Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 61


அச்வாரூட மூர்த்தி (குதிரைச் சேவகன்)
இந்திரனும் மால் அயனும் ஏனோரும் வானோரும்அந்தரமே நிற்கச் சிவன் அவனி வந்தருளிஎந்தரமும் ஆட்கொண்டு தோள் கொண்ட நீற்றன் ஆயச்சிந்தனையை வந்து உருக்கும் சீர்ஆர் பெருந்துறையான்பந்தம் பறிய பரிமேல் கொண்டான் தந்தஅந்தம் இலா ஆனந்தம் பாடுதுங்காண் அம்மானாய்
- திருவாசகம் 177
பொருள் இந்திரன், திருமால், நான்முகன் மற்றும் ஏனைய தேவர்களும் விண்ணில் நின்றிட, சிவபெருமான் மண்ணுலகம் புகுந்து, எம் நிலை கொண்டாரையும் ஆட்கொண்டார். திருத்தோளில் பூசப்பெற்ற திருவெண்ணீற்றை உடையவரும், எம்மிடம் வந்து மனத்தை உருக்குகின்ற சிறப்பு கொண்டவருமான திருப்பெருந்துறை மேவும் இறைவன், எமது பற்று அற குதிரை மேல் ஏறி வந்து அருள் செய்திட்ட இன்பத்தை அம்மானைப் பாடலாகப் பாடுவாயாக!
துரைக்கு வடகிழக்கில் உள்ளது திருவாதவூர். வாயு பூசித்த இந்தத் தலத்தில், வாதபுரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இந்த ஊரில் அமாத்ய அந்தணர் குலத்தில், சம்புபாதசிருதர்- சிவஞானாவதி அம்மை தம்பதியின் மகனாக அவதரித்தவர் மாணிக்கவாசகர். இயற்பெயரை அறிய இயலாத நிலையில், இவரை வாதவூரர் என்றே அழைத்தனர்!
இளமையில் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த வாதவூரரின் அறிவாற்றலை அறிந்து வியந்த அரிமர்த்தன பாண்டியன், இவரை தனது முதலமைச்சராக நியமித்ததுடன், 'தென்னவன் பிரமராயன்' என்ற பட்டமும் தந்து மகிழ்ந்தான். இறை சிந்தனை மிகுந்த வாதவூரர், அமைச்சர் பணியையும் செவ்வனே செய்து வந்தார்.
ஒருமுறை, குதிரைப் படையை விரிவுபடுத்த எண்ணிய மன்னன், வாதவூரரை அழைத்தான். ''கருவூலத்தில் பொருள் பெற்று, நல்ல குதிரைகளாக வாங்கி வாருங்கள்'' என்று பணித்தான். அதன்படி குதிரைகளை வாங்கிவர பயணித்தார் வாதவூரர்.
வேத ஆகம சாரமான திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகியவற்றை திருவாதவூரர் மூலம் தோற்றுவிக்க விரும்பிய சிவனார், தமது கணங்களுடன் மானுட வடிவம் தாங்கி, திருப்பெருந்துறையை அடைந்தார். அங்கே ஒரு சோலையில், குருந்த மரத்தடியில் சீடர்களுடன் அமர்ந்தார். குதிரைகள் வாங்க சோழ தேசம் வந்த திருவாதவூரரும் திருப்பெருந்துறையை அடைந்தார். ஊரின் எல்லையைத் தொட்டதுமே மனதில் பாரம் அகன்றதாக உணர்ந்தார் வாதவூரர். 'படை பெருக, போர்களும் பெருகும். இதனால் பலரும் உயிர் துறப்பர். ஒருவரது வெற்றிக்காக எண்ணற்ற உயிர்கள் பலியாவதா? வேண்டாம்! உலகில் அறமும் அன்பும் செழிக்க வேண்டும்' என்று எண்ணினார் வாதவூரர். திருக்குளத்தில் நீராடி, திருநீறு அணிந்து, பூஞ்சோலையை அடைந்தார்.
அங்கே... குருந்த மரத்தடியில், ஞான குருநாதனாக வீற்றிருக்கும் பரம்பொருளைக் கண்டு, உள்ளம் சிலிர்க்க வணங்கி நின்றார். அவரின் செவியில், ஐந்தெழுத்து மந்திரத்தைத் தந்ததுடன், முக்திப் பேறும் அருளினார் சிவபெருமான். அக இருள் அகன்று உள்ளளி பெருகியது வாதவூரருக்கு. அமைச்சர் பணியை உதறினார்; துறவிக் கோலம் பூண்டார். இவருக்கு தீட்சா நாமமாக, 'மாணிக்க வாசகர்' எனும் திருநாமத்தைச் சூட்டினார் இறைவன். ''நான் உமது அடிமை. கையில் உள்ள செல்வத்தைக் கொண்டு, உமக்கு இங்கேயே கோயில் எழுப்புகிறேன்'' என்ற வாதவூரர், தனது உடைமைகள் மற்றும் ஆபரணங்களுடன், குதிரைகள் வாங்க வைத்திருந்த பணத்தையும் குருநாதராகத் திகழும் சிவ பரம்பொருளின் திருவடியில் சமர்ப்பித்தார்.
உடன் வந்த வீரர்கள், 'எதற்காக வந்தோம்' என்பது குறித்து பலமுறை நினைவூட்டியும், எடுத்துக் கூறியும்... அவர்களது பேச்சை மாணிக்கவாசகர் செவிமடுக்கவில்லை. சிவானுபவத்திலேயே லயித்து இன்புற்றிருந்தார்.
செய்வதறியாது திகைத்த வீரர்கள் தலைநகருக்குத் திரும்பி, நடந்ததை மன்னனிடம் விவரித்தனர். மன்னன் கடுங்கோபம் கொண்டான். 'குதிரைப் படைகளுடன் உடனே வர வேண்டும்' என்று ஓலை அனுப்பினான்.
இதுகுறித்து இறைவனிடம் முறையிட்டார் மாணிக்க வாசகர். ''பயப்படாதே! ஆவணி மூல நாளில், குதிரைகள் மதுரைக்கு வந்து சேரும்'' என்று அருளினார் ஈசன். அத்துடன், ''மன்னனுக்கு நம்பிக்கை ஏற்பட, இந்த மாணிக்கக் கல்லை அவனுக்குப் பரிசாகக் கொடு'' என்று வழங்கினார். அதன்படியே செய்தார் மாணிக்கவாசகர். அரசனும் மகிழ்ந்து போனான்.
ஆவணி- மூல நாளுக்கு இரண்டு தினங்களே இருந்தன. அமைச்சர்கள் பலரும் ஒன்று சேர்ந்து, ''வாதவூரர் பொய் சொல்லியிருக்கிறார். குதிரைகள் வராது...'' என்று மன்னனிடம் தெரிவித்தனர். இதை ஒற்றர் மூலம் உறுதிப்படுத்திய மன்னன் கோபம் கொண்டான். மாணிக்கவாசகரை தண்டிக்க ஆணையிட்டான்.
உக்கிரமான வெயிலில், வைகையாற்று மணலில் வாதவூரரை நிறுத்தி, அவர் கைகளில் சுடு செங்கல்லை கொடுத்தனர். சிறையில் தள்ளி கொடுமைப்படுத்தினர். அத்தனை இன்னல்களையும் தாங்கிக் கொண்ட வாதவூரர், 'ஆவணி மூல நாளில், குதிரைகள் வராதா? நீ பொய் உரைத்தாயா?' என்று சிவனாரை எண்ணி கண்ணீர் விட்டார். அப்போது, 'சொன்னபடி குதிரைகள் வரும்' என அசரீரி கேட்டது.
இதையடுத்து காட்டில் திரியும் நரிகளை, பரிகள் (குதிரைகள்) ஆகவும், தன் பரிவாரங்களை குதிரைச் சேவகர்களாகவும் ஆக்கி, தானே தலைமை சேவகன் உருவில் மதுரைக்குப் புறப்பட்டார்
சிவனார். பெரும் குதிரைப் படை ஒன்று மதுரை நோக்கி வருவதாக தகவல் வர, தவறுக்கு வருந்தி, வாதவூரரை விடுவித்தான் மன்னன்.
மதுரையை வந்தடைந்த குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான் மன்னன். குதிரைகளை நடத்திக் காட்டும்படி குதிரைச் சேவகனான இறைவனிடம் கேட்டுக் கொண்டான். அதன்படி, குதிரைகளை ஐந்து நிலைகளில் (பஞ்ச கதி) நடத்திக் காட்டினார் ஈசன். இதனால் மகிழ்ந்த மன்னன், பட்டாடையை பரிசளித்தான்.
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment