மூன்று மாவட்டங்களில் வாழும் அன்பர்களும், அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கிற அன்பர்களும் சதாசர்வ காலமும் நினைப்பதும் வேண்டுவதும், உவரி சிவனாரைத்தான்!
திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த... உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவனார்.
கடலில் குளித்துவிட்டு, அருகில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி (கிணற்றிலும் நீராடுகின்றனர்), தனிக்கோயிலில் எழுந்தருளும் ஸ்ரீகன்னி விநாயகரை வணங்கி, ஸ்ரீசுயம்பு லிங்க ஸ்வாமியை வேண்டினால், சகல பிரச்னைகளும் பறந்தோடும்; சந்தோஷமும் நிம்மதியும் பொங்க வாழலாம் என்கிறார் கோயிலின் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன்.
கோயிலுக்குப் பின்னே, ஸ்ரீபூரணை - புஷ்கலையுடன் உள்ள ஸ்ரீவன்னியடி சாஸ்தா காட்சி தருகிறார். இவருக்கு, பொங்கல் படையலிட்டுப் பிரார்த்திக்கின்றனர், பக்தர்கள்.
இங்கே, அம்பாளுக்குச் சந்நிதி இல்லை. ஆனால், அவளின் இன்னொரு வடிவமாக வணங்கப்படும் கிராம தேவதையான ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் சந்நிதி கொண்டிருக் கிறாள். இவளுக்கு, மஞ்சள் அல்லது குங்கும அபிஷேகம் செய்து வழிபட்டால், வீடு- வாசலுடன் இல்லறத்தைச் சிறக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.
''உடன்குடிதான் சொந்த ஊர். எங்களுக்கு இஷ்ட தெய்வம், காவல் தெய்வம் எல்லாமே சுயம்பு சாமிதான். சக்தி வாய்ந்தவர் இவர். சென்னைக்குப் போய் பல வருஷமாகிட்டாலும், எப்பத் தோணுதோ அப்பல்லாம் இங்கே ஓடோடி வந்துடுவேன்'' எனச் சிலாகிக்கிறார் சென்னை அன்பர் ஜி.டி.முருகேசன்.
அதேபோல், வீட்டில் எவரேனும் பிரச்னையில் சிக்கியுள்ளார் அல்லது தீராத நோயால் அவதிப்படுகிறார் என்றால், உடனே அவரை இங்கு அழைத்து வந்து, சுயம்புலிங்கமூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து, 'உன் புள்ளையை நீதாம்பா காக்கணும்’ என்று வேண்டுகின்றனர். நோய் தீர்ந்ததும், தங்களால் இயன்ற தொகையை 'பிடிபணம்’ செலுத்தி, நேர்த்திக் கடனை அடைக்கின்றனர். இந்தப் 'பிடிபணம்’ நேர்த்திக் கடன் சம்பிரதாயம் வந்ததற்கு ஒரு சுவையான வரலாறு உண்டு.
குமரி மாவட்டத்தில் உள்ள ஆயர் குலத்தோர், அந்தக் காலத்தில் நடந்தே வந்து தரிசிப்பார்கள். அப்போது வழியில், ஒரு தென்னந்தோப்பில் தங்கி இளைப் பாறுவார்கள்.
ஒருமுறை, அந்தத் தோப்பின் உரிமை யாளர் கடும் நோயால் அவதிப்பட்டார். இளைப்பாறியவர்கள், 'எங்க சுயம்புலிங்க சாமி, உன்னைக் கைவிட மாட்டாரு’ எனச் சொல்லிவிட்டு, உவரிக்கு வந்து தரிசனம் முடித்து, விபூதி பிரசாதத்துடன் தோப்புக்குச் செல்ல, பூரணமாகக் குணமாகி இருந்தாராம் அவர்.
சுயம்புலிங்க ஸ்வாமியின் அருட் கடாட்சத்தை எண்ணி நெகிழ்ந்தவர், உவரி தலத்துக்கு வந்து, நாணயம் காணிக்கை (திருவிதாங்கூர் நாணயம்) தந்து, வணங் கினாராம். அன்று முதல், 'பிடிபணம்’ எனும் நேர்த்திக்கடன் நடைமுறைக்கு வந்ததாகச் சொல்வர்.
அழகிய கடல், அதன் கரையையட்டி தேரோட்டம் நடைபெறுவதற்காகப் போடப்பட்டுள்ள தார்ச்சாலை, அருகில் தீர்த்தக் குளம், கோயிலைச் சுற்றிலும் மணல் பரப்புகளும் அழகிய மரங்களும்... என ரம்மியமாகக் காட்சி தரும் உவரியை சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போது, அழகிய கோபுரம் அமைக்கும் திருப்பணியிலும் ஈடுபட்டுள்ளது, கோயில் நிர்வாகம்.
சுயம்பு மூர்த்தமாக, கடம்ப வேரின் அடியில் இருந்து வெளிப்படும்போது, சந்தனம் பூசப்பட்டது அல்லவா! எனவே, இன்றைக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கு (கோயிலுக்குள் சட்டை அணியக்கூடாது), கட்டையில் அரைக்கப்பட்ட சந்தனப் பிரசாதம் தரப்படுகிறது. இந்தச் சந்தனத்தை உடலில் பூசிக்கொள்ள, சகல நோய்களும் தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமியைத் தரிசித்து, சந்தனத்தை உடலில் மணக்க மணக்கப் பூசிக் கொண்டு, கடல் காற்றை அனுபவிக்கும்போது, கவலையாவது துக்கமாவது... எல்லாம் காற்றோடு காற்றாகக் கலந்துவிடும் என்பது உறுதி!
உவரிக்கு வாருங்கள்; உவகையால் உள்ளம் குளிர்வீர்கள்!
No comments:
Post a Comment