Wednesday 30 August 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 6


                                     புரசு [பலாஸ் - முருக்கன்] 

புரசு [பலாஸ் - முருக்கன்] மகிமை!
கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது கஞ்சனூர். பலாச வனம், பராசரபுரம், அக்னிபுரம், முக்திபுரம், கம்சபுரம் என்றெல்லாம் இந்தத் தலத்தைப் போற்றுகின்றன புராணங்கள். இதில், கம்சபுரம் என்ற பெயரே 'கம்சனூர்' என்றாகி, பிறகு 'கஞ்சனூர்' என்று மருவியதாகச் சொல்வர்.
கேட்டதைத் தரும் கற்பக விருட்சமாக ஸ்ரீகற்பகாம்பாளும், அள்ளிக் கொடுக்கும் அண்ணலாக ஸ்ரீஅக்னீஸ்வரரும் கோயில் கொண்டிருக்கும் அற்புதத் தலம் இது.
ஒருமுறை, சௌனகர் முதலான முனிவர் பெருமக்கள் கங்கைக் கரையில் சத்ரயாகம் செய்யத் துவங்கினர். சுமார் 12 வருடங்கள் நீடித்த இந்த யாகம்,
நிறைவடையும் தருணத்தில், சூத மகா முனிவர் அங்கே வந்தார். சௌனகாதி முனிவர்கள் இன்முகத்துடன் அவரை வரவேற்றனர். அப்போது அவர்களிடம், ''புனிதமான கங்கை நதிக்கு இணையான காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது கம்சபுரம் எனும் பலாச வன க்ஷேத்திரம். பராசர முனிவரின் சித்தப் பிரமை நிவர்த்தியானதும், அக்னி பகவான் மற்றும் கம்ச மகாராஜனின் நோய் குணமானதும், சந்திரன், சித்திரசேனன், இந்திரன் ஆகியோரின் பாவங்கள் நீங்கியதும் இந்தத் தலத்தில்தான். அதுமட்டுமா... காலகண்டன் எனும் வேடன், இறை அருளால் மோட்சம் பெற்றதும், தேவர்கள் சுக்கிரதோஷம் நீங்கப்பெற்றதும் இந்தத் தலத்தில்தான்'' என சூத மகா முனிவர் கஞ்சனூரின் மகிமைகளை விவரித்த தாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.
ஆமாம்... நமது துன்பத்தையெல்லாம் போக்கி, சுகத்தை அருளும் ஸ்ரீசுக்கிரபகவானும் இங்கு குடியிருக்கிறார்.
பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களுக்கு உரியவர், சுக்கிர பகவான். அசுரர்களின் குரு என்பதால், இவரை சுக்ராச்சார்யர் என்பர். மீன ராசியில் உச்சமும் கன்னி ராசியில் நீச்சமும் அடைபவர், சுக்கிரன். இவர் ஒரு ராசியில், சுமார் ஒரு மாதம் வரை சஞ்சரிப்பார். சுக்கிர திசை என்பது, 20 வருடங்கள் வரை நீடிக்கும்.
திருமால் வாமனராக அவதரித்து வந்து, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டபோது, 'மூன்றடி மண் தராதே' என மகாபலிக்கு அறிவுறுத்தியவர் சுக்கிர பகவான்தான்! இவரது அறிவுரையை ஏற்காமல், கெண்டியிலிருந்து தண்ணீரை வார்த்துக் கொடுக்க முனைந்தான் மகாபலி. உடனே சுக்கிரன், வண்டாக உருவெடுத்து, கெண்டியின் மூக்குப் பகுதிக்குள் சென்று, தண்ணீர் வெளியேறாதவாறு அடைத்துக்கொண்டார். உடனே வாமனர், தனது பவித்திரத்தை எடுத்துக் கெண்டியின் மூக்கினுள் செருக... அந்த பவித்திரம் குத்தியதால், தனது ஒரு கண்ணை இழந்தார் சுக்கிரன் என்கிறது புராணம்.
சரி... கஞ்சனூர் தலத்துக்கு வருவோம்!
முன்னொரு காலத்தில் இந்தப் பகுதி, பலாஸ வனமாக இருந்தது.
வனத்தில் வளர்ந்துள்ள மரம், செடி- கொடிகளில் ஒன்றைத் தலவிருட்சமாக நிறுவுவதை நம் முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மருத்துவ குணம் மிகுந்த விருட்சங்கள் அழிந்துபோக நேர்ந்தாலும், அவற்றில் ஒன்றைக் கோயிலில் தல விருட்சமாக வைத்துப் பராமரிக்கும்போது, அதன் விதைகள் காற்றில் பரவி, மண்ணில் விழுந்து வேர் பிடித்து வளரும்; குறிப்பிட்ட அந்த விருட்சத்தின் இனம் மீண்டும் தழைக்கும் என்பதே நம் முன்னோரின் திட்டம். அதன் அடிப்படையிலேயே கோயிலுக்குக் கோயில் தல விருட்சங்களை வைத்து வழிபட்டனர். அந்த வகையில், கஞ்சனூர்
பகுதியில் ஏராளமாக செழித்து வளர்ந்த புரசு (பலாஸ்) மரமே, இந்தக் கோயிலின் தல விருட்சமாக வைத்துப் பராமரிக்கப் பட்டிருக்கிறது.
புரசு மரம், வாய்வுத் தொல்லையை நீக்கும்; வயிற்றுக் கிருமியைச் சாகடிக்கும்; ஜுரத்தைக் கட்டுப் படுத்தும்; புண்ணை குணமாக்கும்; பாம்பின் விஷத்தை முறிக்கும். இந்த மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காக்கை வலிப்பு எனும் நோய்க்குச் சொட்டு மருந்தாகப் பயன் படுத்துவார்கள், மருத்துவர்கள்! அதுமட்டுமா? புரசு மரப்பட்டையை லேசாக வெட்டினால், சிவப்பு நிறத்தில் பால் வடியும். இது, தொண்டைப் புண், வாந்தி-பேதி ஆகியவற்றைக் குணமாக்கும். இதன் பட்டையை இரவில் நீரில் ஊறவைத்துக் காலையில் பருகினால் மண்டைச் சளி, ஆஸ்துமா, இருமல் ஆகியன உடனே நீங்கும்.
அவ்வளவு ஏன்... இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயைத் தலையில் தடவிக் கொண்டால், வழுக்கையே காணாமல் போகு மாம்! இன்னொரு விஷயம்... வாழை இலைக்கு மாற்றாக ஒருகாலத்தில் புரசு இலைகளில் உணவு பரிமாறினார்களாம்!
புரசு மரத்தின் சங்க இலக்கியப் பெயர், பலாசம். புழுகு, புனமுருக்கு, செம்பூ என்றும் வேறு பெயர்கள் உண்டு. 'பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி' எனக் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார் கபிலர். இதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் 'பலாசம் பூ' என்றே வர்ணிக்கிறார். பிங்கல நிகண்டு மற்றும் சூடாமணி நிகண்டு ஆகியன புரசு மரத்தை, 'புனமுருக்கு' என்கின்றன. 'பொங்கழல் முருக்கெனச் சிவந்த முருக்கு மலர்' என அகநானூறு அழகுற விவரிக்கிறது. தாம்பூலம் மென்று சிவப்பேறிய சிவந்த வாய்க்கு உவமையாக, திருத்தக்க தேவரும் இந்த மலரைக் குறிப்பிட்டுள்ளார். சிவனாரின் திருமுடியில், புரசுவின் மலரைச் சேர்த்து அழகுபார்க்கிறார் திருஞானசம்பந்தர். 'எருக்கொடு முருக்கு சடைமேல் அணிந்த எம் அடிகள்' எனப் பாடிப் பரவுகிறார் அவர்!
நாகப்பட்டினம்- ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் ஆலயம், திருநாங்கூர் வண்புருஷோத்தமன் ஆலயம், திருவாரூர்- ஸ்ரீநாராயண பெருமாள் ஆலயம், காவிரிப்பூம்பட்டினம் அருகில் உள்ள நாண்மதியப் பெருமாள் கோயில், திருச்சி கோயிலடி- அப்பக்குடத்தான் கோயில் போன்ற ஆலயங்களில் புரசு மரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
'இனி, சுக்கிர யோகம்தான்!'
''ஆறாவது கிரகமான சுக்கிரனின் ஸ்தலம், கஞ்சனூர். பிரம்மதேவரின் மானஸ புத்திரன் பிருகு முனிவர். இவரின் குமாரன், சுக்கிரன். எனவே இவருக்கு, 'பார்கவன்' என்றும் பெயர் உண்டு. மகாகவிஞரான சுக்கிரன் எழுதிய 'சுக்கிர நீதி' எனும் நீதி சாஸ்திரம், அற்புதமான நூல்! மழைக்கு அதிகாரியும் சுக்கிரன்தான்''.
''வெள்ளி நிறத்தைக் கொண்டவர் சுக்கிரன்; ஐங்கோண மண்டலத்தில் வெண் பட்டாடை உடுத்தி, வெண்தாமரை மலர் அணிந்து, கருட வாகனத்தில் வீற்றிருப்பவர்; இவருக்கு முதலை வாகனமும் உண்டு!
களத்திரகாரகன் எனும் பெருமை சுக்கிர பகவானுக்கு உண்டு. எனவே வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம், நல்ல இடத்தில் திருமணம், வாகன வசதியுடன் கூடிய வாழ்க்கை... என சுகபோகமாக வைத்திருக்கும் வள்ளல் சுக்கிர பகவான். இலக்கியம் மற்றும் கவிதை எழுதும் ஆற்றலை பக்தர்களுக்கு அளிக்கும் அருளாளரும்கூட!
கஞ்சனூர் தலத்துக்கு வந்து சுக்கிர பகவானை வழிபட்டால், நன்மதிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அள்ளித் தருவார். அதேபோல், கோயிலின் ஸ்தல விருட்சமான புரசு எனும் பலாச மரத்தை 11 முறை வலம் வந்து வேண்டினால், கடன் தொல்லையிலிருந்து மீளலாம்; குபேர யோகம் கிடைக்கப் பெறுவர். மூளை சம்பந்தமான நோயால் அவதிப்படுபவர்களும் மனக்குழப்பம் மற்றும் சஞ்சலத்தால் தவிப்பவர்களும் இங்கு வந்து புரசு மரத்தைச் சுற்றிச் சுக்கிரனை வழிபட, வாழ்க்கை வளமாகும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறுவர்'' .
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment