Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 60



எல்லாம் வல்ல சித்தர் 
(தொடர்ச்சி)
சகம் புகழும் தென் மதுரா புரியில் தரை மதிக்க
அகம் தொறும் நீ செய்த ஆடல் கண்டே அழகார் வழுதி
இகழ்ந்து நின்நாமம் என்னென்ன, எல்லாம் வல்ல சித்தரெனப்
பகர்ந்(து) அருள்காட்டும் சொக்கே பரதேசி பயகரனே
திருவிளையாடற் பயகரமாலை 
வீரபத்திரக் கம்பர் இயற்றியது
பார் புகழும் மதுரையம்பதியில் நீர் செய்த திருவிளையாடல் கண்டு, உமது திருப்பெயர்கள் எவ்வளவோ இருப்பினும்... பாண்டிய மன்னன், 'எல்லாம் வல்ல சித்தர்' என்று உம்மைப் போற்ற... அருள் வழங்கும் சொக்கேசா! மெய்ஞான இன்பமே! அச்சம் ஒழிப்பவனே!
ல் யானை உயிர் பெற்று, கரும்பைப் பிடுங்கித் தின்றதைக் கண்டதும், அனைவரும் அதிர்ந்து போனார்கள். அந்த யானை மீது மீண்டும் தன் பார்வையைச் செலுத்தினார் சித்தர். உடனே யானை, மன்னனின் கழுத்தில் இருந்த முத்துமாலையை இழுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டது.
ஆத்திரம் அடைந்த மன்னன், தன் மெய்க்காவலரை ஏவினான். அவர்கள், சித்தரையும் யானையையும் அடிப்பதற்காக, கையில் வைத்திருந்த கோலை ஓங்கினர். அவர்களைப் பார்த்து சிரித்த சித்தர், ''அப்படியே நில்லுங்கள்'' என்றார். அவ்வளவுதான்... ஓங்கிய கை ஓங்கியபடியே இருக்க, அப்படியே நின்றனர் வீரர்கள்.
பெரும் தவறு செய்து விட்டோமே என்று கலங்கிய மன்னன், சித்தர்பெருமானின் திருவடியில் விழுந்து வணங்கி, மன்னிப்பு கேட்டான். புன்னகையுடன் அவனை ஆசீர்வதித்த சித்தர், ''என்ன வரம் வேண்டும் கேள்!'' என்றார்.
மகிழ்ந்த மன்னன், ''வெகு காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கிறேன். தாங்களே அருள வேண்டும்'' என்றான்.
'அப்படியே ஆகட்டும்' என அருள் புரிந்தார் சித்தர். பிறகு, கல் யானையைத் தொட்டார்; தனது துதிக்கையை நீட்டி, மன்னனிடம் முத்துமாலையைக் கொடுத்தது யானை. அதைப் பெற்றுக்கொண்டு மன்னன் திரும்பிப் பார்க்க... சித்தரைக் காணோம்! யானையைப் பார்த்தான்; அதுவும் கல்லாகிப் போனது! சித்தராக வந்தது சிவபெருமானே என்பதை உணர்ந்து சிலிர்த்தான் மன்னன்.
சித்தர் அருளியவாறே, மன்னனுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. விக்ரமன் என பெயரிட்டான் மன்னன். மன்னனுக்குப் பிறகு விக்கிரமன் மதுரையை ஆட்சி செய்தான்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், சிவனாரின் சந்நிதிக்கு வடமேற்கு மூலையில் 'எல்லாம் வல்ல சித்தரின்' சந்நிதி அமைந்துள்ளது. வலக் கரம் சின் முத்திரையுடனும், இடக்கரம் யோக தண்டத்தில் ஊன்றியபடி இருக்க... கொண்டை போல் சுருட்டி வைக்கப்பட்ட ஜடாமுடியுடன் வீராசனத்தில் அமர்ந்து, கிழக்கு நோக்கி அருள்புரிகிறார் எல்லாம் வல்ல சித்தர். இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மகா மண்டபத்தில் எல்லாம் வல்ல சித்தரின் பஞ்சலோக திருமேனியை தரிசிக்கலாம். இவரின் வலக் கரத்தில் மந்திரக் கோல் (கரும்புக் கழி என்றும் சொல்வர்) உள்ளது! தைப் பொங்கல் அன்று, கல் யானை கரும்பு தின்ற திருவிளையாடல், ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
திருவானைக்காவல் தலத்தில் சிவமுனி சித்தராக வந்து, திருப்பணிகள் பலவற்றை செய்ததாகச் சொல்கிறது தல புராணம். திருவானைக்கா ஸ்ரீஜம்புநாதேஸ்வரர் ஆலயத்தில் மதில் கட்டும் பணி நடந்தது. அப்போது முனிவர் வேடத்தில் வந்து, தொழிலாளர்களுக்கு சம்பளமாக விபூதியையே தந்தாராம் சிவனார். இந்த விபூதி, அவரவர் செய்த வேலைக்குத் தக்கபடி, பொன்னாக மாறியதாம்.
முனிவரைப் போல் வந்த சிவனார், அதிசயங்கள் சிலவற்றையும் நிகழ்த்தினார். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே... பிரமாண்ட மான அந்த மதிலை மறையச் செய்தாராம். பிறகு, மீண்டும் மதிலை தோன்றச் செய்து அதே இடத்தில் நிறுவினாராம். திருநீறையே கூலியாகக் கொடுத்துக் கட்டப்பட்டதால் இதனை, 'திருநீறிட்டான் மதில்' என்றும், 'விபூதி பிராகாரம்' என்றும் அழைக்கின்றனர். இந்த மதிலைச் சுற்றி வருவோர் வேண்டியது கிடைக்கப் பெறுவர்; அவர்களது துன்பங்கள் நீங்கும்; மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்தில் (பழைய பெயர் பட்டமங்கை), கார்த்திகை பெண்கள் ஆறு பேருக்கும் சித்தராக வந்து அருளியதுடன் அஷ்டமா ஸித்திகளையும் சிவனார் உபதேசித்தார் என திருவாசகத்தில் விளக்குகிறார் மாணிக்கவாசகர்.
'பட்டமங்கையில் பாங்காய் இருந்தாங்கு அட்டமா ஸித்திகள் அருளிய அதுவும்...' (கீர்த்தித் திருவகவல் 63)
'இத்தி தன்னின் கீழ் இரு மூவர்க்கு அத்திக்கருளிய அரசே போற்றி' (போற்றித் திருவகவல்-3) - ஆகிய பாடல் வரிகளின் மூலம் இதை உணரலாம்!
'சித்' என்றால், பரந்த நுண்ணறிவு என்று பொருள். 'ஸித்தி' என்பது சிவ நிலையான முக்தியின்பம். சிவ பெருமான், தானே சித்தனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்த பின், சிவலிங்கத்துள் கலந்த இடங்களே ஆதிநாளில் 'சித்தீச்சரங்கள்' எனப்பட்டன. சித்தர் மரபை உண்டாக்கியதாலும், சித்தர்களால் வழிபடப் பெறுவதாலும், சித்தீச்வரன் என அழைப்பர். திருநறையூர்(சித்தீச்சரம்) தல இறைவன் திருநாமம்- சித்தநாதேஸ்வரர்.
கயிலாயத்திலிருந்து வந்த சிவமுனி, மாடு மேய்க்கும் இடையனின் உடலில் புகுந்து திருமூலராக வந்த தலம் சாத்தனூர். இங்கே இறைவன் ஸ்ரீசித்தேஸ்வரர் எனப் படுகிறார். மேலும் திருவாரூர்- கமலை சித்தீச்சரம், திருப்புகலூர்- சித்தீச்சரம், திருவாவடுதுறை- நவகோடி சித்தீச்சரம், காஞ்சிபுரம்- மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ள சித்தீச்சரம், கச்சபேச்வரர் கோயில்- இஷ்ட சித்தீச்சரம், வேதசித்தீச்சரம், ஞானசித்தீச்சரம், யோக சித்தீச்சரம் ஆகிய ஆலயங்கள்... சித்தராக வந்து அருள்பாலித்த சிவனாரின் திருத்தலங்களே!
-(தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment