Friday 18 August 2017

சைவ சித்தாந்தம் - சிவஞானபோதம் பகுதி- 4

நான்காம் நூற்பா

முந்திய மூன்றாம் நூற்பாவில் ஆன்மா உண்டு என்பதை நிறுவிய ஆசிரியர் இந்நூற்பாவில் அதன் இலக்கணத்தைக் கூறப் புகுகின்றார். அதனால் இவ்விரு நூற்பாக்களுக்கிடையே உள்ள இயைபு புலனாகும்.

நூற்பா

அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று; அவை
சந்தித்தது ஆன்மா சகச மலத்து உணராது
அமைச்சு அரசு ஏய்ப்ப நின்று அஞ்சு அவத் தைத்தே.

ஆசிரியர் கூறும் கருத்துரை:

என்பது சூத்திரம். என் நுதலிற்றோ எனின், இதுவும் அது.

கருத்துரை விளக்கம்.

நான்காம் நூற்பாவாகிய இதுவும் முந்திய மூன்றாம் நூற்பாவின் பொருளையே கூறுவதாய்த் தொடர்ந்து நிற்கிறது என்பதை உணர்த்துவாராய் இதுவும் அது என்றார்.

ஆன்மப் பிரகாசம் என்னும் பொருள் முன்னை நூற்பாவில் இருப்பினை விளக்குதல் என்ற முறையில் கூறப் பெற்றது. அப்பொருள் இந்நூற்பாவில் இலக்கணத்தை விளக்குதல் என்ற முறையில் கூறப்பெறுகிறது.

நூற்பாவின் பொருள்

ஆன்மா மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ப்படும் அந்தக் கரணம் நான்கினுள் ஒன்றன்று; ஆயினும் தன்னை இயற்கையிலே பற்றியுள்ள ஆணவ மலம் என்னும் மாசினால் அறிவையிழந்து நிற்பதனால், அமைச்சர்களோடு கூடிச் செயல் புரியும் அரசனைப்போல அம் மாசினைச் சிறிது நீக்கி அறிவை விளக்குவனவாகிய அந்தக் கரணங்களோடு கூடி நின்று ஐந்து நிலைகளை உடையதாகும்.

பதவுரை

ஆன்மா அநதக் கரணம் அவற்றின் ஒன்று அன்று - ஆன்மா அகக் கருவிகளாகிய மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பவற்றுள் ஒன்றன்று, அவற்றின் வேறானது.

சகச மலத்து உணராது - அவ்வான்மா தன்னை இயல்பிலே பற்றியுள்ள ஆணவ மலத்தினால் அறியமாட்டாது நிற்றலால்,

அமைச்சு அரசு ஏய்ப்ப - நுண்ணறிவு இல்லாத அரசன் அதனையுடைய அமைச்சரோடு கூடி ஆட்சி நடத்துவது போல,

அவை சந்தித்தது நின்று - தனது அறிவு விளங்குதற் பொருட்டு அவ்வந்தக் கரணங்களோடு கூடி நின்று

அஞ்சு அவத்தைத்து - ஐந்து நிலை வேறுபாடுகளை உடையதாகும்.

சிறப்புரை:

ஆன்மா என்னும் எழுவாய் இரண்டாம் அடியில் உள்ளது. அதனை எடுத்து நூற்பாவின் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும்.

முந்திய மூன்றாம் நூற்பாவில் ஆன்மா உளது என ஒருமையாற் கூறியது போலவே இந்நூற்பாவிலும் ஆன்மா சந்தித்தது எனவும், அவத்தைத்து எனவும் ஒருமையாற் கூறினார். ஆயினும் ஆன்மா எண்ணில என்றே இங்கும் நாம் கொள்ள வேண்டும்.

ஆன்மா அந்தக் கரணம் அவற்றின் ஒன்றன்று ஆயினும், சகச மலத்தினால் உணராமையால், அமைச்சரோடு கூடிய அரசன் போல அவற்றோடு சந்தித்தது; அங்ஙனம் சந்தித்து நின்று ஐந்து அவத்தைகளை உடையதாயிற்று என வேண்டும் சொற்களைக் கூட்டி நூற்பாவை அமைத்துக் கொண்டால் பொருள் இனிது விளங்கும்.

உணராது அவை சந்தித்தது எனக் கூட்ட வேண்டும். உணராது என்பதற்கு உணராமையால் எனப் பொருள் கொள்ளப்பட்டது. இதில் உணராது என்பது காரணம்; சந்தித்தது என்பது காரியம். வேலை கிடைக்காது திருடினான் என்பதில் கிடைக்காமை காரணமும், திருடுதல் அதனால் நிகழும் காரியமும் ஆதல் போல இங்கும் உணராது சந்தித்தது என்பன காரணமும் காரியமுமாய் நின்றன.

ஏய்ப்ப என்பது பழைய இலக்கியங்களில் வரும் ஓர் உவம உருபு ஆகும். போல என்பது அதன் பொருள்.

அவத்தை என்ற வடசொல் நிலை எனப் பொருள்படும். அவத்தை என்பது பெயர்ச்சொல். அதனையே அவத்தைத்து என வினைமுற்றாக ஆக்கிவிட்டார் ஆசிரியர். நிலையை உடையது என்பது அதன் பொருள்.

கூறுகள்:

இந்நூற்பாவின் பொருளைமூன்று கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார். அக் கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு பொருள்

1. முதற் கூறு - ஆன்மா அந்தக்கரணங்களின் வேறு;

2. இரண்டாம் கூறு - சகசமலம் எனப்படும் ஆணவ மலத்தின் இயல்பு

3. மூன்றாம் கூறு - ஆன்மா கருவிகளோடு கூடி ஐந்து நிலைகளை அடைதல்

முதற் கூறு

அந்தக் கரணான்ம வாத மறுப்பு

அகக் கருவிகளாகிய அந்தக் கரணங்களே ஆன்மா எனக் கொள்பவர் அந்தக் கரணான்மவாதிகள் எனப்படுவர். அவர் பின்வருமாறு கூறுவர்.

கருவிகள் யாவும் வேறு வேறு பெயரையே பெற்று நிற்கின்றன என்றும், அவற்றுள் ஒன்றேனும் ஆன்மா எனப் பெயர் பெறுதல் இல்லை என்றும் கூறியது பொருந்தாது. மனம் முதலிய அந்தக் கரணங்கள் ஆன்மா என்னும் பெயரால் கூறப்படுதலைச் சித்தாந்த நூல்களிலேயே காணலாம். ஆகவே அந்தக் கரணங்கள் தனித்தோ, ஒருங்கு கூடியோ ஆன்மாவாம் எனக் கொள்ளுதல் பொருந்தும் என்பர்.

அவர் கூற்று அந்தக் கரணான்ம வாதம் எனப்படும். அதனை மறுத்து, ஆன்மா அந்தக் கரணங்களில் ஒன்று அன்று என்பதனை மேற்கோளாக வைத்து ஏதுக் காட்டி நிறுவுகிறார் ஆசிரியர்.

மேற

்கோள் ஈண்டு, இவ்வான்மாவாவது அந்தக் கரணங்களாய் உள்ள மனோ
புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்றன்று- என்றது.

ஏது

அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான்.

ஏது விளக்கம்

பிரகாசம் என்பதற்கு அறிவு என்பதும், அப்பிரகாசம் என்பதற்கு அறிவின்மை என்பதும் பொருள்.

அறிவுடைய பொருள் சித்து எனப்படும். அறிவில்லாத பொருள் அசித்து எனப்படும்.

எனவே அந்தக் கரணங்கள் சித்தாய் நின்றே அசித்தாய் நிற்கும் எனக் குறிப்பிட்டார் ஆசிரியர்.

அந்தக் கரணங்கள் சித்தாய் நின்றே அசித்தாய் நிற்றல்:

அவை சித்தாய் நின்றே அசித்தாய் நிற்றல் எவ்வாறு என்பதை நோக்குவோம். அந்தக் கரணங்களுக்குக் கீழ் உள்ள கருவிகளாகப் புறக்கருவிகள் உள்ளன. செவி, தோல், கண், கை, கால் முதலியனவாக அமைந்த இப் புறக்கருவிகள் அசித்து என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தக் கரணங்கள் அவ்வாறின்றி, ஆன்மாவிற்கு மிக அணுகிய கருவிகளாய் நின்று, ஐயுறுதல் சிந்தித்தல் நிச்சயித்தல் முதலியவற்றைச் செய்கின்றன. எனவே, புறக்கருவிகளை நோக்க அவை சித்து என்று சொல்லும் படியாக நிற்கின்றன. ஆயின் அவ்வந்தக்கரணங்கள் யான் ஐயுறுகிறேன், யான் சிந்திக்கிறேன், யான் நிச்சயிக்கிறேன் என்று தம்மைத் தாம் அறியமாட்டா. ஆகவே தம்மை நோக்க அவை அசித்தேயாதல் விளங்கும்.

இவ்வாறு அந்தக் கரணங்கள் தமக்குக் கீழ் உள்ள கருவிகளை நோக்கச் சித்தாயும், தம்மை நோக்க அசித்தாயும் நிற்கின்றன.

ஆன்மா இவ்வாறின்றி யான் சிந்தித்தேன் யான் நிச்சயிக்கிறேன் எனத் தன் செயலையும் தான் உணர்ந்து நிற்கும். அது தன்னை நோக்கவும் சித்தாயே நிற்றல் தெளிவாகும்.

ஆகவே, எவ்வகையில் நோக்கினும் எவ்விடத்தும் சித்தாய் நிற்பதாகிய ஆன்மா, ஒரு வகையில் சித்தாயும் பிறிதொரு வகையில் அசித்தாயும் நிற்கின்ற அந்தக் கரணங்களில் ஒன்றன்று என்பது துணியப்படும்.

அவ்வாறாயின், சித்தாந்த நூல்கள் சில விடங்களில் அந்தக் கரணங்களை ஆன்மா எனும் நிலையில் வைத்துக் கூறுதல் ஏன் எனில், பிற பணியாளர்களை விட அமைச்சர் அரசனுக்கு மிக நெருங்கியவர் என்பது பற்றிச் சில இடங்களில் அவரையே அரசர் என ஒரு பேச்சுக்குக் கூறுதல் போல, ஏனைய கருவிகளை நோக்க அந்தக் கரணங்கள் ஆன்மாவுக்கு மிக அணுக்கமான கருவிகளாய் இருத்தல் பற்றி அவையே ஆன்மா என உபசரித்துக் கூறப்படும் அவ்வளவேயாம்.

இனி அந்தக் கரணங்களின் இயல்புகளை விளக்கிக் கூறுவாராய் எடுத்துக் காட்டு வெண்பாக்களைச் செய்கின்றார்.

எடுத்துக் காட்டு- 1

வெண்பா

23. மனம் ஆதி யால் உணர்தல் மன்னு புலன்கள்;
மனம் ஆதி மன்புலனின் அல்லன்;- மனமேல்
உதித்தொன்றை உள்ளம் உணர்தல்; அதனின்
உதிக்கும் கடல்திரையே ஒத்து.

இதன் பொருள்:

புறத்தே நிலைபெற்றுள்ள ஓசை முதலிய புலன்களை ஐம்பொறிகள் கவர்ந்து கொடுக்க மனம் முதலிய அந்தக் கரணங்கள் அவற்றை ஆராய்ந்து உணர்கின்றன.

மனத்திற்கு மேல் உள்ளதாகிய புத்தி இஃது இன்ன புலன் என்பதை நிச்சயிக்க, அதனால் உண்டாகும் இன்பத் துன்பங்களை ஆன்மா உணர்கிறது.

ஐம்பொறிகளால் உண்டாகும் பொதுவுணர்வும் அந்தக் கரணங்களால் உண்டாகும் சிறப்புணர்வும் ஆன்மாவை, வந்தடைதல், கடலின் நடுவிலே எழுந்த அலையானது தொடர்ச்சியாய்க் கரையை வந்து அடைதல் போன்றது.

அதனால், அந்தக் கரணங்கள் அந்த ஐம்பொறிகளினின்றும் வேறாதல், போல, ஆன்மாவும் அவ்வந்தக்கரணங்களினின்றும் வேறானதேயாம்,

பதவுரை

மனம் ஆதியால் உணர்தல் - மனம் முதலிய அந்தக் கரணங்களால் உணரப்படுவன

மன்னு புலன்கள் - ஐம்பொறிகளால் கவர்ந்து தரப்பட்டு, புறத்தே நிலை பெற்றுள்ள சத்தம் முதலிய ஐம்புலன்களாகும்.

உள்ளம் உணர்தல் - ஆன்மா உணர்வது

மனமேல் உதித்த ஒன்றை -மனத்திற்கு மேல் உள்ளதாகிய புத்தியின் கண் தோன்றிய புலன்களின் பயனாகிய இன்பத் துன்ப மயக்கங்களுள் ஒன்றையாம்.

கடல் திரையை ஒத்து உதிக்கும் - ஐம்பொறிகளால் உண்டாகும் பொதுவுணர்வும், மனம் முதலிய அந்தக் கரணங்களால் உண்டாகும் சிறப்பு உணர்வும் கடலில் எழுந்த அலை தொடர்ச்சியாய்க் கரையை வந்து அடைதல் போல ஆன்மாவை வந்து அடையும்.

அதனின் - ஆதலால்

மனம் ஆதி மன்புலனின் - மனம் முதலிய அந்தக் கரணங்கள் புலன்களைப் பொதுவாகப் பற்றுகின்ற ஐம்பொறிகளின் வேறாதல் போல்

அல்லன் - ஆன்மாவும் அவ் அந்தக் கரணங்களின் வேறேயாம்.

விளக்கம்

பொதுவுணர்வு:

செவி முதலிய பொறிகள் ஓசை முதலிய புலன்களைப் பொதுவாகவே அறியும். அஃதாவது, செவி இஃது ஓர் ஓசை என்பதை மட்டுமே அறியும். இது நாதசுர இசை என்றோ, வீணையின் இசை என்றோ பாகுபடுத்தி அறியமாட்டாது. இஃது ஓர் உருவம் என்பதை மட்டுமே கண் அறியும். ஆண் என்றோ பெண் என்றோ பாகுபடுத்தி அறியமாட்டாது. இவ்வாறு உணரும் பொதுவுணர்வே பொறிகளால் உண்டாவது.

பொதுவுணர்வை நிருவிகற்பவுணர்வு என்பர். விகற்பம்- வேறுபாடு; நிர்விகற்பம்- வேறுபாடு தோன்றாதது. எனவே, வேறுபடுத்திச் சிறப்பாக அறியாமல் இஃது ஒன்று என்ற அளவில் பொதுவாக அறிவதாகலின் நிருவிகற்பவுணர்வு எனப்பட்டது.

சிறப்புணர்வு:

கண் முதலிய பொறிகளால் பொதுவாக அறிகின்ற அளவில் நின்று விட்டால், பொருள்களை இன்னவை என்பது புலப்படாது. அவை நம் நினைவிலும் நில்லா. பொருள்களைச் சிறப்பாக உணரும்போதே அவை இன்னவை என்பது விளங்கும். சிறப்புணர்வைச் சவிகற்பவுணர்வு என்பர். சவிகற்பம்- வேறுபாட்டோடு கூடியது.

இஃது ஓர் உருவம் என்று முதலில் பொதுவாக உணர்ந்து பின்னர் இவ்வுருவம் ஆண் என்றும், முருகன் என்ற பெயரையுடையவன் என்றும், நல்லவன் என்றும், பணிவு தோன்ற நிற்கிறான் என்றும், வேலை கேட்டு வந்துள்ளான் என்றும் இவ்வாறு பல வகையில் பாகுபடுத்தி உணர்தலின் இச்சிறப்புணர்வு. சவிகற்பவுணர்வு எனப்பட்டது. இச்சிறப்புணர்வை உண்டாக்குவன உட்கருவிகளாகிய மனம் முதலிய அந்தக் கரணங்களேயாகும்.

அந்தக்கரணங்களின் செயற்பாடு:

அந்தக் கரணங்களின் செயற்பாட்டினை இனிக் காண்போம். ஐம்பொறிகளுள் ஒன்றால் தரப்பட்ட புலனை மனம் பற்றும்; அவ்வாறு பற்றி, இஃது இன்னது ஆகலாம் எனவும், இன்னது தானோ அன்றோ எனவும் ஐயுற்று நிற்கும். அகங்காரம் அதனை இன்னது எனத் துணிவேன் என்ற எழுச்சியைக் கொடுக்கும். பின்பு புத்திபெயர். குணம் முதலியவற்றால் பாகுபடுத்தி அப்பொருள் இன்னது என நிச்சயிக்கும். சித்தம், அறிந்த பொருளை மீளமீளப் பலகாலும் சிந்திக்கும்.

அந்தக் கரணங்களின் செயற்பாட்டினைப் பின்வருமாறு நிரல் படுத்திக் காட்டலாம்.

அந்தக்கரணங்கள் செயல்கள்
1. மனம் - பொறி வழியே வந்தவற்றைப் பற்றுதல்
2. அகங்காரம் - அவற்றை அறிதலில் எழுச்சியை விளைவித்தல்
3. புத்தி - அவற்றை இன்னதென நிச்சயித்தல்
4. சித்தம் - அறிந்தவற்றை மீள மீளச் சிந்தித்தல்

புலன்களைப் பொறிகளால் முதலில் பொதுவாக உணர்தல் வாயிற் காட்சி எனப்படும். அவற்றை மனம் முதலியவற்றின் வழியே புத்தியினால் சிறப்பாக உணர்தல் மானதக்காட்சி எனப்படும். சிறப்பாக உணர்ந்தவற்றால் விளையும் இன்பத் துன்பங்களை நுகர்தல் தன் வேதனைக் காட்சி எனப்படும்.

(வேதனை என்ற சொல்லைத் துன்ப அனுபவத்திற்கு மட்டுமே வழங்குகிறோம். ஆயின், அஃது இன்ப அனுபவம், துன்ப அனுபவம் ஆகிய இரண்டையும் குறிக்கும் பொதுச் சொல்லேயாகும்.)

இங்ஙனம் புலனுணர்வு ஐம்பொறிகளில் தோன்றிப் பின் அந்தக்கரணங்கள் நான்கினையும் ஒவ்வொன்றாக அடைந்து முடிவில் ஆன்மாவைச் சேர்தல் பற்றி உதிக்கும் கடல்திரையே ஒத்து என்றார்.

அந்தக்கரணங்கள் தம்மளவில் அசித்தேயாதல்:

அந்தக்கரணங்கள் புலன்களைச் சிறப்பாக அறியினும், அவற்றால் விளைகின்ற இன்பத் துன்பமாகிய பயன்களை உணரமாட்டா. அவை தம்மளவில் அசித்தேயாம். ஆன்மாவே அப்பயன்களை அறிந்து நுகரும்; அஃது என்றும் சித்தாயே நிற்கும். ஆதலால், புலன்களின் பயன்களை நுகர்கின்ற ஆன்மா, அவற்றைத் தன்பால் சேர்க்கின்ற அந்தக் கரணங்களின் வேறேயாதல் தெளிவாகும்.

முந்திய எடுத்துக்காட்டில் அந்தக் கரணங்களில் இயல்பைப் பொதுவாகச் சொன்னவர். அவற்றுள் ஒவ்வொன்றின் இயல்பையும் சிறப்பாகக் கூற வேண்டி இரண்டாம் எடுத்துக்காட்டினைச் செய்கின்றார்.

எடுத்துக் காட்டு - 2

வெண்பா

24. சிந்தித்தாய் சித்தம், தெளியாதாய் ஆங்காரம்,
புந்தியாய் ஆய்ந்து, மனமாகிப் - பந்தித்து
வெவ்வேறு தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம்
அவ்வேறாம் போதுபோல் ஆங்கு.

இதன் பொருள்:

ஐம்பொறிகளுள் ஒன்றால் தரப்பட்ட புலனை, ஆன்மா முதலில் மனத்தோடு கூடி மனமாய் நின்று பற்றி, இஃது யாதாகலாம் எனவும் இன்னது ஆகுமோ அன்றி, அன்னது ஆகுமோ எனவும் ஐயுற்று நிற்கும்.

பின் அகங்காரத்தோடு கூடி அதுவாய் நின்று அப் புலனை இன்னது எனத் தெளியமாட்டாது, எவ்வாறேனும் இதனைத் தெளிவேன் என எழுச்சியுற்று நிற்கும்;

பின்பு புத்தியைச் சார்ந்து அதுவாய் நின்று அப்புலனை இன்னது எனத் தெளியும்;

பின்பு சித்தமாய் நின்று, அப்புலனினது பெருமை சிறுமைகளையும் அருமை எளிமைகளையும், இவை போன்றுள்ள பிறவற்றையும் பலகாலும் சிந்திக்கும்;

இவ்வாறு பலவகைப்பட்ட உணர்கின்ற ஆன்மா இம் மனம் முதலிய அந்தக் கரணங்களின் வேறேயாம். இதனை ஓர் உவமை மூலம் விளக்குகிறார்.

கால தத்துவம் ஞாயிறு, நிலவு, விண்மீன் முதலியவற்றின் சார்பினால் பகல் எனவும், இரவு எனவும், நாள் எனவும், மாதம் எனவும் பல வகையில் வேறுபடுத்திச் சொல்லப் பெறுகிறது. அவ்வாறு வேறுபடுகின்ற காலம் ஞாயிறு, நிலவு முதலியவற்றின் வேறானதேயன்றோ? அதுபோல ஆன்மா மனம் முதலாகிய அந்தக் கரணங்களைச் சார்ந்து, அச்சார்பினால் வேறுபட்ட பலவுணர்வுகளை உடையதாகின்றது. அவ்வாறு பல நிலைப்பட உணர்வதாகிய ஆன்மா அவ்வந்தக் கரணங்களின் வேறானதேயாகும்.

பதவுரை

உள்ளம் - ஆன்மா

ஆங்கு - அந்தக்கரணங்களின் வழியாக அறியுமிடத்து

மனம் ஆகிப் பந்தித்து - முதலில் மனத்தோடு கூடி அதுவாய் நின்று ஐம்பொறிகளுள் ஒன்றால் தரப்பட்ட புலனைப் பற்றி நின்று இஃது இதுவோ? அதுவோ? என இவ்வாறு ஐயுற்று

ஆங்காரமய்த் தெளியாது - பின் அகங்காரத்தோடு கூடி அதுவாய் நின்று இதனை இன்னது எனத் துணிவேன் என எழுச்சியுற்று

புந்தியாய் ஆய்ந்து - பின் புத்தியோடு கூடி அதுவாய் நின்று அப்புலனை இன்னது எனத் துணிந்து

சித்தமாய்ச் சிந்தித்து - பின் சித்தத்தோடு கூடி அதுவாய் நின்று அப்புலனின் அருமை பெருமை முதலியவற்றை மீள மீள நினைந்து

வெவ்வேறு தானே துணிந்து - இங்ஙனம் ஒரு நிலையில் நின்று உணராது பல நிலைப்பட்டுப் பலவகையால் உணர்தலால்

இவ்வேறாம் - அவ்வாறு உணர்கின்ற ஆன்மா இம்மனம் முதலிய அந்தக் கரணங்களின் வேறானதேயாகும். (அஃது எதுபோல எனின்)

அவ்வேறாம் போதுபோல் - கால தத்துவம் சூரியன், சந்திரன், நட்சத்திரம் முதலியவற்றோடு கூடி அவற்றின் சார்பு பற்றிப் பகல் என்றும் இரவு என்றும் நாள் என்றும், மாதம் என்றும் ஆண்டு என்றும் பலவாறாக உணரப்பட்டாலும் உண்மையில் அக்காலம் வேறுபடுதல் இன்றிச் சூரியன் முதலியவற்றிற்கு வேறாதல் போலும்.

உவமை பொருள்
1. கால தத்துவம் - ஆன்மா
2. ஞாயிறு முதலிய சார்பு - மனம் முதலிய கருவிகளின் சார்பு
3. இரவு, பகல் முதலிய வேறுபாடுகளை உடையதாதல் - ஐயவுணர்வு, தெளிவுணர்வு முதலிய பலஉணர்வுகளை உடையதாதல்
4. காலம், ஞாயிறு முதலிய சார்புகளின் வேறாதல் - ஆன்மா, மனம் முதலிய கருவிகளின் வேறாதல்.

எடுத்துக்காட்டு - 3

சூக்கும ஐந்தெழுத்து, அந்தக்கரணங்களைச் செலுத்தும் முறையை இவ்வெடுத்துக் காட்டில் கூறுகின்றார்.

வெண்பா

25. அகார உகாரம் அகங்காரம் புத்தி;
மகாரம் மனம்; சித்தம் விந்து;- பகாது இவற்றை
நாதம் உளவடிவாம்; நாடில் பிரணவமாம்;
போதம் கடல்திரையே போன்று.

இதன் பொருள்:

அகரம் அகங்காரத்தைச் செலுத்தும்; உகரம் புத்தியைச் செலுத்தும்; மகரம் மனத்தைச் செலுத்தும்; விந்து சித்தத்தைச் செலுத்தும்; நாதம் புருட தத்துவத்தைச் செலுத்தும்.

இந்த ஐந்தையும் இவ்வாறு தனித்தனியாகக் காணாமல் ஒன்றாகத் தொகுத்து நோக்கினால் அத் தொகுதியே ஓம் என்னும் பிரணவம் ஆகும்.

இந்த ஐந்து அக்கரங்களால் ஆன்மாவினிடத்து உணர்வுகள் கடலில் அலைகள் புதிது புதிதாய்த் தோன்றுதல் போலத் தோன்றுவனவாகும்.

பதவுரை

அகார உகாரம் - அகரமும் உகரமும்

அகங்காரம் புத்தி - முறையே அகங்காரத்தையும் புத்தியையும் செலுத்தும்.

மகாரம் மன்ம - மகரம் மனத்தைச் செலுத்தும்

விந்து சித்தம் - விந்து சித்தத்தைச் செலுத்தும்

நாதம் உள வடிவாம் - நாதம் புருடதத்துவத்தைச் செலுத்தும்

இவற்றைப் பகாது நாடின் - இந்த ஐந்தையும் இவ்வாறு பகுத்துக் காணாது தொகுத்து நோக்கினால்

பிரணவமாம் - அத்தொகுதி பிரணவம் (ஓம்) ஆகும்.

போதம் கடல் திரையே போன்று - அகரம் முதலிய இந்த ஐந்து அக்கரங்களால் அந்தக் கரணங்களிடத்து உணர்வுகள் புதிது புதிதாகத் தோன்றுதல் கடலிடத்து அலைகள் புதிது புதிதாய் எழுந்து வருதல் போன்றதாகும்.

விளக்கம்

அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் ஆகிய ஐந்தும் சூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். அவற்றின் தொகுதியே ஓம் என்பதாகிய பிரணவம்.

தொகுதியாக நிற்கும் ஓம் என்பதனை சமட்டிப் பிரணவம் என்பர். ஓங்காரம் என்பதுவும் இதுவே. அகரம் முதலிய ஐந்தாக விரித்துக் கூறின் வியட்டிப் பிரணவம் எனப்படும்.

அகரம் முதலிய ஒவ்வொன்றும் பிரணவத்தின் கலை எனப்படும். கலை- கூறு; எனவே பிரணவம் ஐந்து கலைகளையுடையது என்பது விளங்கும். சொற்கூட்டம் அனைத்திற்கும் மூலம் ஓங்காரமேயாகும்.

பிரணவ கலைகளையும் அவற்றால் செலுத்தப்படும் அந்தக் கரணங்களையும் பின்வருமாறு அமைத்துக் காட்டலாம்.

பிரணவ கலைகள் அந்தக்கரணங்கள்
நாதம் - புருடதத்துவம்
விந்து - சித்தம்
மகரம் - மனம்
உகரம் - புத்தி
அகரம் - அகங்காரம்

பிரணவ கலைகளால் மனவுணர்வுகள் புதிது புதிதாய்த் தோன்றுவதற்குக் கடல் அலைகளை உவமை கூறினார். இதே உவமை முதல் எடுத்துக்காட்டிலும் வந்துள்ளது நினைவிருக்கலாம். அவ்விடத்தில், உணர்வுகள் இடையறாது தொடர்ச்சியாய்த் தோன்றுதற்கு அவ்வுவமை கூறப்பட்டதாகும். உவமை ஒன்றேயாயினும் வெவ்வேறு கருத்துப் பற்றி இவ்விரண்டு இடங்களிலும் ஆளப்பட்டுள்ளது என்பது அறிதற்குரியது.

எடுத்துக் காட்டு - 4

முந்திய எடுத்துக்காட்டில், அந்தக் கரணங்களைச் செலுத்தும் அக்கரங்கள் இவை என்பதைச் சுட்டினார். அவ்வக்கரங்கள் சடமேயாதலின் அவற்றை வாயிலாகக் கொண்டு செலுத்துவோர் அதிதேவர்களே என்பதையும், அவர்கள் இன்னார் என்பதையும் இங்கே உணர்த்துகிறார்.

வெண்பா

26. எண் நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம்
நண்ணிய விந்துவொடு நாதத்து- கண்ணில்
பகர் அயன் மாலோடு பரமன் அதி தெய்வம்
அகர உகரம் மகரத் தாம்

இதன் பொருள்:

ஓங்காரத்தின் கூறுகளாய்ப் பொருந்திய விந்து, நாதங்களுக்கு அதி தெய்வங்கள் முறையே மகேசுரனும் சதாசிவனும் ஆவர்; அகர, உகர, மகரங்களுக்கு உரிய அதிதெய்வங்கள் முறையே பிரமன், மால், உருத்திரன் ஆவர்.

பதவுரை

எண் நிலவு - எண்ணத்தின் கண் விளங்குகின்ற

ஓங்காரத்து நண்ணிய - ஓங்காரத்தின் கூறுகளாய்ப் பொருந்திய

விந்துவொடு நாதத்து - விந்து நாதங்கட்கு உரிய

அதிதெய்வம் கண்ணில் - அதி தெய்வங்களைக் கருதுமிடத்து

ஈசர் சதாசிவமாம் - முறையே மகேசுரனும் சதாசிவனும் ஆவர்.

அகர உகர மகரத்து (அதி தெய்வம் கண்ணில்) - அகர, உகர, மகரங்களுக்கு உரிய அதிதெய்வங்களைக் கருதுமிடத்து,

பகர் அயன்மாலோடு பரமன் ஆம் - முறையே சொல்லப்பட்ட பிரமன், மால், உருத்திரன் என்பவராவார்.

விளக்கம்

பிரணவத்தின் கூறுகளையும், அவற்றைச் செலுத்தும் அதி தெய்வங்களையும் பின் வருமாறு நிரல்படுத்தி அமைத்துக் கொள்ளலாம்.

பிரணவ கலைகள் அதி தெய்வங்கள்

நாதம் - சதாசிவன்
விந்து - மகேசுரன்
மகரம் - உருத்திரன்
உகரம் - மால்
அகரம் - பிரமன்

பொதுவாகப் பிரமன், மால், உருத்திரன் எனக் கூறப் பெறுபவர் சகலர் ஆகிய உயிர்களுக்கு உரிய பிரகிருதி மாயையில் செயல் புரிவோர். அவர்கள் வேறு, அகர உகர மகரங்களைச் செலுத்துவோராக இங்குக் குறிக்கப் பெற்ற பிரமன், மால், உருத்திரன் என்போர் வேறு. இவர்கள் சுத்த மாயையில் நிற்போர்; அதனாலேயே, சுத்த மாயையின் காரியமாகிய அக்கரங்களுள் சிலவற்றிற்கு முதல்வர் ஆகின்றனர்.

இரண்டாம் கூறு

அந்தக்கரணங்கள் புலன்களைச் சிறப்பாய் அறிந்து, சித்து என்று சொல்லும் படியாக நிற்பினும் அவை தம்மளவில் அசித்தேயாம் என்றும், அவை போலன்றி ஆன்மா எவ்வகையில் நோக்கினும் சித்தேயாய் நிற்கும் என்றும், ஆதலின் ஆன்மா அவற்றின் வேறு என்றும் பார்த்தோம்.

அவ்வாறாயின் சித்தாகிய ஆன்மா அசித்தாகிய அக்கருவிகளோடு சேர்தற்குக் காரணம் என்ன என்ற வினா எழுகிறது. அதற்கு விடையாக சகசமலத்து உணராது அவை சந்தித்தது என நூற்பாவினுள் கூறினார் ஆசிரியர். அதன் விளக்கமாக இவ்விரண்டாம் கூறினை அமைக்கின்றார்.

இயற்கை மலம்:

ஆன்மா என்று உண்டோ அன்றே அதனை ஒரு குற்றம் பற்றியுள்ளது. செம்பில் களிம்பு போலவும், நெல்லில் உமி போலவும் அக்குற்றம் இயற்கையாக அதனிடத்தில் பொருந்தியுள்ளது. அவ்வியற்கைக் குற்றமே ஆணவ மலம் என்பது.

மலம் என்பதற்கு அழுக்கு என்பது பொருள். அஃது உயிருக்கு இயற்கையாதல் பற்றிச் சகச மலம் எனப்படும்.

ஆடையின் வெண்மை தோன்றாதபடி அழுக்கு மறைத்திருப்பது போல உயிரின் அறிவு சிறிதும் தோன்றாதபடி சகசமாகிய ஆணவ மலம் மறைத்து நிற்கிறது. சகச மலம் சிறிது நீங்கி அறிவு விளங்குவதற் பொருட்டு ஆன்மா அந்தக் கரணங்களோடு கூட வேண்டியதாயிற்று என்பது நூற்பாவிலுள்ள தொடரின் விளக்கமாகும்.

இதனை மேற்கோளும் ஏதுவுமாக அமைத்து ஆசிரியர் கூறியுள்ள முறையே இனிக் காண்போம்.

மேற்கோள்

இனி, இவ்வான்மாச் சகசமலத்தினால் உணர்வின்று- என்றது

மேற்கோள் விளக்கம்

ஆன்மா அறிவுடையதாயினும் சகசமலத்தினால் அறிவிலதாயிற்று என்பது இதன் பொருள். ஆகவே அறிவு பெறுதற் பொருட்டுக் கருவிகளோடு கூடுவதாயிற்று என உணர்த்தி, மேற்கண்ட வினாவுக்கு விடையளிக்கின்றார் ஆசிரியர்.

ஆணவ மலத்தை இயற்கை மலம் என்று குறித்ததனால், வேறு செயற்கை மலங்களும் உள்ளன என்பது பெறப்படும். செயற்கை என்பதற்குப் பின்பு வந்தது என்பது பொருள். ஆன்மாவிடத்தில் முதலில் இல்லாமல் பின்னே ஒரு காலத்தில் கூட்டுவிக்கப் பெற்ற மலங்கள் மாயையும் கன்மமும் ஆகும்.

ஆணவ மலமாகிய மாசினைப் போக்குவதற்காக உயிருக்கு உடம்பையும், அறிகருவிகளையும் கொடுக்கின்றான் இறைவன்; இவற்றை மாயையிலிருந்தே படைத்துக் கொடுக்கின்றான். ஆதலின் மாயா மலம் உயிரோடு தொடர்புடைய தாயிற்று. உடம்பையும், கருவிகளையும் பெற்ற உயிர் அவற்றைக் கொண்டு நல்லனவும் தீயனவும் ஆகிய கன்மத்தைச் செய்தலின் கன்ம மலம் உயிரோடு தொடர்புறுவதாயிற்று.

இவ்வாறு இடையில் வந்து பற்றுவனவாகிய மாயையும் கன்மமுமே செயற்கை மலங்கள் ஆயின. பின்பு வந்தது என்ற பொருளைத் தரும் ஆகந்துகம் என்ற சொல்லால் மாயை கன்மங்களைக் குறிப்பர். எனவே மலங்கள் இரு வகையின என்பது விளங்கும். அவை சகசம், ஆகந்துகம் என்பன.

இவ்விடத்தில் ஒன்றை நினைவிற்கொள்ளுதல் வேண்டும். மாயையும் கன்மமும் பின்பு வந்தவை என்னும் கருத்தில் ஆகந்துக மலங்கள் எனப்படினும் அவை இடையில் ஒரு காலத்தில் தோன்றியன அல்ல; ஆணவ மலம் போல அவையும் என்றும் உள்ளனவேயாம். அதுபற்றியே மும்மலங்களும் அநாதி எனப்படுகின்றன. ஆயினும் மாயையும் கன்மமும் இறையருளால் சகசமலமாகிய ஆணவத்தை நீக்கும் பொருட்டு இடையில் ஒரு காலத்தில் ஆன்மாவை வந்து பற்றின வாதலின் அவை ஆகந்துகம் என்று கூறப்படுகின்றன.

இனி ஏதுவை நோக்குவோம்.

ஏது

அதுதான் ஞான திரோதகமாய் மறைத்துக் கொடு நிற்றலான்

ஏது விளக்கம்

அறிவை மறைப்பது ஆணவ மலமே:

ஆன்மா அறிவுடையது. அவ்வறிவு சில நேரங்களில் விளங்காமற் போகிறது; அறிவு மறைந்து அறியாமை மேலிடுகிறது. அறியாமை நிகழ்வதற்குக் காரணமாய் இருப்பது யாது என்பதை ஆராய்ந்தால் ஓர் உண்மை புலனாகும். அறிவை ஏதோ ஒன்று மறைப்பதனாலேயே அவ்வறிவு விளங்காமல் அறியாமை உண்டாகிறது என்பது விளங்கும். அறிவை மறைப்பதாகிய அப்பொருள் யாது? அறிவை மறைக்கும் பொருளாய் நிற்பது ஆணவ மலமே என்பது சித்தாந்தம்.

பிற சமயத்தார் கூறுவது:

சைவ சித்தாந்திகளைத் தவிரப் பிற கொள்கையாளர் எவரும் ஆணவ மலத்தினது உண்மையை ஒப்புக் கொள்வதில்லை. அறியாமைக்குக் காரணமாக அவர்கள் வேறு பலவற்றைக் கூறுவர். அவற்றுள் ஒன்று, அறிவை மறைத்து நிற்பதொன்று இல்லை. அறிவினது இன்மையே அறியாமை என்பது. இதனை ஆசிரியர் மறைத்துக் கொடு நிற்றலான் என்றதனால் மறுத்தார்.

மேலும், இன்மை யாதொரு காரியத்தையும் நிகழ்த்த மாட்டாது. ஆதலால் அறிவினது இன்மை அறியாமையைச் செய்யும் என்றல் பொருந்தாது.

மற்றொன்று, மாயை கன்மங்களே அறிவை மறைக்கும் என்பது. அதனை அடுத்து வருவதாகிய எடுத்துக் காட்டில் வைத்து மறுப்பார் ஆசிரியர்.

இவ்வாறு ஞானதிரோதகம் (அறிவை மறைக்கும் பொருள்) பற்றிப் பிறர் கூறுவனவற்றை யெல்லாம் விலக்கி அதுதான் என ஆணவ மலத்தைச் சிறப்பாகச் சுட்டி, மறைத்துக் கொடு நிற்றலான் என அதன் இயல்பை விளக்கி, ஞான திரோதகமாய் நிற்பது ஆணவ மலமே என்னும் சித்தாந்தத்தை வலியுறுத்தினார் ஆசிரியர்.

ஆணவ மலம் அறிவை மறைத்துக் கொடு நிற்றலால் என்னும் இவ்வேது, ஆன்மா அறிவிலதாயிற்று என்ற மேற்கோளை நிறுவும் வகையில் அமைந்துள்ளமை காணலாம்.

இப்பகுதியால், அறிவை மறைத்தல் ஆணவத்தின் இயல்பு என்பது பெறப்பட்டது.

உயிர் ஆணவத்தோடு மட்டும் உள்ள நிலையில் ஆணவம் அதன் அறிவை முற்றிலும் மறைத்து நிற்றலால், அறிவு சிறிதும் இன்றித் தான் ஒரு பொருள் உண்டு என்பதையும் அறியாது உயிர் அறியாமையிருளில் மூழ்கிக் கிடக்கும். அந்நிலை கேவலாவத்தை எனப்படும். கேவலம்- தனிமை; அஃதாவது உயிர் ஆணவம் ஒன்றோடு மட்டும் கூடியிருக்கும் நிலை. அவத்தை-நிலை.

உயிர் இறையருளால் மாயை கன்மங்களோடு கூடி நிற்பதாகிய நிலை சகலாவத்தை எனப்படும். அதாவது, உயிர் உடம்பையும் அறிகருவிகளையும் பெற்று, உலகிற் பிறந்து, சிறிதாக அறிவு விளங்கி நிற்கும் நிலை இதுவாகும். சகலம் என்பதற்கு மாயையோடு கூடியிருத்தல் என்பது பொருள். மாயை உள்ளபொழுது கன்மமும் உளதாகும்.

ஆணவ மலத்தின் உண்மையியல்பும் பொதுவியல்பும்:

மாயை கன்மங்களோடு உயிர் கூடாதபொழுது ஆணவம் உயிரறிவை முழுதுமாக மறைத்து நிற்கும் எனப் பார்த்தோம். அவ்வாறு மறைத்து நிற்றலே ஆணவத்தின் உண்மையியல்பு ஆகிய சொரூபலக்கணம் ஆகும்.

இனி, மாயை கன்மங்களோடு கூடியபொழுது ஆணவம் உயிரின் அறிவைத் திரிவுபடுத்தும்; அஃதாவது அற்பமான பொருளை உயர்ந்த பொருளாகவும், நில்லாத பொருளை நிலைத்த பொருளாகவும் மதிக்கும்படி அறிவை வேறுபடுத்தி நிற்கும். ஒன்றை மற்றொன்றாக மாறி உணர்வது விபரீத அறிவு எனப்படும். இவ்வாறு மாறி உணர்தலாகிய திரிபுணர்ச்சியை- விபரீத அறிவை உண்டாக்குவது ஆணவத்தின் பொதுவியல்பு ஆகிய தடத்த லக்கணம் ஆகும்.

எடுத்துக்காட்டு

வெண்பா

27. மாயா தனுவிளக்கா மற்றுஉள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை; அது அதுவாய்- வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னைமலம் அன்று அணைதல் தான்.

இதன் பொருள்:

ஆணவமாகிய இருளில் நிற்கின்ற உயிர் மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களை அறியும். அவ்விளக்கு இல்லாவிடின் அஃது ஒரு பொருளையும் அறியமாட்டாது; அறியாமை உடையதாகவே இருக்கும்.

ஆணவம் உயிரறிவை எவ்வாறு மறைத்திருக்கிறது என்பதை ஓர் உவமை மூலம் உணர்த்துகிறார் ஆசிரியர்.

நெருப்பு எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளில் மறைந்து அப்பொருளாகவே நிற்குமன்றி வெளிப்பட நில்லாது. அது அதுவாய் நிற்றல் அதன் இயல்பு. அத்தகைய நெருப்பை விறகு தன்னுள் மறைத்து வைத்துத் தான் ஒன்றே உள்ளது எனும்படி நிற்கும்.

நெருப்பினைப் போன்றது உயிர். தான் சார்ந்த பொருளோடு ஒன்றித் தான் என்பது தோன்றாது அப்பொருளாகவே நிற்பது உயிரின் இயல்பு. அத்தகைய உயிரை ஆணவ மலம் தன்னுள் பொதிந்து கொண்டு, என்பதொன்று இல்லை என்னும் படியாக மறைத்து நிற்கும்.

பதவுரை

உள்ளம் - (ஆணவ மலமாகிய இருளில் மறைப்புண்டு நிற்கின்ற) ஆன்மா
மாயாதனு - மாயையின் காரியமாகிய உடம்பை
விளக்கா - விளக்காகக் கொண்டு
காணாதேல்- அறியாவிடில்
ஒன்றைஆயாது - யாதொன்றையும் அறிய மாட்டாது
(இனி ஆணவ மலம் ஆன்மாவினது அறிவை மறைத்து நிற்பதற்கு உவமை கூறப்படுகிறது.)
மற்றுமலம் - மாயை கன்மங்களின் வேறாய், ஆன்மாவுக்குச் சகசமாய் உள்ள ஆணவ மலம்.
அன்று - ஆன்மா என்று உண்டோ அன்றே
தன்னை - அதனை
அணைதல் - மறைத்து நிற்றல் (எது போன்றது எனில்)
அது அதுவாய் வீயாத - எல்லாப் பொருளிலும் மறைந்து அது அதுவாய்க் கெடுதல் இன்றி இருக்கின்ற

வன்னிதனை - நெருப்பை
தன்னுள் மறைத்து -தனக்குள் மறைத்து வைத்து
ஒன்றாம் - தான் ஒன்றே உள்ளது போல் நிற்கின்ற
காட்டம் போல் - விறகு போல்வதாம்.


விளக்கம் உவமையையும் பொருளையும் பின் வருமாறு பொருத்திக் காட்டலாம்.
உவமை பொருள் 1. விறகு - ஆணவ மலம்

2. விறகினுள் உள்ள நெருப்பு - ஆணவ மலத்துள் கிடக்கும் உயிர்
3. நெருப்பு இருப்பது தோன்றாமை - உயிர் இருப்புப் புலப்படாமை
4. விறகோடு நெருப்பு அத்துவிதமாய்க் கலந்து நிற்றல்- ஆணவத்தோடு உயிர் அத்துவிதமாய் இயைந்து நிற்றல்

மேற்கூறியவற்றால், ஆணவம் அறிவை மறைத்து இருள் போன்றதாய் நிற்கும் என்பதும், மாயை அவ்வறிவை விளக்கி ஒளி போன்றதாய் நிற்கும் என்பதும் விளங்கும். மாயை, கன்மங்கள் அறிவை விளக்குதல்:

மாயையின் காரியமாகிய கருவிகள் அறிவை விளக்க வந்தனவேயன்றி மறைக்க வந்தன அல்ல. விழிப்பு நிலையில் அக்கருவிகளாலேயே நாம் உலகத்தை அறிந்து வருகிறோம். உறக்க நிலையில் அவை செயற்படாமல் மடங்கி நிற்பதாலேயே அறிவு விளங்காமற் போகிறது.

மாயையைப் போன்றே கன்மமும் அறிவை விளக்கும் என்பதே உண்மை. கன்மமே உயிரறிவைத் தூண்டித் தன் பயனைத் தருதற்கு ஏற்ற வகையில் செயற்படுமாறு செய்கிறது. கன்மத்தினாலேயே கருவிகளின் செயற்பாடும் நிகழ்வதாகிறது. செயற்பாட்டினாலேயே அறிவு விளங்குகிறது என்பதைச் சொல்ல வேண்டா.

இதனால் மாயையும் கன்மமும் அறிவை விளக்குவனவே என்பது தெளிவாகும். மாயை கன்மங்களே அறிவை மறைக்கும் என்பார் கூற்றினை ஆசிரியர் மறுத்துள்ளமையை இச் செய்யுளிற் காணலாம்.

ஆணவ மலமும் மாயையும்:
ஆணவத்திற்கும் மாயைக்கும் உள்ள வேறுபாடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டலாம்.

ஆணவம் மாயை
1. இருள் போன்றது - 1. விளக்கொளி போன்றது
2. உயிரோடு இயற்கையில் உள்ளது - 2. உயிரோடு பின்பு சேர்ந்தது
3. உயிரோடு கலந்து நிற்பது - 3. உயிருக்கு வேறாய் நிற்பது
4. காரணமின்றிக் கலந்து நிற்பது - 4. காரணம் பற்றி வந்து சேர்ந்தது

ஓர் ஐயத்தை தெளிவித்தல்:

இவ்விடத்தில் பின்வருமாறு ஐயம் எழலாம். மாயா கருவிகள் அறிவை விளக்குகின்றன என்பது உண்மையே. ஆயினும் உடம்பாயும் உலகப் பொருள்களாயும் அமைந்த மாயை, அறிவை மயக்குதலையும் செய்கின்றது அல்லவா? எங்ஙனம் எனில், ஊனார் புழுக்கூடு எனவும் மலம் சோரும் ஒன்பதுவாயிற் குடில்.

எனவும் ஆன்றோர் அருவருத்துப் பேசுவதாகிய இவ்வுடல் தன் இளமைச் செவ்வியினால் கண்ணையும் கருத்தையும் ஈர்த்து மயக்குகிறதே. உதிர்ந்து வீழ்ந்தால் ஒன்றுக்கும் உதவாத தலை மயிரும் தலைவியின் கூந்தலில் உள்ள காலத்தில் தலைவனுக்கு மழை மேகமோ என்னும் மருட்சியை- மயக்கத்தையல்லவா விளைக்கின்றது! நில்லாதனவாகிய காசும் பணமும் செய்கின்ற ஆசை மயக்கத்தை அளவிட முடியுமோ?

இவையெல்லாம் மாயா காரியங்கள் தாமே. இவை அறிவை மயக்குதலை அல்லவா செய்கின்றன. அவ்வாறிருக்க, அறிவை விளக்குவது மாயை என்று கூறுவது மாறுபாடாக அல்லவா உள்ளது என்று ஐயுறலாம். பின் வரும் விளக்கத்தைத் தெரிந்து கொண்டால் மாயை பற்றி சைவ சித்தாந்த நிலையில் எவ்வித மாறுபாடும் இல்லை என்பது புலனாகும்.

கேவல நிலையில் மாயையின் செயற்பாடு இன்மையால் ஆணவம் தனது மறைத்தல் தொழிலை முழுமையாகத் தடையின்றிச் செய்கிறது. அதனால் உயிர் தனது அறிவை முற்றிலும் இழந்து சட்பபொருள் போலவே கிடக்கிறது. இறைவன் ஆணவத்தின் ஆற்றலைக் குறைப்பதற்காக அதற்கு மறுதலைப் பொருளாகிய மாயையைக் கூட்டுவிக்கின்றான். அஃதாவது மாயையின் காரியங்களாகிய உலகையும், உடம்பையும், கருவிகளையும் உயிருக்குப் படைத்துக் கொடுக்கின்றான். அவற்றின் உதவியினால் அறிவு சிறிது விளங்கப் பெறுகிறது. இதுவே சகல நிலை என்பதை முன்பே பார்த்துள்ளோம்.

இருள் செறிந்த அறையில் உள்ள ஒருவனது கண் இருள் வயப்பட்டு இருளில் மூழ்கி ஒன்றையும் அறியமாட்டாது நிற்றலைப் போன்றது கேவல நிலை. அவ்விருட்டு அறையில் கை விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தால் அதன் ஒளியில் அங்குள்ள பொருள்கள் ஓரளவு புலப்பட்டுத் தோன்றுதலைப் போன்றது சகல நிலை எனலாம். இவ்வுவமையை மேலும் சிறிது நுணுகி நோக்குவோம்.

விளக்கொளியில் அறையிலுள்ள பொருள்கள் உள்ளவாறு புலப்படுவதில்லை. பொருள்களின் வண்ணமும் வடிவும் மாறித் தோன்றுதல் உண்டு. ஒரு மூலையில் வளைந்து கிடக்கின்ற கயிறு பாம்பாகத் தோன்றுதல் கூடும். இவ்வாறு பொருளியல்பு மாறுபட்டுத் தோன்றுவதற்கு எது காரணம்? விளக்கொளி காரணமா? இருள் காரணமா? விளக்கொளி எப்பொழுதும் பொருள்களை விளக்கிக் காட்டுமேயன்றி வேறுபடுத்திக் காட்டாது. பொருள்கள் வேறுபட்டுத் தோன்றுதல் இருளினால் விளைவதேயாகும்.

விளக்கொளி வாராதபோது பொருள்களை முழுதுமாக மறைத்து நின்ற இருளே விளக்கொளி வந்த காலத்தில் அவ்வாறு மறைக்க மாட்டாமல் அவ்வொளியின் சார்பினால் பொருள்களை மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது, அதுபோலவே, கேவல நிலையில் உயிரை முற்றிலுமாக மறைத்து நின்ற ஆணவ மலமாகிய இருள் சகல நிலையில் விளக்கொளி போன்றதாகிய மாயையின் சார்பினால் இழிந்த பொருளை உயர்ந்த பொருள் போலவும், துன்பப் பொருளை இன்பப் பொருள் போலவும் மாறித் தோன்றும்படியாகச் செய்கிறது.

மாயையின் பொதுவியல்பும் உண்மையியல்பும்

எனவே, உண்மையில் மயக்குவது ஆணவ மலம்தான். ஆயினும் ஆணவத்தின் மயக்குதல் தன்மைக்கு மாயை சார்பாக இருக்கிறது. அதுபற்றி மாயை மயக்குவதாகவும் கூறப்படும். உடல்வனப்பும், செல்வமும் பிறவும் எல்லாம் மாயா காரியங்களே. மாயை அவ்வாறு நின்று உயிரைத் தன்னையே நோக்கும்படி செய்து அதன் அறிவை மயக்குதல் சார்பு பற்றிக் கூறப்படும் பொதுவியல்பு ஆகிய தடத்த லக்கணம் ஆகும். அறிவை விளக்குதலே மாயையின் உண்மையியல்பு ஆகிய சொரூப லக்கணம் ஆகும்.

ஆணவ இருளும், திருவருள் ஒளியும்:

இறைவன் உயிரோடு அத்துவிதமாய்க் கலந்துள்ளான் என்பதை இரண்டாம் நூற்பாவில் பார்த்தோம். ஆணவ மலமும் உயிரிடத்து அத்துவிதமாய்க் கலந்துள்ளது. இறைவனும் அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் உயிரிடத்தில் ஒரே நேரத்தில் இருத்தல் எங்ஙனம் இயலும் என ஐயுறலாம். பின்வரும் உவமை இதனைத் தெளிவிக்கும். ஒளியும் அதற்கு எதிரான இருளும் வெவ்வேறு இடத்தில் இல்லை. இரண்டுமே ஓரிடத்தில் தான் உள்ளன. ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம். ஒன்று மேலிடும் போது மற்றொன்று மடங்கி நிற்கும். அதுபோலத் திருவருள் ஒளியும், ஆணவமாகிய இருளும் உயிரிடத்திலேயே உள்ளன.

உயிர் தன் பக்குவக் குறைவினால் தன்னிடத்தே உள்ள திருவருள் ஒளியை உணர்வதில்லை. ஆணவமலத்தையே அது பற்றி நிற்கிறது. அதனாலேயே எல்லா வகைத் துன்பங்களையும் எய்துவதாயிற்று. உயிர் பக்குவம் பெற்ற காலத்தில் அஞ்ஞானமாகிய இருள் கீழ்ப்பட்டொழிய, மெய்ஞ்ஞானமாகிய திருவருள் மேற்படும்.

ஆணவம்- பெயர்க் காரணம்: முடிவாக ஒன்றைச் சொல்லுதல் வேண்டும்; ஆணவம் என்றவுடன் அதனை ஒரு பண்பாகவே நினைக்கத் தோன்றும். மும்மலங்களுள் ஒன்றாகக் கூறப்படும் ஆணவம் என்பது பண்பு அன்று. அது ஒரு பொருள்; அறியாமை என்னும் குணத்தை உடைய ஒரு குணிப் பொருள். கண்ணை மறைக்கின்ற புற இருளைப் போல அறிவை மறைக்கின்ற அக இருள் அது. உயிருக்கு இயல்பாய் உள்ள வியாபகத் தன்மையை மறைத்து அதனைச் சிறுமைப்படுத்துவதால்- அதனைச் சிற்றறிவும், சிறு தொழிலும் உடையதாகச் செய்வதனால்- அணுத் தன்மைப் படுத்துவதால் ஆணவம் என்னும் காரணப் பெயரை உடையதாயிற்று.

மூன்றாம் கூறு: ஆணவ மலத்திற் கிடந்த ஆன்மா மாயா கருவிகளோடு கூடி அறிவு பெறலாயிற்று என்பதைப் பார்த்தோம். அவ்வாறு கருவிகளால் அறிவு விளங்கிய ஆன்மா பொருள்களை அறியுங்காலத்தில் ஒரு நிலையாக அறிந்து நிற்றல் இல்லை.

விழிப்பு நிலையில் புறப்பொருள்களை அறிகின்ற ஆன்மா அதனை விடுத்துக் கனவு நிலைக்குச் சென்று அக நிகழ்ச்சிகளை அறிகிறது. பின் அந்நிலையும் நீங்கி உறக்க நிலையை யடைந்து, அறிவும் செயற்பாடும் இன்றிக் கிடக்கிறது. பின் மீண்டும் அறியத் தலைப்படுகிறது. இவ்வாறு ஆன்மா பல நிலை வேறுபாடுகளை எய்துவதற்குக் காரணம் என்னை என வினவலாம். அதற்கான விடையை நூற்பாவில் அமைச்சு அரசு ஏய்ப்ப அஞ்சவத்தைத்தே என்ற தொடரில் குறிப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர்.

அமைச்சர் முதலிய அனைவரோடும் சேர்ந்து ஆட்சியினை நடத்தும் வேந்தன் அந்தந்த நேரத்தில் அந்தந்த அரசச் சுற்றத்தோடு கூடுதலும் பின் நீங்குதலும் ஆகிய பல நிலைகளை உடையனாதல் போல, ஆன்மாவும் அவ்வப்பொழுது அவ்வக்கருவிகளோடு கூடியும் நீங்கியும் விழிப்பு, கனவு, உறக்கம் முதலிய பல நிலை வேறுபாடுகளை உடையதாயிற்று என்பதே அவ் விடையாகும்.

நூற்பாவில் குறிப்பாக உணர்த்திய பொருளை இங்கு மேற்கோளும் ஏதுவும் அமைத்து விளங்க உணர்த்துகின்றார்.

மேற்கோள்

இனி, இவ்வான்மாச் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம்
துரியாதீதமாய் உள்ள பஞ்சாவத்தினாய் நிற்கும் என்றது.

மேற்கோளின் பொருள்

அவத்தை-நிலை; பஞ்சாவத்தை- ஐந்து நிலைகள்; அவத்திகன்- நிலையை உடையவன்.

ஆன்மா சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து நிலைகளை உடையதாய் நிற்கும் என்பது மேற்கோளின் பொருளாகும்.

மேற்கோள் விளக்கம்

உயிர் அடையும் நிலைகள் காரண அவத்தை, காரிய அவத்தை என இருவகைப்படும்.

காரண அவத்தைகள்:

கேவலம் என்பது உயிர் ஆணவத்தோடு மட்டும் உள்ள நிலை; மாயை கன்மங்கள் சேராத நிலை; அறிவும் செயலும் சிறிதும் இன்றித் தான் ஒரு பொருள் உண்டு என்பதையும் அறியாமல் முழு மறைப்பிலே மூழ்கிச் சடப் பொருள் போலக் கிடக்கும் நிலை. இதுவே உயிரின் அநாதி நிலை.

சகலம் என்பது ஆணவத்தோடு ஏனைய மாயை கன்மங்களும் வந்து பொருந்த. உயிர் மும்மலங்களோடும் கூடியிருக்கும் நிலை; பிறப்பு இறப்புக்களில் சுழலும் நிலை; இஃது இடைப்பட்ட நிலை.

சுத்தம் என்பது உயிர் மும்மலங்களும் நீங்கப் பெற்றுப் பிறவி ஒழிந்து இறைவனோடு கலந்திருக்கும் நிலை. இதுவே முடிந்த நிலை.

இவை மூன்றும் காரண அவத்தைகள் ஆயின. இம் மூன்றில் முதலிரண்டும் கட்டு நிலையாகும். மூன்றாவது நிலைமுத்தி நிலையாகும்.

காரிய அவத்தைகள்:

இனி, காரிய அவத்தைகள் ஐந்து உள்ளன. அவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்பன. தமிழில் அவை பின்வருமாறு சொல்லப் பெறும்.

1. சாக்கிரம் - நனவு/ விழிப்பு
2. சொப்பனம் - கனவு
3. சுழுத்தி - உறக்கம்
4. துரியம் - பேருறக்கம்
5. துரியாதீதம் - உயிர்ப்பு அடங்கல் (மூச்சு அடங்கி யிருத்தல்)

இவை ஐந்தும் அன்றாட வாழ்வில் நிகழும் காரியங்கள் ஆதலின் காரிய அவத்தைகள் எனப்பட்டன. இவை கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்றும் பற்றி மூவைந்து பதினைந்தாய் விரியும். அவற்றை இங்கு விளக்கமாகக் காண்போம்.

கேவல ஐந்தவத்தை:

உடம்போடு கூடி வாழ்வதாகிய சகல நிலையில் அன்றாடம் கேவலம் (அறியாமை) வந்து பொருந்தும். எவ்வாறெனில், விழிப்பு நிலையாகிய சாக்கிரத்தில் சில கருவிகள் செயல்படாது மடிதலினால், உணர்ந்தும் உணராது போல அறிவு மந்தமாய் நிகழும். பின்னும் சில சில கருவிகள் ஒடுங்குதலினால் கனவு ஆகிய சொப்பனம், உறக்கம் ஆகிய சுழுத்தி, பேருறக்கம் ஆகிய நிலைகள் உண்டாகும்.

இந் நிலைகளிலெல்லாம் ஆன்மாவுக்குப் படிப்படியே அறியாமை மிகுந்து வரும். துரியாதீதம் ஆகிய நிலையில் ஆன்மா முழு அறியாமையில் மூழ்கியிருக்கும்.

இவ்வைந்து நிலைகளிலும் கேவலமாகிய அறியாமை குறைந்தும் மிகுந்தும் நிகழ்தலின், இந்நிலைகள் கேவல சாத்திரம், கேவல சொப்பனம், கேவல சுழுத்தி, கேவல, துரியம், கேவல துரியாதீதம் எனச் சொல்லப் பெறும். இவற்றைத் தொகுத்துக் கேவல ஐந்தவத்தைகள் என்பர்.

சகல ஐந்தவத்தை:

இனி ஆன்மா ஐம்பொறிகளால் பொருள்களை நன்றாக அறிகின்ற சகல நிலையில் ஒரே வகையாய்த் தொடர்ச்சியாய் அறிந்து நில்லாமல் விட்டுவிட்டே அறியும். இதனை நம் அனுபவத்தில் வைத்தே உணர்தல் வேண்டும்.

நாம் ஒரு பொருளை அறியும் காலத்தில் அதனைப் பற்றியும் விட்டும், மீண்டும் பற்றியும் விட்டும் இவ்வாறு மாறி மாறியே உணர்கிறோம். விடுதலும் பற்றுதலும் மிக விரைவாக நிகழ்வதால் அவை நமக்குப் புலனாவதில்லை. தொடர்ச்சியாய் அறிந்து கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. அஃது உண்மையன்று.

இங்ஙனம் பொருள்களை அறிந்து வருவதாகிய விழிப்பு நிலையிலேயே சாக்கிரம், சொப்பனம் முதலிய ஐந்தவத்தைகள் நுட்பமாய் நிகழ்கின்றன என்ற கொள்ளப்படுகிறது. இவற்றைத் தனித்தனியே தெளிவாகப் பிரித்துக் காட்டல் இயலாது.

இந்த ஐந்தவத்தைகள் காற்றாடியில் உள்ள ஓலைகள் விரைவாகச் சுழல்வது போல மிக விரைவாக மாறி மாறி நிகழும். இவற்றை விளங்க உரைத்தல் இயலாமை பற்றி, நினைப்பும் மறப்பும் எனச் சுருங்கச் சொல்லுவர்.

நன்கு விழித்திருக்கும் சகல நிலையில் இடையூறாது நிகழ்வனவாகிய இவ்வவத்தைகள் சகல சாக்கிரம், சகல சொப்பனம், சகல சுழுத்தி, சகல துரியம், சகல துரியாதீதம் எனச் சொல்லப் பெறும். இவற்றைத் தொகுத்துச் சகல ஐந்தவத்தைகள் என்பர்.

சுத்த ஐந்தவத்தை:

இனி, சகலத்தில் நிகழ்வதாகிய சுத்த நிலையைப் பார்ப்போம். பக்குவ ஆன்மாக்கள் சகல நிலையில் வாழும்போதே கருவிகளின் தொடர்பு நீங்கித் திருவருளோடு ஒன்றி நிற்பார்கள். அவரெல்லாம் சகல நிலையில் உள்ளபோதே சுத்த நிலை எய்தினோர். சகலத்தில் பொருந்துவதாகிய இச் சுத்த நிலையில் அவர்கள் பால் ஐந்தவத்தைகள் நிகழ்வனவாகும். அஃதாவது திருவருளைச் சிறிது சிறிதாக உணர்ந்து அதில் அழுந்துதலும், முடிவில் சிவத்தின்கண் அழுந்துதலுமே அந்நிலைகளாகும்.

அவை சுத்தம் என்ற அடைமொழியோடு சுத்த சாக்கிரம், சுத்த சொப்பனம், சுத்த சுழுத்தி, சுத்த துரியம், சுத்த துரியாதீதம் எனக் கூறப்பெறும். நின்மலம் என்ற அடை கொடுத்து இவற்றை வழங்குதலும் உண்டு.

இவற்றுள் நான்காம் நிலையாகிய துரியம், திருவருளில் அழுந்தும் நிலையாகும். முடிவாகிய துரியாதீதமே சிவத்தில் அழுந்தும் நிலையாகும் இவற்றைத் தொகுத்துச் சுத்த ஐந்தவத்தைகள் என்பர்.

இவ்வாறு காரிய அவத்தைகள் 1) கேவல ஐந்தவத்தை 2) சகல ஐந்தவத்தை 3) சுத்த ஐந்தவத்தை என மூவைந்தாய், பதினைந்து ஆகும்.

இம் மூவகை ஐந்தவத்தைகளும் கேவலம், சகலம், சுத்தம் என்னும் அடைமொழிகளோடு கூறப்பெறினும், அவை மூன்றும் உண்மையில் சகல நிலையாகிய ஒன்றில் நிகழ்வனவே என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.

ஏது

மேற்கூறியவாறு ஆன்மா; ஐந்தவத்தைகளை அடைதற்குரிய காரணத்தை ஏதுவில் கூறுகின்றார். அவ்வேது வருமாறு:

அதுதான் சல சொரூபத்தின் மறைந்து, அரூப சொரூபியாய் நிற்றலான்.

ஏது விளக்கம்

அரூபம் என்பது, புலப்படாது நுட்பமாய் உள்ள தத்துவங்களைக் குறிக்கும். தத்துவங்கள் என்பவை அந்தக் கரணம் இந்திரியம் முதலிய கருவிகளேயாம். அரூப சொரூபி என்பதற்கு, ஆன்மா தத்துவங்களையே தனது வடிவமாகக் கொண்டுள்ளது என்பது பொருள்.

ஆன்மா ஆணவ மலத்தினுள் மறைந்து தன் அறிவையிழந்து நிற்பதனால், அறிவு பெறுதற் பொருட்டுத் தத்துவங்களாகிய கருவிகளைக் கூடும்; அவற்றோடு கூடி அவையே வடிவாய் நிற்கும். ஆன்மா எக்கருவிகளோடு கூடினாலும் அக்கருவியாகவே நின்று அறியும். காட்டாக, மனத்தோடு கூடியபோது மனமாகவே நின்று பொருளைப் பற்றும்; சித்தத்தைக் கூடிச் சித்தமாகவே நின்று சிந்தனை செய்யும். இவ்வாறு அது அதுவாகவே நின்று அறிதல் ஆன்மாவின் இயல்பு.

தத்துவங்களாகிய கருவிகள் வினைக்கு ஏற்பவே செயற்படுதல்:

தத்துவங்களாகிய மாயா கருவிகள் எப்பொழுதும் ஒரு நிலையில் நிற்பதில்லை. அவ்வப்போது அவை செயற்படாமல் மடங்கியும், பின் மீண்டும் எழுச்சியுற்றும் நிற்கும். கருவிகள் நன்கு செயற்படுதலும், மந்தமாகச் செயற்படுதலும், செயற்படாது மடங்கி நிற்றலும் ஆகிய எல்லாம், வினை தன் பயனை ஊட்டும் முறைக்கு ஏற்பவே நிகழும் என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். இதனை அவரவரும் தம் வாழ்க்கை அனுபவத்தில் வைத்து உணரலாம். சான்றாக ஒரு நிகழ்ச்சியைக் காட்டுவோம்.

ஒரு நேர்முகத் தேர்வு நிகழ்கிறது. சிறப்பான ஒரு பெரும் பணிக்குத் தகுந்தவரைத் தேர்ந்தெடுக்க அது நடைபெறுகிறது. நம்மிடம் அப்பணிக்கு வேண்டிய தகுதியனைத்தும் நிரம்பியிருக்கிறது. ஆதலால் மிகுந்த நம்பிக்கையோடு அங்கே செல்லுகிறோம். ஆயின் அப்பணி நமக்குக் கிடைக்காது வருந்த வேண்டும் என்று வினையிருக்கிறது. அது நமக்கு எப்படித் தெரியும்? நேர்காணலில் தேர்வுக்குழுவினர் சில வினாக்களைக் கேட்கிறார்கள். அவையெல்லாம் தெரிந்தவை தான். ஆனால் அந்நேரம் பார்த்து நமது சித்தம், புத்தி முதலிய கருவிகள் நன்கு செயற்படாமல் போகும். கிடைக்காது வருந்துதலாகிய பயனை ஊட்டும் அவ்வினை காரணமாக- அவ்வினைக்குத் துணையாக- அக்கருவிகள் செயற்படாமல் மடங்கி நிற்கும். அதனால், தெரிந்த வினாவாக இருப்பினும் அந்நொடியில் திகைத்து நிற்கும்படியாக நேர்கிறது; மாறான விடையைச் சொல்ல நேர்கிறது. அதனால் அப்பணி கை நழுவிப் போக நேர்கிறது. வெளியில் வந்ததும் அக்கருவிகள் நன்கு செயற்படுவதனால் விடைகள் நமக்குச் சட்டென்று தோன்றுகின்றன. அடடா! அங்கேயே தோன்றியிருக்கக்கூடாதா என்று எண்ணி மனம் உளைகிறோம். ஆகவே வினைக்கு ஏற்பவே, கருவிகளின் தொழிற்பாடு நிகழும் என்பது புலனாகும்.

ஆன்மா பல அவத்தைகளை அடைதற்குரிய காரணம்:

இவ்வாறு தத்துவங்களாகிய கருவிகள் தொழிற்படும் நிலைகள் பலவாதலால், அத் தத்துவங்களின் வடிவாய் நின்று அறியும் ஆன்மாவும் பலநிலைகளை எய்துவதாயிற்று

இனி, மாயா கருவிகளோடு கூடிய ஆன்மா அஞ்சவத்தைப்படும் முறையே இரண்டு எடுத்துக்காட்டுகளால் கூறுகின்றார்.

கேவல ஐந்தவத்தை:

முதல் எடுத்துக்காட்டில் கேவல ஐந்தவத்தையின் இயல்பினைக் கூறுகின்றார்.

1. கேவல சாக்கிரம்:

விழிப்பு நிலையில், ஐம்பொறிகளுக்கு வலிமை தரும் சில கருவிகள் செயற்படாமல் மடங்கி நிற்கும்போது அவ்வைம்பொறிகள் எழுச்சியுடன் செயற்படாமையால், அறிவு கூர்மையாய் நிகழாமல் மந்தமாய் நிகழும். அந்நிலையில் முப்பத்தைந்து கருவிகள் செயற்படுவனவாகும். அவை

1. ஞானேந்திரியங்கள் ஆகிய அறிகருவிகள் - 5 (செவி, தோல், கண், நாக்கு, மூக்கு)

2. கன்மேந்திரியங்கள் ஆகிய தொழிற் கருவிகள் - 5 (வாய், கால், கை, எருவாய், கருவாய்)

3. ஞானேந்திரியங்களின் விடயங்கள் - 5 (ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம்)

4. கன்மேந்திரியங்களின் விடயங்கள் (பேச்சு, நடை, கொடை, போக்கு, இன்பம்) - 5

5. பிராண வாயு முதலிய வாயுக்கள் - 10

6. அந்தக் கரணங்கள் - 4

7. புருடன் - 1 -------

35 ------- அறிவு நன்கு விளங்காத இவ் விழிப்பு நிலையே கேவல சாக்கிரம் என்னும் அவத்தையாகும். இவ் அவத்தையின்போது ஆன்மா புருவ நடுவில் நிற்கும். புருவநடு இலாடம் எனப்படும்.

2. கேவல சொப்பனம் :

பின் ஆன்மா புருவ நடுவினின்றும் இறங்கிக் கழுத்தை அடையும். அங்கு ஞானேந்திரியங்கள் ஐந்தும், கன்மேந்திரியங்கள் ஐந்தும் செயற்படாது ஒடுங்கும்; ஏனைய இருபத்தைந்து கருவிகள் செயற்படும். ஆன்மா இவ்விடத்துக் கனவு நிலையை எய்தி நிற்கும். இது கேவல சொப்பனம் என்னும் அவத்தையாகும்.

3. கேவல சுழுத்தி:

அதன்பின் ஆன்மா கழுத்தினின்றும் கீழிறங்கி இதயத்தை அடையும். அங்கு அந்தக் கரணங்களுள் சித்தமும், பிராண வாயுவும், புருடனும் ஆகிய மூன்று கருவிகளே தொழிற்படும். எனவே இதற்கு முந்திய கனவிடமாகிய கழுத்தில் தொழிற்பட்ட விடயங்கள் பத்தும், வாயுக்களில் ஒன்பதும், அந்தக் கரணங்களில் மனம் புத்தி, அகங்காரம் மூன்றும் ஆகிய இருபத்திரண்டு கருவிகள் செயற்படாது ஒடுங்கின என்பது விளங்கும். ஆன்மா இவ்விடத்து உறக்கத்தை எய்தி நிற்கும். இது கேவல சுழுத்தி என்னும் அவத்தையாகும்.

4. கேவல துரியம்:

அதன்பின் ஆன்மா இதயத்தினின்றும் இறங்கி உந்தியை அடையும். அங்கு, இதுவரை செயற்பட்டு வந்த சித்தம் ஆகிய அந்தக்கரணமும் செயற்படாது ஒடுங்க, பிராண வாயுவும் புருடனும் ஆகிய இரண்டு கருவிகளே உளவாகும். ஆன்மா பேருறக்கத்தில் ஆழ்ந்து விடும் நிலை இதுவாகும். இது கேவல துரியம் என்னும் அவத்தையாகும்.

கேவல துரியாதீதம்:

இறுதியாக ஆன்மா உந்தியினின்றும் இறங்கி மூலாதாரத்தை அடையும். அங்குப் பிராண வாயுவும் ஒடுங்கிப்போக, புருடன் என்னும் ஒரு கருவியே உளதாகும். மூச்சும் ஒடுங்கி ஆன்மா முழு அறியாமையிற் கிடக்கும் நிலை இதுவாகும். இது கேவல துரியாதீதம் என்னும் அவத்தை யாகும்.

இதுகாறும் கூறியவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தி அமைத்துக் கொள்வோம்.

அவத்தைகள் இடங்கள் செயற்படும் கருவிகள் உணர்வு நிலைகள்

1. கேவல சாக்கிரம் புருவ நடு 35 மந்தமாய் நிகழும் பொறியுணர்வு
2. கேவல சொப்பனம் கழுத்து 25 கனவுணர்வு
3. கேவல சுழுத்தி இதயம் 3 உறக்கம்
4. கேவல துரியம் உந்தி 2 பேருறக்கம்
5. கேவல துரியாதீதம் மூலாதாரம் 1 முழு அறியாமையில் அழுந்துதல்

இவ்வாறு புருவ நடுவினின்றும் இறங்கி மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் உயிர், மீண்டும் மேலேறிச் சென்று அந்த அந்த இடங்களில் அந்த அந்த அவத்தைப் பட்டுப் புருவ நடுவை அடைவதாகும்.

கீழிறங்கிச் செல்லுதல் கீழாலவத்தை என்றும், மேலேறிச் செல்லுதல் மேலாலவத்தை என்றும் சொல்லப்பெறும். இறங்குதல், மேற்செல்லுதல் என்பது தவிர, இவ்விரண்டிடையே வேறுபாடு யாதும் இல்லை.

கருவிகள் குறைந்து உயிர் அறியாமையில் அழுந்துதல் பற்றி இவை கேவல ஐந்தவத்தைகள் எனப்பட்டன.

இக் கேவல ஐந்தவத்தை பற்றிக் கூறும் எடுத்துக்காட்டுச் செய்யுளை நோக்குவோம்.

எடுத்துக்காட்டு - 1

வெண்பா

28. ஒன்று அணையாமூலத்து; உயிர் அணையும் நாபியினில்;
சென்று அணையும் சித்தம் இதயத்து; - மன்ற ஏய்
ஐயைந்தாம் நன்னுதலில்; கண்டத்து வாக்காதி
மெய்யாதி விட்டு அகன்று வேறு.


இதன் பொருள்:

ஆன்மா தான் ஒடுங்கியிருந்த மூலாதாரத்திலிருந்து மேலேறிச் செல்லும்பொழுது அவ்வவ்விடங்களில் வந்து பொருந்தும் கருவிகள் இவை என்பதை இங்கே உணர்த்துகின்றார்.

எந்தக் கருவியும் செல்லாத மூலாதாரத்தில் ஆன்மா ஒடுங்கி நிற்கும் காலத்தில் புருடன் என்னும் ஒரு கருவியே செயற்படுவதாகும்.

ஆன்மா மூலாதாரத்தினின்றும் மேலேறி உந்தியை அடைந்தபொழுது முன்சொன்ன புருடனோடு பிராண வாயுவும் வந்து சேரும். ஆக, அங்கு இரண்டு கருவிகள் செயற்படும் என்பதாயிற்று.

பின் ஆன்மா உந்தியினின்றும் மேலேறி இதயத்தை அடைந்தபொழுது மேற்கூறிய இரண்டோடு சித்தம் என்னும் அந்தக் கரணமும் சென்று சேரும். ஆக, அங்கு மூன்று கருவிகள் செயற்டும் என்பது விளங்கும்.

அதன்பின் ஆன்மா இதயத்தினின்றும் மேலேறிக் கழுத்தினை அடைந்தபொழுது மேற்கூறிய மூன்றையும் உள்ளிட்ட இருபத்தைந்து கருவிகள் செயற்படும்.

பின்னர் ஆன்மா கழுத்தினின்றும் மேலேறிப் புருவ நடுவை அடைந்தபொழுது, அந்த இருபத்தைந்து கருவிகளோடு கன்மேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் சென்று பொருந்தும். ஆக முப்பத்தைந்து கருவிகள் அங்கு செயற்படும் என்பது தெளிவாகும்.

பதவுரை

அணையா மூலத்து ஒன்று - எந்தக் கருவியும் செல்லாத மூலாதாரத்தில் ஆன்மா ஒடுங்கி நிற்கும்பொழுது புருடன் என்னும் ஒரு கருவியே செயற்படும்.

நரபியினில் உயிர் அணையும் - ஆன்மா மூலாதாரத்தினின்றும் மேலேறி உந்தியை அடையும்பொழுது முன் சொன்ன புருடனோடு பிராண வாயுவும் சென்று பொருந்தும் (எனவே அங்கு இரண்டு கருவிகள் செயற்படும்)

இதயத்து சித்தம் சென்று அணையும் - பின் ஆன்மா உந்தியினின்று இதயத்தை அடைந்தபொழுது, மேற்கூறிய இரண்டோடு சித்தம் என்னும் அந்தக்கரணம் சென்று பொருந்தும். (எனவே அங்கு மூன்று கருவிகள் செயற்படும்.)

கண்டத்து வாக்கு ஆதி மெய் ஆதிவிட்டகன்று வேறு ஐயைந்தாம் - ஆன்மா இதயத்தினின்றும் கழுத்தை அடைந்த பொழுது வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள் ஐந்தும் மெய் முதலிய ஞானேந்திரியங்கள் ஐந்தும், நீங்கி நிற்க ஏனைய இருபத்தைந்து கருவிகள் செயற்படும். (மேற்கூறிய மூன்று கருவிகளும் இவற்றுள் அடங்கும்)

நன்னுதலில் வாக்காதி மெய்யாதி மன்ற ஏய் ஐயைந்தாம் - ஆன்மா கழுத்தினின்றும் புருவ நடுவை அடைந்தபொழுது, முன்பு நீங்கி நிற்கும் எனப்பட்ட கன்மேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் சென்று பொருந்திய ஐயைந்தாம். (எனவே முப்பத்தைந்து கருவிகள் அங்குச் செயற்படும் என்பது விளங்கும்.)

விளக்கம்:

முதலடியில் உயிர் என்பது பிராண வாயுவைக் குறிக்கும். பிற்பகுதியில் உள்ள சொற்களைப் பின் முன்னாக மாற்றிக் கூட்டினால் தான் பொருள் அமையும்.

கண்டத்து வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு ஐயைந்தாம் எனவும், நன்னுதலில், வாக்காதி மெய்யாதி மன்ற ஏய் ஐயைந்தாம் எனவும் இயைத்துப் பொருள் செய்ய வேண்டும்.

புருடன் விளக்கம்:

புருடன் என்பது உயிர் அன்று; தத்துவங்களுள் ஒன்றாக வைத்து எண்ணப்படுவது; அது பற்றியே புருடதத்துவம் என்று கூறப்படுகிறது. தத்துவம் என்பதற்குக் கருவி என்பது பொருள். புருடன் என்பது கருவியாகக் கூறப்படினும், மற்றக் கருவிகளைப் போல இதுவும் மாயையினின்றும் தோன்றிய, சடமாகிய, தனித்ததொரு கருவி என்று கருதி விடுதல் கூடாது.

காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் மிகு நுண் கருவிகள் ஆன்மாவைப் பொருந்தி எப்பொழுதும் நீங்காமல் சட்டை போல ஒட்டியிருப்பவை. ஆணவ மலத்தைச் சிறிது நீக்கி, ஆன்மாவின் அறிவையும் செயலையும் விளக்கி, உலகப் பொருள்களை நுகர்தற்குரிய தகுதியை உண்டாக்கி நிற்பவை. அக்கருவிகள் ஐந்தும் கூடி நிற்கும் அமைப்பே புருட தத்துவம் என்று குறிக்கப்படுகிறது. ஆகவே புருடன் என்று கூறப்படும் இடங்களிலெல்லாம், மேற்கூறிய ஐந்து கருவிகளும் எப்பொழுதும் ஒடுங்காமல் செயற்படுகின்றன என்றே கொள்ளுதல் வேண்டும்.

ஆன்மா அவத்தையுறும் இடங்களாகிய புருவநடு, கழுத்து, இதயம், உந்தி, மூலாதாரம் ஆகிய ஐந்திலும் புருடன் என்னும் கருவி உள்ளது எனப் பார்த்தோம். அதன் பொருள், அவ்விடங்களிளெல்லாம் காலம், நியதி, கலை முதலிய மிகு நுண் கருவிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதேயாம். ஆன்மா மூலாதாரத்தில் முழு அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் பொழுதும், இக் கருவிகளின் தொழிற்பாடு நிகழும் என அறிதல் வேண்டும்.

எடுத்துக்காட்டு- 2

சகல ஐந்தவத்தை:

முந்திய எடுத்துக்காட்டில் கேவல ஐந்தவத்தையின் இயல்பை மேலாலவத்தை என்ற முறையில் வைத்து விளக்கினார்; இவ்வெடுத்துக்காட்டில் சகல ஐந்தவத்தையின் இயல்பைக் கூறுகின்றார்.

வெண்பா

29. இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம்
இலாடத்தே ஐந்தவத்தை எய்தும்;- இலாடத்தே
அவ்வவ இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே
அவ்வவற்றின் நீங்கல்; அது ஆங்கு.

இதன் பொருள்:

முந்திய செய்யுளிற் கூறியவாறு. மூலாதாரத்தினின்றும் படிப்படியே மேலேறிப் புருவ நடுவை அடைந்து சாக்கிரத்தை எய்திய ஆன்மா, அப்புருவ நடுவிலேயே ஐந்தவத்தைகளை அடையும்.

புருவ நடுவில் நின்று ஐம்பொறிகளுள் ஒவ்வொன்றைக் கொண்டு அது அதற்கு உரிய புலன்களை நன்கு உணர்தலும், உணர்ந்த அப்பொழுதே அப்புலன்களை உணராது விடுதலுமே அவ்வவத்தைகளாம்.

இங்குக் கூறிய கேவல, சகல அவத்தைகளேயன்றிச் சுத்த அவத்தை என்பதும் ஐந்து வகையாய் நிகழ்வதாகும்.

பதவுரை

இலாடத்தே - முந்திய வெண்பாவிற் கூறியவாறு மூலாதாரத்திலிருந்து படிப்படியாக மேல் ஏறி முடிவில் இலாடத்தானம் எனப்படும் புருவ நடுவை அடைந்து

சாக்கிரத்தை எய்திய - விழிப்பு நிலையாகிய சாக்கிரத்தை எய்திய

உள்ளம் - ஆன்மா

இலாடத்தே - அனைத்துக் கருவிகளும் எழுச்சியுற்றுச் செயற்படும் அப்புருவ நடுவிலேயே

ஐந்து அவத்தை எய்தும் - சாக்கிரம் முதலிய வேறு ஐந்தவத்தைகளை அடையும்.

(இவை சகல ஐந்தவத்தைகள் எனப்படும். அவை யாவை எனின்)

இலாடத்தே - அப்புருவ நடுவில்

அவ்வவ இந்திரியத்து - அந்த அந்த இந்திரியங்களால்

அத்துறைகள் கண்டு - அந்த அந்தப் புலன்களை உணர்ந்து

அதுவே - அப்பொழுதே

அவ்வவற்றின் நீங்கல் - அந்த அந்தப் புலன்களை உணராது மறந்து விடுதலாகும். (புருவ நடுவில் மிக விரைவாக மாறி மாறி வருகின்ற இந்த நினைப்பு மறப்புக்களை அவரவரும் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்து கொள்ளலாம்.)

(இங்குக் கூறிய கேவல ஐந்தவத்தை, சகல ஐந்தவத்தை என்னும் இவையேயன்றி வேறுவகை அவத்தையும் உண்டு. அது சுத்த அவத்தை எனப்படும்).

அது - சுத்த அவத்தையாகிய அதுவும்

ஆங்கு - மேற்கூறியனபோல ஐந்து வகைப்பட்டு நிகழ்வதாகும்.

விளக்கம்

புருவ நடுவிலேயே எய்தும் ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை எனப்படும். மத்தியாலவத்தை என்றும் கூறுவர்.

முந்திய எடுத்துக்காட்டில் கூறப்பட்ட கேவல ஐந்தவத்தைக்கும் இங்குக் கூறப்படும் சகல ஐந்தவத்தைக்கும் உள்ள வேறுபாட்டினைப் பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்.

கேவல ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை

1. ஐந்து வேறு இடங்களில் நிகழ்வன. 1. புருவ நடுவாகிய ஒரே இடத்தில் நிகழ்வன
2. நீடித்து நிகழ்வன 2. மிக விரைவில் நிகழ்வன
3. உயிர் அறியாமையில் அழுந்தும் 3. உயிர், அறியப்படும் பொருளில் அழுந்தும்

சாக்கிரத்தில் இரண்டு வகை:

புருவ நடுவில் நிகழ்வதாகிய சாக்கிரத்தில் இரண்டு வகையிருத்தல் காணலாம். ஒன்று கேவல சாக்கிரம். மற்றொன்று சகல சாக்கிரம். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டினைப் பின்வருமாறு சுட்டலாம்.

சகல சாக்கிரத்தில் எல்லாக் கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். அதனால் உயிர் பொருள்களை நன்றாக உணரும்.

கேவல சாத்திரத்தில் ஐம்பொறிகளுக்கு வலிமை தரும் சில கருவிகள் செயற்படாது போகும். அதனால் அப்பொறிகள் தத்தம் புலன்களை நன்கு உணரமாட்டாமல் மந்தமாகவே உணரும். ஒருவன் ஏறிச் செலுத்தும் மிதிவண்டி, அதன் சக்கரத்தில் காற்று இறங்கிப் போனால், விரையச் செல்லாது, உடையவன் கீழே இறங்கி மெதுவாக உருட்ட, மெல்லவே இயங்குவது போன்றது கேவல சாக்கிரம் எனலாம்.

இனி, சுத்த அவத்தைகளை இங்குக் கூறுதல் பொருத்தமில்லை என்பதனால் அவற்றினை ஆசிரியர் விரித்துரைக்காமல் அது ஆங்கு எனச் சுட்டியதோடு அமைந்தார்.

ஆன்மாவின் பொதுவியல்பு:

இந் நூற்பா ஆன்மாவின் பொதுவியல்பாகிய தடக்க லக்கணம் கூறுவதாகும். ஒரு பொருளுக்குப் பிற பொருளின் சேர்க்கையால் உண்டாகும் தன்மையே பொது வியல்பு. அம்முறையில், ஆன்மா மாயை கன்மங்களோடு கூடிச் சகல நிலையில் அஞ்சவத்தைப் படுதலே அதற்குப் பொதுவியல்பாயிற்று.

ஆன்மாவின் உண்மையியல்பாகிய சொரூப லக்கணம் ஏழாம் நூற்பாவில் கூறப்பெறும்

நான்காம் நூற்பா முடிந்தது

No comments:

Post a Comment