Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 57



ஸ்ரீபைரவர் 
(தொடர்ச்சி)
அரவா பரணன் நிருவாணி
ஆலுந்தலை மாலையும் அணிந்து
நிரமே குருதி நேர் நிறத்தோன்
நின்றே பைரவ ஊர்தியுடன்
கர மேல் டமருக பாசம் ஒளி
காலும் சூலம் கபாலமுமாய்
சிரமேல் ரக்த நிற வேணி
சீர்குறை மதியுள பைரவமே
சிற்ப ரகசியம்
பொருள் பாம்பை ஆபரணமாக அணிந்தவர்; நிர்வாணர், ஆலகால விஷம் உண்டவர்; தலையில் கொன்றை மாலை அணிந்தவர்; செந்நிற மேனியர்; நாய் வாகனத்தை உடையவர்; கரங்களில்- டமருகம், பாசம், சூலம் மற்றும் கபாலம் திகழ, செஞ்சடையில் சந்திரனை தரித்து, நின்ற திருக்கோலத்தில் திகழும் திருவடிவம் பைரவர்.
ரவரை துதிக்கும் 'கால பைரவாஷ்டகம்' சிறப்பானது! காசி காலபைரவர் சந்நிதியில் வழங்கப்படும் மந்திரிக்கப்பட்ட காப்புக் கயிறு (காசிக் கயிறு) மகத்துவமானது. பைரவரை தரிசித்து, இந்தக் கயிறை கையில் கட்டிக் கொண்டால் தடைகள், பயம் மற்றும் வேதனைகள் நீங்கும் என்கின்றனர்.
காசியில் அஷ்ட பைரவருக்கும் முறையே எட்டு இடங்களில் சந்நிதிகள் உள்ளன. இந்த சந்நிதிகளுக்குச் சென்று தரிசிப்பதை, 'அஷ்ட பைரவ யாத்திரை' என்பர்.
குற்றாலம்- சித்திர சபையில், அஷ்ட பைரவ ஓவியங்களை தரிசிக்கலாம். சீர்காழி தோணியப்பர் கோயில் தெற்கு வெளிப் பிராகார வலம்புரி மண்டபத்தில், அஷ்ட பைரவர்கள் தரிசனம் தருகிறார்கள். காரைக்குடி அருகிலுள்ள திருப்பத்தூர், வயிரவன்பட்டி, அழகாபுரி, பெருஞ்சிக்கோயில், திருமெய்ஞானபுரத்தை அடுத்த வைரவன்பட்டி, காரையூர், நெடுமரம் மற்றும் இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவ தலங்களாகப் போற்றப் படுகின்றன. தென்னகத்தில் பல ஊர்களில் பைரவருக்கு தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. திருவொற்றியூர்- தியாகராஜ ஸ்வாமி ஆலயத்தில், கருவறையுடன் பைரவர் சிற்றாலயமும், அருகில் பைரவ தீர்த்தமும் உள்ளன. காஞ்சிபுரத்தின் தென்மேற்கில், 'அழிபடை தாங்கி' என்ற இடத்திலும் பைரவருக்கு தனிக்கோயில் ஒன்று உள்ளது. திருக்கழுக்குன்றத்துக்கு அருகில், செம்பாக்கம்
மலை மீது பைரவர் ஆலயம் உள்ளது.
ஆந்திர மாநிலம்- நாகலாபுரத்துக்கு அருகில் உள்ள தலம் ராமகிரி. இது, 'காரிக்கரை' என்ற பெயரில் தேவார வைப்புத் தலமாகத் திகழ்கிறது. இங்கே, வாலீஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் பைரவர் ஆலயம் ஒன்று உள்ளது. பழநி- சாது சுவாமிகள் திருமடத்தில், சுமார் 8 அடி உயரத்துடன் 10 திருக்கரங்களுடன் திகழும் விஜய பைரவரை தரிசிக்கலாம். தென்னகத்தில் இவரே மிகப் பெரிய பைரவ மூர்த்தி என்பர். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், காசியிலிருந்து கொண்டு வந்த பைரவ சக்கரத்தை இங்குள்ள பீடத்தில் வைத்து, அதன்மீது பைரவரை பிரதிஷ்டை செய்தாராம் சாது சுவாமிகள்.
பைரவர், வடுகர், க்ஷேத்திரபாலர் ஆகிய அனைத்தும் சிவபெருமானின் பைரவ வடிவங் களாகும். முற்காலத்தில் பைரவ சமயத்தினர் என்ற பிரிவினர் தென்னிந்தியாவில் பரவியிருந்தனர். சிறுத் தொண்டர், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாரர் ஆகிய நாயன்மார்கள் பைரவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். சிவனாரும், இவர்களுக்கு பைரவர் கோலத்திலேயே அருள்புரிந்தாராம்.
சீர்காழி கோயிலில், தோணியப்பர் சந்நிதிக்கு மேலே... தெற்கு கோஷ்ட விமான தேவராக இருப்பவர், வடுகநாதர் எனும் சட்டநாதர் ஆவார் (குழந்தைப் பருவத்தைக் கடந்து, அதே நேரம் வாலிபப் பருவம் அடையாத
நிலையில் இருப்பவரை, 'வடு' என்பர்). சீர்காழி சட்டைநாதருக்கு, வெள்ளிக் கிழமைகளில்- நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வர். அத்தி மரத்தால் அமைந்த சிலை.
எனவே இந்த மூர்த்திக்கு புனுகு எண்ணெய் மட்டுமே பூசப்படுகிறது. இவருக்கு, முழுத் தேங்காயை நிவேதனம் செய்கின்றனர்; விசேஷ நாட்களில், வடை மாலை அணிவிக்கின்றனர். இங்கே சட்டநாதர் உற்ஸவ மூர்த்தியும் உண்டு. இங்குள்ள அஷ்ட பைரவ மண்டபத்தில் ஊஞ்சலும், அதில் பெரிய கண்ணாடியும் இருக்கும். விமானத்தில் உள்ள சட்டநாதரின் வடிவம்
இதில் பிரதிபலிக்கும். விமானத்தில் உள்ளவர் ஆகாச பைரவர்.
மயிலாடுதுறை- கும்பகோணம் பாதையில் உள்ளது க்ஷேத்ர பாலபுரம். இங்கே தெற்கு நோக்கிய ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார் பைரவர். அருகில் உள்ள திருக்குளம் 'வடுக தீர்த்தம்' ஆகும். இங்கு, கார்த்திகை மாதம் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
திருப்பத்தூர் தளிநாதர் ஆலய பைரவர் (வயிரவர்) பெயரில், 'வைரவன் கோயில்' என்றே இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. இங்கே 2-வது பிராகாரத்தில், மேற்கு நோக்கிய தனி சிற்றாலயத்தில் யோகபைரவர் தரிசனம் தருகிறார். குழந்தை வடிவத்தில்... வலக் கரத்தில்- பழம்; இடக் கரம் தொடையின் மீது பதிந்திருக்க, கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார் இவர்.
இவர் சந்நிதியில், அர்த்தசாமத் தில் விசேஷ வழிபாடு நடை பெறும். மகா பைரவர் தனிச் சிறப்புடன் அருள் பாலிக்கும் திருத்தலம் வயிரவன்பட்டி. இந்தத் தலம்- பைரவரின் இதய ஸ்தானமாகவும் இலுப்பைக்குடி- பாத ஸ்தானமாகவும் கருதப்படுகின்றன.
பிரான்மலை (கொடுங்குன்றம்), வீணாகான பைரவர் அருள் புரியும் சிதம்பரம்- தில்லையம்மன் கோயில், புதுச்சேரி- திருவாண்டார் கோயில் (வடுகூர்), நாகப்பட்டினம், அம்பர் மற்றும் அம்பர்மகாளம் கோயில் ஆகியன பைரவருக்கான விசேஷ தலங்களாகும்.
சில தலங்களில் ஆறு அல்லது எட்டு கரங்களுடன் அபூர்வ தரிசனம் தருகிறார் பைரவர்.
காஞ்சிபுரம்- வேலூர் வழியில் உள்ள காவேரிப்பாக்கம் சிவாலயத்தில் அஷ்ட புஜ பைரவரை தரிசிக்கலாம். ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கும் பஞ்சவக்த்ர பைரவரை திருச்சி- தாத்தையங்கார்பேட்டை காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் காணலாம். 10 திருக்கரங்களுடன் திகழும் இந்த மூர்த்தி கபால மாலை அணிந்தவராக, யாளி வாகனத்தில் காட்சியளிக்கிறார்.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment