Wednesday 30 August 2017

பிணிக்கு மருந்தாகும் பிரசாதத் திருநீறு!


திருச்சி மாவட்டம் - திருப்பராய்த்துறையில், விஸ்தாரமாக ஓடுவதால் அகண்ட காவிரி, என்று அழைக்கப்படும் காவிரி நதியின் தென் கரையில் அமைந்திருக்கும் பராய்த்துறை நாதர் சிவாலயம், பாடல் பெற்ற தலம் ஆகும். இங்குள்ள இறைவனுக்கு, ‘தாருகாவனேஸ்வரர்’ என்ற திருப்பெயரும் உண்டு.

 முற்காலத்தில் இப்பகுதி ‘தாருகாவனம்’ என அழைக்கப்பட்டது. அக்காலத்தில் அங்கு இருந்த முனிவர்கள், பல வகையான வேள்விகளைச் செய்துவந்தனர். தாங்கள் செய்யும் வேள்விகளே முதன்மையானது என்ற எண்ணத்தில், சிவபெருமானை மதிக்கத் தவறினர். அவர்களின் இறுமாப்பை அடக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்துக்கு வந்தார். பிட்சாடனராக இருந்தாலும், பேரழகுடன் திகழ்ந்த சிவனாரிடம் மனதைப் பறிகொடுத்தனர் முனிவர்களின் பத்தினிகள்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் பிட்சாடனரை அழிக்க மாபெரும் யாகம் செய்தனர். யாக குண்டத்தில் இருந்து புலியைத் தோற்றுவித்து அவர் மீது ஏவினர். பிட்சாடனர் அதைக் கொன்று, அதன் தோலை ஆடையாக அணிந்துகொண்டார். பிறகு மானை ஏவுகின்றனர்.  பிட்சாடனர் மானை அடக்கி தனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டார். பின்னர், முனிவர்கள் பாம்புகளை ஏவ,  அவற்றை தனது அணிகலன்களாக ஆக்கிக் கொண்டார், பிட்சாடனர்.
இதனால் கோபம் கொண்ட முனிவர்கள், பரமனாரின் மீது பூதகணங்களை ஏவினார்கள். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியுற்றது. நிறைவாக, வந்திருப்பவர் சிவபெருமான்தான் என்று உணர்ந்த முனிவர்கள், இறுமாப்பு நீங்கி மன்னிப்பு வேண்டினர். சிவபெருமானும் அவர்களை மன்னித்து, சுயம்புலிங்கமாக தாருகாவனத்தில் எழுந்தருளினார். பராய் மரங்கள் சூழ்ந்த பகுதியில் எழுந்தருளியதால், ‘திருப்பராய்த்துறை நாதர்’ என்றும் திருப்பெயர் கொண்டார்.

இங்கு வள்ளி-தெய்வானையுடன் மயில்மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் முருகப் பெருமானை, அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழில் போற்றிப் பாடி இருக்கிறார்.

கோயிலின் ஸ்தல விருட்சம் பராய் மரம்.  இந்த தெய்விக மரத்தைச் சுற்றிவந்து வழிபடும்போது, புற்றுநோயைக் குணப்படுத்தும் சில நுண்துகள்களை வெளியிடுவதாக நம்புகின்றனர் பக்தர்கள். மேலும், இந்த மரத்தை வலம் வந்து வழிபடுவதால்,  தோல் நோய்கள் குணமடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஏழுநிலை ராஜகோபுரத்துடனும், ஐந்துநிலை முதன்மை கோபுரத்துடனும் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தில் இறைவன் சுயம்புலிங்கமாகக் காட்சி தருகிறார். இறைவி ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை எனும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். 

பிட்சாடனராக வந்த சிவபெருமானின் திருவுருவத்தையும் ஆலயத்தில் தரிசிக்கலாம். கோயிலின் பிராகாரத்தில் உள்ள தூண்களில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகரின் திருஉருவங்களும், திருப்பணி செய்தவர்களின் திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இங்கு, தன் தேவியை மடியில் அமர்த்தியபடி அருளும் ஸ்ரீவல்லப உச்சிஷ்ட கணபதியையும் தரிசிக்கலாம்.
மேலும் வலம்புரி விநாயகர், சப்த கன்னியர், அறுபத்து மூவர், சோமாஸ்கந்தர், மகா கணபதி, பஞ்சபூத லிங்கங்கள், ஆறுமுகர், பிரம்மா, துர்கை, கஜலட்சுமி, பைரவர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதியையொட்டி அமைந்துள்ள மண்டபத்தூண்களில், ஈசனின் ஊர்த்துவத் தாண்டவம் மற்றும் காளிதேவியின் சிற்பங்களைக் காணலாம்.

குறைகள் நீங்கப்பெறும் தலம்
தொடர்ந்து 8 திங்கட்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து,  நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, சிவனாரின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியைப் பிரசாதமாகப் பெற்று உடலில் பூசிக்கொண்டால், தீராத சருமநோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் இங்குள்ள பஞ்சபூத சக்திகளின் உருவம் பதிக்கப்பட்ட தூண் ஒன்றில் கைவைத்து வேண்டினால், நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே நிலவுகிறது
விசேஷ தினங்கள்
ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முதல்நாள் ‘முதல் முழுக்கு விழா’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் இறைவன் ரிஷபாரூடராக அம்பிகையோடு காவிரிக் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்குத்  தீர்த்தம் வழங்குவார். நதிக்கரை தலம் என்பதால், பித்ருக்கள் ஆராதனைக்கும் உகந்த தலம் இது எனச் சொல்கிறார்கள் பெரியோர்கள். 

பராய்த்துறைக்கு வந்து தரிசித்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். நாமும் பராய்த்துறைக்குச் சென்று  நாதனை வேண்டி, பாவங்கள் நீங்கப்பெறுவோம். 

படங்கள்: தே.தீட்ஷித்

உங்கள் கவனத்துக்கு... 

மூலவர்: ஸ்ரீதிருப்பராய்த்துறை நாதர் (தாருகாவனேஸ்வரர்)

அம்பாள்: ஸ்ரீபசும்பொன் மயிலாம்பிகை எப்படிச் செல்வது? திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்பராய்த்துறை. திருச்சி - சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பராய்த்துறை செல்ல நகரப் பேருந்துகள் உள்ளன. திருப்பராய்த் துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது  கோயில்.

நடை திறந்திருக்கும் நேரம்: தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை; மாலை 4 முதல் இரவு  8 மணி வரை.

No comments:

Post a Comment