Wednesday 20 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 24

வீரபத்திரரது கோபத்தைத் தணித்து, சாந்தப்படுத்தும் விதம், அவருக்கு வெண்ணெய்க் காப்பு அணிவிக்கின்றனர். வெண்ணெயை அவர் உடலெங்கும் அப்பி, அதன் மீது வண்ணப் பொடிகளைத் தூவி அழகு செய்வர். வெண்ணெய்க் காப்பு அணிவிப்பதால், வீரபத்திரர் நமது துன்பங்களைக் களைவார் என்பது நம்பிக்கை.
முற்காலத்தில், போர்க்களம் செல்லும் வீரர்கள் பூமாலை அணிந்து செல்வது மரபு. வீரபத்திரருக்கு பிரியமானது, தும்பைப்பூ மாலை. 'எவர் வந்தாலும் அஞ்சாமல் போர் புரிவதன் அடையாளம்- தும்பை மாலை!' என இலக்கண நூல் ஒன்று குறிப்பிடுகிறது.
வீரபத்திரர்-பத்ரகாளி இருவருக்கும் தும்பைப்பூ மாலைகளை அணிவித்து வழிபட்டால் சத்ரு பயம் அகன்று நிம்மதியான வாழ்வு கிட்டும் என்பது நம்பிக்கை. 'வீரபத்திரரை பிரதிஷ்டை செய்து வழிபடுவதால் தீமைகள் அகலும்; மக்கள் துன்பம் நீங்கி, மகிழ்வுடன் வாழ்வர்!' என்கின்றன ஆகமங்கள்.
வீரபத்திர விரதம் என்பது, செவ்வாய்க் கிழமை அன்று கடைப்பிடிக்கப்படுவது. இந்த நாளில், சிவப்பு நிறப் பூக்கள் மற்றும் செஞ்சந்தனத்தால் வீரபத்திரரை பூஜிப்பது விசேஷம். ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமி நாளில், 'மகா அஷ்டமி விரதம்' இருப்பர். இது, வீரபத்திர மூர்த்தி யையும் பத்ரகாளியையும் குறித்து இருக்கும் நோன்பு.
இந்த நாளில் தும்பை, நந்தியாவர்த்தம் முதலிய வெண்மை நிற மலர்கள் மற்றும் வெண்பட்டு ஆகியவற்றால் வீரபத்திரரை அலங்கரித்து வழிபடுவர். இவருக்குரிய சிறப்பு அலங்காரங்களில், வெற்றிலைப்படல் (வெற்றிலையை ஆடை போல நெருக்கமாக அடுக்கித் தொடுத்து) சாத்துவதும் ஒன்று. இதற்கு உகந்த சிறப்பு தினம் திருஆடிப்பூரம்.
அஷ்ட வீரட்டத் தலங்களில், தட்சனை சம்ஹரித்த வீரபத்திரர் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருப்பறியலூர்.
திருக்கடவூர் மற்றும் செம்பொனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள திருத்தலம் இது. இந்த ஊருக்கு தட்சபுரம் என்றும் பெயர் உண்டு.
இங்கு, கருவறையில் வீரட்டேஸ்வரர் காட்சியளிக்கிறார். மகா மண்டபத்தில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது. அருகில், இந்தத் தலத்தின் அம்பிகையான இளம்கொம்பனையாள் சந்நிதி.
இங்குள்ள வீரபத்திரர்- தலையில் அக்னி முடி திகழ... தம் எட்டுத் திருக்கரங்களில் வாள், கதாயுதம், சூலம், மழு, கபாலம், கேடயம், மணி, உலக்கை ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறார். இவரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கிறான்.
இவருக்கு வருஷத்தில் 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. கோயில்- கர்ப்பக்கிரஹத்தின் தெற்குப் புறச் சுவரில், தட்சன் தனது பரிவாரங்களுடன் பூஜிக்கும் காட்சி, புடைப்புச் சிற்பமாகக் காணப்படுகிறது. இவ்வூர் இறைவனை வீரட்டானமுடையார் என்றும், தட்சேசுரமுடையார் என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
காரணாகமம் மற்றும் தத்வநிதி ஆகிய நூல்கள் வீரபத்திரரின் வடிவத்தை விவரிக்கின்றன. திருமுறைகளில் வீரபத்திர மூர்த்தியின் பராக்கிரமங்கள் போற்றப்படுகின்றன. ஆவுடையார்கோவிலில் உள்ள வீரபத்திரர் வடிவத்தைப் போற்றி கேசவபாரதி என்பவர் இயற்றியுள்ள 'வீரமாலை' என்ற நூல் மிகவும் சிறப்புடையது.
வீரபத்திரர் வடிவங்களில் அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஜலவீரபத்திரர், பவன வீரபத்திரர், ரணவீரபத்திரர், உக்ர வீரபத்திரர், உத்தண்ட வீரபத்திரர் என பல வடிவங்கள் உண்டு.
மதுரை, தென்காசி, திருநெல்வேலி, குடந்தை கும்பேசர் கோயில், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் தூண் சிற்பமாக உள்ள வீரபத்திரர் வடிவங்கள் அற்புதமானவை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள அக்னி வீரபத்திரர் மற்றும் அகோர வீரபத்திரர் வடிவங்கள் வெகு அழகு!
கர்நாடக மாநிலத்தில் உள்ள வீரபத்திரர் வடிவங்களில் கையில் வீணை ஏந்தி இருப்பதைக் காணலாம். வீரபத்திரர் ஆலயங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன.
சென்னை- மயிலாப்பூர், அனுமந்தபுரம், திருவண்ணாமலை, பெரும்பேறுகண்டிகை, திருக்கடவூர், செம்பிய மங்கலம், கும்பகோணம்- பெரிய மடம் (மகாமகக் குளம் அருகில்), கும்பகோணத்துக்கு அருகே தாராசுரம் ஆகிய தலங்களில் உள்ள வீரபத்திரர் ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவை.
ஒட்டக்கூத்தர், தாராசுரம் வீரபத்திரர் ஆலயத்தில் வீற்றிருந்தே தக்கயாகப் பரணி பாடினார் என்பர். இந்தக் கோயிலில் ஒட்டக்கூத்தரது சமாதியும் உள்ளது.
கும்பகோணம் மகாமகக் குளக்கரை அருகில், கங்கை வீரபத்திரர் ஆலயத்தின் முன் உள்ள திறந்தவெளியில் வைத்தே ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணியை அரங்கேற்றினார் என்றும் கூறுவர்.
ருத்ரமூர்த்தியின் அம்சமான வீரபத்திரரும், ஆஞ்சநேயரும் வீர மூர்த்திகளாவர். கன்னட புராணங்கள் சில, அனுமன், வீரபத்திரரிடம் உபதேசம் பெற்றதாகக் குறிப்பிடுகின்றன. செங்கல்பட்டு அருகில் உள்ள அனுமந்தபுரத்தில் ஆஞ்சநேயர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம் இரண்டும் உள்ளன.
திருவெண்காடு திருத்தலத்தில் உள்ள அகோரமூர்த்திக்கும் வீரபத்திரருக்கும் தொடர்பு எதுவும் இல்லை. இவரை 'அகோர சிவன்' என்பர். இவர் மருத்துவாசுரன் என்பவனின் வலியை தொலைக்கத் தோன்றியவர்.
இவர் திருமேனியில் 14 நாகங்கள் ஆபரணமாக விளங்குகின்றன. இவர், தம் வலக் கால் கட்டை விரல் மற்றும் 2-வது விரலை தரையில் ஊன்றி, திருப்பாதம் தூக்கிய நிலையில்... மூவிலை சூலம் ஏந்தி முக்கண், எண்தோள் ஈசராக காட்சியளிக்கிறார்.
இவரின் திருவடியில் மருத்துவாசுரன் சரணடைந்து கிடக்கிறான். இந்த அகோரமூர்த்தியை திருவெண்காடு திருத்தாண்டகத்தில் அப்பர் போற்றிப் பரவுகிறார். உத்தர காரணாகமம் இவரை 'அகோர ஸ்திரமூர்த்தி' என்று குறிப்பிடுகிறது.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment