Wednesday 30 August 2017

தசரதருக்கு பிள்ளை வரம் தந்த திருத்தலம்!


ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம்


‘அது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பது ஆன்றோர் வாக்கு. அப்படி மனிதராகப் பிறந்துவிட்டாலே முழுமை அடைந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. தன் பேர் சொல்ல ஒரு குழந்தை பிறந்தால்தான் பிறவியின் பயன் முழுமையடையும். அப்படி, குழந்தைச் செல்வம் கிடைக்காமல் வேறுபல செல்வங்கள் என்ன கிடைத்தாலும், எவ்வளவு கிடைத்தாலும் அதனால் பயன் ஏதும் இல்லை என்கின்றன ஞானநூல்கள்.
இந்தக் கருத்துக்குச் சான்றாக தசரத சக்கரவர்த்தியைச் சொல்லலாம். தேவாதி தேவர் களே உதவிக்கு அழைக்கும் அளவுக்கு வல்லமை பெற்ற மன்னர், ஒரே தருணத்தில் பத்து ரதங்களைச் செலுத்தும் திறமை கொண்டவர் என்பதால் ‘தாசரதீ’ என்று சிறப்பிக்கப் பட்டவர், மக்களின் மனம் கவர்ந்த மாமன்னர். இப்படிப் பல சிறப்புகள் இருந்தாலும் அவையாவும் தசரதரை மனம் மகிழச் செய்யவில்லை. காரணம், வெகுகாலமாக குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்ததுதான்!

ஒருமுறை வேட்டைக்குச் சென்றார் தசரதர். அங்கே, நதி தீரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. யானை நீர் பருகும் சத்தம்தான் அது எனக் கருதிய தசரதர், அந்த திசை நோக்கி கணை தொடுத்தார். ஆனால், அம்பு தாக்கியதோ இளைஞன் ஒருவனை.  அவனுடைய அலறலைக் கேட்டபிறகே, தனது தவறு உறைத்தது தசரதருக்கு. ஓடோடிச் சென்று இளைஞனை மடியில் தாங்கிக்கொண்டார். பெற்றோருக்காக தான் குடுவையில் சேகரித்த தண்ணீரை அவர்களிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டு உயிரைவிட்டான் இளைஞன். தசரதரும் குடிநீரைக் கொண்டு சென்றார். மகன் இறந்துவிட்டதை பெற்றோரிடம் தெரிவித்தார்.  கலங்கிக் கதறிய இளைஞனின் பெற்றோர், ‘நீயும் புத்திர சோகத்தால் உயிரை விடுவாய்’ என்று தசரதரை சபித்தார்கள்.

அந்த சாபத்தைக் கேட்டு வருத்தம் கொள்ள வேண்டிய தசரதர், மகிழ்ச்சி அடைந்தாராம். புத்திர சோகம் உண்டென்றால், புத்திர பாக்கியம் நிச்சயம் அல்லவா? அதை எண்ணி மகிழ்ந்தாராம். அந்த அளவுக்கு, பிள்ளை பாக்கியத்துக்காக ஏங்கியவர் தசரதச் சக்கரவர்த்தி. அவரின் ஏக்கம் விலகும் காலமும் கனிந்தது.

ஒருநாள், தன்னுடைய குலகுருவான வசிஷ்ட மகரிஷியைச் சந்தித்த தசரதர், அவரிடம் தனது மனக் குறையைப் பகிர்ந்துகொண்டார். பிள்ளை பாக்கியம் கிடைப்பதற்கான வழிபாடு குறித்தும் குருநாதரிடம் வேண்டினார். வசிஷ்டர் அவரிடம், ‘‘கிழக்கில் இருந்து வடக்காகத் திரும்பும் நதியின் கரையில் சிவாலயம் அமைத்து, அந்தத் திருத்தலத்தில் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால், சிவனருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்’’ என்று அருள் புரிந்தார்.

குருநாதர் சொன்னபடியே, பரத கண்டத்தின் தெற்கு பாகத்தில் கமண்டல நதியானது கிழக்கில் இருந்து வடக்காகப் பாய்வதை அறிந்த தசரத சக்கரவர்த்தி, இந்த நதி தீரத்துக்கு வந்தார். குறிப்பிட்ட இடத்தில், மிக அழகாக சிவாலயம் ஒன்றைக் கட்டினார். பின்னர் கலைக்கோட்டு முனிவரின் வழிகாட்டலுடன் மிக பிரமாண்டமாக  புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தினார். அதன் பலனாக ஒன்றுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர், தசரத சக்கரவர்த்திக்கு.

தசரதர் அருள்பெற்ற அந்தத் தலத்தில், அவர் நடத்திய யாகத்தின் பெயரையே ஏற்று அருள்மிகு புத்திர காமேட்டீஸ்வரராக, தன்னைத் தேடி வரும் அன்பர் களுக்கு பிள்ளை வரம் முதலாக சகல வரங்களையும் வாரி வழங்கும் வள்ளலாக அருள்பாலித்துக் கொண்டிருக் கிறார் தென்னாடுடைய சிவபெருமான்.

திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ஆரணி. ஊருக்குள் நுழையும் போதே ஆற்றுப்பாலத்துக்கு இடப்புறத்தில் கோயிலைத் தரிசிக்க இயலும். பெரும்பாலானோர், பேருந்து நிலையத் தில் இருந்து நடந்தே செல்கின்றனர். ஆட்டோவிலும் செல்லலாம்.
கமண்டல நதி,  சிவ அம்சமாகவே திகழ்ந்த ஜமதக்னி முனிவரால் உருவானது என்பதால், இந்த நதி தீரமும் அதன் கரையில் அமைந்திருக்கும் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலய தரிசனமும் அதிக விசேஷம் வாய்ந்தவையாய் திகழ்கின்றன. நதிக் கரையில் வடக்குமுகமாக விநாயகரும் தெற்குமுகமாக ஆஞ்சநேயரும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். அரசமரத்தடி மேடையில் நாகர்கள் பிரதிஷ்டையையும் தரிசிக்க முடிகிறது. ராஜ கோபுரத்துக்கு நேர் எதிரில் தசரத மகாராஜாவுக்கும் தனிச் சந்நிதி உண்டு. உள்ளே யோக நிலையில் வீற்றிருக்கிறார் அவர்.

பல்லவர் கால கட்டட பாணியில் அமைந்திருக் க்கும் ஆலயத்தின் உள்ளே கருவறை கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மதேவர், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோரும் அழகு திருக்கோலத்தில் அருள்கிறார்கள். மேலும் நடராஜ மூர்த்தி, வீரபத்திரர், காளிதேவி, தேவியருடன் முருகப் பெருமான், கிருஷ்ணர், சகஸ்ரலிங்கேஸ்வரர், ரேணுகாதேவி, நவகிரகங்கள், அறுபத்துமூவர் ஆகியோரையும் இந்த ஆலயத்தில் தரிசிக்க முடிகிறது. சனி பகவான் மற்றும் சூரிய தேவனுக்கு தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், லட்சதீபம், நாக சதுர்த்தி ஆகிய வைபவங்கள் வெகுகோலாகலமாகக் கொண் டாடப்படும் இக்கோயிலில் தைப்பொங்கல் திருநாளன்று நிகழும் ஆற்றுப்படி திருவிழா மிகப் பிரசித்திப்பெற்ற ஒன்று.

குழந்தைப் பேறு வேண்டுவோர், இங்கு வந்து ஸ்வாமி-அம்பாளை வேண்டிக் கொள்வதுடன் 6 திங்கட்கிழமைகள் விரதம் இருக்க வேண்டும். முதல் திங்களன்று சிவ வழிபாடு முடித்து ஒரு குழந்தைக்கு அன்னதானம் செய்ய வேண்டும். 2-வது திங்களன்று இரண்டு குழந்தைகள், 3-வது திங்களன்று மூன்று குழந்தைகள் என்ற கணக்கில் ஒவ்வொரு  திங்களன்றும் உரிய எண்ணிக்கை யிலான குழந்தைகளுக்கு அன்னதானம் செய்து, 6-வது வாரம் 6 குழந்தைகளுக்கு அன்னதானம் என்று பூர்த்தி செய்ய வேண்டும். அன்று கோயிலுக்கு வந்து ஸ்வாமிக்கு தயிர் அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் சமர்ப்பித்து வழிபட வேண்டும். இதன் பலனாக, சிவனருள் கைகூடும்; விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த தலத்தில் ஆனி பெளர்ணமியில் நிகழும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்துகொண்டு வழிபடுவது கூடுதல் விசேஷம்!
திருமண வரம் வேண்டும் பக்தர்கள் கோயிலில் உள்ள  அரசு-வேம்பு மரங்களில் மஞ்சள் கயிறு கட்டிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். அதேபோல், இங்கே, நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், சர்ப்பதோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஐப்பசி அன்னாபிஷேகமும் இந்தக் கோயிலில் விசேஷம்.  வரும்  ஐப்பசி அன்னாபிஷேகத்  திருநாள். அன்று, ஆரணிக்குச் சென்று புத்திரகாமேட்டீஸ் வரரைக் கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபட்டு வரம் பெற்று வாருங்கள்.

உங்கள் கவனத்துக்கு

ஸ்வாமி: ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீபெரிய நாயகி

தலவிருட்சம்: பவளமல்லி

திருத்தலச் சிறப்பு: ஜமதக்னி முனிவர் உருவாக்கிய கமண்டல நதி பாயும் தலம்; பிள்ளை வரம் வேண்டி தசரதர் யாகம் செய்த திருத்தலம்.

சிறப்பு வழிபாடு: இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை தரிசிப்பதுடன், தொடர்ந்து ஆறு திங்கட் கிழமைகள் விரதம் இருந்து வழிபட்டால், விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும்; நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட சர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

எப்படிச் செல்வது?: திருவண்ணாமலையில் இருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ளது ஆரணி. ஊருக்குள் நுழையும்போதே ஆற்றுப் பாலத்துக்கு இடப்புறத்தில் கோயிலைத் தரிசிக்க இயலும். பெரும்பாலானோர், பேருந்து நிலையத்தில் இருந்து நடந்தே செல்கின்றனர். ஆட்டோவிலும் செல்லலாம்.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையிலும் கோயிலின்  நடை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment