Sunday 22 October 2017

முதல் வணக்கம் முதல்வனுக்கே! - 11

'ஞானமே வடிவாகிய வயலூர் மேவிய  வள்ளலின் தனிப்பெருங்கருணை யினாலே...’ - மடைதிறந்த வெள்ளமென, தமது இன்பத் தமிழ்ச் சொற்பொழிவை இப்படித்தான் ஆரம்பிப்பார் திருமுருக கிருபானந்தவாரியார். ஆமாம், வாரியாரின் பெயரைச் சொன்னதுமே, வயலூரும் நம் நினைவுக்கு வரும். இந்தத் தலத்தில் அருளும் பிள்ளையார்- ஸ்ரீபொய்யாகணபதி.
தேவாரத் திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், பாரதம் ஆகியவற்றை வெளிப்படுத்த அருளியது போலவே, திருப்புகழை உலகுக்கு வெளிப்படுத்திய பெருமையும் விநாயகப் பெருமானுக்கே உண்டு. அவர்தான் வயலூர் ஸ்ரீபொய்யா கணபதி.
உலகை வெறுத்து, திருவண்ணாமலையில் உயிர்விடத் தீர்மானித்த அருணகிரிநாதரை ஆட்கொண்டு, திருவடி தரிசனம் காட்டியருளி, 'முத்தைத் தரு பத்தித் திருநகை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்தவர் முருகப்பெருமான். அவரே, 'வயலூருக்கு வா’ என அருணகிரியாருக்குக் கட்டளையிட்டார். அதன்படி, வயலூர் தலத்தை அடைந்தார் அருணகிரிநாதர்.
திருச்சியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது வயலூர். இயற்கை எழிலார்ந்த இந்தத் தலத்தை குமார வயலூர் என்றும் அழைப்பார்கள். ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீஆதிநாதர் எனும் திருப் பெயர்களுடன் எம்பெருமான் ஈசனும், ஸ்ரீஆதிநாயகி, ஸ்ரீமுன்னிலை நாயகி ஆகிய பெயர்களுடன் அம்மையும் அருளும் திருத்தலம் இது. முருகன் கை வேலால் உருவாகிய சக்தி தீர்த்த திருக்குளம் கோயிலின் எதிரில் அமைந்துள்ளது; ஸ்தல விருட்சம் வன்னி மரம். சுந்தர தாண்டவ கோலத்தில் ஸ்ரீநடராஜர் அருள்வது இந்தத் தலத்தின் சிறப்பம்சம்!
முருகப்பெருமானின் ஆணைப்படி இந்தத் தலத்துக்கு வந்த அருணகிரியார், வயலுரில் ஸ்ரீபொய்யாகணபதி சந்நிதி முன் வந்து உள்ளம் உருகி நின்றார்.
'கைத்தல நிறைகனி அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி...’ என்று பாடி, பொய்யாகணபதியை வழிபட்டார்; 'முதல் எழுத்தாளன் நீயே...’ என்று போற்றினார்; 'என்றன் உயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே... அன்பர் தமக்கான நிலைப்பொருளோனே’ என்று பாடிப் பரவசம் அடைந்தார். தம்மை ஆட்கொண்ட முருகனின் புகழை நிரம்பப் பாட  வேண்டும் என்ற தமது எண்ணம் நிறைவேற, பொய்யாகணபதியை முறைப்படி வலம் வந்து அர்ச்சித்து வணங்கினார். அருணகிரிநாதரின் பக்தியையும் அன்பையும் கண்ட பொய்யாகணபதி, அவரது கனவில் தோன்றி, ''அன்ப! நீ விரும்பிய வண்ணமே முருகவேளின் மயிலையும், கடப்ப மாலையையும், வடிவேலையும், சேவல் கொடியையும், காக்கும் திருவடிகளையும், பன்னிரு தோள்களையும், வயலூரையும் வைத்து திருப்புகழை விருப்பமுடன் பாடுவாயாக!'' என்று அருள்பாலித்தார்.
அருணகிரியாரும், 'செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமுடன் செப்பென எனக்கருள்கை மறவேனே’ (செய்ப்பதி- வயலூர்) என்று தாம்பெற்ற பேற்றை நினைத்து இன்புற்றுப் பாடுகிறார். அதுமட்டுமா...
'இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எட்பொரிய வற்றுவரை இளநீர்வண் -
டெச்சில் பயறப்ப வகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழ மிடிப்பல் வகை தனிமூலம்;
மிக்க அடி சிற்கடலை பட்சணம் எனக்கொளரு
விக்கிந சமர்த்தன் எனும் அருளாழி -
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே
(பக்கரை விசித்ரமணி)
- என்றும் பாடினார். அதாவது, 'கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி பிட்டு, வெள்ளரிப்பழம், மாவு வகைகள், கிழங்குகள், கடலை ஆகியவற்றைப் பட்சணமாகக் கொள்ளும் விக்கின சமர்த்தரே! சடைமுடியப்பர் பெற்ற பெருமாளே!’ என்று பொய்யாகணபதிக்கு நன்றியும் தெரிவிக்கிறார்.
மேலும், விநாயகரின் கட்டளைப்படி, 'வயலூரா! வயலூரா!’ என இந்தத் தலத்தையும் தமது பாடல்களில் வைத்துப் பாடி இன்புற்றார் அருணகிரியார். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்களில், 55 தலப் பாடல்களில் வயலூர் பற்றிய குறிப்பு வருகிறது என்பதே இதற்குச் சான்று!
அருணகிரிநாதருக்குத் திருப்புகழ் பாடும் திறம் தந்தவர் பொய்யாகணபதி. பொய்யான சிற்றின்பத்தைப் பெரிதென எண்ணியெண்ணி, அதையே அனுபவிக்கத் துணை புரியும் பொய்யான அறிவை நீக்குபவர்; மெய் யான- நிலையான (பொய்யாத- நிலைத்த) பேரின்பத்தை அனுபவிக்கத் துணை புரியும் பர ஞானத்துக்குத் தலைவன் ஆதலால், பொய்யாகணபதி எனும் திருப்பெயர் கொண்டாராம் இந்தப் பிள்ளையார். ஆமாம், பொய்யான வாழ்வை நம்பி பூமியில் திரிபவர்களை, மெய்ஞ்ஞானப் பாதைக்குத் திருப்பி அனுக்கிரகம் செய்பவர் இந்த கணபதி.
அருணகிரியார், திருப்புகழ்ப் பாடல் ஒவ்வொன்றை யும், பொய்யான வாழ்வு குறித்து முதற் பகுதியிலும், மெய்ஞ்ஞான வாழ்வு குறித்துப் பிற்பகுதியிலுமாக அமைத்துப் பாடி, வயலூர் பொய்யாகணபதிக்குத் தமது நன்றியைச் சமர்ப்பிக்கிறார் என்றே சொல்லலாம். வயலூரில் ஸ்ரீவிநாயகர் சந்நிதி அருகே அருணகிரியாரின் சந்நிதியும் அமைந்துள்ளது.
திருமுறைகள், ஞான சாத்திரங்கள் முதலானவற்றை வெளிப்படுத்தி அற்புதம் நிகழ்த்திய விநாயகரின் திருமேனிகள் யாவும் வலம்புரியாகவே அமைந்திருப்பது சிறப்பு. மூவரின் தேவாரம் வெளிவரத் துணைபுரிந்த திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் (துதிக்கை வலமாக சுழித்த) வலம்புரி விநாயகரே! அதேபோல், திருப்புகழ் பாடும் முறையை அருணகிரியாருக்கு அருளிய வயலூர் பொய்யாகணபதியும் வலம்புரி விநாயகரே!
வயலூர் கணபதியின் துதிக்கையில் இருப்பது அமுதக் கலசம் என்பர். ஆனால், அது மாதுளம்பழம் ஆகும். இந்தக் கனி, ஞானத்தின் சின்னம். விநாயகர் அறிவு வடிவினன் என்பதற்காகவே, சிவசக்தியிடம் ஞானப்பழம் பெற்றதாகப் புராணம் சொல்கிறது அல்லவா? இதையே, 'ஒளி ரானையின் கரமில் மகிழ் மாதுளம் கனியை ஒருநாள் பகிர்ந்த உமை அருள்பாலா’ என்று திருப்புகழில் சுட்டிக்காட்டுகிறார் அருணகிரியார்.
அவரே, 'பாத பங்கய முற்றிட உட்கொண்(டு) ஓதுகின்ற திருப்புகழ் நித்தம் பாடும் என்பது செய்ப்பதியில் தந்தவன் நீயே’ எனப் போற்றுகிறார்.
சந்தத் திருப்புகழால் கந்தன் புகழைப் பாடி முருகனின் திருவருளைப் பெற அருணகிரியாருக்குத் துணை புரிந்த வயலூர் பொய்யாகணபதியை நாமும் வழிபட்டு வரம் பெறுவோம்!
- பிள்ளையார் வருவார்

No comments:

Post a Comment