Friday 18 August 2017

கொட்டியூர் - மகா க்ஷேத்திரம்!

 

    வருடத்தில் 28 நாட்கள் மட்டுமே தரிசனம்!

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் கண்ணூர் - வயநாடு நெடுஞ்சாலையிலிருந்து உட்புறமாக அடர்ந்த காடுகளுக்கிடையே அமைந்துள்ளது கொட்டியூர் மகா க்ஷேத்திரம். `ஆஹா! தஞ்சை கோயில் அளவுக்குப் பிரமாண்டமாக இருக்கும்' என்ற எதிர்பார்ப்புடன் சென்ற எங்களைச் சில ஓலைக்குடிசைகளே வரவேற்றன.     
தட்ச யாகம் நடந்த  இடமாக நம்பப்படும் இந்தக் கோயிலை வருஷத்தில் வெறும் 28 நாள்கள் மட்டுமே திறக்கிறார்கள்.  இதுமட்டுமல்ல... இந்தத் தலம் குறித்து விசாரித்தபோது கிடைத்த மேலும் பல தகவல்கள் நம்மைச் சிலிர்க்கவைக்கின்றன.
சிவபெருமானை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்தை அழித்து அவன் தலையைக்கொய்த சிவபெருமான் சினம் தணிந்த நிலையில் சுயம்புவாக எழுந்தருளிய தலம் இது. 

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் கூடிய தலம் என்பதால் கூடியூர் என்று அழைக்கப் பட்டு, காலப்போக்கில் கொட்டியூர் என்று ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

கொட்டியூரைச் சூழ்ந்துள்ள பல ஊர்களும் தட்ச யாகம் தொடர்புடையதாகவே அமைந்திருக் கின்றன. தட்ச யாகத்துக்கு வந்த பார்வதி தேவி, யாகம் நடந்த இடத்தை, தொலைவில் இருந்தே பார்த்த ஊர் `நீண்டு நோக்கி' என்றும், பயணக் களைப்பால் சோர்வுற்ற தேவியின் நடை வேகம் தணிந்த இடம் `மந்தன்சேரி' என்றும், வழியில் அவள் பால் காய்ச்சிய மலை `பாலுகாச்சி மலை' என்றும், தட்சனின் தலையை வெட்டிய பிறகு சிவபெருமான் வாளை வீசிய இடம் `முதிரேரிக் காவு' என்றும் அழைக்கப்படுகின்றன.    
புராதனமான இந்தக் கொட்டியூர் மகா க்ஷேத்திரத்தில், இக்கரைக் கொட்டியூர், அக்கரைக் கொட்டியூர் என்று இரண்டு கோயில்கள் உள்ளன. பாவலி ஆற்றின் அந்தப்பக்கம் உள்ள அக்கரைக் கொட்டியூரை வைகாச மகோற்ஸவம் நடை பெறும் 28 நாள்களுக்கு மட்டுமே திறக்கிறார்கள்.  மற்ற நாள்களில் சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்துக்குச் சென்ற பாவம் தீருவதற்காக தேவர்கள் அங்கு வழிபடுவதாக ஐதீகம். அப்போது பக்தர்கள் வழிபடுவதற்காக, இக்கரைக் கொட்டியூர் என்ற பெயரில் மிகச் சிறிய சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.

வைகாச மகோற்ஸவம் நடைபெறும் நாள் களில் சுமார் 50 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் கேரளத்தின் வடபகுதியில் இருந்து இந்தக் கோயிலுக்கு வருகை தருகின்றனர். மற்றபடி இந்தக் கோயில் இருப்பதே அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. 

தட்ச யாகம் நடைபெற்ற காலத்துக்குப் பின்பு காலப்போக்கில் கவனிப்பார் இல்லாமல் போன இந்த இடத்தை சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு குறிச்சியார் என்ற ஆதிவாசிகளே கண்டு பிடித்தனர். எனவே, முதல்முறையாகப் பூஜை செய்யும் நம்பூதிரி பிராமணர்கள் குறிச்சியார்களின் அனுமதியில்லாமல் கோயிலுக்குச் செல்ல முடியாது. இன்றைக்கும் இந்த நடைமுறை உள்ளது.

அக்கரைக் கொட்டியூரில் நடைபெறும் மகோற்ஸவத்தை 64 சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்துதான் செய்கிறார்கள். இந்த 64 சாதிகளைச் சேர்ந்தவர்களை  மலையாளத்தில் ‘அவகாசிகள்’ என்கிறார்கள். இந்த அவகாசிகள் அனைவரும் ஒன்றாகக்கூடும் கூட்டத்தை, ‘மகா அடியேந்திர யோகம்’ என அழைக்கிறார்கள்.   
கேரளத்தின் மூலைமுடுக்கில் எல்லாம் வாழும் இந்த 64 சாதியினரும் எப்போதும் ஒன்றாகச்சேர முடியாது என்பதால், மிக முக்கியமான 14 சாதிகளைச் சேர்ந்த அவகாசிகள்  பங்கெடுக்கும் யோகத்தை ‘அடியேந்திர யோகம்’ என அழைக்கிறார்கள். மகா அடியேந்திர யோகமோ, அடியேந்திர யோகமோ நடைபெறாமல், கோயில் தொடர்பான எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது.

அக்கரைக் கொட்டியூரில் திருவிழா நடை பெறும் காலங்களில் மட்டுமே ‘கையாலா’ என்று அழைக்கப்படும் சிறு குடிசைகளை அமைத்துக் கொண்டு அனைத்து பக்தர்களும் தங்குகிறார்கள். மற்றபடி கட்டடங்கள் எதுவும் இல்லை. அதேபோல் திருவிழா நடைபெறும் நாள்களில் மட்டும்தான் சிவபெருமானின் சுயம்பு லிங்கத்தைச் சுற்றி குடிசை அமைக்கப்படுகிறது. மற்ற நாள்களில் வெட்டவெளியில்தான் காட்சி தருகிறார் ஐயன்.

பக்தர்கள் சிவலிங்கத்தை வழிபடும் இடம் ‘திருவஞ்சரா’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இந்த நீர், தட்சனின் ரத்தம் என்பதாக ஐதீகம். 

இந்தக் கோயிலின் பூஜை முறைகளை, அனைத்து சாதியினரையும் ஒருங்கிணைத்து ஆதிசங்கரர்தான் வடிவமைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். திருவிழா காலங்களில் மட்டும் அக்கரையிலிருந்து சிவ - பார்வதி சிலைகளை இங்கு எடுத்து வந்து பூஜை செய்கிறார்கள்.

கோயிலுக்கு அருகில் ‘தட்சிண கங்கை’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் பாவலி ஆறு ஓடுகிறது. பாலுகாச்சி மலையில் உற்பத்தியாகிப் பாய்ந்துவரும் இந்த ஆற்றில் உள்ள கற்கள் அனைத்தையும் சிவலிங்கமாகப் பாவித்து வழிபடுகின்றனர்.     
இந்த ஆற்றில் குளித்துவிட்டு; ஆற்றில் உள்ள இரண்டு கற்களை எடுத்துத் தேய்த்தால் சந்தனம் போல கிடைக்கும் பொருளே கொட்டியூருக்கு பிரத்யேகமான சிவச்சின்னம் ஆகும்.  

இங்கே, தட்சனின் தலையை சிவபெருமான் கொய்ததன் நினைவாக ‘ஓடப்பூ’ என்று ஒன்றை விற்பனை செய்கிறார்கள்.  கொட்டியூருக்கென்றே பிரத்யேகமான இந்தப் பூ, தட்சனின் தாடி என்று சொல்லப்படுகிறது. இதை வாங்கி வீட்டில் வைத் தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. 

வைகாசி மகோற்ஸவத்தின் முக்கியமான சடங்கு, ‘வாள் எழுந் நலத்து’ என்பதாகும். தட்சன் தலையைக் கொய்த வாளை சிவனார் கோபத்துடன் சுழற்றி எறிய, அந்த வாள் சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ள ஓர் இடத்தில் போய் விழுந்தது. `முதிரேரி காவு' என அழைக்கப்படும் அந்த இடத்திலும் சிவாலயம் ஒன்று உள்ளது.

மகோற்ஸவத்தின் முதல்நாள் முதிரேரியில் இருந்து வாளை எடுத்துவரும் நிகழ்வே, ‘வாள் எழுந் நலத்து’ என்கிறார்கள். குறிப்பிட்ட பரம்பரை யில் வந்த ஒருவரே வாளை எடுத்து வர வேண்டும். முதிரேரி காவு சிவன் கோயிலில் இருந்து வாளை எடுத்துக்கொண்டதும், எந்த இடத்திலும்  நிற்காமல், தண்ணீர்கூட அருந்தாமல் வந்து கொட்டியூரில் சேர்ப்பார் அவர்.

கொட்டியூருக்குச் சொந்தமான கோடிக்கணக் கான விலை மதிப்புள்ள ஆபரணங்களை, கொட்டியூரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள ‘கரிம்பனக்கல் கோபுரம்’ என்னும் சிறிய கட்டடத்தில் வைத்து பாதுகாத்து வருகிறார்கள்.
இந்த அறைக்குப் போடப்பட்டிருக்கும் நூறாண்டு பழைமையான பூட்டின் சாவிகளில் நான்கு சாவிகள் கொட்டியூரைச் சேர்ந்த நான்கு பிரமுகர்களிடமும், ஐந்தாவது சாவி மணாளன் என்பவரும் வைத்திருப்பார். ஐவரும் வந்து திறந்தால்தான் பூட்டு திறக்கும். மேலும், இந்த இடத்தை விஷப்பாம்புகள் காவல் காப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தின் கைதேர்ந்த திருடர்கள் பலர் ஒன்றிணைந்து, ஜ்நகைகளைத் திருட முயற்சி செய்தார்களாம். ஆனால் அவர்களால் கரிம்பனக்கல் கட்டடம் இருந்த இடத்தைக்கூட நெருங்கவே முடியவில்லையாம். ஏதோ ஒரு சக்தி அவர்களைத் துரத்தியடித்ததாகத் திருடர்களின் ஒருவனான ஸ்டீபன் என்பவன் வாக்குமூலம் கொடுத்தானாம்.

இங்குள்ள நகைகளை மகோற்ஸவ விழாவில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள். திருவிழாவின் இரண்டாவது நாள் 64 கலசங்களில் இந்த ஆபரணங்களை எடுத்துச் செல்வார்கள். இந்தக் கலசங்களை ‘பண்ணாரம்’ என்றும், கொட்டியூருக்கு எடுத்துச் செல்லும் வைபவத்தை, ‘பண்ணாரம் எழுந் நலத்து’ என்றும் அழைக்கிறார்கள். இந்தச் சடங்கைச் செய்பவர்களைக் ‘குடிபதிகள்’ என்பார்கள். 

கொட்டியூர் மகா க்ஷேத்திரம் தலசேரியில் இருந்து சுமார் 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில்மூலம் தலசேரி சென்று, அங்கிருந்து கொட்டியூர் மகா க்ஷேத்திரத்துக்குச் செல்லலாம்.

No comments:

Post a Comment