Wednesday, 6 September 2017

தீபங்கள பேசும் திருக்கார்த்திகை!


கார்த்திகை தீபத்தின் நோக்கம் பாவம் போக்குதல் என்பதுதான். திருவண்ணாமலை, பழநி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல தலங்களில் மலை உச்சியில் தீபம் ஏற்றுகிறார் கள். மற்ற தலங்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
தீபத் திருவிழா நாட்களில் தேரோட்டம் நடைபெறும். உண்ணாமுலை அம்மன் தேரை, பெண்கள் மட்டுமே இழுத்து செல்வர். தீபத்திருநாளன்று அதிகாலையில் அண்ணாமலையார் சந்நிதியில் பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். மகாதீபம் ஏற்றுவதற்கான வெண்கல கொப்பரை கி.பி.1745-ல் மைசூர் சமஸ்தான அமைச்சர் வெங்கடபதிராயால் வழங்கப்பட்டது.
பார்வதி தேவியை சிவபெருமான் தன் இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனதை குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று மாலைவேளையில் திருவண்ணாமலை கோயிலுக்குள் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடக்கும். இந்த ஒருநாள் மட்டுமே இவருடைய தரிசனத்தைப் பெற முடியும். கொடிமரத்தின் அருகே பரணி தீபங்கள் ஒன்று சேர்ந்ததும் தீப்பந்தத்தை அடையாளமாகக் காட்டுவர். அதன் பிறகே, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இந்த மலை தீபத்தை ஏற்றும் உரிமை பர்வதராஜ குல மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்கும் தொழிலைக் கொண்ட இவர்கள் தங்கள் குல தெய்வமாகிய பார்வதிதேவிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் இந்த வழிபாட்டை செய்கின்றனர்.
திருவண்ணாமலை பகுதியை ஆட்சிசெய்த வல்லாள மகராஜாவுக்கு மகப்பேறு வாய்க்க வில்லை. சிவபக்தியில் சிறந்த இவனுக்கு, அந்திமகாலம் வந்தது. ஈமக்கடன் செய்யப் பிள்ளை இல்லையே என்று வருந்தினான். 'வருத்தம் வேண்டாம். நானே உனக்கு உத்தரக் கிரியை புரிவேன்' என்று அண்ணாமலையாரின் அசரீரி ஒலித்தது. அதன்படி, மாசிமகத்தன்று இந்த மன்னனுக்கு சிவபெருமானே ஈமக்கடன் செய்யும் ஐதீக விழா இப்போதும் நடக்கிறது.
திருவண்ணாமலையில் (மாட்டுப் பொங்கல் அன்று) நடைபெறும் திருவூடல் உத்ஸவத்தின்போது இறைவனும் இறைவியும் கிரிவலம் வருவர். இதனால் 'மலையை சுற்றும் மகாதேவன்’ என்ற சிறப்பு பெயர் பெற்றார் சிவபெருமான். அதன்படி, கிரிவலம் வந்த இறைவனும் இறைவியும் கோயிலுக்குள் நுழையும்போது சந்திரன் வெள்ளைக் குடை பிடித்தும், சூரியன் கையில் விளக்கேற்றியும் வரவேற்க, இந்திரனும் அஷ்டவசுக்களும் மலர் தூவி வரவேற்பார்கள் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment