Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 48

திறமை, வீரம் மற்றும் அன்பு உள்ளம் கொண்டவர்கள், புகழ் மற்றும் செல்வத்துடன் வாழ்பவர்கள், ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இந்த நட்சத்திரம், வியாழக் கிரகத் துடனும், மீன ராசியுடனும் தொடர்பு கொண்டது. வியாழக்கிழமை மற்றும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை பிறந்தவர்களை ஆட்சி செய்கிறது ரேவதி நட்சத்திரம். இந்தக் காலங்களில், ரேவதி நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகள் பூமியில் அதிக அளவில் படும். இவற்றை, இலுப்பை மரம் தன் உடலுக்குள் சேமித்து வைத்து, உதவுகிறது.
ரேவதி நட்சத்திரத்துக் கெட்ட கதிர்வீச்சுகளால் உண்டாகும் தோஷமும் நோய்களும் நீங்க, இலுப்பை மர நிழலில் தினமும் அரை மணி நேரம் அமர்ந்திருப்பது நன்மை தரும். மண்ணிப்படிக்கரை என்கிற இலுப்பைப்பட்டில் உள்ள கோயிலின் தல விருட்சம், இலுப்பை மரம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.
''மதுகாவனம் (இலுப்பை வனம்) சென்று, அங்கேயுள்ள சிவலிங்க மூர்த்தங்களை வழிபட்டால், விரைவில் வெற்றி கிடைக்கும்'' என்று உரோமச முனிவர் அருள... பஞ்சபாண்டவர் கள் அப்படியே வழிபட்டு, வரம் பெற்றனர். அந்தத் திருத்தலம், இதுவே! இந்தத் தலத்து நாயகன்- ஸ்ரீநீலகண்டேஸ்வரரை தருமர் வழிபட்டார்; அம்பாள்- ஸ்ரீஅமிர்தகரவல்லி. திருக்கரத்தில் அமிர்த கலசத்துடன் காட்சி தரும் அழகே அழகு!
ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீபடிக்கரைநாதரை அர்ஜுனன் வழிபட்டான். ஷோடஸ லிங்கமான ஸ்ரீமகதீஸ்வரரை பீமன் வழிபட்டான். இந்த சிவலிங்கத்தை வணங்கினால், அமாவாசை, பௌர்ணமி முதலான 16 திதிகள் கொடுத்த புண்ணியம் கிடைப் பதுடன், தோஷங்களும் விலகும்; 16 செல்வங்களும் வந்துசேரும். நகுலன் வழிபட்ட ஸ்ரீபரமேஸ்வர லிங்கத்தை வழிபட்டால், வாகன யோகம் கிட்டும்; சகாதேவன் வழிபட்ட ஸ்ரீமுக்தீஸ்வரரை வணங்கினால், கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கும்; திரௌபதி வழி பட்ட ஸ்ரீவலம்புரி விநாயகருக் கும் இங்கு சந்நிதி உண்டு.  
இங்கு பஞ்சபாண்டவர்கள் பூஜை கள் செய்துவிட்டு, போருக்குச் சென்று வென்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இந்தக் கோயிலின் விருட்சம் இலுப்பை மரம். இதன் எண்ணெய் மற்றும் நெய்யில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. இலுப்பை பூவைச் சாப்பிடவும் செய்வார்கள். சொறி, சிரங்கு, புண்கள், காக்கைவலிப்பு, சொட்டுச் சொட்டாக சிறுநீர் பிரிதல், வயிற்றில் வளரும் நாக்குப் பூச்சி, கல்லீரல் மற்றும் நுரையீரல் நோய்கள் ஆகியவற்றுக்கு இலுப்பை மரத்தண்டு, பூக்கள், விதைகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றன, ஆங்கில மருத்துவ நூல்கள். இலுப்பைப் பழம் வயிற்றைச் சுத்தம் செய்கிறது; மலச்சிக்கலைப் போக்குகிறது. மூட்டு வலி, இடுப்பு வலி, வாயுத் தொல்லை ஆகியவற்றைப் போக்குகிறது. பூக்களைப் பால் விட்டு அரைத்துக் கொடுத்தால், உடல் இளைப்பு போகும். சர்க்கரை நோய்க்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
ஈரோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கொடி மாடச் செங்குன்றூர், ராமநாதபுரம்- இலுப்பைக்குடி ஆகிய ஊர்களின் கோயில்களிலும், இலுப்பையே தலவிருட்சம்!

No comments:

Post a Comment