Saturday 23 September 2017

சர்க்கரை நோய் - கம்ப்ளீட் கைடு

டயாபடீஸ் ரகசியங்களும்... தீர்வும்...


ர்க்கரை நோய் என்பது புதிதாக மனிதர்களுக்கு வந்திருக்கும் நோய் அல்ல. காலம்காலமாக உலகம் முழுக்கப் பரவலாக இருந்ததுதான். ஆரம்பத்தில் இது, பணக்கார வியாதியாகக் கருதப்பட்டது. இப்போது வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக நம் குடும்பத்தில், அக்கம்பக்கத்தில், நண்பர்கள், உறவினர்கள் எனப் பலருக்கும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் வாழ்க்கைமுறை மாற்றம்.
சர்க்கரை நோயாளிகள் ஒரு பக்கம் இருக்க, தனக்கு சர்க்கரை நோய்  இருப்பதே தெரியாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம். சர்க்கரை நோய் வந்தவர்களும் விழிப்புஉணர்வுடன் இருப்பதன் மூலம், சர்க்கரை நோயின் பாதிப்பைக் கட்டுக்குள்வைக்க முடியும். சர்க்கரை நோய் குறித்த முழு விவரங்களை உள்ளடக்கிய இந்த கைடு என்றென்றும் உதவும்.
சர்க்கரை நோய் என்றால் என்ன?
நாம் சாப்பிடும் உணவு, செரிமானத்தின்போது குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.
குளுக்கோஸ்தான் நமக்கு ஆற்றல் தரக்கூடியது. குளுக்கோஸை நம்முடைய செல்களால் நேரடியாகப் பயன்படுத்த முடியாது.
இதற்கு உதவ, கணையம் (Pancreas) இன்சுலினை சுரக்கிறது.
ரத்தத்தில் கலக்கும் இன்சுலின், செல்கள் குளுக்கோஸைப் பயன்படுத்தச் செய்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.
இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்றாலோ, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம்.
சர்க்கரை நோய் வகைகள்
டைப் 1 சர்க்கரை நோய்
டைப் 2 சர்க்கரை நோய்
கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes)
இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary diabetes)
மோடி சர்க்கரை நோய் (Maturity onset diabetes of the young (MODY))
குழந்தைப் பருவ சர்க்கரை நோய்
டைப் 1 சர்க்கரை நோய்
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளில், ஐந்து சதவிகிதம் பேர் டைப் 1 வகையைச் சார்ந்தவர்கள். இவர்களுக்கு, கணையத்தில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் இருக்காது. டைப் 1 சர்க்கரை நோய் ஒரு முறை வந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க செயற்கை இன்சுலின் எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.
டைப் 1 சர்க்கரை நோய், குழந்தைகள் மற்றும் 20 வயதுக்கு உட்பட்டோருக்கு அதிகம் வருகிறது.
இந்த வகை சர்க்கரை நோயை நாம் தடுக்க முடியாது.
டைபாய்டு போன்று ஏதேனும் நோய் தாக்கிய பிறகு நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடலையே தாக்கும் ஆட்டோ இம்யூன் பிரச்னை காரணமாக ஓரிரு மாதங்களில் இன்சுலின் சுரப்பு முற்றிலும் நின்றுபோய்விடலாம்.
வைரஸ், டெங்கு காய்ச்சல் போன்றவை வருவதைத் தடுப்பதன் மூலம் டைப் 1 சர்க்கரை நோய் திடீரென வருவதற்கான வாய்ப்பை ஓரளவு குறைக்க முடியும்.
இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary Diabates)
உடலில் ஏற்படும் நோய்கள், பாதிப்பு காரணமாக, இன்சுலின் சுரப்பதில் பாதிப்பு ஏற்படுவது இரண்டாம் நிலை சர்க்கரை நோய். சர்க்கரை நோய் வர என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து, சிகிச்சைகளைக் கொடுத்தாலே  இந்தப் பிரச்னை ஓரளவு சரியாகிவிடும்.
இரண்டாம் நிலை சர்க்கரை நோய்-சில காரணங்கள் ஸ்டீராய்டு:
ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களில்,  வெகு சிலருக்கு, ஸ்டீராய்டு அதிகமாக உடலில் சேர்வதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தாலே, சர்க்கரை நோய் குணமாகும்.
பித்தப்பை கற்கள்:
நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பதாலும், உடல் பருமனோடு இருப்பதாலும், பித்தப்பைக் கற்கள் உருவாகின்றன. பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள் போன்றவை, கணையத்தை அழுத்தினால், கணையம் புண்பட்டு இன்சுலின் சுரப்பதில் பிரச்னை ஏற்படலாம்.
ஹார்மோன் குறைபாடு:
அட்ரினல் சுரப்பியில் இருந்து ஸ்டீராய்டு ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், ‘குஷிங் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வரக்கூடும்.
அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி காரணமாக, அட்ரினலின் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், சர்க்கரை நோய் வரலாம்.
அக்ரோமெகாலி எனும் குரோத் ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் பிரச்னை உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
பி.சி.ஓ.டி-யால் அவதிப்படும் பெண்களுக்குத் தேவைப்படும் அதிகப்படியான இன்சுலினை, ஓர் எல்லை வரை கணையம் வழங்கும். ஒரு கட்டத்தில் இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு, சர்க்கரை நோய் வர வாய்ப்பு இருக்கிறது.  உடல் எடையைக் கட்டுப்படுத்தி, பி.சி.ஓ.டி-யைச் சரிசெய்தாலே, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்க முடியும்.
ஆல்கஹால்:
ஆல்கஹால் காரணமாக அரிதாகச் சிலருக்குக் கணைய அழற்சி ஏற்படும். இதனாலும், சர்க்கரை நோய் வரலாம்.
மோடி சர்க்கரை நோய் (Mody Diabates)
மரபியல் அணுக்களில் ஏற்படும் மாறுதல் காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் இது. மிக மிக அரிதாகத்தான் இந்த வகை சர்க்கரை நோய் இந்தியாவில் உள்ளது.
பொதுவாக, 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத்தான் இந்த வகை சர்க்கரை நோய் வரும்.
ஹெச்.என்.எஃப்.1-ஆல்பா, ஹெச்.என்.எஃப்.1-பீட்டா, குளுக்கோகினேஸ் என 12 வகையான மோடி குறைபாடுகள் இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான சிகிச்சை இருக்கிறது. எந்த டி.என்.ஏ காரணமாக சர்க்கரை நோய் வருகிறது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.
சில மோடி குறைபாடுகளுக்கு எளிய மாத்திரைகள் கொடுத்தாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துவிடும்.
4. கர்ப்பகால சர்க்கரை நோய்
கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கர்ப்ப கால சர்க்கரை நோய் வரலாம். நஞ்சுக்கொடி (Placenta) தாயையும் குழந்தையும் இணைக்கிறது. குழந்தைக்குப் பல்வேறு ஹார்மோன்கள் இங்கிருந்துதான் செல்கின்றன.
கர்ப்பம்தரித்த 24 வாரங்களுக்குப் பிறகு, நஞ்சுக்கொடியில் உள்ள ஹார்மோன்கள் காரணமாக, உடலுக்கு இன்சுலின் அதிக அளவில் தேவைப்படும். இதனை கணையமே தானாக உற்பத்தி செய்துகொள்ளும்.
சில கர்ப்பிணிகளுக்கு, தேவைப்படும் அதிக அளவிலான இன்சுலினை கணையம் உற்பத்தி செய்யவில்லை எனில், கர்ப்பகால சர்க்கரை நோய் வரும்.
குழந்தை பிறந்த பின்னர் 24-48 மணி நேரத்தில் ரத்தத்தில் சர்க்கரை அளவு நார்மலாகிவிடும்.
கர்ப்ப காலத்தில் வரும் சர்க்கரை நோய் தற்காலிகமானதுதான்.
ஆனால், அவர்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மருத்துவர் ஆலோசனை படி நடப்பதன் மூலம் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.
5. குழந்தைகளுக்கான சர்க்கரை நோய்
பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் இருந்தால், டைப் 1 வகை என கருதுவது தவறு.
இவர்களுக்கு, மோடி டயாபடீஸ் வருவதற்குத்தான் வாய்ப்பு அதிகம்.
சர்க்கரை நோய்க்கு எந்த மரபணு காரணம் எனக் கண்டுபிடித்து, அதற்குரிய சிகிச்சை அளித்தாலே, சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துவிடும்.
பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு வரும் சர்க்கரை நோய், பெரும்பாலும் டைப் 1 வகையாக இருக்கும்.
உடல் பருமன் காரணமாக வரக்கூடியது டைப் 2 வகை. குழந்தைகள் உடல்பருமனாக இருப்பதைத் தவிர்த்தாலே, அவர்களுக்கு வரக்கூடிய டைப்  2 வகை சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
6. டைப் 2 சர்க்கரை நோய்
இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 95 சதவிகிதம் பேருக்கு டைப் 2 சர்க்கரை நோய்தான் உள்ளது. இவர்களுக்கு, கணையத்தில் இன்சுலின் சுரக்கும். ஆனால், அதன் செயல்திறன் குறைவாக இருக்கும் அல்லது போதுமான அளவில் சுரக்காமல் இருக்கும்.
டைப் 2 சர்க்கரை நோய் பரம்பரையாக வருவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கு நான்கு முக்கியமான காரணங்கள் உள்ளன...
1. உணவு
நம் தென்னிந்திய உணவு வகைகளில் 80 சதவிகிதம் கார்போஹைட்ரேட் என்கிற மாவுச்சத்துதான் இருக்கிறது. உடலுக்கு கார்போஹைட்ரேட் 50-60 சதவிகிதம் மட்டுமே தேவை. 
அதிக அளவு கார்போஹைட்ரேட் உள்ள உணவை தினமும் சாப்பிடும்போதுதான் பிரச்னையே உருவாகிறது. கார்போஹைட்ரேட் உடனடியாகச் செரிமானம் ஆகி ரத்தத்தில் சர்க்கரை அளவை மிக விரைவில் அதிகரிக்கச் செய்துவிடுகிறது.
சமச்சீரற்ற உணவை உட்கொள்வதே உடல்பருமனுக்கும் அதைத் தொடர்ந்து வரும் டைப் - 2 சர்க்கரை நோய்க்கும் முக்கியக் காரணம்.
2. உடல் உழைப்பு இன்மை
உடல் உழைப்பு இன்மை என்பது வேறு, உடற்பயிற்சி என்பது வேறு.
கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் எங்கு சென்றாலும் ஓரளவுக்கு நடந்தே செல்வார்கள். வீட்டிலும் உடல் உழைப்பு இருந்தது. அன்றாட உடல் உழைப்பு என்பதே சர்க்கரை நோயைத் தடுக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால், உடல் உழைப்பு இன்மை தற்போது அதிகரித்ததன் விளைவாகவே உடற்பயிற்சி அறிவுறுத்தப்படுகிறது.
உடல் உழைப்பு இருக்கும்போது கலோரி அதிக அளவில் செலவிடப்படுகிறது. இதனால், இன்சுலின் தேவை குறையும். இதனால், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.
உடற்பயிற்சி, நடைப்பயிற்சியைக்காட்டிலும், தினமும் ஒரு மணி நேரம் உடலில் இருந்து நன்றாக வியர்வை வெளியேறும் அளவுக்கு, பேட்மின்ட்டன், டென்னிஸ், கால்பந்து, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் குறைந்தது நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது.
இன்றைக்கு பல பள்ளி மாணவ மாணவிகள் விளையாடுவதே இல்லை. பள்ளிகளில், விளையாட்டு வகுப்புகள் பெயர் அளவுக்கே இருக்கின்றன. இதனால், இளம் வயதில் உடல்பருமன் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களை விளையாட விடுவதன் மூலம், இதைத் தவிர்க்க முடியும்.
3. ஆல்கஹால்
ஆல்கஹால், நேரடி சர்க்கரை நோய் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றாலும், மறைமுகமாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துபவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பதாலும், உடல் எடை அதிகரிக்கும் என்பதாலும் மறைமுகமாக சர்க்கரை நோய்க்கு வித்திடுகிறது.
4.சிகரெட்
சிகரெட்டில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் உள்ளன. ஒரு சிகரெட்டில் மட்டும்  ஏறக்குறைய 80 வகையான  கடுமையான நச்சுத்தன்மைகொண்ட பொருட்கள் உள்ளன. இவை, ரத்த நாளங்கள், கணையம் போன்றவற்றைப் பாதிக்கும்போது, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். சிகரெட் பிடிக்கும் பெரும்பாலானோருக்கு பின்னாட்களில் சர்க்கரை நோய் வருகிறது என்பது ஆய்வுகளில் உறுதியாகி உள்ளது.
டைப் 2 சர்க்கரை நோய் அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். குறிப்பாக, இரவு கண் விழித்து, இரண்டு மூன்று முறை சிறுநீர் கழிப்பார்கள்.
அதிக தாகம் இருக்கும்.
பசி அதிகமாக எடுக்கும்.
உடல் சோர்வு ஏற்படும்; பகல் நேரத்தில் தூக்கம் வரும்.
கை, கால் வலி, உடல் வலி போன்றவை ஏற்படும்.
மூட்டு இணைப்புகளில் வலி இருக்கும்.
இந்த ஆறு அறிகுறிகள் தெரிந்தால், சர்க்கரைப் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
குறிப்பு: பாத நமைச்சல், பார்வைத் தெளிவின்மை, சிறுநீரகப் பாதிப்பு போன்றவை சர்க்கரை நோயின் அறிகுறிகள் அல்ல, சர்க்கரை நோயின் பாதிப்புகள்.
சர்க்கரை நோய்ப் பரிசோதனை 
இரவு உணவு  உண்ட பின்னர், 10 மணி நேரத்துக்குப் பிறகு, காலையில் வெறும் வயிற்றில் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
பிறகு உணவு உண்ட பின், இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு, மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை விரைவில் அறிய, தற்போது குளுக்கோமீட்டர்கள் வந்துவிட்டன. கை விரல்களில் மிக மெல்லிய ஊசியைக் குத்துவதன் மூலம், இரண்டே சொட்டு ரத்தத்தை வைத்து, நொடிப் பொழுதில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதை அறிய முடியும்.
ஹெச்.பி.ஏ1.சி  பரிசோதனை (HbA1C) 
சர்க்கரை நோய் இருக்குமோ என்ற பயத்தில் சிலர் பரிசோதனை செய்வதற்கு நான்கைந்து நாட்களுக்கு முன் இருந்தே, அளவான உணவும், சிறிது நடைப்பயிற்சியும் மேற்கொண்டு, தங்களுக்குச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதாகக் காட்டிக்கொள்வார்கள்.
பொதுவாக சர்க்கரை நோய் வந்திருக்கிறதா இல்லையா என்பதை அறியவும், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதை அறியவும் ஹெச்.ஏ.பி.1 சி பரிசோதனை செய்ய வேண்டும். இதுவும் ரத்தப் பரிசோதனை மட்டுமே.
ஹெச்.பி.ஏ.1சி பரிசோதனையில் ஹீமோகுளோபினில் சர்க்கரையின் விகிதம் கணக்கிடப்படும். இந்தப் பரிசோதனையில் கடைசி இரண்டு மூன்று மாதங்களில் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு இருந்துள்ளது என்பதைக் கண்டறிய முடியும்.
விதிவிலக்கு: ரத்தசோகை உள்ளவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். சிலருக்குப் பொதுவாகவே ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் இருக்கும். இவர்களுக்கு, ரத்தப் பரிசோதனை பலன் தராது. சிறுநீரகப் பாதிப்புக் காரணமாக கிரியாட்டினின் அதிகமாக இருக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்தப் பரிசோதனை உகந்தது அல்ல.
சர்க்கரை நோய் பாதிப்புகள்
கண்கள், சிறுநீரகம், பாதங்கள், இதயம், ஆகியவைப் பாதிப்பதற்குச் சர்க்கரை நோய் ஒரு முக்கியமான காரணம்.  சர்க்கரை நோய் வந்தவர்கள் இந்த உறுப்புகளைக் கண்காணித்து, பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்கொள்வது அவசியம்.
கண்
சர்க்கரை நோய் வந்தவுடன் கண்கள் பாதிப்பது கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, ஆண்டுக் கணக்கில் கவனிக்காமல் விடும்போதுதான், பாதிப்பின் வீரியம் தெரியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாக இரண்டு விதமான கண் நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டயாபடீக் ரெட்டினோபதி
சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே பிரத்யேகமாக வரக்கூடிய கண் நோய் இது. கண்ணில் விழித்திரை (ரெட்டினா) என்றொரு பகுதி இருக்கிறது.
விழித்திரையில் ரத்தக் குழாய்கள் விரிசல் விடும்போது, ஆரம்பத்தில் கண்களில் சிறுசிறு புள்ளி அளவுக்கு ரத்தம் கசியும்.
ஒரு கட்டத்தில் விழித்திரை முழுவதும் ரத்தம் கசியும். ஒரு சிலருக்குப் புதிதாக ரத்தக் குழாய்கள் இந்தப் பகுதியில் வளர ஆரம்பிக்கும். இவற்றைக் கண்காணித்து சிகிச்சை எடுக்கவில்லை என்றால், பார்வை பறிபோய்விடும்.
டயாபடீக் ரெட்டினோபதியில் கிட்டத்தட்ட 10 நிலைகள் உள்ளன. முதல் ஐந்து நிலைக்குள் இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள்வைப்பதன் மூலமே, பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் கண் பாதிக்கப்படும் என அஞ்சத் தேவை இல்லை. வருடம் ஒரு முறை ரெட்டினோபதி பிரச்னை இருக்கிறதா என்பதை எளிய பரிசோதனை மூலம் கண்டறிந்து, தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்தாலே போதுமானது.
மேக்குலோபதி
ரெட்டினாவின் மையப்பகுதியில் இருப்பது ‘மேக்குலா’. இந்த மேக்குலா மிகச்சிறிய நுண்ணிய புள்ளி அளவுக்குத்தான் இருக்கும். சர்க்கரை நோயால்  மேக்குலாவில் ஏற்படும் பிரச்னைதான் மேக்குலோபதி.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு கண்புரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
சிறுநீரகம்
சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகம். கண்களைப் போலவே சிறுநீரகமும் உடனே பாதித்த அறிகுறி தெரியாது. பல வருடங்களுக்குப் பிறகுதான் தெரியும். 
சிறுநீரகப் பாதிப்பை தவிர்க்க ஒரே வழி சர்க்கரையைக் கட்டுக்குள்வைப்பதே. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது, சிறுநீர் வழியாக அல்புமின் என்ற புரதம் அதிக அளவு வெளியேறிவிடும். அதே சமயம் கிரியாட்டினின் உடலில் இருந்து அதிக அளவு வெளியேறாமல் தங்கிவிடும்.
ரத்தத்தில் கிரியாட்டினின் எவ்வளவு இருக்கிறது என்ற பரிசோதனையையும், சிறுநீரில் எவ்வளவு அல்புமின் வெளியேறுகிறது என்ற பரிசோதனையையும் செய்வதன் மூலம், சிறுநீரகப் பாதிப்பை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், சிறுநீரகப் பாதிப்புக்கான வாய்ப்பு இரட்டிப்பாகும். எனவே, இரண்டு பிரச்னைகளுக்கும் இருப்பவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து, முன் ஜாக்கிரதையுடன் இருப்பது அவசியம். சிறுநீரகத்தைப் பாதிக்கும் கெட்ட பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும்.
கல்லீரல்
உடல்பருமன் காரணமாக சர்க்கரைநோய் வருபவர்களுக்கு அதிக அளவிலான குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் கல்லீரல் உட்பட எல்ல பாகங்களிலும் சேமித்து வைக்கப்படுகிறது.
இதனால், கல்லீரல் மேல் கொழுப்பு அதிக அளவு படிந்து, ஃபேட்டி லிவர் பிரச்னை ஏற்படும். ஒரு கட்டத்தில், கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis) நோய் வரலாம். சர்க்கரை நோயாளிகள் உடல்பருமனைத் தவிர்த்தாலே, கல்லீரலைக் காக்க முடியும்.
பாதங்கள்
சர்க்கரை நோயாளிகள் அனைவருக்குமே பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடிய பகுதி பாதங்கள். பாதங்கள் பாதிக்கப்பட இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
சர்க்கரை நோய் காரணமாக நரம்புகள் பாதிக்கப்பட்டால், பாதமும் பாதிக்கப்படும். இவர்கள் கவனமுடன் ஒவ்வோர் அடியையும் எடுத்து வைக்காவிட்டால், கீழே விழுந்துவிட வாய்ப்பு இருக்கிறது.
சர்க்கரை நோய் காரணமாக ரத்தநாளங்கள் பாதித்தால், பெரிபெரல் வாஸ்குலர் நோய் (Peripheral Vascular Disease) எனும் பிரச்னை ஏற்படும். சர்க்கரை நோயாளிகள், புகை பிடிப்பவர்களாக இருந்தால், இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
பாதங்கள் இருக்கும் பகுதியில், பெரிய ரத்த நாளங்கள், சிறிய ரத்த நாளங்கள் ஆகியவை இருக்கின்றன. சிறிய ரத்த நாளங்கள் பாதித்தால்,  ஆரம்ப நிலையில் அறிகுறி தெரியாது.
காலில் ஏதேனும் நமைச்சல் உணர்வு இருந்தால், தானாகவே முன்வந்து பரிசோதிப்பதன் மூலமே, பாதித்த அளவைக் கண்டறிந்து மேலும் பாதம் பாதிப்படைவதைத் தடுக்க முடியும்.
பரிசோதனை
டயாபடீக் நியூரோபதி பிரச்னை இருப்பவர்களுக்கு பாதங்களில் உணர்வுகள் குறைவாக இருக்கும்.
காலில் வெடிப்பு அதிகமாக இருக்கும்.
கால்களில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறிய, ‘டாப்ளர்’  பரிசோதனை செய்ய வேண்டும்.
நரம்புகள் எப்படிப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய ‘பயோதீசியோமீட்டர்’ பரிசோதனை செய்ய வேண்டும். பாதத்தை
பாதத்தில் நரம்புகள் பாதித்திருப்பது பரிசோதனையில் தெரியவந்தால், சர்க்கரையை கட்டுக்குள் வைத்து, உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம், மீதம் இருக்கும் நரம்பு இயக்கத்தை நிச்சயம் காப்பாற்ற முடியம்.
பாதத்தில் ஏதேனும் பாதிப்புகள் வந்தால், அறிகுறிகள் தெரியும்போதே மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது அவசியம். பலர், பாதங்கள் முழுமையாக பாதித்த பிறகு சிகிச்சைக்கு வருவதால்தான் கால்களை அகற்ற நேரிடுகிறது.
பாதம் காக்க 5 வழிகள்
சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதத்தில் புண்கள் ஏற்பட்டால் ஆறாது என்பதால், எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
தினமும் படுக்கைக்குச் செல்லும் முன்னர் பாதத்தைச் சுத்தமாகத் தண்ணீரில் கழுவித் துடைத்து, பாதத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருக்கிறதா, முள், கம்பி ஏதாவது குத்தியிருக்கிறதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும்.
நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளனவா என ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பாதிப்பு இருந்தால், மருத்துவரின் பரிந்துரைப்படி, அடிப்பகுதித் தடிமனாகவும் மேல்பகுதி மென்மையாகவும் இருக்கும் ஷூக்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைப்பதில் கண்டிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும்.
இதயம்
சர்க்கரை  கட்டுக்குள் இல்லை எனில், இதயத்துக்குச் செல்லும்  பெரிய ரத்த நாளங்களும் பாதிக்கப்படும்.
சர்க்கரை நோயாளிகள் எல்லாருக்குமே மாரடைப்பு  விரைவில் வரும் என்பது உண்மை அல்ல. வதந்திதான்.
சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்பருமன், உயர் ரத்த அழுத்தம், சிகரெட் பிடித்தல், ஆல்கஹால் அருந்துதல் ஆகிய காரணங்கள் ஒன்று சேரும்போதுதான் இதயம் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
சாதாரணமாக இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால், நெஞ்சு வலியை உணர முடியும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு, இதயத்துக்குச் செல்லும் நரம்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தால், நெஞ்சு வலி வருவதே தெரியாது. இதனால்தான் இரவு நேரத்தில் உணர்வே தெரியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கிறார்கள். இதனை ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ என்பார்கள்.
ஆணுறுப்பில் உள்ள நரம்புகள், மிகக்குறுகிய ரத்த நாளங்கள் பாதிக்கப்படும்போது விறைப்புத்தன்மை பிரச்னை ஏற்படும். விறைப்புத்தன்மை பிரச்னை, ஐந்தாறு ஆண்டுகள் கழித்து, மாரடைப்பு வரலாம் என்பதற்கான ஓர் அறிகுறி.
சர்க்கரை நோயாளிகள், ஆண்டுக்கு ஒருமுறை அவசியம் செய்ய வேண்டிய பரிசோதனைகள்...
ரெட்டினா
ரத்தத்தில் கிரியாட்டின் அளவு மற்றும் சிறுநீரில்  அல்புமின் அளவு
பாதங்களுக்கான பரிசோதனை
ஹெச்.பி.ஏ1.சி பரிசோதனை
கொலஸ்ட்ரால் பரிசோதனை
கல்லீரல் பரிசோதனை (LFT)
ஈ.சி.ஜி
நேர்மறை எண்ணம்
மருத்துவத்தை பொறுத்தவரையில் நேர்மறை எண்ணம் மிகவும் முக்கியம்.
சிலர் பத்திரிக்கைகள், தொலைகாட்சிகள், இணையம் போன்றவற்றில் சில நோய்கள் குறித்து படித்துவிட்டு, அதில் சொல்லபடும் அறிகுறி தனக்கும் இருக்குமோ எனப் பயந்து மன அழுத்தத்தில் புழுங்குகிறார்கள்.
மன அழுத்தம் தான் மோசமான வியாதி. மன அழுத்தம் இருப்பதால் தான் பல்வேறு நோய்கள் வருகிறது. சர்க்கரை நோய்க்கும் மறைமுக காரணம் மன அழுத்தம் தான்.
அறிகுறிகள் இருப்பது தெரிந்தால் கவலைபடாமல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை எந்தவொரு நோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் நோய்களை எளிதில் கட்டுக்குள் வைக்க முடியும்.
நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ, தேவையற்ற பயத்தையும், மன அழுத்தத்தையும் தவிர்ப்பது நல்லது.
சந்தேகமும் தீர்வும்...
இன்சுலின்
டைப் 2 சர்க்கரை நோயாளிகள், மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம், கணையத்தைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்யலாம்.
மாத்திரை சாப்பிட்டும் இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை எனில், ஊசி மூலம் செயற்கை இன்சுலின் எடுத்துகொள்ள வேண்டியிருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் முடிந்த வரை நீர், கொசு, உணவு மூலமாக வரும் காய்ச்சல் போன்றவற்றிலிருந்து வருமுன் காப்பது மிகவும் நல்லது. 
ஒருமுறை இன்சுலின் ஊசி எடுத்துக்கொண்டால், அதன்பின் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. பொதுவாக, சர்க்கரை நோயாளிகளுக்கு வேறு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால், இன்சுலின் அதிக அளவு தேவைப்படும். அதற்காகத்தான் இன்சுலின் ஊசி பரிந்துரைக்கப்படுகிறது.
எந்த நோய் வந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குரிய சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, பாதிப்பை முழுமையாகக் குணப்படுத்திவிட்டால், மீண்டும் இன்சுலின் அதிக அளவில் தேவைப்படாது. அப்போது, இரண்டு மூன்று வருடங்கள் ஆனாலும்கூட மீண்டும் மாத்திரைக்குத் திரும்பி விடலாம். எந்த நோயும் தாக்கவில்லை ஆனால், மாத்திரை சாப்பிட்டும் சர்க்கரை அளவு குறையவில்லை எனில், இன்சுலினை ஊசி மூலம் எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கும்.
இன்சுலின் பம்ப்
டைப் 1 சர்க்கரை நோயாளிகள் வாழ்நாள் முழுக்க தினமும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இவர்கள், தினசரி ஊசி போடுவதைத் தவிர்க்க, தற்போது நவீன தொழில்நுட்பத்தில் இன்சுலின் பம்ப் இருக்கிறது. மொபைல் அளவுக்கு இருக்கும் இதனை வயிற்றில் பொருத்திக்கொண்டால், கணையத்தின் செயல்பாட்டை அறிந்து, அதற்கு ஏற்ப இன்சுலினை உடலுக்குத் தரும்.
கிளைசமிக் குறியீட்டு எண்
நாம் உட்கொண்ட உணவு, செரிமானம் ஆகி எவ்வளவு வேகமாக ரத்தத்தில் கலக்கிறது என்பதைக் குறிப்பதுதான் கிளைசமிக் குறியீட்டு எண்.  பொதுவாக, நார்ச்சத்துள்ள உணவுகளுக்குத்தான் கிளைசமிக் குறியீட்டு எண் மிகக் குறைவாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை...
நார்ச்சத்து மிகுந்த உணவுகளில் முதல் இடம் கீரைக்குத்தான். தினமும் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும். கிழங்கு வகைகளைத் தவிர மற்ற காய்கறிகள் அனைத்தையும் சாப்பிடலாம். மீன், கோழி இறைச்சியை எண்ணெயில் பொரிக்காமல் நீராவியில் வேகவைத்தோ, குழம்பு வைத்தோ சாப்பிடலாம்.
மருத்துவர் பரிந்துரைப்படி பாதாம் முதலான நட்ஸ் சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி ஆகியவற்றைச் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்த பயறு வகைகள், கடலை வகைகள், முட்டையின் வெள்ளைப் பகுதியைச் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு, அன்றாடம் சராசரியாக 1,500 கி.கலோரி போதுமானது.
சிறுதானியம் சாப்பிடுங்கள்
அரிசி, கோதுமை ஆகியவற்றைவிட சிறுதானியம் மிகவும் சிறந்தது. சிறுதானியத்தில் வெறும் மாவுச்சத்து மட்டும் இன்றி நார்ச்சத்து, புரதச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் அதிக அளவு நிறைந்திருக்கின்றன. எனவே, சர்க்கரை நோயாளிகள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி ஆகியவற்றைப் பிராதன உணவாக ஏதாவது ஒரு வேளையாவது தினமும் சாப்பிடுவது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை...
எண்ணெயை அளவாக உணவில் சேர்க்க வேண்டும். கேரட் தவிர மற்ற கிழங்கு வகை உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிப்ஸ், கோலா பானங்கள், குளிர்பானங்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஜங்க்புஃட், அப்பளம்,  ஐஸ்க்ரீம், சாட் உணவுகள், மைதா சேர்க்கப்பட்ட பூரி, பரோட்டா, இனிப்பு வகைகள், மாவுச்சத்து, கொலஸ்ட்ரால் மிகுந்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
ஆர்கானிக்குக்கு மாறுங்கள்!
பூச்சிக்கொல்லிகளால் எண்ணற்ற பக்கவிளைவுகள், பாதிப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, முடிந்தவரை இயற்கை விவசாயத்தில் விளைந்த, ஆர்கானிக் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துங்கள். ஆர்கானிக் பொருட்கள் விலை அதிகமாக உள்ளதாகக் கருதுபவர்கள்  வீட்டிலேயே ஆர்கானிக் முறையில் சிறு தோட்டம் அமைத்து, காய்கறிகள் பயிரிட்டு அவற்றைச் சமையலுக்குப் பயன்படுத்திச் சாப்பிடலாம்.
அரிசி - கோதுமை
வெள்ளை அரிசி அதிகம் பயன்படுத்துவது சர்க்கரை நோய்க்கு வித்திடும் என்பது உண்மையே.  தற்போதைய பாலீஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் வெறும் மாவுச்சத்து மட்டுமே இருக்கிறது. அரிசி அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு இன்சுலின் அதிகமாகத் தேவைப்படும். எனவே, அரிசியை ஏதாவது ஓர் உணவு வேளையில் மட்டும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
கலவை சாதம், பிரியாணி போன்றவற்றைச் சாப்பிடுவதைக் குறைத்து, அரிசியுடன் காய்கறிக் கூட்டு, முட்டை, மீன் ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது  சிறந்தது. இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு பெரிய அளவு அதிகரிக்காது.
கோதுமையில் நார்ச்சத்து ஓரளவுக்கு இருக்கிறது. முழு கோதுமையை வாங்கி, மைதா சேர்க்காமல் அரைத்து, எண்ணெய் குறைவாகச் சேர்த்து, சப்பாத்தி செய்து சாப்பிடலாம். பாக்கெட் கோதுமை மாவைத் தவிர்க்கவும். மூன்று வேளையில் ஏதாவது ஒரு வேளை சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். ஓட்ஸ் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
அசைவம்
அசைவ உணவு விரும்பிகள் ரெட்மீட் எனச் சொல்லப்படும் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி போன்றவற்றைக் கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. ஹார்மோன் ஊசி போட்டு வளர்க்காத கோழி இறைச்சியை வாரம் ஒரு முறை சாப்பிடலாம். மீன், உடலுக்கு மிகவும் நல்லது. கோழி முட்டையின் வெள்ளைப் பகுதியை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான டயட் சார்ட்
மூன்று வேளை உணவை ஆறு வேளை உணவாகப் பிரித்துச் சாப்பிடச் சொல்வார்கள். அது நடைமுறை சாத்தியம் இல்லாதவர்கள், மூன்று வேளை உணவு எடுங்களாம். கூடவே காலையும் மாலையும் வடை, போண்டா, பஜ்ஜி போன்றவற்றைத் தவிர்த்து பதிலாக ஆரோக்கியம் தரும்  உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
காலை 8:30 மணிக்குள்  (ஏதாவது ஒன்று மட்டும்)
மூன்று சப்பாத்தி + காய்கறிகள் கூட்டு,
மூன்று இட்லி/மூன்று தோசை + புதினா/வேர்க்கடலை/கொத்தமல்லி/தக்காளி சட்னி.
காலை  11:00 - 11:30 (ஏதாவது ஒன்று மட்டும்)
கொய்யா/பப்பாளி போன்ற ஏதாவது ஒரு பழம்/ மோர்/வெஜிடபிள் சாலட்/இரண்டு கோதுமை பிஸ்கட்.
மதியம் 12:00 - 2:00
சாதம் ஒரு கப், அரை கப் சாம்பார், ஒரு கப் காய்கறி கூட்டு  இரண்டு கப் வேகவைத்த காய்கறிகள், ஒரு கப் கீரை, ஒரு கப் ரசம்.
குறிப்பு: சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் பாயசம் அல்லது இனிப்பு போன்றவற்றை எப்போதாவது சிறிதளவு சாப்பிடுவதில் தவறு இல்லை. 
அப்பளம்/வடை போன்றவற்றைத் தவிர்க்கவும். ஊறுகாய் மிகச் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.
மாலை 4:00-6:00 (ஏதாவது இரண்டு மட்டும்)
கிரீன் டீ, சர்க்கரை சேர்க்காத காபி/டீ, அரைவேக்காட்டில் வேகவைத்த முளைகட்டிய பயறு வகைகள், சுண்டல்.
இரவு 7:00-9:00 (எதாவதொன்று மட்டும்)
கோதுமை உப்புமா, வெஜிடபிள் உப்புமா, கோதுமை தோசை, சப்பாத்தி, இடியாப்பம் இதனுடன் காய்கறிகள் அதிகம் நிறைந்த சாம்பார்.
சர்க்கரை  நோயாளிகள் ஆரோக்கியமாக வாழ கடைப்பிடிக்க வேண்டிய 8 வழிகள்!
சிகரெட், மதுவை அறவே தவிர்க்கவும்.
ஆரோக்கியமான சமச்சீர் உணவுகளை உட்கொள்ளவும்.
நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். இரவு படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும்.
ஏழு மணி நேரம் தடையற்ற தூக்கம் தேவை.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஹெச்.பி.ஏ 1சி பரிசோதனை செய்ய வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை அவசியம். உடல் உழைப்பு, நடைப்பயிற்சி இரண்டையும்  கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்
தண்ணீர் தேவையான அளவுக்கு அருந்துங்கள்.
மன அழுத்தத்தைத் தவிருங்கள். உடலில் ஒரு குறைபாடு என்றால், அதற்குச் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் அவ்வளவே. எனவே, சர்க்கரை நோயைப் பற்றி எதிர்மறை எண்ணம் வேண்டாம்.
ப்ரீடயாபடீஸ்
ப்ரீடயாபடீஸ் என்பது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. இந்த நிலையில் இருப்பவர்கள் எந்தக் கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தால், சில வருடங்களில் சர்க்கரை நோய் வரக்கூடும்.
ப்ரீடயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள் ஆரம்பத்திலேயே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்தாலே சர்க்கரை நோய் வராமல் தடுக்க முடியும்.
ப்ரீடயாபடீஸ் நிலையில் இருப்பவர்கள் சர்க்கரை நோய் வரும் எனச் சோர்வு  அடையத் தேவை இல்லை. ப்ரீடயாபடீஸ் நிலையில் இருந்து, சாதாரண நிலைக்குத் திரும்பிவிட முடியும்.
இந்த நிலையில் இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சர்க்கரைப் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப மருத்துவர் அறிவுரை பெற்று வாழ்க்கை முறையைக் கொஞ்சம்  மாற்றிக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வழிகள்! 
சிறுவயதில் இருந்தே ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடுவது நல்லது. தினமும் ஒரு மணி நேரமாவது நன்றாக விளையாடவும்.
ஐஸ்க்ரீம், கேக், ஹோட்டல் உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். முடிந்தவரை சாட் ஐட்டங்கள் வாங்கிச் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.
மாதம் ஒரு முறை பி.எம்.ஐ பரிசோதனை செய்யுங்கள். உயரத்துக்கு ஏற்ற எடை இருப்பதை எப்போதும் உறுதி செய்யுங்கள். பி.எம்.ஐ நார்மலைத் தாண்டினால், நல்ல  உணவுப் பழக்கம், உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் எடையைக் கட்டுக்குள் வையுங்கள்.
25 வயதைத் தாண்டியவர்கள், வருடம் ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
நொறுக்குத்தீனிகள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறையுங்கள். வீட்டில் சமைக்கும் உணவுகளை மட்டும் அளவோடு சாப்பிடுங்கள்.
வெந்தயம் சாப்பிடுவது நல்லது. கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள் சாப்பிடுவது, உடல்பருமனை மட்டும் அல்ல, சர்க்கரை நோயையும் குறைக்க உதவும்.
பி.எம்.ஐ நார்மலாக இருந்தாலும் சிலருக்கு  வயிற்றைச் சுற்றி கொழுப்பு அதிகமாகப் படிவதால், லேசாகத் தொப்பை பெரிதாகும். வயிற்றைச் சுற்றி கொழுப்புப் படிவது, கணையத்துக்கு நல்லது அல்ல.  எனவே, தொப்பைபோட்டால் தொப்பையைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்யுங்கள்.
தினமும் உடல் உழைப்பு அவசியம். உடல் உழைப்பு குறைவானவர்கள் நடைப்பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்; யோகா செய்யலாம்.
சிகரெட் பிடிப்பதைத் தவிர்ப்பது மட்டும் அல்ல, சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருப்பதைக்கூட தவிருங்கள்.
காலை உணவை தவிர்க்காதீர்கள். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் 50-60 சதவிகிதம் , புரதச்சத்து நிறைந்த உணவுகள் 20 சதவிகிதம், கொழுப்பு சத்து 10-15 சதவிகிதம்,  வைட்டமின்கள், தாதுஉப்புகள், நுண்ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் 5 சதவிகிதம் என்ற விகிதத்தில் உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுங்கள்.
உடல் எடையைக் கட்டுக்குள்வைத்து, ஃபிட்டாக வாழ்ந்தாலே 90 சதவிகிதம் சர்க்கரை நோய் வருவதைத் தடுத்துவிட முடியும். நம்மால் முடியும் என பாசிட்டிவ் மனநிலையுடன் செயல்படுங்கள்.

No comments:

Post a Comment