Saturday 19 August 2017

சதுரகிரி யாத்திரை ! - 4



னது கிராமத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்ட காலாங்கிநாதரிடம் உதவி கேட்டு நின்றான் வாமதேவன். ஆனால், இதற்கு அனுகூலமான பதில் எதுவும் அவரிடம் இருந்து கிடைக்காததால், வாமதேவன் கவலையானான். எனினும், தன் முயற்சியில் இருந்து சற்றும் பின்வாங்காத வாமதேவன், ‘என்றைக்கேனும் ஒரு நாள் இந்த முனிவர் நிச்சயம் உதவுவார்!’ என்று மனப்பூர்வமாக நம்பி, காலாங்கிநாதரின் ஆசிரமத்தி லேயே தங்கி, அவருக்குப் பணிவிடைகள் செய்ய ஆரம்பித்தான்.
நாட்கள் ஓடின. தான் எதற்காக சதுரகிரிக்கு வந்து, காலாங்கிநாதருக்கு உதவிக் கொண்டிருக்கிறோம் என்பதையே ஒரு கட்டத்தில் மறந்தான் வாமதேவன். அந்த அளவுக்கு மிகுந்த சிரத்தையாக காலாங்கிநாதர் இட்ட பணிகளை சிரமேற்கொண்டு செயல்பட்டான். எத்தகைய எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு உதவுவதையே ஒரு பாக்கியமாக எண்ணி வாழ்ந்து வந்த வாமதேவனின் செயல், காலாங்கிநாதருக்கு இரக்கத்தை வரவழைத்தது. ‘கோயில் கட்டுவ தற்கு உதவி கேட்டு வந்தவனுக்கு உதவ மறுத்து விட்டோம். இது போன்ற சந்தப்பங் களில் சாதாரண மனிதன் என்றால் என்ன பண்ணு வான்? சட்டென்று முகத் தைத் தூக்கி வைத்துக் கொண்டு ‘நீ இல்லாவிட்டால் என்ன... அடுத்த ஆளைப் பார்க் கிறேன்!’ என்று உடனே புறப்பட்டு விடுவான். ஆனால், இவன் அசையவில்லையே... எனக்கு உதவு வதையே சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தங்கி விட் டானே... இவன் எந்த உதவியைக் கேட்டு இங்கு வந்தானோ, அந்த உதவியை இப்போது செய்வது அவசியம்!’ என்று முடிவெடுத்தார் காலாங்கிநாதர்.
ஒரு நாள் வாமதேவனை அருகில் அழைத்த காலாங்கிநாதர், சிவன் கோயில் கட்டுவதற்கு, தான் உதவத் தீர்மானித்திருப்பதாகத் தெரிவித்தார். வாமதேவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! சித்தரான காலாங்கிநாதர் எப்படி வாமதேவனுக்கு உதவுவார்? கட்டுக் கட்டாகப் பணமா தர முடியும்? சித்தர்கள் என்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த- அறிந்த ஸித்து வழிகளில் பொருளீட்டிப் பிறருக்கு உதவுவர். பொருளுக்குக் கஷ்டப் பட்ட உண்மை ஆசாமிகளுக்கு சித்தர்கள் தங்கம் தயாரித்துத் தந்திருக்கிறார்கள்.
தங்கம் தயாரிப்பதா? அது எப்படி என வியக்க வேண்டாம்! குறிப்பிட்ட மூலிகைகளை, குறிப்பிட்ட பக்குவத்தில் கலந்து ஒரு தைலம் தயாரிப்பார்கள் சித்தர்கள். இதைத் தயாரிப்பது என்பது சாதாரண மனி தருக்கு சாத்தியமல்ல. இதற்குண்டான நியமங்களும் வழிமுறைகளும் கடினமானவை. இந்தத் தைலத்தில் எந்த ஓர் உலோகத்தையும் - அது இரும்பாக இருந்தா லும் சரி... செம்பாக இருந்தாலும் சரி... உள்ளே முக்கி நனைத்து எடுத்தால் சொக்கத் தங்கமாக மாறி விடும். தங்கம் தயாரிக்கத் தேவையான சில மூலிகைச் செடிகள் சதுரகிரி மலையில் இன்றும் இருக்கின்றன.
வாமதேவனின் தேவைக்குக் கொடுத்தது போக, தைலம் அவரிடம் மீதம் இருந்தது. ‘இத்தகைய தைலத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்து... எந்த ஒரு துஷ்டனிடமாவது இது கிடைத்து விட்டால், பேராசைக்காகத் தங்கம் செய்ய ஆரம்பித்து விடுவான். அது, சில துர்ச் சம்பவங்களுக்குக் காரண மாகி விடும். எனவே, இதை ஓரிடத்தில் பத்திரப்படுத்திக் காவலுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்!’என்று முடிவெடுத் தார் காலாங்கிநாதர்.

காலாங்கிநாதர் உரோம வேங்கை, உதிரவேங்கை, ஜோதி விருட்சம், கருநெல்லி போன்ற மூலிகைகளாலும், 32 வகையான பாஷாணச் சரக்குகளாலும், இன்னும் சில பொருட்களாலும் தைலம் ஒன்று தயாரித்தார். அதில் சாதாரண சில உலோகங்களை நனைத்து, சொக்கத் தங்கக் கட்டிகளாக மாற்றி வாமதேவனிடம் கொடுத்தார். ‘‘இந்தத் தங்கக் கட்டிகளை விற்றுக் காசாக்கி, கோயில் திருப்பணிகளைச் சிறப்பாக முடி. இறைவனின் ஆசீர்வாதம் உனக்கு உண்டு!’’ என்று ஆசி கூறி அவனை அனுப்பினார். மனம் நிறைய மகிழ்ச்சியுடன் வாமதேவன் புறப்பட்டுப் போய், தனது காரியத்தை முடித்தது தனிக் கதை!
இதற்காகப் பெரிய கிணறு ஒன்றை வெட்டி, எஞ்சி இருந்த தைலத்தை அதில் கொட்டினார்; வாம தேவனின் தேவைக்குக் கொடுத்தது போக, எஞ்சி இருந்த தங்கக் கட்டிகளையும் அதில் போட்டார். கிணற்றை பத்திரமாக மூடினார். இந்த பொக்கிஷத்தைக் காவல் காக் கவும், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஆகிய சந்நிதிகளைக் கவனித்து வருவதற்காகவும் மந்தி ரங்கள் ஜபித்து திசைக்கு ஒரு காவல் தெய்வத்தை நியமித்தார். அப்படி நியமிக்கப்பட்ட தெய்வங்களில் ஒன்றுதான் பிலாவடி கருப்பர்.
சதுரகிரியின் அனைத்துத் திக்குகளிலும் இருக்கிற இந்த காவல் தெய்வங்கள்தான், மலைக்கும் மகாலிங்கத் துக்கும் காவல். சதுரகிரிக்கு வரும் அன்பர்கள் இந்த காவல் தெய்வங்களுக்கும் பூஜை மற்றும் வழிபாடுகளை நிகழ்த்தி விட்டுச் செல்வர். இந்த தெய்வங்களின் காவலை மீறி எந்த ஒரு துஷ்ட காரியத்தையும் எவரும் இந்த மலைப் பகுதிகளில் நிகழ்த்தி விட முடியாது. அப்படி நிகழ்த்த நினைத்தால் கருப்பர் காலி பண்ணி விடுவார்!
சதுரகிரிக்கு அடிக்கடி வந்து போகும் சில ஆன்மிக அன்பர்கள் இன்னொன்றையும் சொல்கிறார்கள்: ‘‘அந்நியர்களால மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஆபத்து வந்தப்ப அங்கே இருக்குற முக்கியமான நகைகளை எல்லாம் இந்தத் தைலக் கிணத் துக்குள்ளதான் கொண்டு வந்து வெச்சாங்க!’’
எது எப்படி இருந்தாலும், தலைமுறைகளையும் தாண்டி தைலக் கிணறு இன்றைக்கும் ஒரு மர்மப் பிரதேசம்தான்!
சதுரகிரி மலையின் அற்புதங்களையும், சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சந்நிதிகளையும் தரிசிக்க அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவு மேலே நடந்து செல்ல வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லி இருந்தோம். இந்த மலைப் பாதையில் நடந்து செல்லும்போது எந்த விதமான கடைகளும் இருக்காது. போகிற வழியில் தண்ணீர் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு. எனவே, மலை மேல் செல்பவர்கள் உணவு, தண்ணீர், நொறுக்குத் தீனி உட்பட அனைத்தையும் சேகரித்துக் கொண்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும். ஒரு தொகை பேசிக் கொண்டு நமது லக்கேஜுகளை சுமைகாரர்கள் மற்றும் மலைவாசிகளிடம் கொடுத்து விட்டால், அவர்கள் பத்திரமாக மேலே கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
தாணிப்பாறை அடிவாரத்தில் கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், ராஜயோக காளியம்மன், விநாயகர், நாகர்கள் முதலான தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். இவர்களை வழிபட்ட பின் யாத்திரையைத் தொடங்க வேண்டும். சதுரகிரி மலை மேல் இருக்கிற மூலிகைகளின் பெயர்களை வனத் துறையினர் இங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். மலைக்கு மேல் இருக்கிற பல மூலிகைகள், பல வித நோய் தீர்க்கும் தன்மை கொண்டவை என்றாலும் அது எந்த மூலிகை, எப்படி அதைப் பயன்படுத்த வேண்டும் என்று எவரும் அறியார். இதய நோய், சர்க்கரை நோய், மூட்டு வலி போன்ற பல வியாதிகளையும் குணமாக்கக் கூடிய மூலிகை கள் மலை மேல் உள்ளன. முறையான அனு மதி இன்றி இவற்றை மலையை விட்டுக் கீழே எடுத்து வரவும் கூடாது.
இனி, மலை ஏறும்போது வரும் சில முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம்.
அடிவாரம் தாண்டியதும், நடந்த அரை மணி நேரத்தில் வரும் இடம்- குதிரையூத்து! முன் காலத்தில் ராஜாக்கள், ஜமீன்தார்கள் போன்ற பிரபலங்கள் இங்கே வழிபாட்டுக்கு வருவார்களாம். அவர்கள் வரும் குதிரைகள் இங்கேயே நிறுத்தப்படும். இதற்கு மேல் அவர்களால் குதிரையில் செல்ல முடியாது. எனவே, அவற்றை இங்கேயே கட்டி வைப்பார்கள். இங்கே ஓர் ஊற்று உண்டு. அதற்கு ‘குதிரையூத்து’ என்று பெயர்.
இதை அடுத்து நடந்து செல்லும்போது மாங்கனி ஊத்து, வழுக்குப் பாறை (தண்ணீர் ஓடும் காலங்களில் இந்தப் பாறைகள் பெருமளவில் வழுக்குமாம்! கடந்த ஆடி அமா வாசை வழிபாட்டுக்காக வந்த பக்தர்கள் சிலர், இங்கே வழுக்கி விழுந்த சம்பவமும் உண்டு), அத்தியூத்து (அத்தி மரங்கள் நிறைந்த இடம் என்றும், அத்ரி மகரிஷி தவம் இருந்த பகுதி என்றும் சொல்கிறார்கள்!), கோணத்தலவாசல் (இந்த இடத்தில் பாதை கோணலாக அப்படியும் இப்படியும் திரும்புகிறது. அதனால் இந்தப் பெயராம்!), காராம்பசுத் தடம் (சுந்தர மகாலிங்கம் தல புராணத்தோடு சம்பந்தப்பட்ட இடம்), கோரகுண்டா ஆகியவை வரும்.
இதில், கோரகுண்டா- விஸ்தாரமான ஒரு பகுதி. போகரின் சிஷ்யரான கோரக்கர் இங்குதான் குகை அமைத்துத் தவமிருந்தார். மழைக் காலத்தில் அர்ஜுனா நதி இங்கே ஆர்ப்பாட்டமாகச் செல்லும். சீஸன் காலத்தில் தண்ணீர் இங்கு சுழித்துச் செல்லும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அதிக அளவு தண்ணீர் ஓடும் காலத்தில் இந்தப் பகுதியைக் கடக்க நேரிடும் பக்தர்கள் இங்கே சற்றுத் தங்கி, இளைப்பாறிச் செல்வார்கள். தாங்கள் கொண்டு வரும் உணவுப் பண்டங்களை இங்கே ஆர அமர உட்கார்ந்து சாப்பிடுவார்கள். அதே நேரம் இது ஓர் ஆபத்தான பகுதி என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இங்கு துயரமான சம்பவம் ஒன்று சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்துள்ளது. அது பற்றி ராஜபாளையத்தைச் சேர்ந்த அன்பர் ஒருவர் நம்மிடம் சொன்னதாவது:
‘‘அது 1977-ஆம் வருடம்னு நினைக்கறேன். ஆடி அமாவாசைக்காக ஆயிரக்கணக்கான ஜனங்க மலைக்கு வந்திருந்தாங்க. மலைக்கு மேல வர்றவங்களும், மலை லேர்ந்து கீழ இறங்கிறவங்களும் களைப்பு தீர இயற்கை தந்த சுகங்களை அனுபவித்தபடி இந்த இடத்துல தங்கியிருந்தனர். இங்கு பாயும் அர்ஜுனா நதியில் எப்ப வெள்ளம் வரும்னு சொல்ல முடியாது. ஒரு விநாடி நேரத்துல பொசுக்குனு வெள்ளம் பெருகி வந்து, அடுத்த சில நிமிடங்கள்லயே வந்த சுவடு தெரி யாம அடங்கிப் போயிடும்.
அது மாதிரி ஒரு மாய வெள்ளம் திடீர்னு வந்து, ஓய்வெடுத்திட்டிருந்த பலபேரை அள்ளிக்கிட்டுப் போயிடுச்சு சாமீ. ஓலமிடவும் நேரமில்லை. உயிரைக் காப்பாத்திக் கவும் வழி தெரியல. இந்த சம்பவம், ஆயிரக் கணக்கானவங்களைக் காவு வாங்கிடுச்சுனு சொல்றாங்க. சாமிக்கு நேர்ந்துகிட்டு விடறதுக் காகப் பல பேருங்க ஓட்டிட்டு வந்த ஆடு- மாடுங்களையெல்லாம் அந்த வெள்ளம் அடிச்சுட்டுப் போயிடுச்சு. சேத விவரம் பாத்தப்ப அடையாளம் தெரிஞ்ச ஆசாமிங்க பாதிப் பேருதான். பல பேரோட உடம்பே கிடைக்கல. எனவே, யாரு எப்ப வந்தாலும், இந்த அர்ஜுனா நதி ஓடற பக்கம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்!’’ என்றார் கண்களில் துயரத்தோடு.
பழநியில் பிரதிஷ்டை செய்வதற்காக போகரின் உத்தரவுப்படி தண்டாயுதபாணி ஸ்வாமியின் விக்கிர கத்தை கோரக்கர் இங்குதான் தயாரித்தாராம். அப் படித் தயாரிக்கும்போது தண்ணீர் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக ஓரிடத்தில் தன் கைகளையே அணை போல் கட்டிச் சேமித்து வைத்தாராம். இரண்டு கைகள் தண்ணீரை மறித்து வைத்திருப்பது போன்ற அந்த அமைப்பை இன்றும் பார்க்கலாம்.இதற்கு, ‘கோரக்கர் ஊற்று’ என்று பெயர்.
‘‘ஒரே மாதிரி இருப்பது போல் தண்டாயுதபாணி ஸ்வாமியின் மூன்று விக்கிரகங்களை தன் சிஷ்யர்களின் உதவியோடு போகர் தயாரித்தார். அதில், ஒன்று பழநியில் உள்ளது. இன்னொன்று தனியார் ஒருவரிடம் இருக்கிறது. அவர் யாரென்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மூன்றாவது விக்கிரகம் இந்த சதுரகிரி மலையின் காடுகளில் எங்கோ ஒளிந்திருக்கிறது’!’ என்று நம்மிடம் கிசுகிசுத்தார் துறவி ஒருவர். எல்லாம் பழநி தண்டாயுத பாணிக்கே வெளிச்சம். நமது விஷ யத்துக்கு வருவோம்.
கோரகுண்டாவில் ஒரு குகை இருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் இருக்கிறது. தண்ணீர் நிறைய ஓடும் காலத்தில் இந்தக் குகைக்குள் செல்வது சிரமம். அதையும் மீறி இளைஞர்கள் சிலர் துணிச்சலாக ஏறி உள்ளே சென்று வருகிறார்கள். சித்தர்களது பொழுதுபோக்கு அம்சமான கஞ்சாவை இங்கேதான் பக்குவப்படுத்தி பதப்படுத்துவார்களாம். அதற்காக ஒரு பாறையும் இருக்கிறது. இங்கே ஜடா முடியுடன் ஒரு சாமியார் பெண்மணி இருந்து வருகிறார். தனது பெயர் பிச்சையம்மா எனக் கூறும் அவர், ‘‘சாமீ... நல்ல எண்ணத்தோட மலைக்குப் போனவங்களுக்கு நல்லது நடக்கும். இதோ, இந்தப் பாறையை பாருங்க... இங்க எனக்கு ஒரு சித்தர் நல்ல வளர்ந்த உடலோட, தலைமுடி தொங்க எனக்கு தரிசனம் கொடுத்தார். அவருக்கு இங்கே ஒரு கோயில் கட்டணும்னு எனக்கு ஆசை!’’ என்றார் நம்மிடம்.
கோரகுண்டாவில் இருந்து புறப்பட்டால், அடுத்து வரும் பெரிய பாறை போன்ற பகுதியில் சற்று நேரம் அமர்ந்தால், சிலுசிலுவெனக் குளிர்ந்த காற்று நம்மைத் தாக்கும். அடுத்து வருவது, ரெட்டை லிங்கம். மிகவும் சிறிய கோயில். ஒரு சின்ன மண்டபத்தில் இரு லிங்கங்கள். சித்தரான ராமதேவர் இந்த ரெட்டை லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். இதன் பின்னணியிலும் சுவாரஸ்யமான ஒரு கதை இருக்கிறது.

No comments:

Post a Comment