Monday 3 April 2017

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1.2


மாணவர் கேட்கும் வினாக்கள்

2.ஆறாறு தத்துவம்ஏது ஆணவம்ஏது அன்றேதான்
மாறா வினைஏது மற்றிவற்றின் வேறாகா
நான்எது நீஏது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தான்ஏது தேசிகனே சாற்று.

ஆறு ஆறு தத்துவம் ஏது சைவ சமயத்தில் கொள்ளப்படுகிற முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பு யாது?

ஆணவம் ஏது சைவ தவிரப் பிற மதங்களில் கொள்ளப்படாத ஆணவம் என்னும் பொருளின் இயல்பு யாது?

அன்றேதான் தொன்றுதொட்டே
மாறா நீங்காமல் தொடர்ந்து வருகிற
வினை ஏது கன்மத்தின் இயல்பு யாது?

மற்று, இவற்றின் இத்தத்துவங்கள், ஆணவம், கன்மம் ஆகிய இவற்றிற்கு
வேறாகா வேறாகாமல் அவற்றோடு கூடி அவையேயாக ஒற்றுமைப்பட்டு வருகின்ற
நான் ஏது என் இயல்பு யாது?

நீ ஏது குருவாக எழுந்தருளி வந்துள்ள நும் இயல்பு யாது?

நாதன் நடம் ஏது முதல்வன் இயற்றும் திருக்கூத்தின் இயல்பு யாது?

அஞ்செழுத்து ஏது திருவைந்தெழுத்தின் இயல்பு யாது?

தான் ஏது முத்தியின் இயல்பு யாது?

தேசிகனே குரு முதல்வரே
சாற்று இவ்வினாக்களுக்கு விடை கூறியருள்க

பொழிப்புரை

1. முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பு யாது?

2. ஆணவத்தின் இயல்பு யாது?

3. தொன்று தொட்டு ஆணவத்தோடு தொடர்ந்து நீங்காமல் வரும் வினையின் இயல்பு யாது?

4. இத்தத்துவங்கள், ஆணவம், வினை ஆகியவற்றிற்கு வேறாகாமல் அவற்றோடு கூடி ஒற்றுமைப் பட்டு வரும் என் இயல்பு யாது?

5. என் அறியாமையை நீக்கி உண்மையை உணர்த்த வந்தருளிய நும் இயல்பு யாது?

6. இறைவன் இயற்றும் நடனத்தின் இயல்பு யாது?

7. திருவைந்தெழுத்தின் இயல்பு யாது?

8. முத்தியின் இயல்பு யாது?

குரு முதல்வரே, இவற்றிற்கு விளக்கம் கூறியருள்வீராக என்று மாணவர் ஆசிரியரிடம் வேண்டுகிறார்

விளக்கம்

வினாக்களின் வைப்பு முறை

தத்துவங்கள் என்பவை மாயையிலிருந்து தோன்றிய காரியப் பொருள்கள். எனவே முதல் வினா மாயையைப் பற்றியதாகக் கொள்ளலாம். இரண்டாம் வினா ஆணவத்தைப் பற்றியதாகவும், மூன்றாம் வினா கன்மத்தைப் பற்றியதாகவும் அமைதலின், முதல் மூன்று வினாக்களும் பாசம் பற்றியவை என்பது விளங்கும். நான்காம் வினாவாகிய நான் ஏது என்பதில் உள்ள நான் என்ற சொல் முதலில் மாணவரைக் குறித்துப் பின் பசுவாகிய உயிரைக் குறிப்பதாயிற்று. அவ்வாறே ஐந்தாம் வினாவாகிய நீ ஏது என்பதில் நீ என்பது ஞானாசிரியரைக் குறிப்பதாலும், ஞானாசிரியர் சிவமே யாதலாலும் அவ்வினா பதியாகிய இறைவனைப் பற்றியதாயிற்று. இவ்வாறு முதல் ஐந்து வினாக்களும் பாசம், பசு, பதி ஆகிய முப்பொருள்களின் இயல்பு பற்றியன என்பது புலனாகும். பாசம் நமக்குத் தெரிந்த பொருளாதலின் அதனை முன் வைத்தார். இவற்றின் வேறாகா நான் என்றதனால் அப்பாசத்தோடு கூடி அதன் வசப்பட்டிருக்கின்ற பசுவை அடுத்து வைத்தார். குருவாகி வந்து உண்மையை உணர்த்திப் பாசத்தினின்றும் விடுவிக்கின்ற பதியை அதன்பின் வைத்தார் என இவ்வாறு பொருத்தம் காணலாம். ஆறாவது வினா நாதன் நடம் பற்றியது. இறைவன் செய்யும் ஐந்தொழிலே நடனம் எனப்படுதலின், அதுவும் பதியின் இயல்பாய் அமைதலின் அதுபற்றிய வினாவை ஐந்தாம் வினாவிற்குப் பின் வைத்தது பொருத்தமேயாகும்.

இவ்வாறு முப்பொருள்களின் இலக்கணத்தைக் கூறி முடித்த பின், சாதனமாகிய திருவைந்தெழுத்தைப் பற்றிய ஏழாம் வினாவை அமைத்துக் கொண்டார். சாதனத்திற்குப் பின் பயனைக் கூறுவது முறை. எட்டாவது வினா முத்தியாகிய பயனைப் பற்றியதாகும். முத்தியைக் குறிப்பதாகச் செய்யுளில் என்ன சொல் இருக்கிறது? நான்காம் அடியிலுள்ள தான் ஏது என்பதில் உள்ள தான் என்பதே முத்தியைக் குறிப்பதாகும். அச் சொல் எவ்வாறு முத்தியைக் குறிக்கும் என்பதைப் பார்ப்போம்.

உயிர் எதனை எதனைச் சார்கிறதோ அதன் அதன் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு நிற்பது. இப்பிறப்பு நிலையில் உயிர் உடம்பைச் சார்ந்து உடம்பின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு உடம்பாகவே நிற்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவ்வாறே முத்தி நிலையில் உயிர் சிவத்தைச் சார்ந்து சிவத்தின் தன்மையையே தன் தன்மையாகக் கொண்டு சிவமாகவே நிற்கும். சிவம் தன்னையே தந்து உயிரைத் தன் வண்ணம் ஆக்கிவிடும். மாணிக்கத்தைச் சார்ந்த பளிங்கு தன்னிடத்தே மாணிக்கத்தின் நிறத்தை முழுதுமாகப் பெற்று மாணிக்கமே என்று சொல்லும்படியாக நிற்பது போன்றது இது. இதுவே தானாதல் ஆகிய முத்திநிலை. தான் என்பது சிவத்தைக் குறிக்கும். எனவே தானாதல் என்பது சிவமாதல் எனப் பொருள்படும். தானாதல் என்பதே செய்யுளில் தான் என நின்று முத்தியைக் குறிப்பதாயிற்று.

வினாக்களுக்கு உரிய விடைகள் அமைந்துள்ள செய்யுட்கள்
நூலில் வரும் வினாக்கள் எட்டினுக்கும் உரிய விடைகள் அமைந்துள்ள செய்யுட்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வினாக்கள் விடைகள்

முதல் வினா(தத்துவங்கள் பற்றியது) 4 முதல் 21 முடிய உள்ளவை (18 செய்யுட்கள்)
இரண்டாம் வினாவும் மூன்றாம் வினாவும் 22ஆம் செய்யுள் மட்டும்
(ஆணவமும் வினையும் பற்றியவை)
நான்காம் வினா(உயிர் பற்றியது) 24 முதல் 26 முடிய உள்ளவை(3 செய்யுட்கள்)
ஐந்தாம் வினா(இறைவனைப் பற்றியது) 27 முதல் 29 முடிய உள்ளவை(3 செய்யுட்கள்)
ஆறாம் வினா(நாதன் நடம் பற்றியது) 31 முதல் 38 முடிய உள்ளவை(8 செய்யுட்கள்)
ஏழாம் வினா(அஞ்செழுத்துப் பற்றியது) 40 முதல் 44 முடிய உள்ளவை(5 செய்யுட்கள்)
எட்டாம் வினா(முத்தி நிலை பற்றியது) 45 முதல் 48 முடிய உள்ளவையும், 50 முதல் 52 முடிய உள்ளவையும்(7 செய்யுட்கள்)

விடையாக அமைந்த 45 செய்யுட்களும் ஆசிரியர் கூற்றாதல் வெளிப்படை, அவற்றோடு, 3ஆவது செய்யுள் விடைகூற இசைந்தமையைத் தெரிவிக்கும் ஆசிரியர் கூற்றாக உள்ளது. இனி, 1,2,23,30,39,49,53 ஆகிய ஏழு செய்யுட்கள் மாணாக்கர் கூற்றாக உள்ளன. இவற்றோடு முதலில் உள்ள காப்புச் செய்யளையும் சேர்க்க, இந் நூற்செய்யுட்கள் 54 ஆதல் காணலாம்.

ஆசிரியர் விடை கூறப் புகுதல்

3. உள்ளபடி இத்தை உரைக்கக்கேள் உன்றனக்கு
வள்ளல் அரு ளால்அன்று வாய்மலர்ந்த தெள்ளிய சீர்
ஆகமங்கள் சொன்ன அடைவிலே ஆனந்த
யோகம் நிகழ் புதல்வா உற்று.

பதவுரை

ஆனந்த யோகம் சிவானந்த நிலையை அடைவிக்க வல்ல யோக நெறியில்
நிகழ் புதல்வா நிற்கின்ற நன் மாணாக்கனே!
வள்ளல் சிவபெருமான்
அருளால் உயிர்கள்மீது கொண்ட கருணையினால்
அன்று முற்காலத்தே
வாய் மலர்ந்த ஆக்கியருளிய
தெள்ளிய சீர் தெளிவும் சிறப்பும் மிக்க
ஆகமங்கள் சிவாகமங்கள்
சொன்ன சொல்லிய
அடைவிலே முறையிலே
இத்தை இதனை(நீ அறிய விரும்பும் ஞானப் பொருளை)
உன் தனக்கு உனக்கு
உள்ள படி உள்ளவாறு
உரைக்க யாம் சொல்ல,
உற்றுக் கேள் நீ மனம் பொருந்திக் கேட்பாயாக
பொழிப்புரை
சிவானந்த நிலைக்கு இட்டுச் செல்லும் யோக நெறியில் நிற்கின்ற நன்மாணாக்கனே! சிவ பிரான் முற்காலத்தில் ஆன்மாக்களின் மீது கொண்ட அருள் காரணமாக ஆகமங்களை ஆக்கியருளினார். சிறப்பு மிக்க அச்சிவாகமங்கள் உணர்த்தும் ஞானநெறியை அவற்றில் உள்ளபடி யாம் உனக்கு உரைப்போம். உளம்பொருந்திக் கேட்பாயாக என்று ஆசிரியர் கூறத் தொடங்குகிறார்.

விளக்கம்

வள்ளல் அன்று வாய்மலர்ந்த ஆகமங்கள்

சிவபெருமானே வேதங்களையும் ஆகமங்களையும் அருளிச் செய்தார் என்பது சைவ சமயத்தின் கொள்கை. அவற்றை அவர் அருளிச் செய்தது, சதாசிவ மூர்த்தி என்னும் நிலையில் இருந்தேயாகும். சதாசிவ வடிவம் என்பது ஐந்து முகங்களும் பத்துக் கைகளும் உடையது. கிழக்கு முதலிய நான்கு திசைகளை நோக்கினவாக நான்கு முகங்களும், அவற்றின் மேல் நடுவே வானத்தை நோக்கியதாக ஒரு முகமும் இருக்கும். மேல் நோக்கிய உச்சிமுகம் ஈசானம் எனப்படும். கிழக்கு நோக்கிய முகம் தற்புருடம் எனப்படும். தெற்கு நோக்கிய முகம் அகோரம் எனப்படும். வடக்கு நோக்கிய முகம் வாமதேவம் எனப்படும். மேற்கு நோக்கிய முகம் சத்தியோ சாதம் எனப்படும். மேற்கூறியவாறு சிவபெருமான் சதாசிவ வடிவம் தாங்கி நின்று, கீழ் நின்ற நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் மேல் நிற்கும் ஈசான முகத்தால் சிவாகமங்களையும் அருளிச் செய்தார். உச்சியில் உள்ள ஈசானம் என்னும் ஒரு முகமே கிழக்கு முதலிய திசைகளை முறையே நோக்கித் தற்புருடம் முதலிய நான்கு முகங்களாயும் நிற்கும். அந்த நான்கு முகங்களாலும் முகம் ஒன்றுக்கு ஐந்து ஆகமங்களாக இருபது ஆகமங்களையும், இயல்பான ஈசான நிலையில் நின்ற அம்முகத்தால் எட்டு ஆகமங்களையும் சதாசிவ மூர்த்தி அருளினார் என்பர்.

சத்தியோ சாத முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம் என்பன. வாமதேவ முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம் என்பன. அகோர முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் விசயம், நிச்சுவாசம், கவாயம்புவம், ஆக்கினேயம், வீரம் என்பன. தற்புருட முகத்தால் சொல்லப்பட்ட ஐந்து ஆகமங்கள் இரவுரவம், மகுடம், விமலம், சந்திர ஞானம், முகவிம்பம் என்பன. ஈசான முகத்தால் சொல்லப்பட்ட எட்டு ஆகமங்கள் புரோற் கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என்பன. இந்த இருபத்தெட்டு ஆகமங்களே மூல ஆகமங்கள் எனப்படுகின்றன. இந்த ஆகம நூல்கள் உபதேச முறையில் வழிவழியாக இடைவிடாது வந்து உயிர்களுக்கு மெய்ந் நெறியைக் காட்டுதல் வேண்டும் எனக் கருதி, அவ்ஆசிரிய வழி முறையை உண்டாக்குதற் பொருட்டுச் சதாசிவப் பெருமான் மூலாகமங்கள் இருபத்தெட்டினையும் இருபத்தெண்மருக்கு உபதேசித்தருளினார். அவ்வாறு அவரிடம் ஆகமங்களை நேரே கேட்டவர்கள் சிவர்கள் எனவும், உருத்திரர்கள் எனவும் இருவகைப்படுவர். சிவர் எனப்படுவோர் பத்துப் பேர். அவர்களுள் பிரணவர் என்பவர் முதன்மையானவர். உருத்திரர் எனப்படுவோர் பதினெட்டுப் பேர். அவர்களுள் மகாருத்திரர் முதன்மையானவர்.

பிரணவர் முதலிய பத்துச் சிவர்களுக்குக் காமிகம் முதல் சுப்பிரபேதம் ஈறாக உள்ள பத்துச் சிவாகமங்களை ஒருவருக்கு ஒன்றாக உபதேசித்தருளினார். மகாருத்திரர் முதலிய பதினெட்டு உருத்திரர்களுக்கு எஞ்சியுள்ள விசயம் முதல் வாதுளம் ஈறாக உள்ள பதினெட்டுச் சிவாகமங்களை ஒருவருக்கு ஒன்றாக உணர்த்தியருளினார். இனி, வித்தியேசுவரர் என்று சொல்லப் பெறுவோர் எட்டுப் பேர் உள்ளனர். அவர்களுள் முதன்மையானவர் அனந்த தேவர் இந்த ஆனந்த தேவர் வாயிலாகவே சிவபெருமான் அசுத்த மாயையைத் தொழிற்படுத்தவார். மேற்கூறியபடி பிரணவர் முதலியோர்க்குத் தனித் தனியே ஒவ்வோர் ஆகமத்தை உபதேசித்த சதாசிவ மூர்த்தி அதன் பிறகு அனந்த தேவருக்கு அவ்விருபத்தெட்டு ஆகமங்களையும் ஒருங்கே தொகுத்து உபதேசித்தார். இம்முறையில் எல்லா ஆகமங்களையும் கேட்டுணர்ந்த அனந்த தேவர் தமக்குக் கீழ் உள்ள உருத்திரர்களுள் முதல்வராய் விளங்கும் சீகண்ட ருத்திரருக்கு அவ்வாகமங்களையெல்லாம் உபதேசித்தார்.

சீகண்ட ருத்திரர் கைலாயத்தில் தமது அருகிலே இருக்கும் நந்தி பெருமானுக்கு அவ்விருபத்தெட்டு ஆகமங்களையும் அருளிச் செய்தார். நந்தி பெருமான் அவற்றைத் தேவ இருடிகளுக்கு உணர்த்தினார். அம் முனிவர்கள் அவற்றை நிலவுலகில் உள்ள பக்குவ ஆன்மாக்களுக்கு உணர்த்தினர். இது சிவாகமங்கள் நிலவுலகில் வந்த வரலாறாகும்.

யோகம் நிகழ் புதல்வா என்ற விளியின் உட்பொருள்
நல்லாசிரியரது உபதேசம் மாணாக்கனது அறிவில் பக்குவம் இருந்தாலே விளங்கும். பக்குவம் என்பது ஆசிரியர் அறிவுறுத்தும் உண்மையை விளக்கமில்லாதும், பொருள் மாறுபடவும் உணராமல், உள்ளவாறு உணரும் நிலையாகும்.

இந்தப் பக்குவம், ஆன்ம அறிவை ஆணவ மலம் பற்றியுள்ள வரையில் உண்டாகாது. அம் மலம் அறிவைத் திசை திருப்பி, இழிந்த உலகப் பொருளையே பெரிதாக மதித்து அதனையே நாடும்படியாகச் செய்யுமேயன்றி, உயர்ந்த ஞானப் பொருளில் நாட்டத்தைச் செல்லவிடாது. எனவே ஆணவ மலத்தின் ஆற்றல் தேய வேண்டும். மலத்தின் ஆற்றல் தேயத் தேய, ஆன்ம அறிவு சிறிது சிறிதாக விளக்கம் பெற்றுப் படிப்படியே பக்குவம் எய்தும்.

ஆணவ மலத்தின் ஆற்றல் எவ்வாறு தேயும் எனில், பதியைத் தொழுதல் ஆகிய தவத்தினாலேயே மல ஆற்றல் தேய்வதாகும். அத்தவம் சரியை, கிரியை, யோகம் என மூன்றாய் நிகழும். அவற்றுள் சரியை என்பது திருக்கோயில் வழிபாடு செய்தல், அடியார்களைச் சிவன் எனவே கருதி வழிபடுதல் முதலியன. இது புற வழிப்பாடு என்பது புலனாகும். கிரியை என்பது தம் தம் இல்லங்களில் சிவலிங்கப் பெருமானை ஆன்மார்த்த மூர்த்தியாக எழுந்தருளுவித்துக் கொண்டு அகத்தும் புறத்தும் வழிபடுதல். இதில் உடலோடு உள்ளமும் ஈடுபடுவதால் புறமும் அகமும் கலந்த வழிபாடாகிறது. யோகம் என்பது மனத்தை அடக்கி ஒருவழியில் நிறுத்தி இறைவனை அகக் காட்சியிற் கண்டு அவனோடு உள்ளம் ஒன்றுபடுதல். இஃது அக வழிபாடு ஆகும்.

சரியை கிரியை யோகம் ஆகிய இவ்வழிபாட்டினை உலகப் பற்றுடன் செய்யாமல், பற்றற்ற நிலையில் செய்தால் அதுவே உண்மைத் தவம் ஆகும். உண்மைத் தவத்தினால் ஆன்மாவினது அறிவு மேலும் மேலும் நுணுகி வரும். அது நுணுகி வர வர, அதனை மறைத்து நின்ற ஆணவ மலமும் அதற்கேற்பத் தேய்ந்து தேய்ந்து வரும். அந்நிலையில் அவ்வான்ம அறிவின் கண் இறைவனது திருவருள் பதிந்து மேம்பட்டு விளங்கி வரும். அதனால் உலக இன்பத்தில் வெறுப்பும், வீட்டின்பத்தில் விருப்பும் வளர்ந்து வரும். ஞான நெறியில் மனம் செல்லும், இப் பக்குவநிலை உடையவரே சீடராதற்கு ஏற்றவர்.

இங்கே, ஆசிரியர் மாணாக்கரை நோக்கி யோகம் நிகழ் புதல்வா என அழைக்கிறார். அம்மாணாக்கர் சரியை கிரியைகளை முற்றச் செய்து, யோக நெறியில் நின்று அதன் பயனாக ஞானத்தைப் பெறுதலில் வேட்கையுற்று இவ்வினாக்களைக் கேட்கின்றார் ஆகலின் தாம் கூறும் விடைகளை வாங்கிக் கொள்ளும் பக்குவம் அவர்க்கு இருத்தலை நோக்கியே இவ்வாறு அழைக்கின்றார் என்று கொள்ளலாம்.

பாசம் - ஆறாறு தத்துவங்கள்

இனி, ஆறாறு தத்துவம் ஏது? என்ற முதல் வினாவுக்கு விடையளிக்கின்றார் ஆசிரியர். அவ்விடைகள் மிகவும் சுருக்கமாகவே உள்ளன. இப்பொழுதே நேராக நாம் செய்யுட்குச் சென்றால் பொருளை விளங்கிக் கொள்வதில் சிக்கலும் சிரமமும் ஏற்படும். ஆதலால் முதலில் தத்துவங்களைப் பற்றி ஒரளவு விரிவாகத் தெரிந்து கொள்வோம். முன்கூட்டியே தத்துவங்கள் தொடர்பான செய்திகளைத் தெரிந்து கொண்டால் பின் செய்யுட்களை விளங்கிக் கொள்ளுதல் எளிதாகும்.

மாயை என்னும் மூலப் பொருள்

ஒருவனால் செய்யப்படுகின்ற பொருள் காரியப் பொருள் எனப்படும். அவன் பலவாகிய பகுதிகளை இணைத்துச் சேர்த்து அக்காரியப் பொருளை உருவாக்குகிறான். எனவே காரியப் பொருளெல்லாம் பகுதிகளை உடையதாக இருக்கும் என்பது தெளிவு நாம் கையில் அணியும் கடிகாரம், உடம்பில் அணியும் ஆடை, தோளில் அணியும் மாலை, கழுத்தில் அணியும் நகை முதலியவையெல்லாம் பல பகுதிகளை உடைய காரியப் பொருள்களேயாகும். உற்று நோக்கினால் உலகப் பொருள்கள் அனைத்துமே இத்தகைய காரியப் பொருள்கள்தாம் என்பது புலனாகும் நாம் வாழுகின்ற இப்பெரிய நிலவுலகையே எடுத்துக் கொள்ளுங்கள். மண், நீர், தீ, காற்று, வெளி என்னும் ஐம்பூதங்களாகிய பகுதிகளின் சேர்க்கையால் உருவானது தானே இவ்வுலகம். எனவே இவ்வுலகமும் ஒரு காரியப் பொருளே.

முதலாசிரியராகிய மெய்கண்டார் உலகம் காரியப் பொருள் என்பதைப் பின்வருமாறு உணர்த்துவார். உலகில் எண்ணற்ற பொருள்கள் காணப்படுகின்றன. அவையெல்லாம் உலகின் பகுதிகளாக உள்ளன. அப்பகுதிகளெல்லாம் சேர்ந்த காரியப் பொருள் தான் உலகம். உலகின் பகுதிகளாய் அமைந்த சடப்பொருள்கள் அனைத்தையும் இரண்டு வகையுள் அடக்கி விடலாம். பல்வேறு பிறவிகளாகக் காணப்படும் உடம்புகளாகிய சடப் பொருள்கள் எனபன ஒருவகை. உடம்பு அல்லாத பிற சடப் பொருள்கள் எல்லாம் இரண்டாம் வகை. நிலம், நீர் முதலிய பெரும் பொருள்களும் அவற்றினால் ஆக்கப்படும் சிறு பொருள்களும் ஆகிய எல்லாம் இரண்டாம் வகையில் அடங்கிவிடும். முதல் வகையினவாகிய உடம்புகளையும் கூட ஆண் உடம்பு. பெண் உடம்பு என இருவகைப்படுத்திக் கூறலாம் தானே. எனவே முன்னர்கூறிய இருவகையை இப்படி மூவகைப்படுத்திக் கூறலாம். அஃதாவது ஆண் உடம்பு பெண்ணுடம்பு, அவையல்லாத பிற சடப் பொருள் என வகைப்படுத்தலாம். உலகப் பொருள் அனைத்தும் இம்மூவகையுள் அடங்கி விடும் அன்றோ? மெய்கண்டார் இவ்வாறுதான் வகைப்படுத்துகிறார். ஆணுடம்பை அவன் என்ற சொல்லாலும், பெண்ணுடம்பை அவள் என்ற சொல்லாலும், பிறவற்றை அது என்ற சொல்லாலும் குறிப்பிடுகிறார். இம்மூன்றன் கூட்டம்தான் உலகம் என்பாராய், அவன் அவள் அது எனும் அவை என்று கூறி, உலகம் இவ்வாறு பகுதிகளை உடையதாகக் காணப்படுவதால் அது காரியப் பொருளே என நிறுவுகிறார்.

காரியப் பொருள் எதுவாயினும் அதற்கு ஒரு மூலப்பொருள் வேண்டும். குடம் என்ற காரியப் பொருளுக்குக் களிமண் மூலப் பொருள். நாற்காலிக்கு மரம் மூலப்பொருள். நகைக்குப் பொன் மூலப் பொருள். மூலப் பொருளை முதற் காரணம் என்று குறிப்பிடுவர். மற்றவை யெல்லாம் நிரம்ப இருப்பினும் எந்த ஒன்று இல்லாமல் காரியம் தோன்றாதோ அந்த ஒன்றே முதற் காரணம் எனப்படும். குடம் என்ற செயப்படுபொருள் உருவாவதற்குச் சக்கரம், கழி முதலியவை பயன்படுகின்றன. அவற்றையெல்லாம் குறைவறப் பெற்றிருந்தாலும் களிமண் என்ற ஒன்று இல்லையேல் குடம் தோன்றாது. அது பற்றியே களிமண் முதற்காரணம் எனப்படுகிறது. இவ்வுண்மை பிற காரியப் பொருள்களுக்கும் பொருந்தும். உலகம் காரியப் பொருள் எனப் பார்த்தோம் எனவே காரியமாகிய உலகுக்கும் ஒரு முதற் காரணம் இருத்தல் வேண்டுமன்றோ? அம்முதற் காரணமாகிய மூலப் பொருள் எது? அதுவே மாயை என்பது.

மாயையின் நுண்மையும் விரிவும்

மாயை எப்படியிருக்கும்? அது கண்ணுக்குப் புலப்படாத நுண்மை உடைய அருவப் பொருள் ஆகும். பின்வருமாறு சொன்னால் அதன் நுண்ணிலை ஒருவாறு விளங்கும். மாயையிலிருந்து தான் எல்லாக் காரியப் பொருள்களும் தோன்றுகின்றன. காரியம் காரணத்தை விடப் பருமையாக இருக்கும். பருமை தூலம் எனப்படும். எனவே மாøயிலிருந்து படிமுறையில் தோன்றும் காரியப் பொருள்கள் ஒன்றைவிட ஒன்று தூலமாக இருக்கும். இறுதியில் தோன்றும் காரியங்கள் முந்திய எல்லாவற்றையும் விடத் தூலமாக இருக்கும். மாயையிலிருந்து இறுதியாகத் தோன்றுகின்ற தூலமான காரியங்களில் ஒன்றாக இருப்பது ஆகாயம். முன்னே தோன்றிய காரியங்களைப் பார்க்கத் தூலமான அந்த ஆகாயமே நமக்குப் புலப்படாத அருவமாக இருக்கிறதே. அவ்வாறாயின் அதற்கு முன்னே தோன்றிய காரியங்கள் அதைவிட எவ்வளவு நுண்ணியவாக இருக்கும்! அக்காரியங்கள் அனைத்திற்கும் மூலமாக இருக்கும் மாயை என்பது எத்துணை எத்துணை நுண்ணியதாக இருக்கும் என்பதைச் சொல்லவும் கூடுமோ?

சுத்த மாயையும் அசுத்த மாயையும்

இத்தகைய மாயை சுத்தமாய் உள்ள பகுதி என்றும், அசுத்தமாய் உள்ள பகுதி என்றும் இரு பகுதியாய் நிற்கும். சுத்தப் பகுதி என்பது ஆணவ மலத்தோடு கலவாதது. அசுத்தப் பகுதி ஆணவ மலத்தோடு கலந்தது எனவே மாயை ஒன்றே இங்ஙனம் சுத்தமும் அசுத்தமும் பற்றிச் சுத்தப் பகுதி சுத்த மாயை எனவும், அசுத்தப் பகுதி அசுத்த மாயை எனவும் இரண்டாக வைத்துக் கூறப்படும். குன்றிமணி ஒன்றே சிவந்ததும் கரியதும் ஆகிய இரு பகுதிப்பட்டதாய் விளங்குதலை இதற்கு உவமை கூறுவர் இன்னொரு உவமையும் கூறலாம். பூமியைச் சூழ்ந்து காற்று மண்டலம் உள்ளது. காற்று மண்டலத்தின் மேற்பகுதி மாசு கலவாமல் தூயதாய் விளங்குவது. கீழே உள்ள பகுதி தூசு, புகை முதலிய மாசுகள் கலந்து விளங்குவது. இக்காற்று மண்டலம் போன்றது மாயை எனலாம். காற்று மண்டலத்தின் தூய பகுதி மேலாய் விரிந்து விளங்க, மாசு படிந்த பகுதி அதற்குள்ளே நிற்கிறது. அதுபோலச் சுத்த மாயை மேலாய் விரிந்து நிற்க, அசுத்த மாயை அதனுள்ளே அடங்கி நிற்கும். சுத்த மாயை வியாபகமும், அசுத்த மாயை அதில் வியாப்பியமும் ஆகும். வியாபகம் என்பதற்கு விரிவு என்பது பொருள். வியாப்பியம் என்பதற்கு உள்ளடங்கி நிற்றல் என்பது பொருள்.

மாமாயை குடிலை விந்து என்பன சுத்தமாயையைக் குறிக்கும் வேறு பெயர்கள். மோகினி என்பது அசுத்த மாயையின் மறுபெயர். ஆணவத்தோடு கலவாமையால் சுத்த மாயை மயக்கத்தைச் செய்யாது. அசுத்த மாயை ஆணவத்தின் சார்பினால் மயக்கத்தைச் செய்யும். அது பற்றியே அது மோகினி எனப்பட்டது. மோகினி மயக்குவது. மேலும் மாயை என்றாலே அஃது அசுத்த மாயையைத்தான் குறிக்கும்.

பிரகிருதி மாயை

இனி, இவ்விரண்டு மாயைகளோடு பிரகிருதி மாயை என்பதையும் சேர்த்து மும் மாயைகள் என வழங்குவர். பிரகிருதி மாயை என்பது தனித்த ஒரு மாயையன்று. அஃது அசுத்த மாயையினின்றும் தோன்றிய காரியமேயாகும். அசுத்த மாயை மயக்கத்தைச் செய்யும் எனப் பார்த்தோம். அம் மயக்கம் சிறிதேயாகும். ஆயின் அசுத்த மாயையின் காரியமாகிய பிரகிருதி மாயையோ பெருமயக்கத்தைத் தருவதாகும். அசுத்த மாயை சுத்த மாயையின் உள்ளடங்கி நிற்பது எனப் பார்த்தோம். அவ்வாறே பிரகிருதி மாயை அசுத்த மாயையின் உள்ளாக அடங்கி நிற்பதாகும். எனவே சுத்தம், அசுத்தம், பிரகிருதி ஆகிய மும் மாயைகளையும் முறையே மேலாய் நிற்பது, அதன் உள்ளே நிற்பது. அதற்கும் உள்ளே நிற்பது என உணர்ந்து கொள்ளவேண்டும். நம்முடைய உலகம் தோன்றுவது பிரகிருதி மாயையிலிருந்துதான். எனவே பிரகிருதி மாயை நம்மோடு எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதை முதலில் நோக்குவோம். பிரகிருதி மாயை முக்குண வடிவாய் இருக்கும். சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பன அம்முக்குணங்கள். மணத்தினைத் தன்னுள்ளே நுட்பமாய் அடக்கி நிற்கும் அரும்புநிலை போலப் பிரகிருதி மாயை அம்முக்குணங்களையும் சூக்குமமாய் உள்ளடக்கி நிற்கும். எனவே முக்குணங்களும் வெளிப்படாது சூக்குமமாய் அடங்கி நிற்கும் நிலையே பிரகிருதி மாயை எனலாம். பிரகிருதி என்ற சொல்லுக்குக் காரணம் என்பது பொருள். மேற்கூறிய முக்குணங்களுக்குக் காரணமாதல் பற்றிப் பிரகிருதி எனப்பட்டது. தமிழில் அது மூலப்பகுதி எனப்படும்.

பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும்
ஆன்ம தத்துவங்கள் 24
அந்தக்கரணங்கள் 4

இத்தகைய பிரகிருதியினின்றும் உயிருக்கு உதவுவனவாகிய அகக் கருவிகள் முதலில் தோன்றும். அகக் கருவிகளை அந்தக் கரணங்கள் என்பர். சித்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னும் நான்குமே அவ்வகக்கருவிகள். அவை தோன்றும் முறையைப் பார்ப்போம்.

சித்தம்

முக்குணங்களும் வெளிப்படாத காரண நிலையில் நின்ற பிரகிருதி பின்பு அக்குணங்கள் வெளிப்பட்டுத் தம்முள் சமமாய் நிற்கும் நிலையினதாய் ஆகும். அந்நிலையில் அது குண தத்துவம் எனப்படும். வெளிப்பட்டதனை வியத்தம் என்றும் வெளிப்படாது நிற்பதனை அவ்வியத்தம் என்றும் கூறுவர். பிரகிருதிக்கு அவ்வியத்தம் என்ற மறு பெயரும் உண்டு. அவ்வியத்தமாய் நின்ற பிரகிருதியே முக்குணங்களும் சமமாய் வெளிப்பட்டு வியத்தமாய் நிற்கையில் குணதத்துவம் எனப்படுகிறது. இக்குண தத்துவமே சித்தம் என்னும் அந்தக்கரணமாகும். சித்தம், ஆன்மா யாதொன்றையும் சிந்திப்பதற்குக் கருவியாய் அமையும்.

புத்தி

முக்குணங்களும் சமமாய் நின்ற இக்குண தத்துவத்தில் புத்தி என்னும் அந்தக்கரணம் தோன்றும். புத்தியில் சாத்துவிக குணம் மிகுதியாகவும் ஏனைய இரு குணங்களும் குறைவாகவும் இருக்கும். இங்கே ஒன்றைச் சொல்ல வேண்டும். ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றுகிறது என்றால் ஒன்று மற்றொன்றாய்ப் பரிணாமம் அடைகிறது என்பது கருத்தாகும். பரிணாமாவது மாற்றம் இதுபற்றி ஓர் ஐயம் எழக்கூடும். அஃதாவது குண தத்துவத்திலிருந்து புத்தி தோன்றும் எனப் பார்த்தோம். இப்பொழுது கூறியபடி குணதத்துவம் புத்தியாய்ப் பரிணமிக்கும் என்றால் அவ்வாறு புத்தியாய்ப் பரிணமித்த பின்பு அக்குணதத்துவம் தன்நிலையில் நின்று தனக்குரிய செயலை எப்படிச் செய்யும்? என்பதே அவ்ஐயம் இதற்குரிய விடையைக் காண்போம். பரிணாமத்தில் இரண்டு வகையுண்டு. பால் முழுவதும் திரிந்து தயிராகி விடுகிறது. இம்மாற்றம் முழுப் பரிணாமம் எனப்படும். வெண்ணெயைச் சிலநாள் வைத்திருந்தால் அதன் ஒரு பகுதியில் புழுத்தோன்றும், ஒரு பகுதி புழுவாக மாறுவதால் இம்மாற்றம் ஏகதேச பரிணாமம் எனப்படும். பிரகிருதியிலிருந்து காரியங்கள் தோன்றுவது பால் தயிராவது போல முழுப் பரிணாமம் அன்று; வெண்ணெயில் புழுத்தோன்றுவது போல ஏகதேச பரிணாமமே யாகையால் ஒரு தத்துவம் தனது ஒரு பகுதியில் வேறொரு தத்துவமாய்ப் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமித்த பின்பும் பரிணமியாது நின்ற பகுதி முன்னைத் தத்துவமாகவே நின்று தனக்குரிய செயலைச் செய்யும். அம் முறையில் குணதத்துவம் தனது ஒரு பகுதியில் புத்தியாய்ப் பரிணமித்த பின்பும் தனது நிலையில் நின்று தனக்குரிய செயலைச் செய்வதற்குத் தடைஇல்லை. இது இனிவரும் பிற தத்துவங்களுக்கும் பொருந்தும்.

முக்குணங்களும் அறவே தோன்றாத நிலையைப் பார்த்தோம். அதுவே பிரகிருதி, முக்குணங்களும் சமமாய்த் தோன்றிய நிலையைப் பார்த்தோம். அதுவே குண தத்துவம். அதன்பின், முக்குணங்களுள் சாத்துவிகம் மிகுந்தும் ஏனையவை குறைந்தும் உள்ள நிலையைப் பார்த்தோம். அதுவே புத்தி தத்துவம். இனி வரும் காரியங்களிலெல்லாம் இதுபோல ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும். ஏனையவை குறைந்திருக்கும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இக்குணங்களுள் சாத்துவிக குணம் பிரகாசம், மென்மை, அமைதி முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும் இராசத குணம் வன்மை. செயலூக்கம், கொடுமை முதலிய இயல்புகளைத் தோற்றுவிக்கும், தாமத குணம், மந்தம், மூடம், மோகம் முதலிய இயல்புகளை விளைவிக்கும். சாத்துவிக குணம் இன்பத்திற்கும் இராசத குணம் துன்பத்திற்கும், தாமத குணம் மயக்கத்திற்கும் ஏதுவாகும். குண தத்துவத்தில் புத்தி தோன்றும் என அறிந்தோம். இவ்வந்தக்கரணமே ஆன்மா யாதொன்றையும் இஃது இன்னது என்று நிச்சயம் செய்வதற்குக் கருவியாகும். இக் கருவி நிச்சயித்தல் ஆகிய அறிவுத் தொழிலைச் செய்தற்கு ஏற்றவாறு பிரகாசமான சாத்துவிக குணம் மிக்குடைய தாயிருத்தல் நோக்குதற்குரியது.

அகங்காரம்

புத்தி தத்துவத்தினின்றும் அகங்காரம் என்னும் அந்தக் கரணம் தோன்றும். இதில் இராசத குணம் மிகுதியாகவும் ஏனை இரு குணங்களும் குறைவாகவும் நிற்கும். யான் இதனை அறிவேன். யான் இதனைச் செய்வேன். யான் இதனை நுகர்வேன் என்றாற் போல எச்செயலிலும் ஆன்மா முனைத்தெழுவதற்கு இவ்வகங்காரமே கருவியாகும். அவ்வாறு எழுச்சியுறுவதற்கு ஏற்றவாறு இக்கருவி இராசத குணம் மிக்குடையதாயிருத்தல் காணலாம். எல்லா வகையான எழுச்சிக்கும் அகங்காரமே காரணமாய் இருத்தலால், இனித்தோன்றும் பல தத்துவங்களுக்கு அது காரணமாய் நிற்கிறது. அஃது எவ்வாறு என்பதைப் பார்ப்போம். அகங்காரம் குண இயல்பால் மூன்று கூறாய் நிற்கும். அவை சாத்துவிக குணக் கூறு, இராசத குணக் கூறு, தாமத குணக்கூறு என்பன. சாத்துவிக குணக் கூறு தைசத அகங்காரம் என்றும், இராசத குணக்கூறு வைகாரிக அகங்காரம் என்றும், தாமத குணக்கூறு பூதாதி அகங்காரம் என்றும் பெயர் பெறும்.

மனம்

அவற்றுள், சாத்துவிக குணக் கூறாகிய தைசத அகங்காரத்தினின்றும் முதலில் மனம் என்னும் அந்தக்கரணம் தோன்றம். இவ்வந்தக்கரணம் புறத்தேயுள்ள பொருளைச் சென்று பற்றுவதாகும். முன்னே கூறிய சித்தம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றனோடு இம்மனமும் சேர, அந்தக்கரணம் நான்காயினவாறு காணலாம். இவை செயற்படும் முறைமையினைச் செய்யுள் 16இல் நாம் விளக்கமாகக் காணவிருக்கிறோம்.

ஞானேந்திரியங்கள் 5

அகக் கருவிகளாகிய இவைகளின் பின்னர்ப் புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும் தோன்றும், அவை தோன்றும் முறையைக் காண்போம். தைசத அகங்காரத்தினின்றும் மனம் தோன்றும் என அறிந்தோம். அவ்வகங்காரத்தினின்றே மனத்தின் பின்னர் ஞானேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்பன. இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும் இவை புறத்தே உள்ள ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் என்னும் புலன்களை ஆன்மா அறிதற்குக் கருவிகளாதலின் ஞானேந்திரியங்கள் எனப்பட்டன. தமிழில் அறிகருவிகள் என்றும், ஐம்பொறிகள் என்றும் கூறப்படும்.

இவ்விடத்தில் ஓர் ஐயம் எழலாம். மனமும் ஞானேந்திரியமும் ஆகிய இவை ஓரிடத்தில் தோன்றும் என்றல் பொருந்துமோ என்பதே அவ் ஐயம். செவி முதலிய ஞானேந்திரியங்களை வாயிலாகக் கொண்டு ஓசை முதலிய புலன்களைச் சென்று பற்றுவ மனமேயாகும். அகக் கருவியாகிய மனம் இவ்வாறு புறத்தேயும் சென்று புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கவர்ந்தø வெளிப்புலன்களை மனமானது பற்றி அகத்தேயுள்ள புத்திக்குத் தருகிறது. இவ்வாறு மனம் ஏனைய அகக் கருவிகளுக்கும் ஞானேந்திரியங்களாகிய புறக் கருவிகளுக்கும் இடையே நின்று அகம் புறம் ஆகிய ஈரிடத்தேயும் விரைந்து செல்வதாய் உள்ளது. இதனால்,, ஏனைய அகக் கருவிகளைப் போலல்லாமல் மனமானது புறக் கருவிகளாகிய ஞானேந்திரியங்களோடும் இயைந்து நிற்கும் என்பது விளங்கும். இவ்வியைபு பற்றி, மனமும் ஞானேந்திரியங்களும் ஆகிய இவையிரண்டும் தைசத அகங்காரமாகிய ஓரிடத்தே தோன்றின என்று கொள்ளுதல் பொருத்தமுடையதேயாகும். சாத்துவிக குணம் பிரகாசம் உடையது ஆதலால் குண தத்துவத்தில் சாத்துவிக குணம் மிகுந்து போது நிச்சயித்தல் ஆகிய அறிவுத்தொழிலைச் செய்யும் புத்தி தோன்றிற்று எனப் பார்த்தோம். அது போலவே இங்கும் பிரகாசம் உடைய சாத்துவிகக் கூறிலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் தோன்றியுள்ளமை காணலாம்.

ஞானேந்திரியங்களாவன செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என அறிந்தோம். இப்பெயர்கள் உறுப்புக்களின் பெயர்களாய் இருப்பினும் அவ்வுறுப்புக்கள் ஞானேந்திரியங்கள் அல்ல. அவ்வுறுப்புக்களில் நின்று அவ்வப்புலன்களை அறிவனவாகிய ஆற்றல்களே ஞானேந்திரியங்கள் எனப்படுகின்றன. எனவே செவியாகிய உறுப்பில் நின்று ஓசை என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே செவியிந்திரியம் ஆகும். கண் ஆகிய உறுப்பில் நின்று ஒளி என்னும் புலனை அறிகின்ற ஆற்றலே கண்ணிந்திரியம் ஆகும். இவ்வாறே பிற இந்திரியங்களையும் கொள்ள வேண்டும். செவியாகிய உறுப்பு இருந்தும் ஓசையை அறிகின்ற ஆற்றல் அவ்விடத்தே இல்லாத போது கேட்டல் நிகழ்வதில்லை. இவ்வாறே பிற உறுப்புக்களிலும் அந்த அந்த ஆற்றல் இல்லாவிடில் அவ்வவ்வறிவு நிகழாமை கண்கூடு, இதனால் உறுப்பு என்பது வேறு. இந்திரியம் என்பது வேறு என்பதும். இந்திரியம் தங்கி நின்று அறிவதற்கு உறுப்பு இடமாகவுள்ளது என்பதும் தெளிவாகும்.

கன்மேந்திரியங்கள் 5

இனி, கன்மேந்திரியங்கள் தோன்றும் முறையைக் காண்போம். தைசத அகங்காரத்தினின்று மனமும், ஞானேந்திரியங்களும் தோன்றிய பின்னர், வைகாரிக அகங்காரத்தினின்றும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் தோன்றும். அவை வாய், கல், கை, எருவாய், கருவாய் என்பன இவை இம்முறையிலே ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றும். இவை பேசுதல், நடத்தல் முதலிய தொழில்களைச் செய்தற்குக் கருவியாகலின் கன்மேந்திரியங்கள் எனப் பெயர் பெற்றன. தமிழில் தொழிற்கருவிகள் எனவும், செயற்பொறிகள் எனவும் கூறலாம். இவற்றால் நிகழும் தொழில்கள் முறையே பேசுதல், நடத்தல், இடுதல் ஏற்றல், கழித்தல், இன்புறல் என்பன. கை இடுதல் ஏற்றல்களைச் செய்வதாகக் கூறினாலும் உடம்பில் உள்ள எந்த உறுப்பின் இயக்கமும் கையின் செயலாகவே கொள்ளப்படும். அஃதாவது காலை நீட்டுதல், மடக்குதல், தலையை அசைத்தல், புருவத்தை நெரித்தல், கண்களை இமைத்தல், வாயை அசைத்தல் முதலியவையெல்லாம் கையிந்திரியத்தின் தொழில்களாகவே கொள்ள வேண்டும். எருவாய் என மலக்கழிவு வாயினையே கூறினாலும் அஃது உடம்பில் உள்ள பிற கழிவு மண்டலம் முழுவதையும் குறிக்கும். எனவே மலசலம் கழித்தல், எச்சில் உமிழ்தல், உண்டதைக் கக்குதல், மூக்கு நீர் சிந்துதல், வியர்வையை வெளிப்படுத்தல் முதலியவையெல்லாம் எருவாயின் தொழில்களாகவே கொள்ளப்படும். கருவாயும் கழித்தல் ஆகிய தொழிலைத் தானே செய்கிறது. அதனை எருவாய் என்றதில் அடக்கி விடலாமே. அவ்வாறு செய்யாமல் தனியொரு இந்திரியமாக ஏன் கொள்ள வேண்டும் என வினவலாம். எருவாயின் செயலிலும் கருவாயின் செயலிலும் வேறுபாடு உண்டு. எருவாயின் செயலை அடக்கினால் அஃது உடலுக்குத் தீங்கு பயக்கும். ஆனால் கருவாயின் செயலை அடக்கினால் அஃது உடலை நன்றாக வைக்கும். உயிருக்கும் நலம் தரும். இவ்வேறுபாட்டினால் எருவாயும் கருவாயும் வெவ்வேறு இந்திரியங்களாதல் விளங்கும். மேலும் கருவாயின் செயலால் இனப்பெருக்கம் உண்டாதலாகிய வேறுபாடும் குறிப்பிடத்தக்கது. ஞானேந்திரியங்களைப் பற்றிக் கூறும்போது உறுப்புக்கள் இந்திரியமல்ல; அவற்றை இடமாகக் கொண்டு நிற்கும் ஆற்றல்களே இந்திரியங்கள் எனக் குறிப்பிட்டோம். கன்மேந்திரியங்களுக்கும் இது பொருந்தும். வாய், கால் முதலிய இடங்களில் நின்று பேசுதல், நடத்தல் முதலிய செயல்களைச் செய்யும் ஆற்றல்களே கன்மேந்திரியங்களாகும். கன்மேந்திரியங்கள் தொழில் செய்யும் கருவிகளாதலின், ஊக்கத்தைத் தரும் இராசத குணக் கூறாகிய வைகாரிக அகங்காரத்தினின்றும் அவை தோன்றின என்றது பொருத்தம் உடையதாகும்.

தன்மாத்திரைகள்5

இனி, கன்மேந்திரியங்களுக்குப் பின்னர் மூன்றாவது கூறாகிய பூதாதி அகங்காரத்திலிருந்து முதலில் தன்மாத்திரைகள் தோன்றும். அவை சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்பன. சத்த தன்மாத்திரை, பரிச தன்மாத்திரை, ரூப தன்மாத்திரை, ரச தன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, ஆகிய இவை ஐந்தும் இம் முறையிலே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றும். இவ் வைந்து தன்மாத்திரைகளிலிருந்தே பின்பு ஐம்பூதங்கள் தோன்றும். ஐம்பூதங்களுக்கு முதற்காரணமாய் நிற்றல் பற்றியே இவ்வகங்காரம் பூதாதி அகங்காரம் எனப்பட்டது. ஆயின் இதிலிருந்து பூதங்கள் நேரே தோன்றுவதில்லை. முதலில் தன்மாத்திரைகள் தோன்ற, அவற்றிலிருந்தே பூதங்கள் தோன்றும். தன்மாத்திரைகள் நுட்பமானவை. அவற்றிலிருந்து தோன்றும் காரியமான பூதங்கள் பருமையானவை. தன்மாத்திரைகளைச் சூக்கும பூதம் எனவும். பூதங்களைத் தூல பூதம், மகா பூதம் எனவும் வழங்குவர். பொதுவாகப் பூதம் என்றால் அது தூல பூதத்தையே குறிக்கும்.

தன்மாத்திரைகள் பற்றி மேலும் சிறிது கூற வேண்டும். தன்மாத்திரை என்ற சொல்லுக்கு அதனளவில் நிற்பது என்பது பொருள். அதனளவில் நிற்றல் என்றால் என்ன? பின்வருமாறு அதனை விளக்கலாம். ஓசையை நாம் கேட்கும் பொழுது அது வல்லோசை என்றோ, மெல்லோசை என்றோ, இனிய ஓசை என்றோ, இன்னா ஓசை என்றோ சில வேறுபாடுகளை உடையதாய்ச் சிறப்பு வகையால் நமக்குப் புலனாகுமேயன்றி, அவ்வேறுபாடுகள் இல்லாமல் வெறும் ஓசை என்னும் அளவில் பொதுவாய் அது புலனாகாது. ஊற்றினைத் தோல் மூலமாக உணரும் போது வழுவழுப்பு, சொரசொரப்பு, பிசுபிசுப்பு என்றாற் போலச் சிறப்பு வகையால் உணர்கின்றோமேயன்றி, அவ்வேறுபாடுகள் அற்ற வெறும் ஊற்றினை நாம் உணர்வதில்லை. சுவையும் இவ்வாறே, தித்திப்பு, கைப்பு, புளிப்பு என்றாற் போலச் சிறப்பாகப் புலனாகுமேயன்றி வெறும் சுவை என்னும் நிலையில் பொதுவாய் அது புலனாவதில்லை. ஏனையவையும் இவ்வாறே.

ஓசை முதலிய ஐந்தும் இங்குக் கூறிய சிறப்பு நிலையை எய்தாமல் பொதுவாய் நிற்கும் நிலை உண்டு. அஃதாவது ஓசை வன்மை மென்மை முதலிய பாகுபாடு இன்றி ஓசை என்னும் அளவில் நிற்கும். ஊறு வழுவழுப்பு முதலிய பாகுபாடு இன்றி ஊறு என்னும் அளவில் நிற்கும். சுவை இனிப்பு கசப்பு முதலிய பாகுபாடு இன்றிச் சுவை என்னும் அளவில் நிற்கும் அதனளவில் நிற்றல் என்பதன் பொருள் இதுதான். இவ்வாறு நிற்கும் பொதுநிலையிலே அவை தன் மாத்திரைகள் எனப்படுகின்றன. செவி முதலிய பொறிகளுக்குப் புலனாகாத நுண்ணிய நிலை இது.

தன்மாத்திரைகளும் புலன்களும்

ஓசை முதலியவை முதலில் தம் நிலையில் தன்மாத்திரைகளாய் நின்று, பின்பு பூதங்களாய்ப் பரிணமிக்கும் அவ்வாறு பரிணமித்த பொழுது இவ்வோசை முதலியவை அப்பூதங்களை விட்டு நீங்காது அவற்றின் குணங்களாய் நிற்கும். அக்குணங்களும் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் பெயர்களையே பெறும். தமிழில் அவை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப்படும். இந்நிலையில் அவை செவி முதலிய பொறிகளுக்கு அறியப்படும் பொருளாய் புலன்கள் எனவும் விடயங்கள் எனவும் குறிக்கப்படும். தன்மாத்திரைகளும் சத்தம் முலிய பெயர்களைப் பெறும். புலன்களும் அப்பெயர்களையே பெறும். அவற்றிடையே வேறுபாடாவது சூக்குமமாய் நிற்றலும், குணங்களாய் விளங்கி நிற்றலும் ஆகும். தன்மாத்திரைகள், பூதங்களும் முதற்காரணமாகிய தத்துவங்கள், புலன்கள் தத்துவங்கள் அல்ல. பூதங்களின் குணங்களாகிய அவை தாத்துவிகங்கள் எனப்படும்.

பூதங்கள் (5)

தன்மாத்திரைகளிலிருந்து பூதங்கள் தோன்றும் எனக் குறிப்பிட்டோம். அப்பூதங்கள் தோன்றும் முறையை இனிக் காண்போம். சத்தம் முதலிய தன்மாத்திரைகளுள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு பூதம் தோன்றும். சத்தத்திலிருந்து ஆகாயம் தோன்றும். பரிசத்திலிருந்து காற்றுத் தோன்றும். ரூபத்திலிருந்து நெருப்புத் தோன்றும். ரசத்திலிருந்து நீர் தோன்றும். கந்தத்திலிருந்து நிலம் தோன்றும்.

பூதங்களின் குணங்கள்

காரணத்தின் தன்மையே காரியத்திலும் இருக்கும். ஆதலால் எந்தத் தன்மாத்திரையிலிருந்து எந்தப் பூதம் தோன்றிற்றோ அந்தத் தன்மாத்திரையை அந்தப் பூதம் தனது குணமாகக் கொண்டிருக்கும். இம்முறையில் ஓசை ஆகாயத்தின் குணமாய் நிற்கும். ஊறு காற்றின் குணமாய் நிற்கும்; ஒளி நெருப்பின் குணமாய் நிற்கும்; சுவை நீரின் குணமாய் நிற்கும்; நாற்றம் நிலத்தின் குணமாய் நிற்கும். தன்மாத்திரைகளைப் பற்றி அறிய வேண்டிய மற்றொரு செய்தி உண்டு. அஃதாவது, சத்த தன்மாத்திரை சத்தம் ஒன்றேயாய் நிற்கும். பரிச தன்மாத்திரை சத்தம்மும் பரிசமும் என்னும் இரண்டையும் உடையதாய் நிற்கும். உருவ தன்மாத்திரை சத்தமும் பரிசமும் ஆகிய இரண்டோடு உருவத்தையும் உடையதாய் நிற்கும். இரச தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம் ஆகிய மூன்றோடு இரசத்தையும் உடையதாய் நிற்கும். கந்த தன்மாத்திரை சத்தம், பரிசம், உருவம், இரசம் ஆகிய நான்கோடு கந்தத்தையும் உடையதாய் நிற்கும்.

காரணங்களாகிய தன்மாத்திரைகள் இவ்வாறு ஒன்றும், இரண்டும், மூன்றும், நான்கும், ஐந்தும் உடையனவாம் ஆதலின், அவற்றினின்றும் தோன்றும் ஆகாயம் முதலிய பூதங்களும் முறையே ஒன்று, இரண்டு மூன்று, நான்கு, ஐந்து ஆகிய குணங்களை உடையவாயிருக்கும் அஃதாவது, ஆகாயம் ஓசை என்னும் ஒரு குணமே உடையதாகும். காற்று, ஓசை ஊறு ஆகிய இரு குணங்களை உடையதாகும். நெருப்பு ஓசை, ஊறு ஒளி ஆகிய மூன்று குணங்களை உடையதாகும். நீர் ஓசை ஊறு ஒளி சுவை ஆகிய நான்கு குணங்களை உடையதாகும். நிலம், ஓசை ஊறு ஒளி சுவை மணம் ஆகிய ஐந்தும் குணங்களை உடையதாகும். இக் குணங்களுள் இறுதியாய் நிற்பது அவ்வப் பூதத்திற்குரிய சிறப்புக் குணம் எனவும், ஏனையவை பொதுக் குணங்கள் எனவும் அறிதல்வேண்டும்.

மின்னுருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு
வீசுங்கால் தன்னகத்தில் இரண்டாய்ச் செந்தீத்
தன்னுருவின் மூன்றாய்த் தாழ்புனலின் நான்காய்த்
தரணி தலத்து அஞ்சாகி (திருமுறை 6: 54: 5) எனவும்

மண்ணதனில் ஐந்தை மாநீரில் நரன்கை
வயங்கெரியில் மூன்றை மாருதத் திரண்டை
விண்ணதனில் ஒன்றை (திருமுறை 6: 60: 3)

எனவும் வரும்திருமுறைப் பகுதிகளில் ஐம்பூதங்களின் குணங்கள் கூறப்பட்டுள்ளமை காணலாம். இக்கருத்தமைந்த,

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி (போற்றித் திருவகவல் 137141)

என்னும் திருவாசகப் பகுதி பலரும் அறிந்தது.


பூதங்கள் இக்குணங்களையேயன்றி வேறு குணங்களையும் உடையன. பூதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழிலையும் உடையது. அவைகளைப் பற்றிச் செய்யுள் 9இல் நாம் பார்க்க விருக்கிறோம். பூதங்களிலிருந்து தோன்றிய காரியங்களே நாம் வாழும் உலகமும், உலகத்திற் காணப்படும் பல்வேறு வகையான எண்ணற்ற பொருள்களும், பூதங்களும் பூதகாரியங்களும் ஆகிய இவையெல்லாம் உணர்வற்ற சடப் பொருள்களாயிருத்தல் தெளிவு. இவற்றிற்கெல்லாம் முதற் காரணமாய் நிற்பது பூதாதி அகங்காரம் எனவும், அது தாமதகுணக் கூறு எனவும் பார்த்தோம். தாமத குணம் என்பது மூட வடிவாயும் மோக வடிவாயும் இருப்பது. அதிலிருந்து சடமாகிய உலகம் தோன்றும் என்றது பொருத்தம் உடையதாகும். இதுகாறும் கூறியவற்றால் பிரகிருதி மாயையிலிருந்து தோன்றும் காரியங்கள் இவை இவை என்பது புலனாகும். மேற்கண்டவாறு அமைத்துக் காட்டுதல், அவற்றின் தோற்ற முறையை நினைவிற் கொள்ள உதவும் இங்குக் காட்டிய காரியங்கள் இருபத்து நான்கும் தத்துவங்கள் எனப்படும். பிரகிருதி மாயை முதலில் தத்துவமாய்க் காரியப்பட்டே பின் உலகமாய்க் காரியப்படுவதாகும். வித்திலிருந்து நேரே மரம் தோன்றி விடுவதில்லை. வித்திலிருந்து முன்னர் முளை தோன்றும், அது பின்னர் மரமாகும். அதுபோலப் பிரகிருதியிலிருந்து முதலில் நுண் பொருளாகிய தத்துவங்கள் தோன்றும். பின்னே அவற்றின் காரியமாக உலகம் தோன்றும்.

தத்துவங்கள் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுதல்
தத்துவம் என்ற சொல்லுக்கு கருவி என்பது பொருள். எவ்வகையாலேனும் ஆன்மாவிற்குக் கருவியாய் நின்று உதவுவதே தத்துவமாகும். மேற்கூறிய தத்துவங்களில் அந்தக்கரணங்கள் நான்கும், ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஆகிய பதினான்கும் ஆன்மாவின் அறிவு, தொழில்களுக்குக் கருவியாய் நிற்றல் வெளிப்படை. அவற்றின் பின்னர்த் தோன்றும் தன் மாத்திரைகளும் பூதங்களும் ஆகிய தத்துவங்கள் பத்தும் ஆன்மாவிற்கு எவ்வாறு கருவியாய் நின்று உதவுகின்றன என எண்ணலாம். தன்மாத்திரைகள் ஞானேந்திரியங்களுக்கும் கன்மேந்திரியங்களுக்கும் நிலைக்களமாய் அமைந்து அவை தம்மைப் பற்றி நின்று செயற்படுமாறு உதவும். பூதங்கள் அவ்விரு வகை இந்திரியங்களுக்கும் துணையாய் நின்று அவற்றின் ஆற்றலை மிகுவிக்கும். தன்மாத்திரைகளும் பூதங்களும் இவ்வகையில் ஆன்மாவிற்கு உதவும் தத்துவங்களாய் உள்ளன. இது பற்றிய விரிவான செய்திகளை 11முதல் 15 உள்ள செய்யுட்களில் நாம் காணவிருக்கிறோம்.

சைவ சித்தாந்தம், உண்மை விளக்கம் பகுதி – 1


முன்னுரை:

சைவ சித்தாந்தம் என்றும் அழியா உண்மைப் பொருள்களாக மூன்று பொருள்களைக் கொள்ளும். அம்முப்பொருள்களை மேற்பொருள், இடைப்பொருள், கீழ்ப்பொருள் என்று குறிப்பிடலாம். மேற்பொருளாய் இருப்பது இறை. இடைப்பொருளாய் இருப்பவை உயிர்கள். கீழ்ப்பொருளாய் உள்ளவை உயிர்களைப் பற்றியுள்ள மலங்கள்.

மேற்பொருள்

இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். அவனது பெரு நிறைவை எவ்வாறு உணர்ந்து கொள்வது? ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அதனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம்தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும், விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான். எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.

இடைப்பொருள்

உயிரை வடமொழியில் ஆன்மா என்றும், சீவன் என்றும், சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள் எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கியிருப்பவை. இறைவனது பெருநிறைவு, வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம்; உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித் துன்புறும்; பின் அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு மேற்பொருள்; கீழ்ப்பொருள் ஆகிய இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் இடைப் பொருள் ஆயிற்று.

கீழ்ப்பொருள்

மேற்பொருளாகிய கடவுளும், இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கிழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும் பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

கடவுளும் உயிரும்

கடவுளும் உயிரும் சித்து என்ற வகையில் ஓரினம் என்றாலும் அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டனவாகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவது, உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒரு நிகரன அல்ல என்பது விளங்கும்.

உயிரும் மலங்களும்

கடவுட் பொருள் மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாயிற்று. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்ற மாட்டாமல், பருமையான நீரையே பற்றுவதாயிற்று. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள். கடல் வெளியைப் போன்றவன் இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே பற்றியிருப்பதற்கான காரணத்தை இவ்வுவமையிலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

ஆணவம்

இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப் பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை செய்வோமா?

எங்குள் உளன் ஒருவன் காணுங் கொல் என்றஞ்சி
அங்கம் குலைவது அறிவு(நீதி நெறி விளக்கம், 94)

என்றார் குமர குருபர அடிகள். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள் ஒன்று உண்டு. அதுவே ஆணவ மலம் எனப்படுகிறது. எல்லா உயிர்களும் முதலிலிருந்தே ஆணவ மலத்தை உடையவாயின. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும் உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது. கடவுளுக்கு அடுத்த படியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால் சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவ மலமேயாகும். உயிர் அடையும் எல்லாப் பெருங்கேட்டிற்கும் இது மூலம் ஆதலின் மூலமலம் எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்றலின் சகச மலம் எனப்படும். கண்ணை மறைக்கும் புற இருள் போல இஃது அறிவை மறைக்கும் அகவிருள் ஆகும். அது பற்றி இருள் மலம் எனப்படும். மலம் என்று சொன்னாலே அஃது ஆணவ மலத்தையே குறிப்பதாகும்.

மாயை

ஆணவ மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவம் உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது ஆன்மா நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே உடையதாகிறது. அஃதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளேயிருக்கும் தலைவனாகிய இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப் பொருள்களையே நோக்கி நிற்கிறது.

கன்மம்

இந்நிலையில் ஆணவ மலம் திரிபுணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே, இத்திரிபுணர்வால் ஆன்மா தன்னையே எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம் முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.

மும்மலக் கட்டு

மாயை உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம் யான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது. இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம் (கட்டு) என்றும், தளை என்றும் கூறப்படுகின்றன. இம் மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவை ஆணவமாகிய கட்டினை நீக்கி உதவ வந்த கட்டுக்கள், இதனைப் பின்வரும் எடுத்துக் காட்டினால் விளங்கிக் கொள்ளலாம். அவிழ்க்க முடியாத ஒரு கட்டினை எப்படி அவிழ்ப்பது? அதற்கு ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அம் முதற்கட்டு நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள ஆணவ மலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை உயிரோடு சேர்ப்பிக்கின்றான். எனவே ஆணவம் உயிருக்கு முற்கட்டும், மாயை கன்மங்கள் பிற்கட்டும் ஆகின்றன.

பதி, பசு, பாசம் என்னும் பெயர் வழக்கு

ஆணவம், கன்மம், மாயை ஆகியவை பாசம் என்னும் பெயரைப் பெற, அவற்றால் கட்டுண்டு கிடக்கின்ற உயிர் பசு என்னும் பெயரைப் பெறுகின்றது. இருள் வடிவான ஆணவமும், பிறவித் துன்பத்தைத் தரும் கன்மமும், மயக்கத்தைத் தரும் மாயையும் ஆகிய இம்மும் மலக் கட்டினின்றும் பசுக்களாகிய உயிர்களை விடுவித்துக் காப்பவனாகிய இறைவன் பதி எனப்படுகின்றான். மேற்பொருள் என்றும், இடைப்பொருள் என்றும், கீழ்ப்பொருள் என்றும் மேலே நாம் விளக்கிய முப்பொருள்களே பதி, பசு, பாசம் என்னும் இப்பெயர்களால் நூல்களில் குறிப்பிடப் பெறுகின்றன.

இந்நூலின் பெயர் விளக்கம்

முப்பொருள்களை விளக்கிக் கூறும் சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். அவற்றுள் ஒன்று உண்மை விளக்கம் என்னும் இந்நூல். இது சித்தாந்த உண்மைகள் அனைத்தையும் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறுவதாய், சித்தாந்தத்தினை அறிய விரும்புவோர் தொடக்கத்தில் கற்பதற்கு ஏற்றவகையில் அமைந்துள்ளது. எப்பொருளையும் இருவகையாக அறியலாம். ஒன்று, அதன் பொதுமையை மட்டும் உணர்வது மற்றொன்று, அதன் உண்மையை உணர்வது. உண்மையை உணர்வதே மேலானது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? உண்மை என்பதை வடமொழியில் தத்துவம் என்று குறிப்பிடுவர். பொருள்களது உண்மையை உணர்விப்பவை தத்துவ சாத்திரங்கள், அத்தகைய தத்துவ சாத்திரமாகிய இந்நூல் முப்பொருள்களது உண்மையை நன்கு விளக்குவது ஆகலின் உண்மை விளக்கம் என்னும் பெயர் பெற்றது.

நூலின் ஆசிரியர்

இதனைச் செய்த ஆசிரியர் மணவாசகங் கடந்தார் என்பவர். அவர் சந்தான முதற்குரவராகிய மெய்கண்ட தேவரின் மாணாக்கருள் ஒருவர். மற்றொரு மாணாக்கர் அருணந்தி சிவனார். எனவே மனவாசகங் கடந்தார் அவருக்கு ஒருசாலை மாணாக்கர் ஆவார். மனவாசகங் கடந்தார் பற்றிய வரலாறு ஒன்றும் நமக்குத் தெரியவரவில்லை. அவர் திருவதிகை(தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள பண்ணுருட்டி) என்னும் ஊரினர் என்ற குறிப்பு மட்டும் கிடைக்கிறது. இவரது காலம் மெய் கண்டார் வாழ்ந்த காலமாகிய கி.பி 13 ஆம் நூற்றாண்டு என்பது சொல்லாமலே விளங்கும்.

நூலை அமைத்துக் கொண்ட முறை

இந்நூல் வெண்பாயாப்பினால் ஆனது. காப்புச் செய்யுள் உட்பட 54 வெண்பாக்கள் உள்ளன. மனவாசகங் கடந்தார் தாம் வினவிய வினாக்களுக்குத் தம் ஆசிரியர் அருளிய விடையாகவே இந்நூலில் உள்ள பொருள்கள் அனைத்தையும் அமைத்துள்ளார். இவ்வாறு சீடர் ஆசிரியரிடையே நிகழும் உரையாடல் முறையில் வைத்து நம்மனோர் எளிதில் விளங்கிக் கொள்ளும்படியாக உண்மைகளை உணர்த்தியுள்ள ஆசிரியரது திறன் போற்றுதற்குரியது. முப்பொருள்களை வரிசைப்படுத்தி அமைத்துக் கூறும் முறையில் நூலாசிரியர்கள் வேறுபடுகின்றனர். முதலாசிரியராகிய மெய்கண்ட தேவர் தமது சிவஞான போத நூலில் முப்பொருள்களைப் பதி, பாசம், பசு என முதலில் நிறுத்திப் பின் எதிர்வரிசையில் பசு, பாசம், பதி என வைத்து விளக்கிக் கூறினார்.

அவர்தம் தலை மாணாக்கராகிய அருணந்தி சிவனார் சிவஞான போதத்திற்கு வழி நூலாகத் தாம் செய்த சிவஞான சித்தியாரில் தமது ஞானாசிரியர் மேற்கொண்ட முறையையே தாமும் பின்பற்றி அப்படியே அமைத்துக் கொண்டார். இவர்களுக்குப் பின்னர் வந்த உமாபதி சிவனார் தாம் இயற்றிய சிவப்பிரகாசம், திருவருட் பயன் ஆகிய இரு நூல்களிலும் பதி, பசு, பாசம் என்ற வரிசை முறையினையே மேற்கொண்டார். இவ்வாறு இவர்கள் பதியை முதலில் வைத்துக் கூறிச்செல்ல, நமது மனவாசகங் கடந்தார் பாசத்தை முன் வைத்துப் பாசம், பசு, பதி என்ற முறையில் வரிசைப்படுத்தி விளக்கிச் சொல்வது புதியதொரு போக்காகும்.

முப்பொருள்களைப் பதி முதலாக எடுத்துச் சொல்வது மேலிருந்து கீழ் நோக்கிச் செல்லும் முறையாகும். பாசத்திலிருந்து எடுத்துச் சொல்வது கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் முறையாகும். கீழ் உள்ள பொருள்கள் மேல் உள்ள பொருளை விடப் பருமையானவை; ஆதலால் எளிதில் விளங்கக் கூடியவை. மேல் உள்ள பொருள்கள் நுண்மையானவை. ஆதலால் விளங்கிக் கொள்வதற்கு அரியவை. முப்பொருள்களில் கீழ் உள்ள பாசம் மேல் உள்ளவற்றை விட நமக்கு ஓரளவு தெரிந்த பொருள் ஆகிறது. தெரிந்த பொருளை முதலிற் சொல்லிப் பின் தெரியாததை விளக்குதல் என்பது கல்வி முறையில் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். முதலிலேயே தெரியாததை உணர்த்தினால் மாணவர் அதனைப் பற்ற மாட்டாது இடர்ப்படுவர். இதனைக் கருதியே நம் ஆசிரியர் மனவாசகங்கடந்தார் எளிதில் விளங்கக் கூடிய பாசத்தின் இயல்பை முதலில் விளக்கிப் பின் மற்றவைகளின் இயல்பை விளக்கிக் காட்டுகின்றார்.

இந்நூலின் தனிச் சிறப்பு

முப்பொருளின் இயல்புகளை ஏனைய சாத்திரங்களும் விளக்குகின்றன. அவற்றையே உண்மை விளக்கமும் விளக்குகிறது. அவ்வாறாயின், இந்நூலுக்கென்று வேறு தனிச் சிறப்பு ஏதும் இல்லையோ? என்று கேட்கலாம். ஏனைய சாத்திரங்களில் விளக்கப்படாத ஒரு பேருண்மையை உண்மை விளக்கம் விளக்கிக் காட்டுகிறது. அஃது அம்பலவாணர் ஆடும் அருட்கூத்தின் உண்மையாகும். நடராச தத்துவத்தை இந்நூல் போல இனிது விளக்கிக் காட்டுகிற நூல் வேறொன்று இல்லை. இஃது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.

காப்பு

விநாயக வணக்கம்

எடுத்துக் கொண்ட இந்நூல் இடையூறு இன்றி இனிது முடிதற் பொருட்டு முதலில் விநாயகப் பெருமானை வணங்கி நூலைத் தொடங்குகிறார் ஆசிரியர்.

ஐங்கரனை உள்ளத்தில் வைப்போம்
வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா
உண்மை விளக்கம் உரை செய்யத் திண்மதஞ்சேர்
அந்தி நிறத் தந்திமுகத் தொந்திவயிற்று ஐங்கரனைப்
பந்தமறப்புந்திள்வைப் பாம்

பதவுரை

வண்ணம் உபநிடதங்களின் தெளிபொருள் ஆகிய வளத்தை
தரும் விளக்கிச் சொல்லுகின்ற
ஆகம நூல் சிவாகம நூல்களில்
வைத்த உணர்த்தப்பட்ட
பொருள் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையியல்புகளை
வழுவா அவ்வாகமங்களின் கருத்திற்குச் சிறிதும் மாறுபடாத வகையில் விளக்கிக் கூறுகின்ற
உண்மை விளக்கம் உண்மை விளக்கம் என்னும் பெயரை உடைய இச் சாத்திர நூலை
உரை செய்ய யாம் உரைத்தற்கு
திண் மதம் சேர் அழுத்தமான மதநீர் ஒழுகும் கன்னங்களையும்
அந்தி நிற செவ்வானம் போன்ற சிவந்த ஒளியையும் கொண்ட
தந்தி முக யானை திருவயிறும்
ஐங்கரனை ஐந்த திருக் கைகளும் உடையவராகிய விநாயகக் கடவுளை
பந்தம் அற எமது அறிவில் உள்ள அஞ்ஞானம் ஆகிய தடை நீங்கும் படி
புந்தியுள் வைப்பாம் உள்ளத்துள் வைத்துத் தியானிப்போம்

பொழிப்புரை

உபநிடதங்களின் தெளிபொருளை விளக்குவன சிவாகமங்கள், அச் சிவாகம நூல்களில் உணர்த்தப்படும் பொருள்கள் பதி, பசு, பாசம் என்பன. அம்முப்பொருள்களின் இயல்புகளை அவ்வாகமங்கள் கூறுகின்றபடியே வழுவாமல் உரைக்கப் புகுவது உண்மை விளக்கம் என்னும் இந்நூலாகும். இந்நூலை யாம் செய்வதற்கு விநாயகப் பெருமானது அருளை வேண்டி அவரை எம் உள்ளத்திற் கொண்டு வழிபடுவோம். அவர் செவ்வானம் போன்ற சிவந்த ஒளியினை உடையவர். மதம் பொழியும் ஆனைமுகம் கொண்டவர். பருத்த திருவயிற்றினை உடையவர். ஐந்து திருக்கைகளோடு விளங்குபவர். இத்தகைய வடிவினராக நினைத்தற்கு உரியவர் அவர்.

விளக்கம்

வண்மை தரும் ஆகம நூல்

உபநிடதங்களும் சிவாகமங்களும் முடிவால் வேறல்ல என்று சித்தாந்த சைவம் கொள்ளும். அவை சொல்லும் முறையாமல் வேறுபடுவனவேயன்றிப் பொருளால் வேறுபடுவன அல்ல. ஆன்மாக்கள் முதலிலேயே பொருள்களின் நுண்ணியல்பை உணர்ந்து கொள்ளும் அறிவு வன்மை உடையன வல்ல. முதலிலேயே உணரமாட்டாது, படிப்படியே அறிவு விளங்கி மேம்பட்டு வந்து முடிவிலேயே முழுவுண்மையை உணரும் தகுதியைப் பெறும். இதற்கு ஓர் எடுத்துக் காட்டுக் கூறுவோம்.

இரவில் வானத்தில் வடதிசையில் ஏழுவிண்மீன்களின் கூட்டம் காணப்படும். அவை ஏழு முனிவர்களின் பெயரால் கட்டப்படும். அவ் விண்மீன்களில் ஒன்று வசிட்டர் என்னும் மீன். அத பெரிதாயிருக்கும். கண்ணுக்கு எளிதிற் புலப்படும். அதன் அருகே இருப்பது அருந்ததி என்னும் மீன். அருந்ததி என்பவள் வசிட்ட முனிவரின் மனைவி. கற்பின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுபவள். வசிட்டர் மீனின் அருகிலுள்ள மீனுக்கு அவள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அருந்ததி மீன் மிகமிகச் சிறியதாய் இருக்கும்; பார்த்தவுடனேயே புலப்பட்டுவிடாது. கற்பிற் சிறந்த ஒரு பெண்ணின் வடிவம் என்பதால் அம் மீனைப் பலரும் காணு விரும்புதல் இயல்பு.

அருந்ததி மீனை ஒருவர் பார்க்க விரும்புகிறார் என்று கொள்வோம். அவருக்கு அதனைக் காட்ட முற்படுகிறான் மற்றொருவன். அப்பொழுது அவன் ஒரு முறையைக் கையாளுவன். அஃதாவது, அவன் முதலிலேயே இதுதான் அருந்ததி மீன் என்று காட்டமாட்டான். முதலிலேயே காட்டினால் கண்டு கொள்ள இயலாது என்று கருதி, அருந்ததி மீனை ஒட்டினாற் போல உள்ள பெருமீனாகிய வசிட்டர் மீனைச் சுட்டி, அதுதான் அருந்ததி என்று முன்னர்க் காட்டி, அதனை அவர் கண்ட பிறகு, அதுவன்று அருந்ததி மீன், அதற்குப் பக்கத்தில் உற்றுப் பாருங்கள். ஒரு நுண்ணிய மீன் விளங்குகிறது அல்லவா? அதுதான் அருந்ததி மீன் என்று சொல்லி, அவர் அதனை எளிதாகக் கண்டு கொள்ளும்படி செய்வான்.

இம்முறையிலேதான் உபநிடதங்கள் பொருள்களின் உண்மையை முழுதுமாக உணர்த்தாமல், ஓரளவாக உணர்த்துகின்றன. பொருள்களைப் பொதுப்படக் கூறிச் செல்கின்றன. உபநிடதங்கள் பொதுவாகக் கூறுவது, அருந்ததியின் அருகில் உள்ள மீனை அருந்ததி என்று காட்டுதல் போன்றது. உபநிடதங்கள் அங்ஙனம் குறிப்பாய் உணர்த்திய பொருள்களைச் சிவாகமங்கள் தெளிவுபட வெளிப்படையாக இனிது விளக்கிக் கூறுகின்றன. இஃது அருந்ததி மீனையே சுட்டி, அதுவே அருந்ததி எனக் காட்டுதல் போன்றது. இவ்வாறு உபநிடதங்களின் தெளிபொருளைத் தருவன சிவாகமங்கள் ஆதலின் வண்மை தரும் ஆகம நூல் என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.

நூல்

மாணவர் ஆசிரியரிடம் வேண்டுதல்

1.பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதானந் தப்பொருளாம்
மெய்காட்டும் மெய்கண்டாய் விண்ணப்பம் பொய்காட்டா

மெய்யா திருவெண்ணை வித்தகா சுத்தவினா
ஐயாநீ தான்கேட் டருள்

பதவுரை

பொய்காட்டி (வந்து அடைந்த உயர்ந்த பக்குவமுள்ள மாணவர்க்கு) நிலையில்லாத உணர்வுகளாகிய பாச ஞானமும், பசு ஞானமும் உனக்கு உரியனவல்ல என்பதைப் புலப்படுத்தி

பொய் அகற்றி அவற்றை நீக்கி

போத ஆனந்தப் (பதி ஞானத்தை விளங்கச் செய்து)தூய அறிவாயும், பேரின்பமாயும், மெய்ப் பொருளாயும் விளங்கும் சிவத்தை

காட்டும் அவர்க்கு அனுபவப்படுமாறு காட்ட வல்ல

மெய்கண்டாய் மெய் கண்ட நாதரே!

விண்ணப்பம் அடியேன் செய்யும் விண்ணப்பம் ஒன்று உண்டு.

பொய் காட்டா வினை தராத

மெய்யா உடம்பை(அருளுடம்பை) உடையவரே

திருவெண்ணை திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளியுள்ள ஞானதேசிகரே!

ஐயா ஐயனே!

சுத்த வினா திருவருளோடு ஒன்றாய் நிற்பதாகிய சுத்த நிலையைத் தலைப்படுவதற்கு விரும்பி அடியேன் கேட்கும் சில வினாக்களை

நீதான் கேட்டருள் உமது திருச்செவியில் ஏற்றருளி அவற்றிற்கு விடை கூறியருள வேண்டும்.

பொழிப்புரை

வந்தடைந்த பக்குவ ஆன்மாக்களுக்கு நிலையற்ற உணர்வுகளாகிய பாசஞான, பசு ஞானங்களை நீக்கி, அவற்றின் நீங்கி நிற்கும் அவர்தம் அறிவில் பதிஞானமாகிய திருவருள் ஒளியை விளங்கச் செய்து. அவ்வருளுக்கு முதலாகிய பேரின்ப மயமான மெய்ப் பொருளாகிய சிவத்தை அனுபவமாக உணரவைக்கும் மெய்கண்ட நாதரே! அடியேன் உம்மை வேண்டிக் கொள்கிறேன். வினை காரணமாக வராத அருளுருவைக் கொண்ட முதல்வரே! திருவெண்ணெய் நல்லூரை இருப்பிடமாகக் கொண்ட ஞானதேசிகரே! அடியேன் சுத்த நிலையாகிய ஞான வாழ்வினை எய்தும் விருப்பத்தால் கேட்கும் வினாக்களைத் திருச் செவியேற்று அவற்றிற்கு விடை கூறியருள வேண்டும் என்று ஆசிரியரிடம் விண்ணப்பம் செய்கின்றார் மாணவர்.

விளக்கம்

பாச ஞானம்

ஆன்மாக்களாகிய நாம் உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் சார்ந்து நின்று அவற்றால் அறிவு விளங்கப் பெறுகிறோம். அங்ஙனம் கருவி கரணங்களால் உலகப்பொருள்களை அறியுமிடத்து, அவ்வறிவு பாச அறிவு அல்லது பாச ஞானம் எனப்படும். அறிதற் கருவிகளாகிய அவையும், அவற்றால் அறியப்படும் பொருள்களும் ஆகிய அனைத்தும் மாயையிலிருந்து தோன்றிய காரியங்களேயாகும். மாயை பாசம் எனப்படும் என்பது நாமறிந்தது. எனவே மாயையின் காரியங்களாகிய உடம்பும், கண் முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும், அவற்றால் அறியப்படும் உலகப் பொருள்களும் ஆகிய எல்லாம் பாசப் பொருள்கள் என்பது தெளிவு. பாசமாகிய கருவிகளைக் கொண்டு பாசமாகிய உலகத்தை அறியும் பாசஞானம் எனப்படுவதாயிற்று. ஆன்மா பாசமாகிய கருவிகளையும் பாசமாகிய உலகப் பொருள்களையும் தனக்கு வேறானவை என்று உணராமல், அப்பொருள்களையே தானமாக மயங்கி அறிகிறது. வேறான அவற்றைத் தானாக அறிவதனால் தனது உண்மையியல்பை அறியாது போகிறது.

ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளக்கலாம். பொன்னால் செய்த அணிகலனில் உள்ள அழகிய வேலைப்பாடு பொன்னை மறைத்துத் தனது அழகினையே உணரச் செய்து மக்களை மயக்குகிறது. அதுபோல, ஆன்மாவை உடம்பும் ஐம்பொறி முதலிய கருவி கரணங்களும் தம் வயப்படுத்தி ஆன்மா தன்னை அறியாதபடி மறைத்து மயங்கச் செய்து விடுகின்றன. பொன் போல இருப்பது ஆன்மாவின் உண்மையியல்பு. பொன்னைப் பொருந்தி நின்று மயக்கும் அழகிய வேலைப்பாடு போன்றவை ஆன்மாவைப் பொருந்தி நின்று மயக்கும் தனுகரணங்கள். நிலையில்லாத இக்கருவிகரணங்கள் ஆன்ம அறிவில் நிலையாத உணர்வுகளை எழுப்புதலால் பொய் எனப்பட்டன. பொய் என்பதற்கு நிலையாதது என்பது பொருள் இல்லாதது என்பது கருத்தன்று.

பசு ஞானம்

ஞானாசிரியரையடைந்து அவரது உபதேசத்தைப் பெற்ற காலத்திலேதான் ஆன்மா தன்னைச் சார்ந்துள்ள கருவி கரணங்கள் அறிவில்லாத சடப்பொருள்களே என்பதையும், தான் அவற்றின் வேறாகிய சித்துப் பொருள் என்பதையும் உணரும். உணர்ந்து, அக் கருவிகள் நாமல்ல என்று அவற்றினின்றும் நீங்கும். அவற்றினின்றும் நீங்குதலாவது, அவற்றின் வசப்படாமை. அவற்றின் வழியில் நில்லாமை. ஒவ்வோர் ஆன்மாவும் வியாபகப் பொருளாய் இருப்பது, எங்கும் நிறைந்த பொருளாயிருப்பது. அதனால் வியாபக அறிவே அதற்குரிய இயல்பான அறிவாகும். உடம்பையும் கருவிகளையும் சார்ந்துள்ள கட்டுநிலையில் தனது உண்மையியல்பை உணராமல், அவற்றால் உண்டாகும் சிற்றறிவையே தனக்குரிய அறிவு என்று அது மயங்கி உணரும். ஞானாசிரியருடைய அருளுரையைப் பெற்ற முத்தி காலத்தில் அது கருவி கரணங்களினின்றும் நீங்கியவுடன் தனக்கு இயற்கையாகவுள்ள வியாபகவுணர்வு விளங்கப் பெறும். காட்டாக, மேக படலம் மூடியிருந்த காலத்தில் ஆகாயத்தின் விரிந்த தன்மை புலப்படாது. காற்றால் அடித்துச் செல்லப்பட்டு மேகபடலம் நீங்கியபோது ஆகாயத்தின் அளப்பரிய பரப்பு விழங்கித் தோன்றும். அதுபோல, ஐம்பொறி முதலிய கருவிகளின் நீங்கி, அவற்றால் உண்டான சிற்றறிவும் நீங்கிய காலத்தில் ஆன்மவுணர்வு தன் அளப்பரிய வியாபக இயல்பு விளங்கப் பெறும். கருவி கரணங்களால் உயிர்க்கு உண்டாகும் சிற்றறிவே சுட்டறிவு என்றும், கருவியறிவு என்றும், பாசஞானம் என்றும் கூறப்படும். அஃது ஆன்மாவின் பொதுவியல்பு செயற்கையியல்பு வியாபக அறிவே அதன் உண்மையியல்பு.

இவ்வாறு கருவியறிவாகிய பாச ஞானம் நீங்கி வியாபக அறிவைப் பெற்றபோது எல்லாவற்றையும் அறியும் நிலை கைகூடும். அந்நிலையில் ஆன்மா நானே எல்லாவற்றையும் அறிகிறேன். என்றும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் என்றும், நானே பெரும்பொருள் என்றும் கருதித் தன்னையே பதிப்பொருளாக மயங்கி அறியும். அவ்வறிவு பசு அறிவு அல்லது பசு ஞானம் எனப்படும். பசுவிற்கு மேல் உள்ள பதியாகிய முதற்பொருளை அறியமாட்டாது பசுவாகிய தன்னையே பதியாக அறிந்து நிற்கும் அறிவு பசு அறிவு எனப்படுவதாயிற்று. அளப்பரிய ஆகாயம் இரவெல்லாம் விளக்கமின்றி இருண்டு கிடக்கிறது. விடிந்தவுடன் அது விளக்கமுற்றுத் தோன்றுகிறது. அவ்வாறு விளங்கித் தோன்றுவதற்குக் காரணம், காலையில் எழுந்த சூரிய வொளி அதன்கண் உடன் கலந்து அதனை விளக்கி நிற்பதேயாகும். இவ்வுண்மையை உணர்ந்து கொள்ளாமல், தன்னறிவு வியாபக நிலையை எய்தியதைக் கண்டு தன்னையே பெரிய பொருளாக பதிப்பொருளாக மதிப்பது அறியாமையின் விளைவாகும். அவ்வியாபக நிலையிலும் திருவருள் உடனிருந்து அறிவிக்கத்தான் ஆன்மா அறிகிறதேயன்றித் தானே அறியவில்லை. எந்நிலையிலும் ஆன்மாவின் இயல்பு, அறிவிக்கவே அறிவதாகும்.

பதிஞானம்

முதல்வனது அருளின் உண்மையை அவ்வான்மா உளங்கொள்ளுமாறு ஆசாரியர் பின்வருமாறு அறிவுறுத்துவார். இத்தனை நாள் வரையில் பிறப்பு இறப்பிற்பட்டு இடர்ப்பாடு உற்று வந்த நீ பதி ஆவாயோ? பாசத்தோடு கூடிய நீ பசு ஆவாய். உன்னைப் பாசத்தினின்றும் நீக்கி எடுத்து உனது வியாபக அறிவை விளக்கிய முதற் பொருள் தூய அருளேயாகும் என்பதை உணர்வாயாக என்று உணர்த்துவார். இங்ஙனம் ஞானாசிரியர் உணர்த்த, அவ்வான்மா அதனைச் சிந்தித்துத் தன்னுள்ளே ஊன்றி நோக்கியபோது, தன்னறிவிற்கு அறிவாய் நிற்கும் பதிப்பொருளினது அறிவாகிய திருவருள் அதற்குப் புலப்படும். அதுவே பதிஞானம் எனப்படுவது அந்தப் பதிஞானமாகிய பேருணர்வில் ஆன்மவுணர்வு அடங்கித் தன் முனைப்பின்றி நிற்பின். அவ்வருளுக்கு முதலாகிய சிவம் பேரின்பப் பொருளாய் அனுபவப்படும்.

மேற்கூறிய மூவகை ஞானங்களில் பாசஞானமும் பசுஞானமும் நிலையில்லாத உணர்வுகளாய்க் கழிவன ஆதலின் பொய் எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். இறைவனது ஞானமாகிய பதிஞானமே நிலைபெற்ற உணர்வு ஆதலின் மெய்யுணர்வு எனப்படும். அதுவே மெய்ப் பொருளாகிய சிவத்தைக் காட்ட வல்லது. சேய்மையில் உள்ள சூரியனை அதன்கண் உள்ள ஒளியை நமது கண்ணிற்குக் காட்டி நிற்கும். அது போல, அறியவாராத இறைவனை அவனது அருளொளியாகிய பதிஞானமே காட்டவல்லதாகும். ஏனைய ஞானங்களால் அவனை அறியவொண்ணாது. அத்தகைய பதிஞானத்தை ஆன்மவுணர்வில் விளங்கச் செய்து, பதியாகிய சிவத்தைக் காட்டுபவரே ஞானகுரு ஆவார். ஞானநெறியில் நிகழும் இவ் அனுபவப் படிமுறைகளை யெல்லாம் இந்நூலாசிரியர் பொய்காட்டிப் பொய் அகற்றிப் போத ஆனந்தப் பொருளாம் மெய்காட்டும் மெய்கண்டாய் என்ற அடிகளில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளமை காணலாம். மெய்யுணர்வை முற்றப் பெற்ற மெய்கண்ட தேவராகிய முதற் குரவர் தம்மையடைந்த பக்குவ மாணாக்கருக்கு மேற்கூறிய படிமுறையிலே ஞானத்தை உணர்த்தி ஆட்கொண்டார் என்பதை அவர்தம் மாணாக்கராகிய மனவாசகங் கடந்தாரின் இவ்வாக்கினால் நாம் நன்கு அறியலாம்.

போத ஆனந்தப் பொருளாம் மெய்

இறைவனது உண்மையியல்பைப் போதம், ஆனந்தம், மெய் என்ற மூன்று சொற்களால் குறிப்பிட்டார் ஆசிரியர். இவற்றுள், மெய் என்பது நிலைத்து நிற்பது. அஃதாவது என்றும் மாறுதல் இன்றி ஒரு தன்மைத்தாய் நிலைத்து நிற்பது. இது வடமொழியில் சத்து எனப்படும். நிலைத்து நிற்பது சத்து ஆதலின், நிலையில்லாதது அசத்து எனப்படும். சத்து என்பது தமிழில் மெய் எனப்படுதலின் அசத்து என்பது பொய் என்று சொல்லப்படும். மாற்றம் அல்லது ஒரு நிலையில் நில்லாத தன்மை என்பது பிற பொருளால் வருவது; பிற பொருளின் வசப்படுவதால் வருவது. கட்டாக, ஆன்மா பிறபொருளாகிய உடம்பின் வசப்படுவதால் அது பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. பசித்தும், நோயுற்றும், மெலிந்தும், மூத்தும் இவ்வாறு பலவிதமான மாற்றங்களை அடைவதற்குக் காரணம், அஃது உடம்பின் வசப்பட்டிருப்பதுதான். ஆன்மா மாறி மாறிப் பிறந்தும் இறந்தும், இன்பத் துன்பங்களை மீள மீள அடைந்தும் பல மாற்றங்களை எய்துவதற்குக் காரணம், பிற பொருள்களாகிய மும்மலங்களோடு கூடி அவற்றின் வசப்பட்டிருப்பதேயாகும்.

இறைவன் எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனேயாயினும் அவன் அவற்றில் சிறிதும் தோயாது. அவற்றின் வசப்படாது, தனித்தே நிற்பான். அவன் தன் வயம் இன்றிப் பிறபொருளின் வயப்பட்டு, அதற்கேற்ப நடக்க வேண்டியவனாய் இருப்பின், அவன் அனைத்துலகங்களையும் அனைத்துயிர்களையும் எங்ஙனம் ஆளுதல் கூடும்? எனவே அவன் குறைவற்ற தன் வயம் உடையவன் என்பது தெளிவு. அவன் தன்வயம் உடையவன் என்பது பெறப்படவே, பிற பொருளால் வரும் மாற்றம் இல்லாதவன் என்பதும் தானே விளங்கும். இவ்வாறு என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் என்ற பொருளிலேயே இறைவனை மெய்ப் பொருள் என்றும், செம்பொருள் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.

இனி, இறைவனுக்குரிய மற்றோர் இயல்பாக மன வாசகங்கடந்தார் குறிப்பிடுவது போதம் என்பது. போதம் என்பது அறிவு. இறைவனது அறிவு சிற்றறிவு ஆகாது. பேரறிவாய் நிற்பது. சிற்றறிவு என்பது குறைபாடுடைய அறிவு. ஒரு பொருளை அறியுமிடத்து அப்பொருளில் அழுந்திவிடுதல், அவ்வாறு ஒன்றில் அழுந்தும்போது மற்றொன்றினை அறியமாட்டாது நிற்றல், அதனால் ஒவ்வொன்றாகவே அறிதல், ஒன்றனையும் தொடர்ச்சியாக அறிந்து நில்லாது விட்டுவிட்டு அறிதல், அறிந்ததனை மறத்தல், தானாக அறியாது அறிவிக்கவே அறிதல் என்னும் இக்குறைபாடுகளெல்லாம் உயிர்களின் அறிவுக்கு உண்டு. இப்படிப்பட்ட குறைபாடு ஒன்றும் இல்லாத அறிவு இறைவன் ஒருவனுக்கே உரியது. அவனது அறிவு எல்லாவற்றையும் எப்போதும் தானே அறியும் அறிவாகும். அவ்வாறு அறியும் அறியாமை பற்றமுடியாது. ஆகவே அஃது என்றும் தூய அறிவாகவே இருக்கும். இவ்வாறு உள்ள இறைவனது அறிவையே போதம் எனக் குறிப்பிட்டார் மனவாசகங் கடந்தார்.

இனி, அவர் இறைவனது இயல்பாகச் சொல்லுவது ஆனந்தம் என்பது. அறிவே இன்பத்திற்குக் காரணம். இறைவன் குறைவில்லாத, நிறைந்த பேரறிவை உடையவன். ஆதலால் அவன் குறைவில்லாது நிறைந்த பேரின்பத்தையும் உடையவன் ஆகிறான். இறைவனது இயல்புகளாக இதுகாறும் கூறிவந்தவற்றை ஒருசேர நோக்கினால், சத்தாயும் சித்தாயும் ஆனந்தமாயும் நிற்றலே அவனது உண்மையியல்பு என்பது இனிது விளங்கும். சத்து சித்து ஆனந்தம் என்ற மூன்று சொற்களும் சேர்ந்து சச்சிதானந்தம் என்று ஆயின. இத்தொடரையே வேறொரு வகையால் போத ஆனந்தப் பொருளாம் மெய் என்றார். இந்நூலாசிரியர்.

பொய் காட்டா மெய்யா

முதலடியில் பொய் காட்டி என்று குறிப்பிட்ட ஆசிரியர் இரண்டாம் அடியின் இறுதியில் பொய் காட்டா என்கிறார். முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே என்று எண்ணும் படியாக இஃது உள்ளது. பொய்காட்டா என்பதன் பொருளை உணர்ந்தால் இம்முரண்பாடு தோன்றாது. நாமெல்லாம் வினைவயப்பட்டுப் பிறந்தவர்கள். நமது பழவினைக்கு எற்பவே நமக்கு உடம்பு அமைந்துள்ளது. இருவினை தந்த உடம்பு இது, மெய்கண்ட தேவரோ வினையின் நீங்கியவர்; மூவாண்டு நிரம்பாத இளங்குழவிப் பருவத்திலேயே மெய்யுணர்வை முற்றப் பெற்றவர்; சிவபெருமான் தனக்கே உரிய நெற்றிக் கண்ணையும் நீல கண்டத்தையும் மறைத்து மெய்கண்ட தேவர் வடிவில் வந்தருளினார் என்று போற்றித் துதிக்கும் படியான பெருநிலையைப் பெற்றவர். எனவே அவரது வடிவம் அருளுருவேயன்றி நம்மனோர்க்கு உள்ளதுபோல வினை காரணமாக வந்த வடிவம் அன்று. இக்கருத்துப்படவே பொய் காட்டா மெய்யா என்று அழைக்கிறார்.

பொய் என்பது நிலையாதது; நிலை மாற்றம் அடைவதாய் நீங்குவது. இங்கு வினை பொய் எனப்பட்டது. அஃது எதனால் எனின், தோன்றுதல், நுண்ணிய நிலையில் அடங்கியிருத்தல், இன்ப துன்பமாகிய பயனைக் கொடுத்து நீங்குதல் என்ற மூன்று நிலைகள் வினைக்கு உண்டு. இவ்வாறு நிலை மாற்றம் உடையதாதல் பற்றி வினை பொய் எனப்பட்டது. அடுத்துள்ள மெய் என்ற சொல் உடம்பு என்ற பொருளில் வந்தது. எனவே பொய் காட்டா மெய்யா என்ற விளி, வினை தராத உடம்பை (அருளுடம்பை) உடையவரே எனப் பொருள்படுவதாயிற்று.

சுத்த வினா

கேவல நிலை

உயிர் அறியாமையில் அழுந்தி நிற்கும் நிலை கேவலம் எனப்படும். நாள்தோறும் நமக்குக் கேவல நிலை உண்டாகிறது. உறக்கம் என்பது ஒன்றும் அறியாத நிலைதானே. உடம்பில் தொழிற்படும் அறிகருவிகளும் செயற்கருவிகளும் சோர்ந்து மடங்கும்போது உறக்கம் நிகழ்கிறது, உறக்கத்தில் அழுந்துதல் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு ஏற்ப அறியாமையும் குறைந்தும் மிகுந்தும் அமையும். எனவே உறக்கம் என்பது கேவல நிலையாகும். இனி, இறப்பு என்பதும் உயிர் அறியாமையில் அழுந்துகிற நிலையேயாம். இறப்பு இவ்வகையில் உறக்கத்தைப் போன்றது எனலாம். உறங்குவது போலும் சாக்காடு என்பது குறள். எனவே இறப்பு என்பதும் கேவல நிலையேயாகிறது. இன்னொரு கேவல நிலையும் உண்டு. அது நமது விழிப்பு நிலையிலேயே நிகழ்கிறது. நாள்தோறும் பாராயணம் செய்து வருகிற பாடல் கூடத் திடுமென யாராவது கேட்டால் நமது நினைவிற்கு வருவதில்லை. இப்படி விழிப்பு நிலையில் ஏற்படுகிற மறதியும் கேவல நிலை எனப்படுகிறது. இதுகாறும் கூறியவற்றால், உறக்கம், இறப்பு, மறப்பு என்பவையெல்லாம் அறியாமையில் அழுந்துகிற கேவல நிலை என்பது விளங்கும்.

சகல நிலை

அறியாமை என்பது இருள் எனில், அவ்விருளைச் சிறிது நீக்குகின்ற ஒளியாய் நிற்பது மாயையாகும். மாயையிலிருந்து தோன்றிய உடம்பும், உடம்பின் அகத்தும் புறத்தும் உள்ள கருவிகளும் அறியாமையிருளைச் சிறிது நீக்கிச் சிற்றறிவை உண்டாக்குகின்றன. இவ்வாறு மாயா கருவிகளைப் பொருந்தி அறிவு விளங்கி உலகப் பொருள்களை நுகர்ந்து வரும் நிலை சகல நிலை எனப்படும். கேவல நிலை என்பது அறியாமையில் அழுந்துதல் என்றால், சகல நிலை என்பது மாயையில் அழுந்துதல் எனச் சொல்லலாம். இறப்பு என்பது கேவல நிலை எனப் பார்த்தோம். எனவே பிறப்பு என்பது சகல நிலை என்பது விளங்கும். நாள்தோறும் வரும் உறக்கம் கேவல நிலை என அறிந்தோம். எனவே உறக்கம் நீங்கி எழுகின்ற விழிப்பு சகல நிலை என விளங்கிக் கொள்ளலாம். அவ்வப்போது வருகின்ற மறப்பு கேவல நிலை எனக் கண்டோம். எனவே மறப்பு நீங்கி உண்டாகின்ற நினைப்பு சகலநிலை என்பது வெளிப்படை.

இதுகாறும் கூறியவற்றால், பிறப்பு, விழிப்பு, நினைப்பு ஆகியவையெல்லாம் மாயையில் அழுந்துகிற சகலநிலை என்பது தெளிவாகும். இரவு நீங்கினால் பகலும், பகல் நீங்கினால் இரவும் மாறி மாறி வருகின்றன. அதுபோலவே கேவல நிலையாகிய அறியாமையும், சகல நிலையாகிய சிற்றறிவும் மாறி மாறி நிகழ்கின்றன. இறப்புக்குப் பின் பிறப்பும், உறக்கத்திற்குப் பின் விழிப்பும், மறதிக்குப் பின் நினைப்பும் எனத்தொன்று தொட்டுத் தொடர்ந்து வருகின்றன. உயிர் இறந்தும் பிறந்தும் உறங்கியும் விழித்தும் மறந்தும் நினைந்தும் இவ்வாறு உழன்று வருகிறது.

சுத்த நிலை

இத்தடுமாற்றம் தீர்ந்து ஒரு நிலைப்பட்ட தன்மையை எய்த வேண்டுமாயின், உயிர் திருவருளைச் சேர்தல் வேண்டும். திருவருள் உயிருக்கு அப்பால் எங்கேயோ உள்ளது என்று எண்ணவேண்டா. உயிரிடத்தேயே எப்போதும் உடனாக உள்ளது. அதனை நாம் தெரிந்து கொள்ளாமலே இருக்கிறோம். உடற்சார்பும் உலகச் சார்பும் ஆகிய பற்றுக்களே நம்மைத் திருவருளை நோக்காதபடி செய்கின்றன. அப்பற்றுக்கள் அறுந்தால் அக்கணமே திருவருளின் இருப்பைத் தெற்றென உணர்ந்து கொள்வோம். கயிறுகளால் கட்டப்பெற்ற ஊசலின் மேலிருந்து ஆடிக்கொண்டிருக்கின்ற வரையில் நிலம்தான் ஆதாரமாக இருந்து தாங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வதில்லை. கயிறுகள் அறுந்து கீழே விழும் போதில் நிலம் நம்மைத் தாய் போலத் தாங்கிக் கொள்ளும் போதுதான் அவ்வுண்மையை அனுபவமாக உணர்வோம் அதுபோல, அற்றது பற்றெனில் திருவருளை உற்றவராவோம். உயிரறிவில் கலந்திருக்கின்ற இறைவனது அறிவே திருவருள் என்பது அப் பேரறிவே மறைந்து நின்று கருவி கரணங்களின் வழியாக உயிருக்குச் சிற்றறிவே விளக்கி வருகிறது. இது திருவருளை உணர்வதற்கு முந்திய நிலை.

கயிறு அறுந்த ஊசல் போலத் திருவருட் சார்பை உயிர் பெற்றுவிட்டால் அத்திருவருள் ஞானம் தானே முன்நின்று அவ்வுயிருக்கு நேரே உணர்த்தும். அந்நிலையில் மனம் முதலிய கருவி கரணங்கள் உயிருக்குத் தேவையில்லாமற் போகின்றன. ஓர் எடுத்துக் காட்டினால் இதனை எளிதில் விளங்கிக் கொள்ளலாம். இரவு நேரத்தில் விளக்கு எரிந்து தனது சிற்றொளியால் இருளைச் சிறிதே ஒட்டிப் பொருளைக் காட்டுகிறது. விடிந்து சூரியவொளி தோன்றி எல்லாவற்றையும் தெளியக் காணுகிற நிலை வந்த பின்னரும் விளக்கு எரியுமானால் அவ்விளக்கொளி என்ன பயனைச் செய்யும்? ஆகவே விளக்கை நாம் அணைத்து விடுகிறோம். தேவையற்ற அதனை எடுத்து அப்புறமாய் வைத்து விடுகிறோம். உடம்பும், அதிலுள்ள கருவி கரணங்களும் இரவில் எரியும் விளக்குப் போன்றவை. அஞ்ஞானத்தை ஓரளவு நீக்கிச் சிற்றறிவைக் கொடுப்பவை. திருவருளாகிய சூரியவொளி வந்து பிறகு, சிற்றறிவும் அதனை விளங்கச் செய்யும் கருவி கரணங்களும் பகல் விளக்குப் போல நீங்குதற்கு உரியவாகி விடுகின்றன. அக்கருவிகளின் துணையில்லாமலே, திருவருள் நேரே அறிவிக்க அதனால் எல்லாவற்றையும் அறிகின்ற விரிந்த அறிவு உண்டாகும்.

கருவிகளைக் கொண்டு அறிவு விளங்குகின்ற நிலையே சகலம் என்று கூறப்படும் ஆகலின், கருவிகளின் துணையின்றி அறிவதாகிய அருள்நிøயில் சகலமாகிய நிலை பகல் விளக்குப் போல ஆகிவிடும். அருள்நிலையில் அறியாமையாகிய இருள் முற்றிலுமாக நீங்கி விடும் ஆதலால், கேவலமாகிய நிலை நிகழ்வதில்லை. இங்ஙனம் சகல கேடலங்கள் நிகழாமல் உயிர் திருவருளில் அழுந்தி நிற்கின்ற நிலையே சுத்த நிலை எனப்படும். இவ்வுலகில் வாழும் போதே இச் சுத்தநிலையை அடையலாம்.