Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 22

                                            எட்டி மரம்


ரங்களை வழிபடும் வழக்கம், வேத காலத்திலேயே இருந்துள்ளது. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு, மரங்கள் வளர்ந்த அடர்ந்த வனத்தில், ஆலயங்களை எழுப்பினார்கள் முன்னோர்கள். அங்கே எந்த மரம் அதிகமாக வளர்ந்து கிளை பரப்பியிருந்ததோ, அந்த மரத்தை ஆலயத்தின் விருட்சமாக நிர்ணயித்தனர்.
அரிய வகை மருத்துவக் குணங்கள் கொண்ட அந்த விருட்சங்கள், உலகெங்கும் அழிந்தாலும், ஆலயத்துக்குள் தெய்வீக மரமாகப் போற்றி வளர்க்கப்படும்; அப்படி வளர்கிற மரத்திலிருந்து பரவும் விதைகள், பல மரங்களாகத் தழைத்துப் பெருகும் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டனர்.
இதேபோல், கிரகங்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்துகிற நல்ல கதிர்வீச்சுக்களை உள்வாங்கி, தனக்கென உள்ள தனித்துவக் குணத்துடன் சேர்த்து, மானிட வர்க்கத்துக்கு நற்பயன்களை அளிக்கவல்லவை விருட்சங்கள். ஒவ்வொரு கிரகத்துக்கும் அதனைச் சார்ந்த விருட்சங்கள் தனித்தனியே உள்ளன.
இதுவரை, நவக்கிரகங்கள் மற்றும் ராசிகளுக்கு உரிய தலவிருட்சங்களைப் பார்த்தோம். இனி, நட்சத்திரங்களுக்கு உரிய தலவிருட்சங்களையும் தலங்களையும் பார்ப்போமா?!
ஒரு குழந்தை ஜனிக்கிறபோது, வானில் எந்த நட்சத்திரக் கூட்டம் இருக்கிறதோ, அதுவே அந்தக் குழந்தையின் நட்சத்திரம். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், மேஷ ராசியுடனும் செவ்வாய் கிரகத்துடனும் தொடர்பு கொண்டவர்கள்; துணிச்சலும் விடாமுயற்சியும் மிகுந்தவர்கள்; நிதானமானவர்கள்; அறிவுத்திறன் கொண்டவர்கள்; உழைக்கத் துணிந்த வர்கள்; தன்னம்பிக்கையானவர்கள்; எடுத்த காரி யத்தை விரைந்து முடிப்பதில் வல்லவர்கள். அழகிய கண்கள், அகல நெற்றி, பரந்த மார்பு, கவர்ச்சிகரமான முகம் எனத் திகழ்பவர்கள்.
இவை, அசுவினி நட்சத்திரத்தின் நல்ல கதிர் வீச்சுகளால் விளையும் நன்மைகள். அதேநேரம், தீய கதிர்வீச்சுகள் படும்போது, துர்க்குணங்கள் எட்டிப்பார்ப்பதைத் தவிர்க்கமுடியாது. தீய நண்பர் சகவாசம், மதுப் பழக்கம், சூதாட்டம் போன்ற கெட்ட செயல்களில் ஈடுபடுவார்கள். இதனை, அசுவினி நட்சத்திர தோஷம் என்பர். இந்தத் தோஷத்தில் இருந்து நிவர்த்தி அளிப்பது எட்டி மரம்.
கசப்புத் தன்மையும், விஷ குணமும் கொண்டது எட்டி மரம். அசுவினி நட்சத்திர தோஷமுள்ளவர்கள், எட்டி மர நிழலில் அமர்ந்தால், தோஷமானது இனி எட்டிக்கூடப் பார்க்காது! இந்த மரமானது, அசுவினி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளை உறிஞ்சித் தனது உடலில் சேர்த்துக் கொள்கிறது. இதுவே மின்காந்த சக்தியாக மாறி, இந்த மரத்தைத் தொடுபவர்களுக்கு நற்பலன்களை அளிக்கும் என வானவியல் மூலிகை சாஸ்திரம் தெரிவிக்கிறது.
வேலூர் மாவட்டம், ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், பழைமை வாய்ந்த ஸ்ரீவால்மீகீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தலத்தின் ஸ்தலவிருட்சம் எட்டி மரம்.
ஆற்காட்டையட்டி ஓடுகிறது பாலாறு. 'ஷடா’ என்றால் '6’ ; ஆரண்யம் என்றால் காடு. எனவே, இந்த ஊரை ஷடாரண்யம் என்பர். இந்தத் தலத்தில் ஓடுகிற ஆற்றின் வடகரையிலும் தென்கரையிலும் உள்ள தலங்களை, ஷடாரண்ய க்ஷேத்திரங்கள் என்பர்.
இங்கே, வாலாஜாவில் உள்ள வன்னிக்காடு பகுதியில், அகத்திய முனிவர் பூஜித்த ஸ்ரீபுவனேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம்- வன்னி மரம்!  
வாலாஜாவில் உள்ள குடைமல்லிக் காட்டுப் பகுதியில், அத்திரி முனிவர் வழிபட்ட ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீஅத்திரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம்- குடை மல்லிகை!
ராணிப்பேட்டை- காரை பகுதியில், கௌதமர் வழிபட்ட ஸ்ரீகிருபாம்பிகை சமேத ஸ்ரீகௌதமேஸ்வரர் கோயிலின் தல விருட்சம்- காரைச் செடி.
ராணிப்பேட்டை- அவரைக்கரை பகுதியில், பலவித பழ மரங்கள் நிறைந்த வனத்தில், காச்யப முனிவர் வழிபட்ட ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ஸ்ரீகாச்யபேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் விருட்சம்- பழ மரங்கள்.
ஆற்காடு- வேப்பூரின் வேம்பு வனத்தில் வசிஷ்டர் வழிபட்ட ஸ்ரீபால குஜாம்பிகை சமேத ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதன் விருட்சம்- வேம்பு.
ஆற்காடு- வேலூர் வழியில், புதுப்பாடி எனும் ஊரில் மாமரங்கள் அடர்ந்த வனத்தில், பரத்வாஜ முனிவர் வழிபட்ட, ஸ்ரீதர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீபரத்வாஜேஸ்வரர் கோயில் உள்ளது. இதன் தல விருட்சம்- மாமரம்!
ஆற்காட்டை அடுத்த மேல்விஷாரம் எனும் ஊரில், விஷ மரக்காட்டுப் பகுதியில், வால்மீகி முனிவர் வழிபட்ட ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீவால்மீகீஸ்வரர் கோயில் உள்ளது. இந்தத் தலத்தின் விருட்சம்- எட்டி மரம்!
ஆக, சப்த ரிஷிகளும் கடும் தவம் புரிந்து, அம்மையையும் அப்பனையும் மணக் கோலத்தில், கண்குளிரத் தரிசித்த இந்தத் தலங்களை, மகாசிவராத்திரி நாளில், வலம் வந்து வணங்கினால், திருக்கயிலாயத்தை வலம் வந்த புண்ணியம் கிடைக்கும்; பாபங்கள் நீங்கி, சாபங்கள் விலகி, நிம்மதியாக வாழலாம் என்பர்.
எட்டிப் பழம், சிவப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் பார்ப்பதற்கு அழகாகவும், உள்ளே வெள்ளையாகவும் விதைகள் நெடுக்காகவும் இருக்கும். எட்டிப் பழங்களை லேசாக வதக்கி, ஓடுகளையும் கொட்டைகளையும் நீக்கி, உள்ளேயுள்ள சதைப்பகுதியைத் துணியில் வைத்துப் பிழிந்து சாறெடுத்து, அதே அளவு எண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி, வீக்கங்களில் பற்றுப்போட்டால்... பட்டெனக் கேட்குமாம்!
தொழுநோயாளிகளுக்கான மருந்துகள், எட்டிப் பழச்சாறின் துணையுடன் தயாராகின்றன. எட்டிக் கொட்டையில் இருந்து, ஒருவகை உப்பு எடுக்கப்படுகிறது. பக்கவாதம், கண் புகைச்சல், ஜன்னி, வலிப்பு, பாம்புக்கடி, ஆசனக்கட்டி ஆகியவற்றுக்கு, மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த உப்பைப் பயன்படுத்துவது சிறப்பு என்பர். இந்த மரத்தின் தோலைச் சீவி, வெயிலில் காயவைத்து, சூரணமாக்கி, ஒன்று அல்லது இரண்டு குன்றிமணி அளவு ஜுரம், வலி ஆகியவற்றுக்குத் தரப்படுகிறது.
இதே அளவுடன், கல் உப்பைச் சேர்த்து மென்றால், தேள் கடியில் இருந்து நிவாரணம் பெறலாம். இதன் பட்டையைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் தைலங்கள், தோல் நோய் களுக்கு நிவாரணமாகத் திகழ்கின்றன.
நரம்புப் பிரச்னை மற்றும் தளர்ச்சி, பக்கவாதம், மூட்டுவலி மற்றும் வீக்கம், இளம் பிள்ளை வாதம் முதலானவற்றில் இருந்து விடுபடுவதற்கு, எட்டியைப் பயன்படுத்து கின்றனர். எட்டி மர விதைகளை முறை யாகப் பக்குவப்படுத்தி, அதிலுள்ள விஷத் தன்மையை முறித்த பிறகே, மருந்தாகப் பயன்படுத்தவேண்டும்.
ஊத்தங்கரை ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயிலிலும், திருக்காளத்தி சிவ ஸ்தலத் திலும், எட்டி மரம் தல விருட்சமாகப் போற்றி வணங்கப்படுகிறது!
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment