Saturday 5 November 2016

திருத்தொண்டர் தொகை (திருப்பதிகப் பாடல்கள்):

சுந்தர மூர்த்தி நாயனார் பாடி அருளிய திருப்பதிகம். சுந்தரர் இப்பதிகத்தில் 60 நாயன்மார்களையும்9 தொகை அடியார்களையும் குறித்துள்ளார்.

இறுதிப் பாடலில் சுந்தரர் தன் அறிமுகத்தைத் தெரிவிக்கும் வரிகளில் எஞ்சியுள்ள3 நாயன்மார்களின் திருப்பெயர்களும் இடம்பெற்றுள்ளது (அடியவர்களான, சுந்தரரின் தந்தை சடையனார், தாயார் இசைஞானியார் மற்றும் சுந்தர மூர்த்தி நாயனார்).

(பாடல் 1):

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
   இளையான்தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்
   விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற்கு அடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்
   ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6): 

திருநீலகண்ட நாயனார், இயற்பகை நாயனார், இளையான்குடிமாற நாயனார், மெய்ப்பொருள் நாயனார், விறன்மிண்ட நாயனார், அமர்நீதி நாயனார்.

இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள தொகை அடியார்கள் (1):

தில்லைவாழ் அந்தணர்.

(பாடல் 2):

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்
    ஏனாதி நாதன்தன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்
    கடவூரிற் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ்சாறன்
    எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கு அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (7): 

ஏறிபத்த நாயனார், ஏனாதி நாயனார், கண்ணப்ப நாயனார், குங்கிலியக் கலய நாயனார், மானக்கஞ்சாற நாயனார், அரிவாட்டாய நாயனார், ஆனாய நாயனார்.

(பாடல் 3):

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6)

மூர்த்தி நாயனார், முருக நாயனார், உருத்திர பசுபதி நாயனார், திருநாளைப் போவார் (நந்தனார்), திருகுறிப்புத் தொண்ட நாயனார், சண்டேசுவர நாயனார்.

(பாடல் 4):

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
    பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (7)

திருநாவுக்கரசர், குலச்சிறை நாயனார், பெருமிழலைக் குறும்ப நாயனார், பேயார் (காரைக்கால் அம்மையார்), அப்பூதி நாயனார், திருநீலநக்க நாயனார், நமிநந்தியடிகள்.

(பாடல் 5):

வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும்
   மதுமலர் நற்கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
   ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
   நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
   ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6)

திருஞானசம்பந்தர், ஏயர்கோன் கலிக்காம நாயனார், திருமூலர், தண்டியடிகள், மூர்க்க நாயனார், சோமாசி மாற நாயனார்.

(பாடல் 6):

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
 சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
    செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்
 கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவாற்கும் அடியேன்
    கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
 ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (6)

சாக்கிய நாயனார், சிறப்புலி நாயனார், சிறுதொண்ட நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் (கழிறிற்றிவார்), கணநாத நாயனார், கூற்றுவ நாயனார். 

(பாடல் 7):

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்
    விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற்கு அடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (7)

புகழ்ச்சோழ நாயனார், நரசிங்க முனையரைய நாயனார், அதிபத்த நாயனார், கலிக்கம்ப நாயனார், கலிய நாயனார், சத்தி நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள தொகை அடியார்கள் (1):

பொய்யடிமை இல்லாத புலவர்கள்.

(பாடல் 8):

கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
    கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
    தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (5)

கனம்புல்ல நாயனார், காரி நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், வாயிலார் நாயனார், முனையிடுவார் நாயனார்.

(பாடல் 9):

கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
   காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
   மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
   பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
   ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (5)

கழற்சிங்க நாயனார், இடங்கழி நாயனார், செருத்துணை நாயனார், புகழ்த்துணை நாயனார், கோட்புலி நாயனார்.

(பாடல் 10):

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.

இப்பாடலில் நாயன்மார்கள் எவரும் குறிப்பிடப் படவில்லை.

இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள தொகை அடியார்கள் (7):

பத்தராய்ப் பணிவார்கள், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார், திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார்.

(பாடல் 11):

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணாற்கு அடியேன்
    திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட்டு உவப்பார்
    ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.

இப்பாடலில் குறிக்கப் பட்டுள்ள நாயன்மார்கள் (5)

பூசலார் நாயனார், மங்கையர்க்கரசியார் (மானி என்பது இயற்பெயர்), நேச நாயனார், கோச்செங்கட் சோழ நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்.

இறுதிப் பாடலான இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ள மேலும் (3) நாயன்மார்கள்: 

அடியவர்களான சுந்தரரின் தந்தை சடையனார், தாயார் இசைஞானியார், இறுதியாக இப்பதிகத்தை பாடி அருளிய சுந்தர மூர்த்தி நாயனார்.

No comments:

Post a Comment