Wednesday 20 September 2017

சதுரகிரி யாத்திரை! - 20

லகத்தைக் காத்து ரட்சிக்கும் அன்னை தவம் இருந்த இடம்- இந்த சந்தன மகாலிங்கம் திருக்கோயில். அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி அந்த தேவி தவம் இருந்த இடம், இன்றைக்கும் ஆலயத்தின் அருகே அடையாளமிட்டுக் காணப் படுகிறது. பக்தர்கள் அந்த இடத்தைக் கண்டு வணங்கிச் செல்கிறார்கள். பார்வதிதேவி, தவம் மற்றும் வழிபாடுகளை சந்தன மகாலிங்கத்துக்கு இன்றளவும் இங்கிருந்து செய்து வருவதாக ஓர் ஐதீகம் நிலவுகிறது. சந்தன மகாலிங்கத்தின் சந்நிதி அருகே அன்னையை நினைத்துச் செய்யப்படும் தவமும் தியானமும் எண்ணற்ற பலன்களைக் கொடுக்க வல்லது. எனவே, சந்தன மகாலிங்கம் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள், ஆரவாரம் எதுவும் இல்லாமல் அமைதி காத்து வழிபட்டுச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பார்வதிதேவி இங்கு வந்து குடி கொண்ட பிறகுதான் இந்தப் பகுதியே பசுமை ஆனது. மரங்கள் துளிர்த்தன. வனம் குளுமை ஆனது. எனவே, உள்ளார்ந்த பக்தியுடன் இங்கு வந்து பார்வதிதேவியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சந்தன மகாலிங்கத்தையும், தேவியின் திருவுருவத்தையும் வழிபட்டுச் சென்றால், குடும்பத்தில் ஒற்றுமை தழைத்தோங்கும். நிம்மதி பிறக்கும்.

அன்னை பார்வதிதேவி இங்கே தவம் இருந்தபோது, அவளுக்குப் பணிவிடை செய்து பூரித்தவர்கள்- இங்கு இருந்த சித்த புருஷர்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காக அன்னை தோற்றுவித்த ஆகாய கங்கை எனும் தீர்த்தம், மழை மற்றும் வெள்ளக் காலங்களில் குற்றால அருவி போல் பொங்கிப் பெருகி, கீழே இருக்கும் சந்நிதிகளை நனைத்தபடி ஓடுவது கொள்ளை அழகு (மற்ற நாட்களில் சிறிதளவே தண்ணீர் விழும். கடும் கோடையில் சில நாட்களுக்குத் தண்ணீர் விழாமல் இருப்பதும் உண்டாம்). 'ஹோ'வென்ற இரைச்சலுடன் சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் மேல் தண்ணீர் கொட்டும் இத்தகைய அரிய காட்சியைப் பார்க்க பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும்.
எப்படி என்கிறீர்களா? கடும் மழைக் காலங்களில் சதுரகிரியில் எவருமே மேலே ஏறிச் செல்ல முடியாது. காரணம்- வழியில் குறுக்கிடும் அத்திரி ஊத்து முதலான சில இடங்களில் வெள்ளம் பொங்கிப் பெருகி பாதையின் குறுக்கே ஓடுவதால் எவரும் இதைக் கடந்து மேலே செல்ல முடியாது. சதுரகிரிக்கு அடிக்கடி சென்று வருகிற அன்பர்கள் பெரும்பாலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மலை ஏறுவதைத் தவிர்த்து விடுவதுண்டு.
ஆனால், விஷயம் தெரியாமல் பயணிப்பவர்கள், நடக்கிற பாதையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுவதைச் சில மணி நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பார்கள். வெள்ளம் வடிகிற வழியாகத் தெரியவில்லை என்றால், 'மகாலிங்கமே...' என்று அண்ணாந்து மலையைப் பார்த்துக் கை கூப்பி விட்டுக் கன்னத்தில் போட்டுக் கொண்டு அடிவாரத்துக்குத் திரும்பி விடுவார் கள் (இதையும் மீறி பொறுமையாக அங்கேயே அமர்ந்து வெள்ளம் வடிந்த பின், மலை ஏறிச் செல்லும் முரட்டு பக்தர்களும் இருக்கவே செய்கிறார்கள்). அதனால்தான் சொன்னோம்- ஆகாய கங்கையில் நீர் பொங்கிப் பெருகி வழியும் காட்சியைக் காண்பதற்கு பெரும் பாக்கியம் செய் திருக்க வேண்டும் என்று.
சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் அமைவிடம் பற்றி சித்த புருஷரான கோரக்கர் சொல்வதைப் பார்ப்போமா?
'சுந்தர மகாலிங்கம் திருக்கோயிலின் வடதிசைப் பக்கம் செல்கிற பாதை வழியே கூப்பிடு தூரம் சென்றால், அங்கு ஓர் ஆறு வருகிறது. அந்த ஆற்றையும் கடந்து வட திசை செல்கிற பாதையில் இன்னும் சற்று தொலைவு பயணித்தால், அம்பு விடுகிற தொலைவுக்கு அப்பால் அந்தப் பாதையானது, மேற்கு முகமாகச் செடிகள் அடர்ந்த காட்டுக்குள் போகும். அதையும் கடந்து அரை நாழிகை வழித் தொலைவு போனால் பெரிய காவு வருகிறது. அந்தக் காவுக்குள் நுழைந்து அரை நாழிகை வழித் தொலைவில் சந்தன மகாலிங்கம் ஆலயம் இருக்கிறது.
அந்தக் கோயிலுக்கு வட திசை யில் காளி கானலில் இருந்து ஓடை போல தீர்த்தம் வந்து விழுந்து கொண்டிருக்கிறது. அதில் தீர்த்த மாடி, சந்தன மகாலிங்கத்தை தரிசித்துக் கொள்ளவும். சந்தன மகாலிங்கத்துக்குக் கூப்பிடு தொலைவில் தென்மேற்குத் திசையில் சட்டை முனிவர் குகை இருக்கிறது.'
சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கோரக்கர் சொன்ன இந்த அமைப்பு இன்றைக்கும் மாறாமல் கிட்டத்தட்ட அப்படியே இருப்பதை இயற்கையின் அதிசயம் என்றே சொல்ல வேண்டும். விமானங்கள், சந்நிதிகள், சட்டைநாதர் குகை என்று கொள்ளை அழகுடன் காட்சி தருகிறது சந்தன மகாலிங்கம் திருக்கோயில்.
சந்தன மகாலிங்கம் ஆலயத்தைத் தரிசிப்பதற்கு முன், இதன் அமைவிடத்தைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்வோம். சமீப காலத்திய சில சம்பவங்களை அறிந்து கொள்வோம்.
தற்போது சந்தன மகாலிங்கம் கோயில் கொண்டுள்ள இடம், 1990-ஆம் ஆண்டுக்கு முன்வரை நாணல் செடிகள் மண்டிக் கிடந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இங்கு பூஜை செய்யும் பூசாரிகள், நாணல் செடிகளை விலக்கி விட்டுக் கொண்டே வந்து சந்தன மகாலிங்கத்துக்கு பூஜை செய்வார்கள். சந்தன மகாலிங்கத்தைச் சுற்றி ஆகாய கங்கையின் தண்ணீர் எந்நேரமும் சலசலவென ஓடிக் கொண்டே இருக்கும். யானை, புலி, கரடி போன்ற மிருகங்கள் அவ்வப்போது இங்கே தென்படுவதுண்டு.
சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வரும் வயது முதிர்ந்த ஒரு சில அன்பர்கள் சதுரகிரிக்கு வந்து விட்டு, சந்தன மகாலிங்கத்தைத் தரிசிக்காமல் அப்படியே கீழே இறங்கி விடுகிறார்கள்.
சதுரகிரி யாத்திரை என்பது ரெட்டை மகாலிங்கம், பிலாவடி கருப்பர், சுந்தரமூர்த்தி, சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய அனைத்து தெய்வங்களையும் தரிசித்தால்தான் பூர்த்தி ஆகிறது. அவ்வளவு தொலைவு கஷ்டப்பட்டு மலை ஏறி விட்டு, சதுரகிரி வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்த சந்தன மகாலிங்கத்தைத் தரிசிக்காமல் திரும்பக் கூடாது.
ஒரு காலத்தில் சுந்தர மகாலிங்கத்தை தரிசித்து விட்டு வருபவர்கள் சந்தன மகாலிங் கத்தை வழிபட வருவதற்கு ரொம்பவும் சிரமப் படுவார்கள். காரணம்- மிகப் பெரிய யானைக் கூட்டங்கள் சந்தன மகாலிங்கம் ஆலயத்தின் அருகே 'டேரா' போட்டு உலா வந்து கொண்டிருக் குமாம். மதிய நேரத்தில் இந்தப் பக்கம் எவருமே வர முடியாதாம்.
யானைகளே கூட்டம் கூட்டமாக வந்து, ஆகாய கங்கை நீரை துதிக்கையில் முகர்ந்து, சந்தன மகா லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வணங்கிய தருணங்களும் உண்டாம். இந்தக் காட்சியைப் பார்த்து தரிசித்த அன்பர்கள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள். எனவே, இந்த யானைக் கூட்டத் துக்குப் பயந்தே பக்தர்கள் வராமல் இருந்த கால மும் உண்டு.
தற்போது, மிகுந்த நம்பிக்கையுடன் பக்தர்கள் தைரியமாக இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்களின் இந்த தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் முக்கிய காரணம்- சந்தன மகாலிங்கத்தின் திருவருள் என்றுதான் சொல்ல வேண்டும்!

எந்த ஒரு விஷயத்தையும் எழுத்தில் விளக்கும்போது ஓரளவுக்குத்தான் சொல்ல முடியும். அனுபவபூர்வமான உண்மைகளையும் காட்சிகளையும் அப்படியே எழுத்தில் கொண்டு வர முடியும் என்றாலும், படிப்பவர்கள் அதை எப்படி புரிந்து கொள்வார்கள் என்பதும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். மலைக்கு மேல் நடந்து செல்லும் பாதை சற்று கடினமாக இருக்கும் என்று எழுத்தில் எழுதத்தான் முடியும்; அதில் உள்ள சிரமங்களை ஓரளவுக்குத்தான் சொல்ல முடியும். இன்னும் கொஞ்சம் தெளிவாக இந்தச் செய்தியை வாசகர்களுக்கு உணர்த்த வேண்டும் என்றால், இதை விளக்கும் சில புகைப்படங்களைப் பிரசுரிக்க முடியும்.
சதுரகிரிக்குச் செல்வதற்கு உடல் வலிமையை விட மன வலிமைதான் அதிகம் வேண்டும் என்று சில இதழ்களுக்கு முன் எழுதி இருந்தோம். வயது முதிர்ந்தோரும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோரும் சதுரகிரிக்கு வந்து தரிசித்துச் சென்ற செய்தியையும் எழுதி உள்ளோம். இவை எல்லாம் இறை அருளால் அவர்களுக்குச் சாத்தியமாயிற்று. இதுபோல் எல்லோருக்கும் வாய்க்குமா? எல்லோராலும் சுலபமாக மலை ஏறிச் சென்று சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கத்தை தரிசித்துத் திரும்ப முடியுமா? இதெல்லாம் நம் மனதில் ஏற்படுகிற இயல்பான கேள்விகள்.
சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் ஆலயம் தொடர்பான அன்பர்கள் சிலர் நம்மிடம் சொன்ன விஷயங்களை, அவர்களது அறிவுறுத்தலாகக் கீழே தந்துள்ளோம். சதுரகிரி யாத்திரை செல்ல வேண்டும் என்று நினைக்கிற வாசக அன்பர்கள் இதை அவசியம் தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
''மலைக்கு மேலே ஏறி வரும் பெண் பக்தர்கள் சிலர், 'இவ்வளவு தூரம் சிரமப்பட்டு ஏறி வரணும்னு 'சக்தி விகடன்'ல போடவே இல்லியே' என்று கஷ்டப்பட்டு மலைக்கு மேலே வந்து பெருமூச்சு விடுகிறார்கள். இன்னும் சிலர், 'ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி வந்தாலும் இருட்டுவதற்குள் மலை உச்சிக்கு வந்து சேர முடிய வில்லையே' என்று தவித்துப் புலம்புகிறார்கள். சமீபத்தில் ஒரு தம்பதி, மேலே ஏற முடியாமல் ரெட்டை லிங்கம் சந்நிதியிலேயே இரவு படுத்து விட்டுக் காலையில் மேலே வந்தார்கள். இதெல்லாம் ஆபத்தானவை. பகலில் ஏற ஆரம்பித்தவர்கள், சிரமப்பட்டு பயணித்து, இருட்டின பிறகு மேலே வருகிறார்கள். வரும் வழியில் யானைகள் கடந்து செல்லும் சில பகுதிகள் இருக்கின்றன. கரடி களும் இருக்கின்றன. தவிர, இரவு நேரத்தில் வெளிச்சம் தெரியாததால் ஏதேனும் பள்ளத்தில் காலை வைத்து விட்டால் விபரீதம்தான்!
கடந்த சித்ரா பௌர்ணமியின் போது பெரம்பூரைச் சேர்ந்த ஒரு அன்பர், ஆறேழு நண்பர்களுடன் சதுரகிரிக்கு ஏறி வந்துள்ளார். இதய நோய் உள்ளவர் அவர். மலை ஏறி வரும்போது ஒரு கட்டத்தில் இதயத்தில் வலி ஏற்பட்டு, அசந்தர்ப்பம் ஆகி விட்டது. பாவம், அவரது உடலைக் கஷ்டப்பட்டுக் கீழே இறக்கிக் கொடுத்தோம். இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென வந்த யானைக் கூட்டத்தால் ஒரு பக்தர் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, மலைக்கு வரும் பக்தர்கள் கூடுதல் கவனத்துடன் வர வேண்டும் என்பதை எங்கள் கோரிக்கையாக வைக்கிறோம். எல்லோரும் மலைக்கு வந்து இந்த இறை இன்பத்தைப் பெற வேண்டும். தனியாகப் புறப்பட்டு வருவதைப் பெரும்பாலும் தவிர்த்தால் நல்லது. எவருக்கும் தொந்தரவு தராமல் தங்களால் மலை ஏறி வந்து தரிசிக்க முடியுமா என்பதை தீர்மானித்து விட்டு, ஒரு தெளிவுடன் புறப் பட வேண்டும்.
பன்னிரண்டு கி.மீ. தொலைவைக் கடக்க சாதா ரணமாக நடந்து வரும் ஒருவருக்குக் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஆகலாம். நடப்பவரின் வேகத்தைப் பொறுத்து இது கூடலாம்; குறையலாம்.
மலை மேல் ஏறுபவர்கள் மாலை நான்கு மணிக்குள் மலை உச்சியில் இருக்கும்படி தங்கள் பயணத்தை தாணிப்பாறையில் இருந்து துவக்க வேண்டும். ஏனென்றால், இது மலைப் பகுதி என்பதால் சீக்கிரமே இருட்டி விடும். இருட்டிய பிறகு மேலே வந்து சேர்வதைத் தவிர்க்க வேண்டும். யாத்திரை நல்ல விதமாக நடந்து முடிய இந்த விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் எங்களுக்கும் மகிழ்ச்சி; வந்து செல்லும் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை அவசியம் எழுதுங்கள்'' என்று நம்மிடம் சொன்னார்கள்.
- (அதிசயங்கள் தொடரும்)

No comments:

Post a Comment