Tuesday 22 August 2017

உள்ளாடைத் தேர்வில் உறுதியாக இருங்கள்!


``உள்ளாடை என்பது உடை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. உடலுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம், அதன் தேர்வில் அடங்கியிருக்கிறது. மேலும், அது ஒரு தன்னம்பிக்கை காரணியும்கூட'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் மகேஸ்வரி.

உள்ளாடைத் தேர்வில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டிய விழிப்புஉணர்வுத் தகவல்களைப் பகிர்கிறார் அவர்.

``ஒவ்வொரு பெண்ணும் வாழ்நாளில் தன் மார்பக அளவில் ஆறு முறை மாற்றங்களைச் சந்திக்கிறாள். பதின் வயதுகளில் ஆரம்பிக்கும் மார்பக வளர்ச்சி, அதன் இறுதி ஆண்டுகளில் முழுமையான வளர்ச்சியை எட்டியிருக்கும். கர்ப்பகாலத்தின்போது அதிகரிக்கும் மார்பக அளவு, குழந்தை பிறந்த பிறகு, பால் சுரப்பிகளின் காரணமாக மேலும் அதிகரிக்கும். தாய்ப்பாலூட்டு வதை நிறுத்திய பிறகு, பழைய நிலைக்குத் திரும்பும் மார்பகத்தில் தொய்வு ஏற்பட்டிருக்கும். அடுத்ததாக, மெனோபாஸ் காலத்திலும் மார்பக அளவில் மாற்றம் ஏற்படும். வயதான காலத்தில் மார்பகம் சுருங்கும். இப்படிப் பெண்களின் வாழ்நாள் முழுக்க மார்பக அளவு மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் பலர் அதற்கேற்ற வாறு தங்களின் பிரேஸியர் அளவை மாற்றுவதில்லை. இந்த அலட்சியம் களையப்பட வேண்டும். 

அளவைத் தேர்ந்தெடுக்கத் தெரியுமா?!

பொதுவாக, பெண்கள் பிரேஸியர் வாங்கும்போது 32, 34, 36 என உடல் சுற்றளவின் அடிப்படையிலேயே அதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அதன் கப் அளவே மார்பகத்தின் அளவைக் குறிப்பது. அது A,B,C என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. உதாரணமாக, 34A என்பது உடலின் சுற்றளவு மற்றும் அதையொத்த பெரிய கப் சைஸ் கொண்டது. 34B என்பது சராசரி கப் சைஸும் 34C என்பது சிறிய கப் சைஸும் கொண்டது. எனவே, உடல் சுற்றளவு மட்டுமன்றி, கப் சைஸையும் கேட்டு வாங்க வேண்டியது அவசியம்.
பாலூட்டும் நேரத்தில் பிரேஸியர் அவசியம்!

அதிக இறுக்கமாக அல்லது தளர்வாக பிரேஸியர் அணிவதைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமாக அணியும்போது வலி, அரிப்பு, எரிச்சல், பட்டைகள் அழுத்துவதால் ஏற்படும் புண் என்று பிரச்னைகள் ஏற்படலாம்.  எனவே, மார்பகத்துக்குச் சரியான வகையில் சப்போர்ட் கொடுக்கும் உள்ளாடைத் தேர்வு அவசியம். பாலூட்டும் நேரத்தில் உள்ளாடை அணிய வேண்டாம், அணியக் கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் உள்ளன. உண்மையில், அப்போது மார்பகத்தில் உண்டாகும் வலி, கட்டிகள், பால் கட்டும் பிரச்னைகளைத் தவிர்க்க கட்டாயம் பிரேஸியர் அணிய வேண்டும்.

குழந்தை பிறப்புக்குப் பின் சில பெண்கள் பிரேஸியர் அணியும் பழக்கத்துக்கு விடைகொடுத்து விடுகிறார்கள். அது மிகத் தவறு. அழகு மட்டுமல்ல, இது ஆரோக்கியமும் சம்பந்தப்பட்ட விஷயம். மார்பகத்தின் கீழ்ப் பகுதியில் வியர்வை தங்கி அரிப்பு, புண் ஏற்படுவதைத் தவிர்க்கவும் செல்களின் தொய்வைக் குறைக்கவும் பெண்களுக்கு உள்ளாடை மிக அவசியமாகிறது. 

இவற்றையும் கவனிக்கவும்!

* சிந்தெடிக் ரகங்கள் தவிர்த்து எப்போதும் காட்டன் பிரேஸியரையேப் பயன்படுத்தவும். 

* வெயிலில் அதிகம் செல்பவர்கள் புறஊதாக் கதிர்களை உள்ளிழுக்கும் அடர் நிறங்கள் தவிர்த்து, வெளிர் நிறங்களில் உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கவும். 

* உடல் எடை அதிகமானால், மெலிந்தால் அதற்கேற்ப பிரா சைஸையும் மாற்றிப் பயன்படுத்தவும். 

* பொதுவாக, ஒரு பிரேஸியரை ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரைப் பயன்படுத்தலாம். எலாஸ்டிக் லூஸாகி, ஹூக் உடைந்து, துணி நைந்து போனவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

No comments:

Post a Comment