| செண்பக மரம் |
கோயில் நகரமாம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாகேஸ்வரம்.
இரண்டு பக்கங்களிலும் கலைமகளும் அலைமகளும் அருள, நடுநாயகமாக ஸ்ரீகிரிகுஜாம்பிகையும் ஸ்ரீநாகநாத ஸ்வாமி எனும் திருப்பெயர் கொண்டு அப்பனும் கோயில் கொண்டிருக்கும் அற்புதத் தலம் இது. நாகம்-பாம்பு; நாதன்-நம் இறைவன்! ஆமாம்... இங்கே நாகநாதராக அருளாட்சி செய்கிறார் ஈசன்.
நவக்கிரகங்களுள் ஒருவரான ராகு பகவான் சிவ வழிபாடு செய்த தலமாதலால், திருநாகேஸ்வரம் என்று பெயர்கொண்டதாம் இவ்வூர். ஆதிசேஷன், தட்சன், கார்கோடகன், நளன் ஆகியோரும் இங்கே வழிபட்டு அருள் பெற்றதாக புராணக் குறிப்பு உண்டு.
இந்தத் தலத்துக்கு வந்து, ராகு காலத் தில் ஸ்ரீராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்து வணங்குவது விசேஷம். இராகுவின் திருவுருவ விக்கிரகத்தில் அபிஷேகிக்கப்படும் பாலானது நீல நிறத்தில் வழிந்தோடுவது, வேறெங்கும் காண்பதற்கரிய அற்புதம்!
இங்கே ஸ்ரீநாகவல்லி-ஸ்ரீநாககன்னி சமேதராக... மற்ற தலங்களைப் போல் பாம்பு உருவில் இல்லாமல், மனித வடிவிலேயே காட்சி தருகிறார் ராகு பகவான்.
பூமி நீள்வட்ட பாதையில் சூரியனைச் சுற்றுகிறது. அதேபோல் சந்திரன், பூமியைச் சுற்றுகிறது. இந்தப் பயணத்தில்... பூமியின் கதியை (அதாவது, சூரியனைச் சுற்றும் பூமியின் பாதையை), இரண்டு இடங்களில் சந்திரன் சந்திக்கிறது. அவ்வாறு சந்திரன் மேல்நோக்கிச் செல்லும்போது, பூமியின் கதியில் குறுக்கிடும் இடம்-ராகு என்றும், கீழ்நோக்கி வரும்போது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் கேது என்றும் அழைக்கப்படுகிறது. ராகுவும் கேதுவும் நிழல் கோள்கள்; இவை இரண்டுமே பூமிக்கு மேலும் கீழும் ஒரே நேர்க்கோட்டில்... அதற்கு 180 டிகிரி வித்தியாசத்தில் எதிரெதிரே அமைகின்றன.
நவகோள்களில், ராகு- கேது பலம் மிகுந்தவர்களாக உள்ளனர். ராகுவுக்கு எந்த வீடும் சொந்தமில்லை; எந்த ராசியும் சொந்தமில்லை. எந்தக் கோள்களால் பார்க்கப்படுகிறாரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளாரோ அதற்குத் தக்கபடி பலன்களைத் தருவார். ஒருவரின் ஜாதகத்தில்
ராகு பகவான் நல்ல இடத்தில் இருந்து விட்டால் நல்ல மனைவி, நல்ல வேலைக்காரர்கள், ஆட்சி மற்றும் செல்வாக்கு ஆகியன சிறப்புற அமையும். பிறமொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகத் திகழலாம். மருந்து, ரசாயனம், நூதனத் தொழில் மற்றும் நுட்பமான கருவிகள் ஆகியவற்றுக்கும், அவ்வப்போது மாறிவரும் நவநாகரீகத்துக்கும் ராகுவுடன் இணைந்த சுக்கிரன் காரணமாகிறார்.
திருமணத்தில் தாமதம், தம்பதிக்கு இடையே சச்சரவு, பிள்ளை பாக்கியம் இல்லாத துயரம், களத்திர தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் ஆகியவற்றால் பாதிப்புக்கு ஆளானோர் இங்கு வந்து வேண்டினால், நிச்சயம் பலன் பெறலாம். இதே போல், வாழ்வில் மேன்மை, வியாபார விருத்தி, எதிரிகளை வெல்லுதல், அயல்நாட்டுப் பயணம் ஆகிய பிரார்த்தனைகளுடன் வரும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்குகிறார் ராகு பகவான்!
தலம், மூர்த்தம் மட்டுமின்றி... சூரிய புஷ்கரணி, கௌதம தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம் முதலான இங்குள்ள 12 தீர்த்தங்களும் விசேஷமானவை!
திருநாகேஸ்வரம் கோயிலின் தல விருட்சம்- செண்பக மரம். சிலருக்கு, பிரசவத்துக்குப் பிறகு தாய்ப் பால் சுரக்காத நிலை உருவாகும். அல்லது, போதிய அளவு பால் சுரக்காது. அவர் களுக்கு அருமருந்தாக உதவுகிறது செண்பகம்.
செண்பகப் பூக்கள் நறுமணம் கொண்டவை; தலை மற்றும் கண் சம்பந்தமான நோய்கள், மூக்கடைப்பு ஆகியவற்றுக்கு செண் பக மலர்களைப் பயன்படுத்துவர். கீல் வாதம், பித்தக் காய்ச்சல், சொறி, சிரங்கு, தொழு நோய், கண் அழலை மற்றும் பால்வினை நோய் களை குணமாக்கும் சக்தி செண்பக மலர்களுக்கு உண்டு. இதன் இலைகள், உடல் சூட்டைத் தணிக்கும்; பசியைத் தூண்டும். வயிற்று வலிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாத வெடிப்பு, அஜீரணம், சிறுநீர் பிரிவதில் சிக்கல் ஆகிய பிரச்னைகளுக்கு அருமருந் தாகத் திகழ்கிறது!
தஞ்சாவூர் அருகேயுள்ள குரு தலமான திட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயில், சுவாமி மலை அருகில் உள்ள திருஇன்னம்பர்- ஸ்ரீஎழுத்தறிநாதர் ஆலயம், கும்பகோணத் துக்குத் தென்கிழக்கில் சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சிவபுரம்- ஸ்ரீசிவபுரநாதர் கோயில், நன்னிலம் ஸ்ரீமதுரவனேஸ்வரர் ஆலயம் திருச்சேறை- ஸ்ரீசாரங்கநாதர் கோயில் மற்றும் திருநந்திபுர விண்ணகரம்- ஸ்ரீஜகந்நாத பெருமாள் ஆலயம் ஆகிய தலங்களிலும் செண்பக மரமே ஸ்தல விருட்சம்!
சங்க இலக்கியங்களில், 'செண்பகம்' என எங்கும் குறிப்பேதும் இல்லை. மாறாக, கபிலர் தனது குறிஞ்சிப் பாட்டில் 'செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்' எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும், கலித்தொகையில் நல்லாந்துவ னாரும், 'பெருந்தண் சண்பகம்' எனக் கூறியுள்ளனர்.
'இந்தப் பூவானது மலர்ந்தவுடன், போர்ச் சேவலின் காலில் உள்ள (முள்) நகங்களைப் போல இருக்கும்' என வர்ணித்துள்ளார் திருத்தக்கதேவர். இன்னொரு விஷயம்... 'மகளிர் நிழல் பட்டால் மலரும் பூ' எனப் பெண்டிரையும், செண்பக மலரையும் போற்றிப் பாடியுள்ளனர் புலவர்பெருமக்கள்!
| ||||
No comments:
Post a Comment