Tuesday 22 August 2017

காபி - ஏன்? எவ்வளவு? - கமகம தகவல்கள்!


காலை விடிந்ததும் காபியின் முன்புதான் பலர் கண்விழிக்கிறார்கள். ஒரு கப் காபியை உறிஞ்சியபடி பேப்பர் படிக்காவிட்டால் சிலருக்குத் தலையே வெடித்துவிடும். அன்றைய பொழுது, பொழுதாகவே இருக்காது. வீடாக இருக்கட்டும்; அலுவலகமாக இருக்கட்டும்... நம்மைச் சந்திக்கும் விருந்தினர்களையோ, நண்பர்களையோ உபசரிக்க முதலில் நாம் கேட்கும் கேள்வி, “காபி சாப்பிடுறீங்களா?” என்பதுதான். இப்படி, நம்முடைய வாழ்விலும், கலாசாரத்திலும், பழக்கவழக்கத்திலும் இரண்டறக் கலந்துவிட்டது காபி.

காபிக்கு பல நூற்றாண்டு வரலாறு உண்டு. இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கும் காபியைக் கண்டறிந்தவர்கள், எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். காடுகளில் காய்த்துச் செழித்திருந்த காபி செடிகளை மேய்ந்த ஆடுகள் வழக்கத்தைவிட உற்சாகமாக இருந்ததைக் கண்ட தொழிலாளிகள் தாங்களும் அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தனர். அவர்கள் வழியாகத்தான் காபி வெளியுலகுக்கு வந்தது. இன்று உலக அளவில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிக பரிவர்த்தனை நடப்பது காபியில்தான். 
காபி இன்று பலவகையான மாற்றங்களுக்குட்பட்டு இருக்கிறது. ஃபில்டர் காபி, டிகிரி காபி, டிகாக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, கிரீன் காபி என்று பல அவதாரங்களை காபி எடுத்திருக்கிறது. 

இது ஒருபுறமிருக்க, காபி குடிப்பது உடம்புக்கு நல்லது என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலர் அது உடம்புக்குப் பல்வேறு தீமைகளை உருவாக்கும் என்கிறார்கள். காபி நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு விடை தெரியாமலே காபி பிரியர்கள் கப் கப்பாக காபியை உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்.
உண்மையில், காபி நல்லதா? காபியில் என்னதான் இருக்கிறது?  ஒரு நாளைக்கு எத்தனை காபி குடிக்கலாம்? எவ்வளவு குடிக்கலாம்?

எல்லா கேள்விகளுக்கும் விடைகளைத் தேடுவோம்.
 

காபியில் என்னென்ன இருக்கிறது? 

காபியில், கெஃபைன் (caffeine) என்னும் வேதிப்பொருளும் பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தாதுக்களும் உள்ளன. இவைதவிர பி காம்ப்ளெக்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்றவையும் நிரம்பியிருக்கின்றன. 
 
கெஃபைன் என்ன செய்யும்?

காபியில் உள்ள கெஃபைன், நரம்பு மண்டலத்தைத் தூண்டும் (Central Nervous System Stimulant) பொருளாகச் செயல்படுகிறது. அதாவது, மூளையில் அடினோசின் (Adenosine) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க உதவுகிறது. காபி குடிக்கும்போது அதில் உள்ள கெஃபைன், அடினோசின் ஆதிக்கத்தைக் குறைப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

மேலும் டோபமைன் (dopamine), நாரட்ரீனலின்  (noradrenaline) போன்ற நியூரோ டிரான்ஸ் மிட்டர்கள் தூண்டப்படுகின்றன. அப்போது உடனே அட்ரினலின் (adrenaline), எஃபிநெஃப்ரின் (epinephrine) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதனால், மூளை அலெர்ட் செய்யப்படுகிறது; இதயம் வேகமாகத் துடிக்கிறது; உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது; கண் பார்வை விரிகிறது; சுவாசக் குழாய் நன்கு திறக்கிறது; ரத்த நாளங்கள் சுருங்குகின்றன;  ரத்த அழுத்தம் கூடுகிறது; தசைகளுக்கு அதிக ரத்தம் அனுப்பப்படுகிறது; தசைகள் இறுகி உடல் அவசர நிலைக்குத் தயாராகிறது. ஒரு காபி நம் உடலில் இத்தகைய மாற்றங்களையெல்லாம் சில நிமிடங்களில் நிகழ்த்திவிடுகிறது. 

ஒரு நாளைக்கு எத்தனை கப் அருந்தலாம்?

ஒரு நாளைக்கு 250 மில்லி கிராம் கெஃபைன் உட்கொள்வது உடலுக்கு எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. கெஃபைனை ஏற்கும் அளவு, வயது, உடல்நிலை, வளரும் சூழலைப் பொறுத்து மாறுபடலாம். பொதுவாக, ஒரு கப் காபியில் 80-165 மி.லி கிராம் அளவு கெஃபைன் உள்ளது. ஒவ்வொரு வகையான காபியிலும், அதில் இருக்கும் கெஃபைன் அளவு மாறுபடுவதால், ஒருவர் இவ்வளவுதான் குடிக்கலாம் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. 

காபி அருந்துவதால் நன்மைகள் உண்டா?

காபி, வளர்சிதை மாற்றத்தையும் (Metabolism), குடல் அசைவுச் (Bowel Movement) செயல்பாடுகளையும் அதிகரிக்க உதவுகிறது. குடல் அசைவு அதிகரிப்பதால் மலம் எளிதாக வெளியேறும். ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் தன்மை இருப்பதால், பல வலி நிவாரண மாத்திரைகளிலும் கெஃபைன் சேர்க்கப்படுகிறது. 

இதுதவிர, அல்சைமர் (Alzheimer), நரம்புத்தளர்ச்சி நோய் (Parkinson’s disease - PD), இதயநோய், சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் நோய்களைத் தடுக்கும் ஆற்றலும் காபிக்கு உண்டு. அதுமட்டுமல்ல, மனஅழுத்தத்தையும் குறைக்கிறது என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால், இதுபற்றிய ஆய்வுகள் இன்னமும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. 

காபி அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? 

காபியில் இருக்கும் கெஃபைன் குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, உடல்நலப் பாதிப்புக்குக் காரணியாகிறது. மேலும், காபிக்கு அடிமையாகி அதிகமாகக் குடிக்கும்போது, கெஃபைன்  உடலில் அதிகமாக சேரச்சேர பக்க விளைவுகள் அதிகமாகும்.

அது பல்வேறு பாதிப்புகள் ஏற்படக் காரணமாகிறது. குறிப்பாக, படபடப்பு, மன அமைதியற்ற நிலை, தூக்கமின்மை, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. பசியின்மை ஏற்படலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்குத் தலைச்சுற்றல் வரும் வாய்ப்புகள் அதிகம்.
மனிதனின் அன்றாடத் தேவைக்கு 4-5 என்ற அளவில் பொட்டாசியம் தாது இருந்தால் போதுமானது. இது நம் அன்றாட உணவின் மூலமே கிடைத்துவிடும். காபியை அதிகமாக உட்கொள்ளும்போது, பொட்டாசியம் அளவு அதிகரித்துப் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது.  ரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரித்தால்,  Hyperkalemia, சிறுநீரகப் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

யார் குடிக்கக் கூடாது?

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான சத்துகள் கிடைக்க பால்தான் சிறந்தது. அதேநேரத்தில், தேயிலையில் கெஃபைன் அளவு குறைவாக இருப்பதால் டீ குடிக்கலாம். அல்சர், செரிமானப் பிரச்னைகள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் காபி குடிப்பதைத் தவிர்த்தல் நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களும் சர்க்கரை சேர்க்காமல் காபி சாப்பிடலாம்.

எப்போது காபி குடிக்க வேண்டும்? 

காலையில் எழுந்ததும் குடிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்போ, பின்போ குடிக்கக் கூடாது. குறைந்தபட்சம் ஒரு மணி நேர இடைவெளி அவசியம்.  தூங்குவதற்கு முன்பாகக்  காபி குடிக்கக் கூடாது. மேலும் தூக்கம் குறைவாக உள்ளவர்கள் காபியைத் தவிர்ப்பது நல்லது. தலைவலி மாத்திரையைக் காபியுடன் விழுங்கக் கூடாது. மாத்திரைகளின் வீரியத்தைக் காபி குறைத்துவிடும். 

காபியும் ஒரு வகையான உணவுப்பொருள்தான் என்கிறார்கள். அதேநேரத்தில்,  கண்டிப்பாக  காபி குடித்தே தீர வேண்டும் என்று எதுவுமில்லை. ஆனால், அளவோடு இருந்தால் தீங்கில்லை என்றே இன்றைய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஆக, நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும் காபியை அளவுடன் பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்.

No comments:

Post a Comment