் கூற்றை மறுத்துவிடலாம். ஆசிரியர் அவ்வாறு செய்யவில்லை. வாதத்திற்காக அவர்கள் கூறுவதை- அஃதாவது, பிரமம் அறியாமை வயப்பட்டது என்பதை உடன்பட்டு, அப்பொழுதும் அவர் கூற்றுப் பொருந்தாது போதலைப் பொழிப்புரையில் காட்டுகிறார்.

அவர்கள்கூற்றுப்படி பிரமம் அறிவிக்கும் கருவிகளைப் பெற்று அறிவதாயிற்று என்றே கொண்டாலும், அஃது ஐம்புல விடயங்களை மட்டுமே அறிகிறது. தன்னியல்பை அறியமாட்டாது நிற்கிறது. நல்லாசிரியர் தோன்றி மெய்ப்பொருளின் இயல்பை அறிவுறுத்த அவ்வுபதேசத்தைப் பெற்ற பின்பு அது தன்னியல்பை அறிவதாகிறது. இவையெல்லாம் பிரமத்திற்கு ஏற்குமோ?

பேரறிவுடைய பிரமத்திற்கு வேறாகச் சிற்றறிவுடைய ஆன்மாவே ஆசிரியரின் அருளுரையைப் பெற்றுத் தன்னியல்பை அறிகிறது என்று கொள்வதே பொருத்தமாகும்.

ஆன்மா பொருள்களை ஒவ்வொன்றாகவே அறியும்; அவ்வாறு அறிந்தவற்றையும் மறந்து, மீள அறிந்து வரும். பிரமம் அவ்வாறின்றி எல்லாவற்றையும் ஒருங்கே இடைவிடாமல் அறிந்து நிற்கும் பேரறிவுடையது என்று இவ்வாறு ஆசிரியர் அறிவுறுத்த, அவ்வுபதேசத்தைப் பெற்றுத் தன்னியல்பை அறிவதாகிய ஆன்மா பிரமத்திற்கு வேறாய் உள்ளது என்று பொழிப்புரையில் கூறுகிறார் ஆசிரியர்.

உயிர் அறியும் தன்மையை விளக்குவாராய் எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக் காட்டு

வெண்பா

21. அறிந்தும் அறிவதே யாயும் அறியாது
அறிந்ததையும் விட்டுஅங்கு அடங்கி- அறிந்தது
எது அறிவும் அன்றாகும்; மெய்கண்டான் ஒன்றின்
அதுஅது தான் என்னும் அகம்.

இதன் பொருள்:

ஒரு காலத்தில் ஒரு பொருளையே அறிந்தும், மற்றொரு காலத்தில் மற்றொரு பொருளை அறிய முற்பட்டும், முன்பு அறிந்ததைப் பின்பு மறந்தும், ஒன்றை அறியும் போதும் இடைவிடாமல் தொடர்ச்சியாய் அறியமாட்டாது பற்றியும் விட்டும், பற்றியும் விட்டும் இவ்வாறு வேறுபட்ட பல வகையில் திரிபுற்று அறிந்து வரும் பொருள் எல்லாவற்றையும் தானே இயல்பாக ஒருங்கே அறிவதாகிய பிரமப் பொருளாயிருத்தல் கூடாது அன்றோ?

அப்பொருள் யாது எனச் சித்தாந்த உண்மையை உணர்ந்தோன் மனம் ஒன்றி ஆராய்வனாயின், அறியப்படும் பொருளின் வேறு நில்லாது, அது அதுவே தானாய் அதன்கண் அழுந்தி நின்று அறிவதாகிய ஆன்மா என்பது புலனாகும்.

பதவுரை

அறிந்தும் - ஒரு காலத்தில் ஒரு பொருளை மட்டுமே அறிந்தும்

அறிவதேயாயும் - மற்றொரு காலத்தில் மற்றொரு பொருளை அறிய இருப்பதாயும்

அறியாது - முன்பு அறிந்ததைப் பின்பு மறந்தும்

அறிந்ததையும் விட்டு - ஒன்றை அறிந்த காலத்தில் அதனை இடை விடாது தொடர்ச்சியாய் அறியமாட்டாது, பற்றியும் விட்டும் பற்றியும் விட்டும் அறிந்தும்

அங்கு அடங்கி - அறியப்பட்ட பொருளின் வேறாக நில்லாது அதனிடத்தில் அழுந்தியும்

அறிந்தது எது- இவ்வாறு அறிந்து வருகின்ற பொருள் யாது எனில்

அறிவும் அன்றாகும் - எல்லாவற்றையும் தானே இயல்பாக ஒருங்கே அறிவதாகிய பேரறிவுப் பொருளான பிரம்மமாக இருத்தல் இயலாது.

மெய்கண்டான் ஒன்றின் - சித்தாந்த நெறியை உணர்ந்தோன் மனம் ஒன்றி ஆராய்வானாயின்

அது அது தான் என்னும் அகம் - எந்தப் பொருளையும் அது அதுவே தானாய்ச் சார்ந்ததன் வண்ணமாய் நின்று அறிவதாகிய ஆன்மாவாம் என்பது புலனாகும்.

(எனவே பிரம்மமே அவிச்சையுட்பட்டு ஆன்மாவாய் நிற்கும் என்றல் பொருந்தாவுரையாம்.)

விளக்கம்

பிரமான்மவாதிகள் இங்கே மறுக்கப்படுகின்றனர். பிரமம் தானே அறிதலாகிய தன்னியல்பு உடையது. அஃது அறியாமையின் வயப்பட்டமையால் அத்தன்னியல்பு நீங்கிக் கருவிகள் அறிவிக்கவே அறிவதாயிற்று என்று அவர்கள் கூறுவதை முன்னரே பார்த்தோம்.

தானே அறியமாட்டமைக்கு அஞ்ஞானம் காரணம் என்பது ஒருவாறு பொருந்தும். ஆனால், ஒவ்வொன்றாகவே அறிதல், அறிவதையும் விட்டு விட்டு அறிதல், அறியப்படும் பொருளில் அழுந்தி அது அதுவாய் நின்று அறிதல் ஆகியவற்றிற்கும் அறியாமையே காரணம் என்றல் பொருந்தாது.

அறியாமையின் விளைவாய் அறிய முடியாது நிற்றலும், மயங்கி அறிதலும் நிகழுமேயன்றி ஒன்றொன்றாய் அறிதலும் விட்டுவிட்டு அறிதலும் நிகழாவாம். ஆதலால் இவையெல்லாம் உயிரின் அறிவிற்கு இயற்கையாய் உள்ள தன்மை என்பது புலனாகும்.

எல்லாவற்றையும் ஒரு காலத்திலே ஒருங்கே இடையீடின்றி அறிந்து நிற்பது பிரமத்தின் தன்மையும், மேற்கூறியவாறு அறிவது ஆன்மாவின் தன்மையும் ஆகும். அவ்வாறாகவே, பிரமம் பேரறிவுடைய பெரும் பொருள் என்பதும், ஆன்மா அதன் வழி நிற்றற்குரிய சிறு பொருள் என்பதும் விளங்கும், விளங்கவே ஆன்மா பிரமம் ஆகாது அதனின் வேறாய் உள்ளது என்பது துணியப்படும்.

இதுகாறும் விளக்கி வந்த பிரமத்தின் இயல்பையும், ஆன்மாவின் இயல்பையும் பின்வருமாறு நிரல்படுத்தி நினைவிற் கொள்ளலாம்.

பிரமத்தின் இயல்பு ஆன்மாவின் இயல்பு

1. தானே அறிவது 1. அறிவிக்க அறிவது
2. ஒருங்கே அறிவது 2. ஒவ்வொன்றாகவே அறிவது
3. இடைவிடாது அறிவது 3. விட்டு விட்டு அறிவது
4. அழுந்தாது அறிவது 4. அழுந்தி அறிவது

ஆன்மா விட்டு விட்டு அறிதல் நான்காம் நூற்பாவிலும் அழுந்தி நின்றறிதல் ஏழாம் நூற்பாவிலும் கூறப்படும்.

வடமொழியில் உயிரைப் படர்க்கையில் வைத்துக் கூறும் போது ஆன்மா எனவும், தன்மையில் வைத்துக் கூறுங்கால் அகம் எனவும் வழங்குவர். எனவே, தன்மை பற்றி இங்கு உயிரை அகம் என்றார்.

ஏழாம் கூறு

சமூகான்ம வாத மறுப்பு:

பருவுடம்பு முதலியவற்றுள் ஒன்று செயற்படாது நிற்பினும் அறிவு செம்மையாக நிகழாது, அனைத்தும் ஒருங்கே கூடிச் செயற்படும் போதுதான் அறிவு நிகழ்கிறது. ஆதலால் அவை அனைத்தும் ஒருங்கு கூடிய கூட்டமே ஆன்மாவாம் என்பர். அவர் கூற்று சமூகான்ம வாதம் எனப்படும். அதனை இவ் ஏழாம் கூறில் மறுக்கின்றார் ஆசிரியர்.

மேற்கோள்

இனி, மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா உளது- என்றது. இது நூற்பாவில் உள்ள தொடர்.

ஏது

அவைதாம் வெவ்வேறு பெயர் பெற்று நிற்றலான்.

விளக்கம்

மேற்கோளில், ஆன்மாவுக்கு இடமாகிய உடம்பினை மாயா இயந்திர தனு என அடைமொழி சேர்த்துக் கூறினார். உடம்பு ஓர் இயந்திரம் போன்றது. இயந்திரத்தில் பல உறுப்புக்கள் அமைந்திருப்பது போல மாயை என்னும் பொருளால் ஆக்கப் பெற்ற இவ்வுடம்பிலும் பல உறுப்புக்கள் பொருந்தியுள்ளன. உறுப்புக்கள் எல்லாம் நல்ல நிலையில் இருந்தால்தான் இயந்திரமும் இயங்கும்; உடம்பும் இயங்கும்.

இனி, அனைத்து உறுப்புக்களும் சீராக அமைந்திருந்தாலும் இயந்திரம் தானே ஒரு குறிப்பிட்ட முறையில் இயங்காது. அதனை நெறிப்படுத்திச் செலுத்துவதற்கு இயக்குபவன் ஒருவன் இருத்தல் வேண்டும். அவன் இயக்கிய வழியிலே இயந்திரமும் இயங்குவதாகும். அதுபோல உடம்பும் தன்னை இயக்குபவனாகிய உயிர் வேறிருந்து செலுத்த, அந்நெறியிலே இயங்குவதாகும். ஆதலால் அனைத்து உறுப்புக்களின் தொகுதியே ஆன்மா என்றல் பொருந்தாது. அவற்றையெல்லாம் இயக்கி நிற்பதாகிய ஒன்றே ஆன்மாவாம் என உவமையில் வைத்துக் குறிப்பாய் உணர்த்தியுள்ளார் ஆசிரியர்.

சமூகான்மவாதிகள் இதனைப் பின்வருமாறு மறுப்பர். இயந்திரத்தை இயக்குபவன் ஒருவன் இருத்தல் காட்சியினாலே புலப்படுகிறது. உடம்பை இயக்குவது ஒன்று இருப்பது அவ்வாறு புலப்படவில்லை. அனைத்து உறுப்புக்களின் தொகுதிக்கு வேறாய் ஆன்மா என ஒன்று உண்டு என்று துணிவதற்கு இங்குக் காட்டிய உவமை அமையாது எனக் கூறுவர். அதுபற்றி வேறோர் ஏதுவை வெளிப்படையாகக் கூறி அவர் கருத்தை மறுக்கின்றார், அவைதான் வெவ்வேறு பெயர் பெற்று நிற்றலான் என மேற்காட்டியதே அவ்வெளிப்படை ஏது.

அவர்கள் கூறும் அனைத்துறுப்புக்களின் தொகுதியில் உள்ள ஒவ்வொன்றும் வேறு வேறு பெயரைப் பெற்று நிற்கின்றன. அவற்றுள் ஒன்றாயினும் உயிர் என்னும் பெயரைப் பெறவில்லை. ஆதலால் உயிர் என்னும் பொருள் அவை அனைத்திற்கும் வேறாதல் விளங்கும் என்பதாம்.

இனி, கருவிகள் காரியங்கள் ஆதலின் அவை நிலைபேறு உடையன அல்ல. ஆதலால் அவை என்றும் உள்ளதாகிய ஆன்மா ஆகமாட்டா என்பதை வலியுறுத்தி எடுத்துக்காட்டுக் கூறுகின்றார்.

எடுத்துக்காட்டு

வெண்பா

22. கலையாதி மண் அந்தம் காணில் அவை மாயை
நிலையாவாம்; தீபமே போல- அலையாமல்
ஞானத்தை முன் உணர்ந்து நாடில் அது தனுவாம்;
தான் அத்தின் வேறாகும் தான்.

இதன் பொருள்:

நீ கூறும் தொகுதியில் உள்ள பொருள்கள் கலை முதல் நிலம் ஈறாகச் சொல்லப்படும் பெயர்களை உடையனவாம். அவை மாயையின் காரியங்களாகும். ஆதலால் நிலையில்லாதனவாகும். அவற்றின் இயல்பை ஆராய்ந்தால், அவை கண்ணொளியை விளங்கச் செய்கின்ற விளக்குப் போல உயிரினது அறிவை விளக்க வந்த உடம்பேயாம் என்பது விளங்கும். விளக்கொளியால் விளங்கிப் பொருளைக் காணும் கண் போன்றது ஆன்மா என்பதும் புலனாகும். ஆதலால் ஆன்மா, உடம்பாய் நிற்கின்ற அத்தொகுதியின் வேறாம்.

அனைத்து உறுப்புக்களும் ஒருங்கு கூடியபோதும் அவை உடம்பு எனப் பெயர் பெறுமேயன்றி ஆன்மா எனப்படா என்பது கருத்து.

பதவுரை:

காணின் - நீ கூறும் அனைத்தும் கூடிய தொகுதியில் உள்ளவை யாவை என ஆராயின்

கலை ஆதிமண் அந்தம் - அவை கலை முதலாக நிலம் ஈறாகச் சொல்லப்படும் தத்துவங்களேயாகும்.

அவை மாயை - அவை மாயையின் காரியங்களாம் (ஆதலால்)

நிலையாவாம் - நிலையில்லாதனவேயாம்

அலையாமல் - மனத்தை ஒரு வழிப்படுத்தி

முன் - முதற்கண்

ஞானத்தை உணர்ந்து - அத்தத்துவக் கூட்டத்தினால் தோன்றும் அறிவின் இயல்பை உணர்ந்து

நாடில் - பின்னர் அக்கூட்டத்தின் இயல்பை ஆராயின்

அது - அக்கூட்டம்

தீபமே போல - கண்ணொளியை விளங்கச் செய்கின்ற விளக்குப் போன்றதாய்

தனு ஆம் - ஆன்மாவினது அறிவை விளக்கி நிற்கின்ற உடம்பேயாம்

தான் - ஆன்மா

அத்தின் - அத்தொகுதியின்

வேறு ஆகும் - வேறாய் உள்ளதாகும்.

இந்நூற்பாவில் கூறப்பட்ட மாறுபட்ட கொள்கைகள், அவற்றின் மறுப்புகள் ஆகியவற்றின் சுருக்கம்:

மாறுபட்ட கொள்கை - மறுப்பு

1. அனைத்தும் சூனியம்; அதனால் ஆன்மாவும் சூனியம்.- 1. அவ்வாறு கூறுகின்ற அறிவு உள்ளது, அதுவே ஆன்மா

2. அறிவு உடம்பில் நிகழ்தலால் பருவுடம்பே ஆன்மா - 2. பருவுடம்பை உடைமையாகக் கொண்டு எனது உடல் என்று கூறுகின்ற ஒன்று அதற்கு வேறாக உள்ளது. அதுவே ஆன்மா.

3. புறப்பொருள்களை அறிவன ஐம்பொறிகளே யாதலின் அவையே ஆன்மா - 3. ஐம்பொறிகள் ஒன்று அறிந்ததை மற்றொன்று அறியா; தம் இயல்பையும் தாம் அறியா. அவ்வைந்தினையும் கொண்டு ஐம்புலன்களையும் அறிவதாகிய வேறொன்று உளது. அதுவே ஆன்மா.

4. சூக்கும உடம்பே ஐம்பொறிகளைச் செலுத்தி அறியும். அதுவே ஆன்மா - 4. சூக்கும உடம்பே ஆன்மாவாயின், கனவிற் கண்டதை நனவிலும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வாறு இல்லை ஆதலால் சூக்கும உடம்பு ஆன்மா அன்று.

5. பிராணவாயுவே ஏனைய கருவிகளை இயக்கி அறியும். அதுவே ஆன்மா - 5. உறக்கத்தில் பிராணவாயு இயங்கிக் கொண்டிருக்க, ஏனைய கருவிகள் செயலற்று மடிந்திருத்தலால் பிராண வாயு ஆன்மா அன்று.

6. அறிவாய் நிற்பது பிரமமேயாதலின் அதனையே ஆன்மா என்றல் அமையும் - 6. கருவிகளின் துணையைக் கொண்டே அறிதலும், ஆசிரியனது அறிவுரையைப் பெற்றே தன்னியல்பை அறிதலும் ஒன்றொன்றாய் அறிதலும், விட்டு விட்டு அழுந்தி நின்று அறிதலும் ஆகிய இவையெல்லாம் பிரமத்திற்கு ஏலா. அவ்வாறு அறிகின்ற சிற்றுயிராகிய ஆன்மா வேறு உளது.

7. அனைத்துக் கருவிகளின் கூட்டமே ஆன்மா - 7. அக்கூட்டம் உடம்பு என்றே பெயர்பெறும்; ஆன்மா என்ற பெயர் பெற்றது.

மூன்றாம் நூற்பா முடிந்தது.

No comments:

Post a Comment