Thursday 21 September 2017

இறைவனிடம் கேட்கக்கூடாத கேள்வி


விரதங்களை அவற்றின் மேன்மை உணர்ந்து நமது கடமையாகத் கருதித் தான் அனுஷ்டிக்கவேண்டுமே தவிர, அவற்றின் மகத்துவத்தை பரிசோதிப்பதற்காக அனுஷ்டிக்க கூடாது. அப்படி ஒரு எண்ணமும் நமக்கு வரக்கூடாது. அப்படி செய்தால் விரதம் அர்த்தமற்றதாகிவிடும்!”.

காசியில் உணவின்றி தவித்த வேத வியாசர் !

வேதங்களையும் உபநிடதங்களையும் பல சாகைகளாகப் பிரித்து அவைகளை கோர்வைப்படுத்தியவர் வேத வியாசர். வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் வேத வியாசர் என்று அவர் அழைக்கப்படுகிறார். பதினெண் புராணங்களை இயற்றியவரும் இவர் தான். மகா பாரதத்தை எழுதியதும் இவர் தான்.

இவர் ஒரு முறை சீடர்களோடு ஒரு ஊருக்கு சென்று கொண்டிருக்கையில் யாத்திரை சென்று திரும்பிக்கொண்டிருந்த ஒரு சிறு கூட்டத்தை கண்டார். அக்கூட்டத்திலிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இருந்தார்கள்.

அவர்களிடம் சென்று *“அடியேன் பெயர் வேத வியாசன். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே…”* என்று ஆச்சரியத்தோடு வினவினார்.

அவர்கள் *“வேத வியாசரேசிவபெருமானின் தலைநகரம் என்கிற பெருமைக்குரிய காசி மாநகரத்திலிருந்து நாங்கள் வருகிறோம். அந்த நகரத்தின் மேன்மையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. காசியைக் குறித்துச் செல்லும் கால்களே கால்கள் ஆகும், காசியை பேசும் நாவே நாவாகும். காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகள் ஆகும், காசியை இனிது காணும் கண்களே கண்களாகும் என காசிக்கண்டம் கூறுகிறது. நல்ல உணவையே கண்டறியாத நாங்கள் காசியில் இருந்த நாட்கள் முழுதும் அறுசுவை உணவு உண்டோம். அப்படி ஒரு உணவை இனி எங்கள் பிறவியில் உண்போமா என்று தெரியாது. அங்கே எழுந்தருளியிருக்கும் காசி விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணியின் அருளால் எல்லாப் புண்ணியத் தலங்களுக்குள் காசியே மணிமுடி போல் தலைசிறந்து விளங்குகிறது.”* என்றனர்.

காசி குறித்து சாதாரண பாமரர்கள் கூட இவ்விதம் சிலாகித்து பேசுவது வேத வியாசருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தனது சீடர்களை அழைத்தவர், *“அனைவரும் உடனே காசி புறப்படுவோம். இவர்கள் சொல்வது உண்மையா என்று அங்கே சென்று பரீட்சித்து பார்த்துவிடுவோம்”* என்றார்.

அவரின் சீடர்களுக்கு *“காசி போகலாம்”* என்றவுடனேயே குதூகலம் ஏற்பட்டது. காரணம், கானகத்தில் பழங்களையும் கிழங்குகளையுமே புசித்துவந்தவர்களுக்கு காசியில் நாவுக்கு ருசியாக வயிறார சாப்பிடலாமே என்கிற எண்ணம் தான்.

இவர்கள் காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு பிக்ஷைக்கு புறப்பட்டார்கள்.

என்ன சோதனை இவர்களுக்கு ஒரு குண்டுமணி அன்னம் கூட பிச்சையாக கிடைக்கவில்லை. ஒரே குழுவாக செல்லாமல் ஒவ்வொருவரும் ஒரு தெரு என்று பிரிந்து சென்றார்கள். அப்போதும் பிக்ஷைக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. ஒரு நாள் இரண்டு நாளல்லபல நாட்கள் இந்நிலை நீடித்தது.

*“மகத்துவம் மிக்க காசி நகரிலே அதிதிகளுக்கு ஒரு பருக்கை கூட அன்னம் கிடைக்கவில்லையேஇதென்ன அநியாயம்?”* என்று சினந்த வியாசர் காசி நகரையும் அம்மக்களையும் சபிக்க நினைத்தார்.

கமண்டலத்தில் நீரை எடுத்து சபிக்க எத்தனித்தபோது, எதிரே இருந்த ஒரு மாளிகையின் கதவு திறந்தது.

அங்கிருந்த ஒரு பெண், வியாசர் கோபமாக இருப்பதை பார்த்து *“நிறுத்துங்கள் சுவாமி. காசி மக்கள் மீது ஏனிந்த கோபம்?”* என்று வினவினாள்.

வியாசர் நடந்ததை கூறி, *“நானும் என் சீடர்களும் கடந்த பல நாட்களாக பட்டினி..!”* என்றார்.

*“நீங்கள் கவலைப்படவேண்டாம். என் வீட்டிற்கு வாருங்கள்உங்களுக்கு அறுசுவை உணவு தயாராக உள்ளது!”* என்று கூறி வீட்டிற்கு அழைத்தாள்.

உள்ளே சென்ற வியாசருக்கும் அவரது சீடர்களுக்கும் தலை வாழை இலை போடப்பட்டது.

*“ம்….சாப்பிடுங்கள்!”* என்று அந்த பெண்மணி கூற, வெறும் இலையை பார்த்த வியாசருக்கு கோபம் பொத்துக்கொண்டு  வந்துவிட்டது. *“என்ன கிண்டல் செய்கிறீர்களா? எதை சாப்பிடுவது? வெறும் இலையையா ?”* என்று கூறி அந்த பெண்மணியை கோபத்தோடு எரித்து விடுவதை போல பார்த்தார்.

*“இதோ ஒரு நிமிடம்…”* என்று கூறி அந்த பெண்மணி உள்ளே செல்ல, இங்கே தற்செயலாக மீண்டும் இலையை பார்த்த அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அனைவர் இலைகளிலும் அவரவருக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் காணப்பட்டன. பணியாளர்கள் ஓடிவந்து பரிமாற வியாசரும் சீடர்களும் என்ன ஏதென்று கூட யோசிக்காமல் வயிறார உண்டனர். சாப்பிட்டு முடித்தவுடன், அந்த பெண்மணிக்கு நன்றி கூறுவதற்கு சென்றனர்.

ஆனால் அங்கே அந்தப் பெண்மணி இல்லை. இதென்ன அதிசயமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, அங்கே காசி விஸ்வநாதரும் அன்னை அன்னபூரணியும் பிரத்யட்சமானார்கள்.

*“வியாஸாநடந்தது கண்டு குழப்பம் அடையவேண்டாம். உங்களுக்கு காசியிலேயே உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கும் நிலை ஏன் ஏற்பட்டது தெரியுமா ? நீங்கள் அனைவரும் காசியின் மகிமையையும் மகத்துவத்தையும் உணர்ந்து பக்தியோடு இங்கு வரவில்லை. மாறாக காசியின் மகத்துவத்தை சோதித்து பார்க்கும் எண்ணத்தோடு தான் நீ இங்கே வந்தாய்இங்கு வந்தால் அறுசுவை உணவு கிடைக்கும் என்கிற எண்ணம் மேலிடத்தான் உன் சீடர்களும் வந்தார்கள். ஒருவேளை நீங்கள் பக்தியோடும் நல்லெண்ணத்தோடும் காசிக்கு வந்திருப்பீர்களேயானால் உங்களுக்கு காசி வேறு விதமான அனுபவத்தை தந்திருக்கும்!”* என்றார் பரமேஸ்வரன்.

வியாசரும் அவர் சீடர்களும் பரவசத்துடன் பணிந்து, *“உமா மகேஸ்வராஅறியாமல் நாங்கள் செய்த பிழையை பொருத்தருள வேண்டும்! ஷேத்ரங்களின் மகிமையை சந்தேகிப்பதே பெரும்பாவம் தான் என்பதை உணர்ந்துகொண்டோம்!”* என்றனர்.

*நித்யாநந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய ரத்னாகரீ*
*நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷமா ஹேச்வரீ*
*ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுரா தீச்வரீ*
*பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்ன பூர்ணேச்வரீ*

ஷேத்ரங்களின் மகிமையை மட்டுமல்ல, விரதங்களின் மகிமையைக் கூட ஒரு போதும் பரிசோதிக்ககூடாது. *“நான் இந்த விரதம் இருந்தேனே அதனால எனக்கு என்ன கிடைச்சதுஅந்த விரதம் இருந்தேனே அதனால எந்த பிரயோஜனமும் இல்லை…”* போன்ற வாதங்களை அடியோடு நமது எண்ணங்களிலிருந்து அகற்றவேண்டும்.

முக்கிய விரதங்களை அனுஷ்டிப்பது நமது கடமை. அதுவும் சிவராத்திரி விரதம் போன்ற ஒரு மகத்துவமான விரதத்தை அனுஷ்டிக்கிறோம், அது பற்றிய அறிவு நமக்கு இருக்கிறது என்பதே நாம் செய்த பாக்கியம் தான்.


சாக்கடைக்குள் விழுந்து கிடந்து தத்தளித்த குடிகாரனை  அந்த வழியே சென்ற ஒருவன் கருணை கொண்டு, மேலே ஏற்றி, காப்பாற்றி கங்கை நீரால் குளிப்பாட்டிவிட்டு போனானாம். அப்படி போனவனைப் பார்த்து… *“ஏனப்பா.. தூக்கிவிட்டா  போதுமா ? வீட்டுக்கு கூட்டிகிட்டு போய் விருந்து கொடுக்க வேண்டியது தானே ?”* என்று கேட்டால் அது எத்தனை நகைப்புக்குரியதோ அத்தனை நகைப்புக்குரியது *“சிவராத்திரி விரதம் அனுஷ்டித்த எனக்கு நீ என்ன தந்தாய்”* என இறைவனிடம் கேட்பது

No comments:

Post a Comment