பூரம் திருவிழா ஸ்ரீவடக்குநாதன் கோயிலில் நடந்தாலும் இதில் சுற்றுப்புற ஆலயங்களில் இருந்து ஊர்வலமாக ஸ்வாமிகளும் யானைகளும் வந்து பங்கேற்கின்றன. இவற்றில், முக்கியமான திருவம்பாடி ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் மற்றும் பரமேக்காவு ஸ்ரீபகவதி ஆகியோர் முக்கியப் பங்கு வகிப்பார்கள்!
ஸ்ரீவடக்குநாதன் கோயிலில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது திருவம்பாடி ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் திருக்கோயில். திருச்சூர் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில்! பரபரப்பான, முக்கிய சாலையையட்டியே அமைந்துள்ளது கோயிலின் நுழைவாயில். நுழைந்ததும், கோயிலுக்குச் சொந்தமான யானைகளைத் தரிசிக்கலாம் (ஐந்து ஆண் யானைகளும் ஒரு பெண் யானையும் உள்ளதாம்!).
மூலவரின் திருநாமம் ஸ்ரீஉன்னிகிருஷ்ணன். அதாவது, ஸ்ரீபால கிருஷ்ணன். இவருக்கு இடது புறச் சந்நிதியில், ஸ்ரீபகவதி காட்சி தருகிறாள். ஸ்ரீகணேசர், ஸ்ரீதர்மசாஸ்தா, ஸ்ரீகண்ட கர்ணா, ஸ்ரீரக்தேஸ்வரி, ஸ்ரீபைரவர் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
திருச்சூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள எடக்கலத்தூர் எனும் கிராமத்தில், ஸ்ரீபார்த்தசாரதி எனும் திருநாமத்துடன் கோயில்கொண்டிருந்தவர், பின்னாளில் திருவம்பாடி தலத்தில் ஸ்ரீஉன்னிகிருஷ்ணன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இதனால், எடக்கலத்தூர் தலத்தையும் திருவம்பாடி கோயில் என்றே அழைக்கின்றனர் பக்தர்கள்.
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு, எடக்கலத்தூர் கிராமத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டதாம்! தங்கள் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி எங்கேனும் செல்வது என முடிவு செய்தனர், ஊர்மக்கள் சிலர். அப்போது ஸ்ரீபார்த்தசாரதியின் திருவிக்கிரகத்தையும் எடுத்துக் கொண்டு, அன்றிரவு கிளம்பியவர்கள், கச்சனப்பள்ளி இல்லம் எனும் புகழ்பெற்ற வீட்டில் வசித்த நம்பூதிரி தம்பதியிடம் விக்கிரகத்தை ஒப்படைத்தனர். அந்த இல்லம், திருவம்பாடி கோயிலில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது.
'கொஞ்சி விளையாடக் குழந்தை இல்லையே...’ என்கிற கவலையில் இருந்த அந்த நம்பூதிரி தம்பதி, 'ஸ்ரீஉன்னிகிருஷ்ணனே குழந்தையாக வந்துவிட்டான்’ எனப் பூரித்தனர். அந்த விக்கிரகத்துக்கு ஆராதனைகள் செய்து அனுதினமும் வழிபடத் துவங்கினர். இதில் மகிழ்ந்த ஸ்ரீபார்த்தசாரதி, அவர்களுக்காக ஸ்ரீகிருஷ்ணனாக, குழந்தையாக மாற திருவுளம் கொண்டார். சாரதியாக கையில் வைத்திருந்த சவுக்கை வீசி எறிந்தார். வலது கையில் புல்லாங்குழல், இடது கையில் நம்பூதிரி தம்பதி வழங்கிய வெண்ணெய் ஆகியவற்றுடன் ஸ்ரீபாலகிருஷ்ணனாகக் காட்சியளித்தார்!
ஸ்ரீபாலகிருஷ்ண விக்கிரகத்தின் அழகில் பூரித்தவர்கள், தற்போது ஆலயம் உள்ள இடத்தில், அந்த விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். மெள்ள மெள்ள... ஸ்ரீகிருஷ்ணரின் கீர்த்தி பரவத் துவங்கியது.
அந்தத் தம்பதி, கொடுங்களூர் ஸ்ரீபகவதியின் மீதும் மாறாத பக்தி கொண்டிருந்தனர். சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தேவியைத் தரிசிக்க... மாதந்தோறும் நடந்து சென்று, வழிபடுவது அவர்கள் வழக்கம்! ஆனால், முதுமை அடைந்த நிலையில், அவர்களால் கோயிலுக்குச் சென்று வணங்க முடியவில்லை. இதில் ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தார்கள், அந்தத் தம்பதியர். இதைக் கண்டு கலங்கிய ஸ்ரீபகவதி, அந்தத் தம்பதி வீட்டின் நடுவே, விக்கிரகமாகத் தோன்றி காட்சி கொடுத்தாள்.
இதில் நெக்குருகிப் போனவர்கள், ஸ்ரீஉன்னிகிருஷ்ணரின் ஆலயத்தில், அவளின் திருவிக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடலா யினர். அவள் குழந்தையுருவில் இருப்பதால்... ஸ்ரீபால பத்ரகாளி என அழைக்கப்படுகிறாள். திருவம்பாடி ஸ்ரீஉன்னிகிருஷ்ண ரையும் ஸ்ரீபால பத்ரகாளியையும் தரிசித்து, மனதாரப் பிரார்த்திக்க... நம் குறைகளைப் போக்கி, நம்மைக் காத்தருள்வர் என்பது ஐதீகம்!
ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்த நிலை மாறி, தற்போது மிகப் பிரமாண்ட மாக ஆலயம் திகழ்கிறது. கோயில் நிர்வாகம் சந்தீபாணி வித்யா நிகேதன் எனும் பெயரில் ஐ.சி.எஸ்.சி தரப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறது. ''அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். ஐந்து மணிக்கு, ஸ்ரீகிருஷ்ணருக்கு 'வாக்கச்சாத்து’ எனும் எண்ணெய் குளியல் நடைபெறும். மூலிகைச் சாந்து, பால், தண்ணீர் கொண்டு நீராட்டல் இறைவனின் திருமேனிக்கு நடைபெறும் அழகைப் பார்க்க வேண்டுமே..! இதையடுத்து காலையில் நடைபெறும் பூஜையில், உத்ஸவர் திருமேனி... யானை மீது அமர்ந்து மூன்று முறை பிராகார வலம் வருவார். 11 மணிக்குக் கோயில் நடை சார்த்தப்படும். மாலையில் 4.30 முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்'' என்று திருவம்பாடி தேவஸம்போர்டு பிரசிடென்ட் பொறுப்பில் உள்ள புரபசர் மாதவன் குட்டி தெரிவித்தார்.
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, தசரா விழா, நவம்பர் மாதத்தில் ஸ்ரீபகவதிக்கு களம்பட்டுத் திருவிழா, ஜனவரியில் வேலா திருவிழா, வைகுண்ட ஏகாதசி, திருஉத்ஸவம், பிரதிஷ்டை தினத் திருவிழா நடைபெறும். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியைத் தொடர்ந்து ரிக் வேத அர்ச்சனை என்ற பெயரில் ரிக் வேத மந்திரங்கள் 8 நாட்களுக்கு ஓதப்படுகின்றன.
அதேபோல் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவும் டிசம்பர் மாதத்தில் குசேலர் தின விழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. குசேலர் தின நாளில், இனிப்பான அவல் நைவேத்தியம் செய்யப் படுகிறது. இந்த நாளில் வந்து வணங்கி, பிரசாதத்தை பெற்றுக் கொண்டால், வறுமை நீங்கும்; ஐஸ்வரியம் பொங்கும் என்பது ஐதீகம்!
திருவம்பாடி தலத்துக்கு வாருங்கள். திவ்வியமான ஸ்ரீகிருஷ்ணரையும் ஸ்ரீபகவதியையும் தரிசியுங்கள்!
No comments:
Post a Comment