Wednesday 30 August 2017

உங்கள் குழந்தைக்கு ராசியான... நட்சத்திர பெயர் எழுத்துகள்!


ஞானிகள், முனிவர்கள், தவசிகள், மகான்கள் ஆகியோர் தங்களது மெய்ஞானத்தால் ஜோதிட சாஸ்திரத்தைக் கண்டுபிடித்து, அதை வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தி, நன்மை பெறும் விதமாக, நமக்கு விட்டுச்சென்றுள்ளார்கள்.
அவர்கள், தங்களின் ஞானக்கண்ணால் வான் மண்டலத்தை ஆராய்ந்து அதை 12 ராசிகளாகப் பிரித்து, அந்த ராசிகளை 27 நட்சத்திரங்களாக வகுத்து, ஒவ்வொரு நட்சத்திரம் குறித்தும், அந்த நட்சத்திரத்தில் பிறந்த மனிதர்களின் குணாதிசயம் குறித்தும் விரிவாகச் சொல்லியுள்ளார்கள்.

நட்சத்திர பலம் என்பது மிக முக்கியமாகும். இதை தாரா (நட்சத்திரம்) பலம் என்றும் அழைப்பார்கள். நட்சத்திரமும் நட்சத்திரத்தின் அதிபதியான கிரகமும் நட்சத்திரம் உள்ள ராசியின் அதிபதியும் வலுத்திருப்பார்கள் என்றால் சுப பலன்கள் அதிகம் உண்டாகும்.

அதேபோல், பிறந்த நட்சத்திரத்தைக் கொண்டே தசா விவரம் அறியப்படுகிறது. குறிப்பாக ஒருவர் பரணி நட்சத்திரத்தில் பிறந்திருந்தால் அவருக்கு முதல் தசை சுக்கிர தசையாக அமையும். 

அதேநேரம் தசை, புக்தி, அந்தரங்கள் அளிக்கும் நற்பலன்களும்... குறிப்பிட்ட அந்த தசை, புக்தி மற்றும் அந்தரத்தை நடத்தும் கிரகம் எந்த நட்சத்திரத்தில் பலமாக உள்ளதோ, அதைப் பொறுத்தே அமையும். இதையே கிரகசார பலம் என்பார்கள்.

மேலும் ஒருவரது ஜன்ம நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரத்தில் கிரகங்கள் உலவுகின்றன என்பதைப் பார்த்து ஜோதிடப் பலன்கள் சொல்லப்படுகின்றன.

மேலும், `நாள் நட்சத்திரம் (தாரா பலம்) பார்த்து, சந்திர பலம் (சந்திரன் எத்தனையாவது ராசியில் உள்ளது என்பதை) பார்த்துத் தொடங்கும் காரியம் வெற்றி பெறும்' என்பது பாரம்பர்யமாக நாம் கடைப்பிடித்துவரும் வழக்கமாகும். ஆகவே, நட்சத்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். 

நாம் இந்த இணைப்பில், ஒவ்வொரு நட்சத்திரத்தையும், அதில் பிறந்தவர்களின் பொதுவான குண இயல்பு களையும், குழந்தைகளின் ஜன்ம நட்சத்திரத்துக்கு உகந்த நாம நட்சத்திர எழுத்துகளையும் தெரிந்துகொள்வோம்.

இங்கு தரப்படும் பலன்கள் பொதுவானவையே; ஜாதகப்படி மாறவும் செய்யும். ஜன்ம லக்னம், லக்னாதிபதி, லக்னத்தைப் பார்க்கும் கிரகங்கள், லக்னத்தில் உள்ள கிரகங்கள், லக்னாதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் ஆகியவற்றின் பலத்தை ஒட்டி ஜாதகரின் குணாதிசயம் அமையும் என்பதை மறக்கலாகாது.  

லக்னத்தைவிட, சந்திர ராசியின் பலம் அதிகம் உள்ளவர்களுக்கும் நட்சத்திரப் பலம் அதிகம் உள்ளவர்களுக்கும் இந்தப் பலன்கள் பெருமளவுக்குப் பொருத்தமாகவே அமையும்.

அசுவினி 

இது கேதுவின் நட்சத்திரம். மேஷ ராசியில் இந்த நட்சத்திரம் அமைகிறது. மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். ஆகவே, இவர்களுக்கு கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களின் குணம் அமையும்.

அழகான தோற்றம் அமையும். செல்வம் சேரும். எல்லோராலும் விரும்பப்படுவார்கள். ஆளுமைத் திறனும்,  செயலில் வேகமும் இருக்கும். திடீர் திடீரென கோபம் வரும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு இருக்கும். சாஸ்திரச் சம்பிரதாயங்களில் நாட்டம் உண்டாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சு, சே, சோ, லா ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: சு
2-ம் பாதம்: சே 
3-ம் பாதம்: சோ 
4-ம் பாதம்: லா 

உதாரணமாக அசுவினி நட்சத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு சுப்பிரமணி, சுதர்சனன் என்றும், பெண் குழந்தைக்கு சுலோசனா, சுகுமாரி என்றும் பெயர்வைப்பது சிறப்பாகும். 
சரஸ்வதி தேவியை வழிபடுவது சிறப்பு. அதிர்ஷ்டக்கல்: வைடூரியம்.

 பரணி 

சுக்கிரனின் நட்சத்திரம். செவ்வாயின் ராசி. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன், செவ்வாய் ஆகியோரது தாக்கம் அதிகம் இருக்கும். 

இவர்கள் நிதானமாக நடந்துகொள்வார்கள். உண்மையை அதிகம் பேசுவார்கள். படிப்பு நன்கு அமையும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். வாழ்க்கையை நன்கு அனுபவிப்பார்கள். பெண்களிடமும் மனைவியிடமும் பாசமுள்ளவர்கள். சொத்துகள் சேரும். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு, கலைத் துறையில் ஆர்வம் அதிகம் இருக்கும். பிறரிடம் மென்மையாகப் பேசிப் பழகுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு லி, ல, லே, லோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைத்துக்கொள்வது சிறப்பாகும்.
முதல் பாதம்: லி
2-ம் பாதம்: ல 
3-ம் பாதம்: லே
4-ம் பாதம்: லோ

செவ்வாய்க் கிழமைகளில், நட்சத்திரத் தேவதையான துர்கையம்மனை வழிபடுவது சிறப்பு. இவர்களுக்கான அதிர்ஷ்டக் கல்: வைரம்.

 கிருத்திகை 

இது சூரியனின் நட்சத்திரமாகும். கிருத்திகை 1-ம் பாதம் மேஷத்திலும், 2, 3, மற்றும் 4-ம் பாதம் ரிஷபத்திலும் அமையும். மேஷ கிருத்திகை விசேஷம்.

மேஷத்தில் பிறந்தவர்களுக்கு நிர்வாகத் திறமை இருக்கும். அதிர்ஷ்டம் கூடும். எதிர்ப்புகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மந்திரங்களை உச்சரிக்கும் ஆற்றல் ஏற்படும். அரசாங்கத்தில் உயர் பொறுப்புகளைப் பெறும் தகுதி உண்டாகும். சூரியனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் பகைவர்கள் என்பதால், ரிஷபத்தில் பிறந்த கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு, மனதில் வீண் பயம் உண்டாகும்.சொத்துகள் சேரும் என்றாலும் அவற்றில் ஏதேனும் பிரச்னை இருக்கும். இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு அ, இ, உ, எ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது நல்லது.
முதல் பாதம்: அ
2-ம் பாதம்: இ 
3-ம் பாதம்: உ 
4-ம் பாதம்: எ 

அக்னி பகவானை வழிபடுவதும் ஹோமம், யாகங்களில் கலந்துகொள்வதும் சிறப்பு. மாணிக்கம் அணியலாம்.

 ரோகிணி 

நட்சத்திர நாயகன் சந்திரன். ராசி நாயகன் சுக்கிரன். சந்திரன் உச்சம்பெறும் நட்சத்திரம் இது. எல்லா சுப காரியங்களுக்கும் ஏற்றது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாய்மை உள்ளவர்களாக இருப்பார்கள். மனோ காரகன் வலுத்திருப்பதால் மனோபலம் உண்டாகும். தர்ம குணமும் இரக்க சுபாவமும் நிறைந்திருக்கும். கலை ஞானம் உண்டாகும். முக வசீகரம் ஏற்படும். கண்களால் பிறரைக் கவருவார்கள். இனிமையான பேச்சு அமையும். தகவல் தொடர்பு இனங்களால் ஆதாயம் கிடைக்கும். சந்திரன், பெண் கிரகம் ஆவதாலும் பெண் ராசியில் இருப்பதாலும் அதிக பலம் பெற்றிருப்பதாலும் மென்மையான குணம் அமையும். பெண்களால் நலம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். 

இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒ, வ, வி, வூ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் சூட்டலாம்.
முதல் பாதம்: ஒ
2-ம் பாதம்: வ 
3-ம் பாதம்: வி 
4-ம் பாதம்: வூ 

பிரம்மனை வழிபடுவது விசேஷம். வைடூரியம் அதிர்ஷ்டம் தரும்.

 மிருகசீரிஷம் 

செவ்வாயின் நட்சத்திரம் இது. இந்த நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷபத்திலும், மீதமுள்ள இரண்டு பாதங்கள் மிதுனத்திலும் அமையும்.

ரிஷப ராசியில் பிறந்த மிருகசீரிஷ நட்சத்திரக் காரர்களுக்கு செல்வ வளம் கூடும். கோபம் வரும் என்றாலும் உடனே தணிந்துவிடும். நல்ல பேச்சாளர்களாவார்கள். பிறருக்காக உழைப்பார்கள். வீண் செலவுகள் ஏற்படும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். மிதுன ராசியில் பிறந்த மிருக சீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு ராசி அதிபதி புதனாக அமைவதால், எதிரிகள் இருப்பார்கள். விடாமுயற்சி இருக்கும். பேச்சாற்றல் உண்டாகும். எனினும், சில நேரங்களில் வீணாகப் பேசிப் பொழுதைக் கழிப்பார்கள்.இந்த நட்சத்திரக் காரர்களுக்கு வே, வோ, க, கி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: வே
2-ம் பாதம்: வோ 
3-ம் பாதம்: க 
4-ம் பாதம்: கி

சந்திரனை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி பூஜை செய்வதும் கிரிவலம் வருவதும் நல்லது. பவழம் அணிவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.

 திருவாதிரை 

நட்சத்திர நாயகன் ராகு. ராசி நாயகன் புதன். பெயரிலேயே `திரு' உள்ள நட்சத்திரம் இது.

எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்வார்கள். சுய பலமும் அதிகம் இருக்கும். கரும்பாம்பின் நட்சத்திரம் இது என்பதால், பழிவாங்கும் குணமும் கோபமும் இருக்கும். புதனின் ராசியில் ராகுவின் நட்சத்திரம் என்பதால் பிற மொழிகளில் பாண்டித்தியம் உண்டாகும். புதியவற்றை அறியும் ஆர்வம் கூடும். சாமர்த்தியமான வழிகளில் பொருள் திரட்டுவார்கள். திருவாதிரை 1, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, இறை வழிபாட்டில் ஈடுபாடு கூடும். 

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கு, க, ஞ, ச ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்.
முதல் பாதம்: கு
2-ம் பாதம்: க 
3-ம் பாதம்: ஞ 
4-ம் பாதம்: ச

ருத்திரனை (ஐந்து முகம் கொண்ட சிவனார்) வழிபடுவதன் மூலம் வாழ்வில் சிறந்த முன்னேற்றம் காணலாம். கோமேதகக் கல் அதிர்ஷ்டம் அளிப்பதாக அமையும்.

 புனர்பூசம் 

நட்சத்திர நாயகன் குரு. 

ராசி நாயகன்-முதல் மூன்று பாதங்களுக்கு புதன்; 4-ம் பாதத்துக்கு சந்திரன்.

புனர்பூசம்-மிதுன ராசியில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். எதையும் வெளிப்படையாகப் பேசமாட்டார்கள்.

புனர்பூசம் கடக ராசியில் பிறந்தவர்கள் நன்னடத்தை உள்ளவர்களாக இருப்பார்கள். ஆசாரம், அனுஷ்டானத்தில் ஈடுபாடு இருக்கும். புனிதமான காரியங்களில் ஈடுபடுவார்கள். புனித நதிகளில் நீராடும் பாக்கியம் கிடைக்கும். அறிவாற்றல் நிறைந்திருக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கே, கோ, ஹ, ஹி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் சூட்டலாம்.
முதல் பாதம்: கே
2-ம் பாதம்: கோ 
3-ம் பாதம்: ஹ 
4-ம் பாதம்: ஹி

விநாயக வழிபாடு, வினைகள் தீர்க்கும். விருந்தினர் உபசரிப்பால் நலம் உண்டாகும். கனக புஷ்பராகக் கல் அணியலாம்.

 பூசம் 

நட்சத்திர அதிபதி சனி. ராசி அதிபதி சந்திரன்.

நேர்மையானவர்கள். நற்கல்வி அமையும். உயர் குணங்கள் இருக்கும். செல்வமும் புகழும் சேரும். எனினும் இந்த நட்சத்திரக்காரர்கள், சோம்பலைக் குறைத்துக்கொள்வது நல்லது. 

இவர்கள், வழக்கறிஞராகவோ, நியாயத்தை எடுத்துரைப்பவராகவோ இருப்பார்கள். பழைய பொருட்களை விரும்பிச் சேமித்து வைப்பார்கள். சொத்துகள் சேரும். நீர் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.  பழைய நூல்கள், கல்வெட்டுகள், மூதாதையரின் வாழ்க்கை முறை ஆகியவைக் குறித்து அறிவதில் நாட்டம் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கு, ஹே, ஹோ, ட ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: கு
2-ம் பாதம்: ஹே 
3-ம் பாதம்: ஹோ 
4-ம் பாதம்: ட

நட்சத்திர அதி தேவதையான குரு பகவானை வழிபடுவது சிறப்பாகும். நீலக்கல் அணியலாம்.

 ஆயில்யம் 

நட்சத்திர நாயகன் புதன். ராசி நாயகன் சந்திரன்.

இந்த நட்சத்திரக் காரர்கள் மதி வளம் நிறைந்தவர்கள். படிப்பு நன்கு அமையும். வியாபார தந்திரம் அறிவார்கள். மன வலிமை உள்ளவர்கள். சந்தோஷமாக வாழ்வார்கள். அழகிய வீடு அமையும். வாகன யோகம் உண்டு. எழுத்தாற்றல் உண்டாகும்; இலக்கியவாதிகளாகத் திகழ்வர். 

இவர்களுக்கு கடல் சார் வாணிபம் லாபம் தரும். எதற்கும் உணர்ச்சிவசப்படுவார்கள். நண்பர்களால் நலம் பெறுவார்கள். தகவல்தொடர்பு இனங்களால் வருவாய் கிடைக்கும். திரைகடலோடி திரவியம் தேடும் பாக்கியம் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு டி, டு, டே, டோ ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்.
முதல் பாதம்: டி
2-ம் பாதம்: டு
3-ம் பாதம்: டே 
4-ம் பாதம்: டோ

ஆதிசேஷனை வழிபடுவதால், நற்பலன்கள் கைகூடும். மரகதக் கல் (பச்சை) அணியலாம்.

 மகம் 

இது மகா நட்சத்திரம். இதன் நாயகன் கேது. ராசி நாயகன் சூரியன்.

இந்த நட்சத்திரக் காரர்கள் மூலிகை, மருத்துவம் பற்றிய ஞானம் உள்ளவர்கள். உயர்பதவி யோகம் வாய்க்கப்பெற்றவர்கள். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். ஆத்ம ஞானம் கூடும். தியானம், யோகா, ஜோதிடம் ஆகியவற்றில் நாட்டம் இருக்கும். ஸித்தி பெறும் யோகம் உண்டு. 

இவர்களுக்கு மன உற்சாகம் நிறைந்திருக்கும். செல்வந்தர்கள் ஆவார்கள். கொள்கைப்பிடிப்பு இருக்கும். இயற்கையை நேசிப்பார்கள். காடு, மலைகளில் வாழப்பிடிக்கும். நியாயத்துக்காகப் பாடுபடுவார்கள். பாத்திரமறிந்து உதவுவார்கள்.
ம, மி, மு, மே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: ம
2-ம் பாதம்: மி
3-ம் பாதம்: மு 
4-ம் பாதம்: மே

சுக்கிரனை வழிபடுவது நல்லது. நீலக்கல் அணிவதால் நலம் உண்டாகும்.

 பூரம் 

நட்சத்திர நாயகன் சுக்கிரன். ராசி நாயகன் சூரியன்.

சுக்கிரனும் சூரியனும் ஒருவருக்கொருவர் பகைவர் ஆவார்கள். ஆகவே, வாழ்வில்  எதிர்ப்புகள் இருக்கும். எனினும் சமாளிப்பார்கள். கலைகளில் ஈடுபாடு உண்டாகும். இனிமையான பேச்சு அமையும். தர்மக் காரியங்களில் நாட்டம் உண்டாகும். உயர் பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். வியாபாரம் லாபம் தரும். அழகான தோற்றம் அமையும். லாகிரி வஸ்துகளைப் பயன்படுத்துவார்கள். தன்னையும் தன் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள். வாழ்க்கைத் துணைவரால் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களால் சங்கடங்கள் சூழும்.

இந்த நட்சத்திரக் காரர்களுக்கு மோ, ட, டி, டு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது நல்லது.
முதல் பாதம்: மோ
2-ம் பாதம்: ட
3-ம் பாதம்: டி 
4-ம் பாதம்: டு

நட்சத்திர அதிதேவதையான அன்னை பார்வதி தேவியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். வைரக்கல் அணியலாம்.

 உத்திரம் 

நட்சத்திர நாயகன் சூரியன். உத்திரம் 1-ம் பாதத்துக்கு ராசி நாயகன் சூரியன்; 2, 3 மற்றும் 4-ம் பாதத்துக்கு நாயகன் புதன்.

சிம்ம ராசியில் பிறந்த உத்திரம் 1-ம் பாத நட்சத்திரக்காரர்களுக்கு உயர் பதவி யோகம் கிடைக்கும். அரசாங்கத்தாரால் நன்மைகளும் ஏற்படும். நிர்வாகத் திறமை உண்டாகும். தந்தையால் நலம் ஏற்படும். சட்டென்று கோபம் வந்துவிடும். எனினும் அது நியாயமானதாகவே இருக்கும்.கன்னி ராசியில் பிறந்த உத்திர நட்சத்திரக்காரர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள். வியாபார யுக்தி தெரியவரும். பிறந்த ஊரிலும் வெளியூரிலும் புகழ்பெறுவார்கள். பொதுப் பணியாளர்களாக இருப்பார்கள். உத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு, செல்வ வளம் நிறைந்திருக்கும்.

டே, டோ, ப, பி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது நல்லது.
முதல் பாதம்: டே
2-ம் பாதம்: டோ    
3-ம் பாதம்: ப 
4-ம் பாதம்: பி

சூரியனை வழிபடுவது நல்லது. மாணிக்கம் அணியலாம்.

 அஸ்தம் 

நட்சத்திர நாயகன் சந்திரன்.  ராசி நாயகன் புதன்.

படிப்பு நன்கு அமையும். சிந்தனை திறன் கூடும். சிறந்த எழுத்தாளர்கள் ஆவார்கள். வியாபார நுணுக்கம் மிகுந்திருக்கும். வயதானாலும் இளமையாகக் காட்சி அளிப்பார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் செல்வந்தர் ஆவார்கள். ஊக்கமுடனும் ஆர்வமுடனும் உழைப்பார்கள். நன்றி மறக்க மாட்டார்கள். சிறந்தக் கல்வியாளராகத் திகழ்வார்கள். பிறருக்கு ஆலோசனைகள் சொல்வார்கள். மத்தியஸ்தர்களாக இருப்பார்கள். இவர்களுக்குத் தரகு மூலம் வருவாய் கிடைக்கும். பணம் திரட்டுவதில் அதிக ஆர்வம் இருக்கும்.

பு, ஷ, நா, டா ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: பு
2-ம் பாதம்: ஷ
3-ம் பாதம்: நா 
4-ம் பாதம்: டா

நட்சத்திர அதிதேவதையான சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். 

வெண் முத்து அணியலாம்.

 சித்திரை 

நட்சத்திர நாயகன் செவ்வாய். சித்திரை 1, 2 பாதங்களுக்கு ராசி அதிபதி புதன். சித்திரை 3, 4 பாதங்களுக்கு ராசி அதிபதி சுக்கிரன்.

கன்னி ராசிக்காரர்கள் யோசித்துச் செலவு செய்வார்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பவர்கள். எனவே, கஞ்சர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.

துலா ராசிக் காரர்களுக்கு நல்ல நண்பர்கள் அமைவார்கள். எந்த விஷயத்துக்காகவும் மற்றவர்களைச் சார்ந்து இருக்க மாட்டார்கள்; சுய உழைப்பால் முன்னேறுவார்கள். பயணங்களில் அதீத ஆர்வம் இருக்கும். அழகிய ஆடை - அணிமணிகள் அணிவதில் ஈடுபாடு உண்டாகும். தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்றவற்றால் தொழிலில் லாபம் கிடைக்கும்.

பே, போ, ர, ரி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: பே
2-ம் பாதம்: போ
3-ம் பாதம்: ர 
4-ம் பாதம்: ரி

நட்சத்திர அதிதேவதையான துவஷ்டாவை வழிபடுவது நல்லது. செம்பவழம் அணிவது விசேஷம்.

 சுவாதி 

நட்சத்திர நாயகன் ராகு.  ராசி நாயகன் சுக்கிரன்.

இந்த நட்சத்திரக் காரர்கள், பிறரிடம் நன்கு பழகுவார்கள். தர்ம குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். பயணம் செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி மாநிலம், வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும். கலைஞானம் உண்டாகும். புதியவற்றைக் கண்டுபிடிப்பார்கள். 

இவர்கள், பிற மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். பெற்றோருக்கு உதவி புரிவார்கள். கலை நுணுக்கமுள்ள நூதனமானப் பொருட்களை விரும்பி வாங்குவார்கள். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். ஏராளமான பணம் சேரும்.

ரு, ரே, ரோ, தா ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது சிறப்பு.
முதல் பாதம்: ரு
2-ம் பாதம்: ரே
3-ம் பாதம்: ரோ 
4-ம் பாதம்: தா

நட்சத்திர அதிதேவதையான வாயு பகவானை வழிபடுவது நல்லது. கோமேதகக் கல் அணியலாம்.

 விசாகம் 

நட்சத்திர நாயகன் குரு.  விசாகம் 1, 2, 3 ஆகிய பாதங்களுக்கு ராசி அதிபதி சுக்கிரன் ஆவார். விசாகம் 4-ம் பாதத்துக்கு ராசி அதிபதி செவ்வாய் ஆவார்.

துலா ராசிக் காரர்களுக்கு எதிரிகள் இருப்பார்கள். வீண் அலைச்சல் ஏற்படும். ஏற்றம் - இறக்கம் இரண்டுமே வாழ்வில் சமமாக இருக்கும். கலைகளில் ஆர்வம் இருக்கும். நல்ல ரசிகர்களாக இருப்பார்கள்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பேச்சாற்றல் நிறைந்திருக்கும். பலருக்கு ஆலோசனை சொல்லும் தகுதி உண்டாகும். நன்மக்கட்பேறும் மக்களால் நன்மையும் ஏற்படும். அதிர்ஷ்டசாலி. மந்திரச் சித்தி உண்டாகும். நல்ல குடும்பம் அமையும்.
தி, து, தே, தோ ஆகிய எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: தி
2-ம் பாதம்: து
3-ம் பாதம்: தே 
4-ம் பாதம்: தோ

நட்சத்திர அதிதேவதையான சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது. புஷ்பராகக் கல் அதிர்ஷ்டமானது.

 அனுஷம் 

நட்சத்திர நாயகன் சனி.  ராசி நாயகன் செவ்வாய்.

இந்த நட்சத்திரக் காரர்கள் பொறுமையாக, யோசித்துச் செயல்படுவார்கள். தெய்வப்பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். உயர்ந்தவர்களால் பாராட்டப்படுவார்கள். வெளிநாட்டில் வாழும் யோகமும் வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகமும் உண்டாகும். பயணம் செய்வதில் விருப்பம் அதிகம் இருக்கும். பெற்றோருக்கு நன்றியுடன் நடந்துகொள்வார்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் யோகம் உண்டாகும். மகான்கள் தரிசனம் கிடைக்கும். சிலருக்கு மந்திர ஸித்தி ஏற்பட வாய்ப்பு உண்டு. பலருக்கும் நல்ல ஆலோசனைகளை வழங்குவார்கள்.

ந, நி, நு, நே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்.
முதல் பாதம்: ந
2-ம் பாதம்: நி
3-ம் பாதம்: நு 
4-ம் பாதம்: நே

நட்சத்திர அதிதேவதையான மகா லட்சுமியை வழிபடுவது நல்லது. நீலக்கல் அணிவது சிறப்பு.

 கேட்டை 

நட்சத்திர நாயகன் புதன்.  ராசி நாயகன் செவ்வாய்.

செவ்வாய்க்கு, புதன் பகைவர் ஆவார். இதனால் எதிர்ப்புகள், தடைகள், குறுக்கீடுகள் இருக்கும். கோபம் அதிகம் வரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ள தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபடுவது நல்லது. 

இவர்களுக்கு பொருளாதார நிலை சீராக இராது. ஜல சம்பந்தமான உடல் உபாதைகள் ஏற்படலாம். எழுத்தாற்றல் உண்டாகும். ஏஜென்ஸி மூலம் பணம் கிடைக்கும். படிப்பில் சிறு தடை ஏற்பட்டு பின்னர் தொடரும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். என்றாலும் விசேஷமான பண வரவுக்கு இடமிராது.

தோ, ய, யி, யு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமையும்படி பார்த்துக் கொள்வது சிறப்பாகும்.

முதல் பாதம்: தோ
2-ம் பாதம்: ய
3-ம் பாதம்: யி 
4-ம் பாதம்: யு
நட்சத்திர அதிதேவதையான இந்திரனை வழிபடுவதால், நல்ல பலன்கள் கிடைக்கும். மரகதக்கல் (பச்சை) அணியலாம்.

 மூலம் 

நட்சத்திர நாயகன் கேது. ராசி நாயகன் குரு.

இவர்கள் உடல் பலம் மிகுந்தவர்கள். மன பலமும் கூடும். பிறருக்கு உதவுவார்கள். முன்கோபம் உள்ளவர்கள். ஆன்மிகம், அறநிலையம், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் உண்டாகும். 

குருவும் கேதுவும் ஆன்மிகக் கிரகங்கள் என்பதாலும், குருவின் ராசியில் சந்திரன் இருப்பதாலும் தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். உடற்பயிற்சியில் நாட்டம் கூடும். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் பலருக்கு அமையும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவும், அரசுப் பணியாளராகும் வாய்ப்பும் உண்டு.

எ, யோ, ப, பி என்ற எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது விசேஷமாகும்.
முதல் பாதம்: எ
2-ம் பாதம்: யோ
3-ம் பாதம்: ப 
4-ம் பாதம்: பி

ருத்திரனையும், பிரஜாபதியையும் வழிபடுவது நல்லது. வைடூரியக் கல் அணியலாம்.

 பூராடம் 

நட்சத்திர நாயகன் சுக்கிரன்.  ராசி நாயகன் குரு.

தோற்றப்பொலிவு இருக்கும். அழகு அம்சங்களில் ஈடுபாடு உண்டாகும். தாயிடமும் மனைவியிடமும் பாசம் அதிகம் இருக்கும். உண்மையையே அதிகம் பேசுவார்கள். பயணத்தில் நாட்டம் இருக்கும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். எதிரிகள் இருப்பார்கள். கலைத்துறைகளில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் இனிமையும் திறமையும் உண்டு. ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். வாகன யோகம் உண்டாகும். எல்லோரிடமும் அன்புடன் பழகுவார்கள். தெய்வக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பால் பயன் பெறுவார்கள்.

பு, த, ப, ட என்ற எழுத்துகளில் பெயரின் முதல் எழுத்து அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: பு
2-ம் பாதம்: த
3-ம் பாதம்: ப 
4-ம் பாதம்: ட

நட்சத்திர அதிதேவதையான வருணனை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வசந்தம் உண்டாகும். வைரக்கல் அணியலாம்.

 உத்திராடம் 

நட்சத்திர நாயகன் சூரியன். ராசி நாயகன் உத்திராடம் 1-ம் பாதத்துக்கு குரு. 2, 3, 4 ஆகிய பாதங்களுக்கு சனி அதிபதி ஆவார்.

தனுசு ராசியில் பிறந்த உத்திராட நட்சத்திரக்காரர்கள் தர்மக் குணம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். உயர் பதவி யோகம் உண்டாகும். ஆத்ம ஞானம் கூடும். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டு.

மகர ராசியில் பிறந்த உத்திராட நட்சத்திரக்காரர்கள், வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறுவார்கள். பெரியோர்களிடமே வாக்குவாதம் செய்யும் அளவுக்கு தைரியம் உண்டு. பதவியில் சறுக்கல் ஏற்படலாம். 

இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, பே, போ, ஜ, ஜி  ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: பே
2-ம் பாதம்: போ
3-ம் பாதம்: ஜ 
4-ம் பாதம்: ஜி

விநாயகரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வளம் பெறலாம். மாணிக்கக் கல் அணியலாம்.

 திருவோணம் 

நட்சத்திர நாயகன் சந்திரன். ராசி நாயகன் சனி. இந்த இரண்டு கிரகங்களின் குணங்களும் இவர்களிடம் தென்படும்.

அறிவாற்றல் கூடும். புகழோடு வாழ்வார்கள். ஒழுக்கம் இருக்கும். ஆண்கள் பெண்களாலும், பெண்கள் ஆண்களாலும் விரும்பப்படுவார்கள். இல்லற வாழ்க்கை இனிக்கும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் ஏற்படும். பயணிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த சிலருக்கு ஜாதக பலமும் இருக்குமானால் வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் திரட்டும் யோகம் உண்டாகும்.  திருமாலின் அருள் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜு, ஜே, ஜோ, சு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: ஜு
2-ம் பாதம்: ஜே
3-ம் பாதம்: ஜோ 
4-ம் பாதம்: சு

மகாவிஷ்ணுவை வழிபட்டால், நன்மைகள் பெருகும். வெண்முத்து அணியலாம்.

 அவிட்டம் 

நட்சத்திர நாயகன் செவ்வாய். ராசி நாயகன் சனி.

இந்த நட்சத்திர அன்பர்கள், எதற்கும் அஞ்சமாட்டார்கள். பெருந்தன்மை கொண்டவர். கலைகளில் ஆர்வம் இருக்கும். மகர ராசிக்காரர்களுக்கு தலை சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். மதிப்பு சற்று குறையும். மருத்துவச் செலவுகள் கூடும்.  சொத்துகள் சேரும். 

இந்த நட்சத்திரத்தில் பிறந்த கும்ப ராசிக்காரர்களுக்கு, தொழில் ரீதியாக நல்ல பெயர் கிடைக்கும். இவர்கள், கடும் முயற்சியால் வெற்றி பெறுவார்கள். சிலருக்கு, மண வாழ்க்கை பாதிக்க வாய்ப்பு உண்டு; சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு க, கி, கு, கே ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் சூட்டலாம்.

முதல் பாதம்: க
2-வது பாதம்: கி
3-வது பாதம்: கு 
4-வது பாதம்: கே
இவர்கள், தங்களது நட்சத்திர அதிதேவதையான வசுக்களை வழிபடுவது நல்லது. செம்பவழக் கல்லை அணியலாம்.

 சதயம் 

நட்சத்திர நாயகன் ராகு. ராசி நாயகன் சனி.

ராகு, சனியைப் போல் பலன் கொடுப்பார் என்பார்கள். சனி வீட்டில் உள்ள ராகுவின் நட்சத்திரம் என்பதால் படிப்பு நன்கு வரும். 

ஆராய்ச்சிகளில் ஈடுபாடு உண்டாகும். துணிச்சல் உள்ளவர்கள். வாதம்புரியும் திறமை உண்டாகும். 

அரசாங்கத்தின் பாராட்டுகள், பரிசுகள் ஆகியவற்றைப் பெறுவார்கள். புதுமையை அதிகம் விரும்புவார்கள். ராகு பலம் ஜாதகத்தில் கூடியிருக்குமானால், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். சிறந்த வழக்கறிஞராக முடியும். கணிதத்தில் அதிக நாட்டம் இருக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கோ, ஸ, ஸி, ஸு ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பு.
முதல் பாதம்: கோ
2-வது பாதம்: ஸ
3-வது பாதம்: ஸி 
4-வது பாதம்: ஸு

நட்சத்திர அதிதேவதையான யமதர்மனை வழிபடுவதால், நலம் உண்டாகும். இந்த நட்சத்திரக்காரர்கள், கோமேதகம் அணியலாம்.

 பூரட்டாதி 

நட்சத்திர நாயகன் குரு.  ராசி நாயகன் முதல் மூன்று பாதங்களுக்கு சனி. 4-ம் பாதத்துக்கு குரு.

கும்ப ராசிக் காரர்களுக்குப் பேச்சில் திறமைக் கூடும். வாக்குப் பலிதமும் உண்டாகும். குடும்பத்தாரால் அனுகூலம் ஏற்படும். ஏராளமான பணமும் பொருளும் சேரும். மருத்துவத் துறையில் ஈடுபாடு உண்டாகும். நல்ல எண்ணங்கள் இருக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு புத்திசாலித்தனம் நிறைந்திருக்கும். வாழ்வின் பின்பகுதியில் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். தர்மகாரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும்.

பூரட்டாதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஸே, ஸோ, த, தி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது விசேஷம்
முதல் பாதம்: ஸே
2-வது பாதம்: ஸோ
3-வது பாதம்: த 
4-வது பாதம்: தி

குபேரனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். புஷ்பராகக் கல் அணியலாம்.

 உத்திரட்டாதி 

நட்சத்திர நாயகன் சனி.ராசி நாயகன் குரு.

தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு அதிகம் இருக்கும். வேதம் பயின்றவர்களுக்கு உதவுவார்கள். திறமைசாலிகளாக விளங்குவார்கள். படிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். சில நேரங்களில் பிறர் மனம் புண்படும்படி பேசிவிடுவார்கள். பிறகு அதை நினைத்து வருத்தப்படவும் செய்வார்கள். சனியின் நட்சத்திரம் இது என்பதால், எதிலும் அவசரப்படாமல் நிதானமாகவே யோசித்து ஈடுபடுவார்கள். வெளிமாநிலம், வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் உண்டு.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு து, ஸ்ரீ, தி, த ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவது சிறப்பாகும்.
முதல் பாதம்: து
2-வது பாதம்: ஸ்ரீ
3-வது பாதம்: தி 
4-வது பாதம்: த

நட்சத்திர அதிதேவதையான காமதேனுவை வழிபடுவது நல்லது. பசுவுக்கும் கன்றுக்கும் உணவளிப்பது சிறப்பாகும். நீலக்கல் அணியலாம்.

 ரேவதி 

நட்சத்திர நாயகன் புதன். ராசி நாயகன் குரு.

இதில் பிறப்பவர்கள் மதிப்பும், அந்தஸ்தும், புகழும் நிரம்பப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள். எதையும் யோசித்து நிதானமாகச் செய்வார்கள். சிறந்த அறிவாற்றல் உண்டாகும். பிறருடைய சொத்தையும் பொருளையும் பாதுகாப்பார்கள். துணிச்சலானவர்கள். 

கடல் வாணிபம் மூலம் லாபம் பெறுவார்கள். ஜலப்பொருட்கள் மூலமும் ஆதாயம் கிடைக்கும். இவர்கள், வியாபார நுணுக்கம் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தே, தோ, ச, சி ஆகிய எழுத்துகளின் ஆதிக்கத்தில் பெயர் அமைவதால் விசேஷ பலன்கள் உண்டாகும்.
முதல் பாதம்: தே
2-வது பாதம்: தோ
3-வது பாதம்: ச 
4-வது பாதம்: சி

நட்சத்திர அதிதேவதையான சனி பகவானை வழிபடுவதன் மூலம் வாழ்வில் வெற்றிகள் அதிகரிக்கும். இவர்கள், பச்சை மரகதக்கல் அணிவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.

No comments:

Post a Comment