Sunday 22 October 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! -10

தேவார மூவராலும் பாடல் பெற்ற திருத்தலம் திருவெண்காடு. ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரராக இறைவனும், ஸ்ரீபிரும்மவித்யாநாயகியாக இறைவியும் அருளும் இந்த க்ஷேத்திரம், வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
மூன்று தீர்த்தங்கள், ஆடல்வல்லான் சபை, அகோரமூர்த்தி தரிசனம்... என பல சிறப்புகளு டன் திகழும் இத்தலத்தின் கூடுதல் விசேஷம்... ஸ்ரீவிலங்கு தறித்த விநாயகர்!
பெரும் தனவானாகிய திருவெண்காடர், சிவபக்தரும்கூட. ஒருநாள் இவரது கனவில் தோன்றிய இறைவன், 'நாளை திங்கள்கிழமை திருவெண்காடு அடைந்து, அங்கு வரும் அடியார் தரும் சிவலிங்கத்தைப் பெற்று சிவ பூஜை செய்து வருக’ எனப் பணித்தார். அதன்படியே, ஆவணி மாதம் திருவோண நட்சத்திரமும் பிரதோஷமும் கூடிய நன்னாளில், தன் தாயாருடன் திருவெண்காட்டை அடைந் தார் திருவெண்காடர். அங்கே, முனிவர் போன்று காட்சி அளித்த ஒருவரிடம் சிவ தீட்சையும் சிவலிங்கமும் பெற்று வழிபாட்டைத் தொடர்ந்தார்.
திருமணமாகி, நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத இவருக்கு, திருவிடை மருதூர் இறைவனின் அருளால், குழந்தை மருதவாணன் பிறந்தான். ஒருமுறை, அயல்நாடு சென்று திரும்பிய மருதவாணன், தங்கப் பேழை ஒன்றை தந்தைக்குப் பரிசளித்தான். அதனுள், காது உடைந்த ஓர் ஊசியும் ஓலை நறுக்கு ஒன்றும் இருந்தன. ஓலையில், 'காதற்ற ஊசியும் வராது காண் நும் கடை வழிக்கே’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்ததும், உலகின் நிலையாமை திருவெண் காடருக்கு உறைத்தது. சற்றும் தாமதிக்காமல் துறவு மேற்கொண்டார். அவரைப் பட்டினத்தார் என்றும், திருவெண்காட்டு அடிகள் என்றும் போற்றினர் மக்கள்.
திருவெண்காடரிடம் தலைமைக் கணக்கராக இருந்தவர் சேந்தனார். இவரிடம், 'தமது சொத்துக்களை மக்கள் எடுத்துச் செல்லலாம்’ என அறிவித்ததுடன், நிதி அறையையும் திறந்துவிடும்படி ஆணையிட்டுச் சென்றார் பட்டினத்தார். சேந்த னாரும் அவ்வாறே செய்தார். ஆனால், திருவெண் காடரின் சொத்துக்களை அரசரிடம் ஒப்படைக்காத தாலும், பொதுமக்கள் எடுத்துச் சென்ற பொருட் களுக்குக் கணக்கு காட்டாததாலும் சேந்தனாரைச் சிறையில் அடைத்தான் மன்னன். அவரது சொத்துக் களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தச் செய்தி, பட்டினத்தடிகளிடம் சொல்லப்பட்டது. அவர் திருவெண்காட்டு ஈசனிடம் வேண்டினார்...
மத்தளைத் தயிர் உண்டானும் மலர்மிசை மன்னினானும்
நித்தமும் தேடிக்காணா நிமலனே அமலமூர்த்தி!
செய்தளைக் கயல்பாய் நாங்கூர் சேந்தனை வேந்தனிட்ட
கைத்தளை நீக்கி என்முன் காட்டு வெண் காட்டுளானே!
அதாவது, 'கண்ணனாக அவதரித்து தயிர் உண்ட திருமாலும், தாமரைப்பூவில் வசிக்கும் பிரம்மனும் தினமும் தேடியும் காண இயலாத சித்தனே... சிவமூர்த்தியே! நாங்கூர் சேந்தனுக்கு அரசன் பூட்டிய விலங்கை உடைத்து என் முன் காட்டுவீராக... வெண்காட்டு இறைவனே!'' என்று பாடினார். அடியவருக்கு அருள சித்தம் கொண்டார் சிவனார். அவரது கட்டளைப்படி, திருவெண்காட்டில் அருளும் விநாயகர், சேந்தனாரின் விலங்கைத் தறித்து (உடைத்து), அவரைச் சிறைமீட்டார். அதனால் அவருக்கு, ஸ்ரீவிலங்குதறித்த விநாயகர் என்று திருப்பெயர்!
இதன் பிறகு, சேந்தனார் வாழ்வில், நடந்த சிவத் திருவிளையாடல்கள் அற்புதமானவை! திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய தலங்களுக்கும் சேந்தனார் திருவிசைப்பா பாடியுள்ளார். திரு விடைக்கழி முருகன் தலத்தில் தைப் பூச நன்னாளில் முக்தி பெற்றார் சேந்தனார். சிவபிரான், உமாதேவி, முருகன் ஆகிய மூவருமே வந்து, அவரைக் கயிலைக்கு அழைத்துச் சென்றதாக வரலாறு தெரிவிக்கிறது.
சேந்தனாருக்கு அருளிய விநாயகர் அருள்பாலிக்கும் கோயில், திருவெண் காட்டில் மேல வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந் துள்ளது. இன்றைக்கும்... ஆடி மாத விழாவில், பட்டினத்தடிகள் சிவதீட்சைக்காக திருவெண்காட்டுக்கு எழுந்தருளும்போது, ஸ்ரீவிலங்குதறித்த விநாயகரைத் தரிசித்துச் செல்லும் ஐதீக விழா நடைபெறுகிறது.
- பிள்ளையார் வருவார்

No comments:

Post a Comment