Saturday 23 September 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 3



பிரணவ ஒலியின் எழுத்து வடிவம் 'ஓம்’. இதைச் சித்திரமாக வரைந்தால், யானை முகத்தைப் போன்று இருக்கும். எனவேதான், பிரணவப் பொருளான பிள்ளையாரும் யானை முகத்தோடு திகழ்கிறார்.
பிள்ளையாருக்கே சிறப்பானது துதிக்கை. மிருகங்களில் யானைக்கு மட்டுமே துதிக்கை உண்டு. மரங்களில் ஆலமரத்துக்கு மட்டுமே விழுதுகள் உண்டு. சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசித்த ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமர்ந்தருள் செய்வதும் ஆலமரத்தின் அடியில்தானே! அதனால்தான் அவரை 'ஆலமர் செல்வன்’ எனப் போற்றுகிறார்கள். ஆலமர விழுதும் ஆனைமுகனின் துதிக்கையும் மட்டுமே நிலத்தைத் தொடுகின்றன.
விநாயகர் எளிமையான கடவுள். அவரை உருவாக்குவதும், வழிபடுவதும் மிக எளிது. 'பிடித்து வைத்தால் பிள்ளையார்’ எனும் பழமொழியை அனைவரும் அறிவர். மண், மஞ்சள், மாவு, சாணம், அரைத்த சந்தனம், அச்சு வெல்லம்... இப்படி எதில் வேண்டுமானா லும் பிடித்துவைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவார்! கல், மரம், பளிங்கு, செம்பு, வெள்ளி, தங்கம், ஐம்பொன் ஆகியவற்றைக் கொண்டும் பிள்ளையார் விக்கிரகத்தை வடிக்கலாம். வெள்ளெருக்கு வேரில் விநாயகர் திருவுருவம் செய்து வழிபடுவது விசேஷமானது. அரிசி முதலான தானியங்களிலும் கணபதியை ஆவாஹனம் செய்யலாம்.
பிள்ளையாருக்குக் கோயில் அமைப்பதும் மிக எளிது. குளக்கரை, ஆற்றங்கரை, அரச மரத்தடி, முச்சந்தி, நாற்சந்தி, சதுக்கம்... என எங்கு வேண்டுமானாலும் பிள்ளையார் கோயிலை அமைக்கலாம். வீட்டுக்கு எதிரே சாலை இருப்பின், அதனைக் 'குத்தல்’ என்பார்கள். இதைத் தவிர்க்க, சாலைக்கு எதிரே ஒரு விநாயகரை வைத்து வழிபடுவதால், குத்தல் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. விநாயகரை எந்தத் திசையில் வேண்டுமானாலும் பிரதிஷ்டை செய்யலாம். இவரை வழிபடுவதும் எளிது. அருகம்புல் சார்த்தி, தலையில் குட்டிக்கொண்டு, காதைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட்டால் போதும், அவர் திருப்தி அடைந்துவிடுவார். விநாயகருக்குப் பிடித்தமான நிவேதனங்களில் பழங்கள், பருப்பு வகைகள் என பற்பல பொருட்கள் உண்டு என்றாலும், அவருக்கு மிகவும் இஷ்டமானது மோதகம் (கொழுக்கட்டை).
இது, தமிழ்நாட்டினர் மட்டுமே நிவேதனம் செய்யும் தனிச் சிறப்பு உடையது. பழந்தமிழ் இலக்கியத்தில் இது 'கவவு’ என்ற பெயரால் குறிக்கப்பெறுகிறது. அரிசி, வெல்லம், தேங்காய் ஆகியவற்றைக்கொண்டு கொழுக்கட்டை செய்வார்கள். பூர்ணம் இல்லாமல், வெளியே இருக்கும் மாப்பண்டம் சுவைக்காது. ஆனால், பூர்ணத்துடன் சேர்த்து உண்டால், அந்த மாப்பண்டமும் இனிக்கும். அதுபோல, பக்தியும் (மாவும்) ஞானமும் (பூர்ணமும்) இருந்தால்தான் வழிபாடு பலன் அளிக்கும். இதுவே மோதகத்தின் உள் அர்த்தம்.
மோதகத்தில் தித்திப்புப் பூரணத்தை மா(வு) மூடியிருக்கிறது. மோதகம் என்றால் ஆனந்தம். ஆனந்தம் அளிப்பவர் விநாயகர். 'மா’ என்றால் ஆண் யானை என்று பொருள் உண்டு.
மோதகத்தின் உள்ளே தித்திப்பான பொருள் பூர்ணம். ஆனந்தம் நிறைந்த பூர்ண வஸ்துவான  பிரம்மத்தின் மேல் யானை என்கிற 'மா’வின் ரூபத்தை வைத்து மூடிக்கொண்டு விக்னேச்வரர் காட்சியளிக்கிறார். அவருடைய வயிறும் உருண்ட கொழுக்கட்டை வடிவத்தில் உள்ளது. உருண்டைக்கு எங்கு ஆரம்பம்- எங்கு முடிவு என்று எதுவும் சொல்ல முடியாதல்லவா? அதைப்போல தாமே பூர்ணமான வடிவம் என்பதைக் காட்ட பானை (பேழை) வயிற்றோடு காட்சியளிக்கிறார். அண்டங்கள் அதற்குள்ளே இருப்பதால் அது உருண்டையாக உள்ளது. அதனால்தான் அவருக்கு 'லம்போதரர்’ என்று பெயர் (லம்பம்-தொங்குவது உதரம்- வயிறு).
விநாயகர் திருவுருவம் உணர்த்தும் தத்துவங்களும் அற்புதமானவை. விலங்கு, பூதம், மனிதர், தேவர் ஆகிய நான்கு கூறுகள் இணைந்த ஒப்பற்ற அமைப்பு விநாயகரின் திருவடிவம். யானை முகம், தும்பிக்கை, யானைக் காது ஆகியன விலங்கின் கூறு; பேழை வயிறும் குறுகிய கால்களும் பூதங்கள் அமைப்பு; நான்கு கரங்கள்- தேவர்கள் அமைப்பு; வலப்புறம் தந்தம் இல்லாதது- பெண் கூறு; இடப்புறம் தந்தம் உள்ளது- ஆண் கூறு. முகம் அஃறிணையாகவும், ஏனைய உறுப்புகள் உயர்திணையாகவும் திகழும் பிள்ளையார் திருவடிவம், அனைத்துமாக விளங்கும் பரம்பொருள் ஆகும்.
யானை முகம்- அறிவை யும் ஆற்றலையும் அறிவிக் கிறது. துதிக்கை- எல்லா மந்திரங்களையும் தமக்கு முதலாகக் கொண்டு உச்சரிக்கப்படும், நாதத் தத்துவத்தின் பொருளாய் விளங்கும், 'ஓம்’ எனும் பிரணவத்தின் ஒலிக்குரிய வடிவத்தை காட்டுகிறது. பேழை வயிறு- உலகம் அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கருணை யுடன் காக்கும் தன்மையை உணர்த்துகிறது. நெற்றிக்கண்- பரஞானத்தையும், மற்ற இரு கண்களும் இக ஞானத்தையும் காட்டுகின்றன. 'இகம் - பரம் இரண்டையும் அறிதலே நல்லறிவு ஞானக் களஞ்சியமாகிய விநாயகரிடம் இத்தகைய நிறை ஞானம் பொலிந்துள்ளது’ என்பார் சுவாமி சித்பவானந்தர்.
விநாயகருடைய திருக்கரங்களின் எண்ணிக்கையி லும் தனிச்சிறப்பு உண்டு. ஏனைய தெய்வங்களுக்கு எல்லாம்,  2, 4, 6, 8, 10, 12, 16 என இரட்டைப் படையில் கரங்கள் உண்டு. விநாயகருக்கு  மட்டுமே ஒற்றைப்படை எண்ணிக்கையில் திருக்கரங்கள். ஆமாம், தும்பிக்கையையும் சேர்த்து அவருக்கு ஐந்து கரங்கள். அவற்றைக் கொண்டு ஐந்து தொழில்களைச் செய்கிறார் விநாயகர். பாசம் ஏந்திய திருக்கரம்- படைத்தல்; அங்குசம் ஏந்திய கரம்- அழித்தல், ஒற்றைக் கொம்பினை ஏந்திய கரம்- காத்தல்; துதிக்கை- மறைத்தல்; மோதகக் கை- அருளல்... என ஐந்து தொழில் களை (பஞ்ச கிருத்தியங்களை) உணர்த் துகின்றன; பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன், சதாசிவம் ஆகிய ஐந்து மூர்த்தங்களையும் உள்ளடக்கியது கணபதி வடிவமே என்பதை அறிவிக்கின்றது.
மனிதன் நிறையக் கேட்க வேண்டும்; குறைவாகப் பேச வேண்டும்; அதுவே அறிவு வளர்ச்சிக்கு வழி. விநாயகரது அகன்ற காதுகள் நிறையக் கேட்கவேண்டும் என்பதைக் குறிக்கும். வாயை மறைத்திருக்கும் கை (துதிக்கை), குறைவாகப் பேச வேண்டும் என்பதையும், அருள்மொழிகளைக் கேட்கும்போது கையால் வாயைப் பொத்திப் பணிந்து கேட்கவேண்டும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றனவாம்.
இதுகுறித்து, காஞ்சி மகா பெரியவர் என்ன சொல்கிறார் தெரியுமா?
- பிள்ளையார் வருவார்...

No comments:

Post a Comment