Saturday 23 September 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்! - 59


எல்லாம் வல்ல சித்தர்
அருவ மெய்யினன் ஆலவாய் நாயகன்கருதி முன்னம்ஓர் காலம் கருணையின்மருவி யாவரும் கண்டு மகிழ்வுறப்பொருவில் சித்தர் உருவம் புனைந்தனன்
- திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம், பெரும்பற்றப் புலியூர் நம்பி
பொருள் உருவமற்ற உடலைக் கொண்ட சிவபெருமான், முன்பொருமுறை மதுரை பாண்டிய மன்னனுக்காக, தனது பெருங்கருணையால் அனைவரும் கண்டு விரும்பி மகிழும் வகையில், எல்லாம் வல்ல சித்தராக உருவம் கொண்டார்.
ல் யானை கரும்பு தின்னுமா? தின்றது! நான்மாடக் கூடல் எனப் போற்றப்படும் மதுரையம்பதியில்தான் இந்த அற்புதம் நிகழ்ந்தது!
சரி... இந்த அதிசயத்தை நிகழ்த்தியது யார்?
எல்லாம்வல்ல சித்தராக வந்த சிவபெருமானே இதற்குக் காரணம் என்கிறது திருவிளையாடற் புராணம். மதுரையில் ஈசன் நடத்திய 64 திருவிளையாடல்களையும் போற்றிப் பரவுகிறது இந்தப் புராணம். அந்த அருளாடல்களில், சிவனார் சித்தராக வந்த கதை சுவாரஸ்யமானது!
மதுரையை அபிஷேக பாண்டியன் ஆட்சி செய்த காலம். எல்லாம்வல்ல சித்தராக வேடம் ஏற்று இங்கு வந்து சேர்ந்தார் சோமசுந்தரக் கடவுள்!
நீண்ட சடையை அள்ளி முடித்து, நெற்றி நிறைய விபூதியும் அதன் நடுவில் திலகமும் தரித்து, காதில்- குண்டலங்கள்; கழுத்தில்- ஸ்படிக மாலை; மார்பில்- பூணூல்; வலத் தோளில்- விபூதிப் பை; இடப்புறத் தோளில்- யோகப் பட்டயம்; இடுப்பில்- புலித்தோலால் ஆன ஆடை; கால்களில்- அழகிய பாதுகை ஆகியன திகழ, கையில் பொன்னால் ஆன பிரம்பு ஏந்தி மதுரை வீதியில் கம்பீரமாக உலா வந்தார். அதுவும் எப்படி?
கடை வீதி, சித்திரச் சாலை, நாற்சந்தி, முச்சந்தி என அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் தோன்றினாராம்! சும்மாவா வலம் வந்தார்?
அருகில் உள்ள பொருளை வெகு தூரம் போகச் செய்தவர், தூரத்தில் உள்ள மலை போன்றவற்றை அருகில் வரச் செய்தார். குழந்தைகளை முதியவராக்கினார்; முதியோரை குழந்தைகளாக் கினார். ஆணை பெண்ணாகவும்; பெண்ணை ஆணாகவும் மாற்றினாராம்.
அது மட்டுமா? மலடிக்கு மகப்பேறு அருளியவர், ஊனமுற்றவர்களின் குறைகளைப் போக்கினார். சாதாரண உலோகங்களைப் பொன்னாக்கினார். ஏழைகளை செல்வந்தர்களாகவும் பணக்காரர்களை ஏழைகளாகவும் ஆக்கினார். இரவில் சூரியனையும், பகலில் சந்திரனையும் காட்டி வியக்க வைத்தார்!
- இப்படியாக பல அற்புதங்களை நிகழ்த்தினார் சிவபெருமான். இல்லையில்லை... சித்தர் பெருமான்!
சித்தரின் திருவிளையாடல்கள் மன்னனின் செவிகளுக்குச் சென்றது. அவரை அழைத்து வரும்படி காவலர்களைப் பணித்தான் பாண்டியன். அதன்படி சித்தரை அழைத்துச் செல்ல வந்த காவலர்கள், அங்கு அவர் நடத்திக் கொண்டிருந்த அற்புதங்களைக் கண்டு மெய் மறந்தனர்.
வெகு நேரம் ஆகியும் காவலர்கள் திரும்பாததால், அமைச்சர்கள் சிலரை அனுப்பினான் மன்னன்.
அவர்களும் சித்தர் இருக்கும் இடத்துக்கு வந்து வணங்கி, அரண்மனைக்கு வரும்படி வேண்டினர்.
''உங்கள் மன்னனால் எமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. ஆகவே, அரண்மனைக்கு வர இயலாது'' என்று மறுத்தார் சித்தர்.
மன்னனிடம் சென்று இந்த விஷயத்தை தயங்கியபடி தெரிவித்தார்கள் அமைச்சர்கள். அப்போதுதான் மன்னனுக்கு தனது தவறு உரைத்தது. 'சித்தர்களும் தவசீலர்களும் சிவனாரின் திருவருளை பூரணமாகப் பெற்றவர்கள். அப்படியிருக்க, அந்த சித்தரை நானே சென்று அழைப்பதுதான் முறை' என்று கருதியவன், பரிவாரங்களுடன் சித்தரை சந்திக்க விரைந்தான்.
சிவனார் இதை அறியாமல் இருப்பாரா? மன்னன் வருமுன், ஆலயத்தை அடைந்து அங்கு ஸ்ரீசோமசுந்தரரது கருவறையின் வடமேற்கு மூலையில் அமர்ந்து கொண்டார். அன்று தை மாதப் பிறப்பு; மகர சங்கராந்தி!
சித்தரை சந்திக்கப் புறப்பட்ட மன்னன், முன்னதாக இறைவனை தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்துடன் கோயிலுக்கு வந்தான். சோமசுந்தரரை வணங்கிய பின், அவன் கோயிலை வலம் வர... வழியில் அமர்ந்திருந்த சித்தரிடம் வந்த காவலர்கள், 'மன்னர் வருகிறார், வழிவிடுங்கள்' என்று அவரை நோக்கி கைப் பிரம்பை நீட்டினர். சித்தரோ அசையவே இல்லை!
அபிஷேக பாண்டியனுக்கு ஆச்சரியம்! சித்தரிடம், ''நீங்கள் யார்? எந்த தேசத்தைச் சேர்ந்தவர்? தங்களுக்கு என்ன வேண்டும்?'' என்று கேட்டான்.
புன்னகையுடன் அவனை ஏறிட்ட சித்தர், ''எமது நகரம் காசியம்பதி. ஆனால், யாம் எல்லா ஊரிலும் இருப்போம். எந்தப் பற்றுதலும் இல்லாத அடியார்களே எமது சுற்றத்தினர். சித்துகள் புரிவதில் வல்லவன் நான். ஆகவே எம்மை, 'எல்லாம் வல்ல சித்தர்' என்பார்கள். சிவத்தலங்கள் பலவற்றுக்குச் சென்று தரிசித்து வரும் வேளையில், மதுரையம்பதிக்கும் வந்துள்ளோம். எமக்கு உம்மால் ஆக வேண்டியது எதுவுமில்லை...'' என்றார் சற்றே கர்வம் தொனிக்க!
சித்தர் பேசப் பேச... மன்னனுக்குள் அவர் மேல் அன்பு பெருகியது. அதே நேரம்... மனதில் ஒருவித அச்சமும் எழுந்தது. எனவே, அவரைச் சோதிக்க எண்ணினான்.
அருகில் நின்றிருந்த கூட்டத்தினரிடையே வேளாளன் ஒருவனும் கையில் கரும்புடன் நின்றிருந்தான். அவனிடம் இருந்து கரும்பை வாங்கிய பாண்டிய மன்னன், சித்தரை நெருங்கினான். ''சித்தர் பெருமானே! அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்றதாகச் சொன்னீர்களே... இதோ, கற்சிலையாக இருக்கும் யானை, இந்தக் கரும்பை கடித்துச் சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால், எல்லாம் வல்ல சித்தராக உம்மை ஏற்கிறேன். அதுமட்டுமா? மதுரையை அரசாளும் சோமசுந்தரப் பெருமானே நீர்தான் என்றும் ஒப்புக் கொள்வேன். நீங்கள் கேட்பதை தயங்காமல் தருவேன்!'' என்றான்.
இதைக் கேட்டதும் பலமாகச் சிரித்தார் சித்தர். ''உம்மிடம் இருந்து யாம் பெறுவது எதுவும் இல்லை என்றுதான் சொன்னேனே... தவிர, எதை எதிர்பார்த்தும் செய்ய வேண்டிய நிலையில் நான் இல்லை. இருப்பினும் 'உயிரற்ற கல் யானையை, கரும்பைக் கடித்துத் தின்ன வை' என்கிறாய். இப்போது பார்'' - என்றபடி கல் யானையின் மீது தன் பார்வையைச் செலுத்தினார்.
அந்த யானை உயிர் பெற்றது. வாய் திறந்து பிளிறிய யானை, துதிக்கையை நீட்டி மன்னனிடம் இருந்த கரும்பைப் பிடுங்கி, சாறு வழிய கடித்துச் சுவைத்தது!
- (தரிசனம் தொடரும்)

No comments:

Post a Comment