Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 33

கோபம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும் என்பர். இது உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்குப் பொருந்தும். நேர்மையும் பக்தியும் மிகுந்தவ ராகத் திகழும் இவர்கள், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் ஆத்திரப் படுபவர்களாகவும் இருப்பார்கள்; இவர்களின் நடையில் கம்பீரம் இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 21 வரை பிறந்தவர்கள், உத்திர நட்சத்திரத்தின் ஆட்சியில் இருப்பவர்கள். இந்த நட்சத்திரத்தின் நல்ல கதிர் வீச்சுகள்- ஆரோக்கியத்தையும்; கெட்ட கதிர்வீச்சுகள்- தைராய்டு கட்டிகள், மூலக் கட்டிகள், தொழுநோய், வெரிகோஸ்வெயின் எனும் நரம்புச் சிலந்தி நோய் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்குகின்றன. இதை, உத்திர நட்சத்திர தோஷம் என்பார்கள். இந்த தோஷக்காரர்கள் ஆத்தி (மந்தாரை) மரம் மற்றும் அலரிச் செடிகளுக்கு அருகில் அமர்ந்தால், இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை உட்கொண்டால், நோய்களும் தோஷங்களும் நீங்கப் பெறுவர் என்கிறது வானவியல் சாஸ்திரம்!
திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஸ்ரீதிருகுகுழல் உமைநாயகி சமேத ஸ்ரீஉத்தராபதீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் ஆத்தி (மந்தாரை) மரம்! திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம்.நரசிம்ம பல்லவனிடம் படைத் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. மன்னனின் ஆணையை ஏற்று, வாதாபிக்குப் படையெடுத்துச் சென்று, புலிகேசி மன்னனை வெற்றி கொண்டு திரும்பினார். அப்போது, வாதாபியிலிருந்து ஸ்ரீவாதாபி கணபதியின் விக்கிரகத்தை கொண்டுவந்து, தனது சொந்த ஊரான திருச்செங் காட்டங்குடி கோயிலில் பிரதிஷ்டை செய்தார். பிறகு, தன் மனைவி திருவெண்காட்டு நங்கையுடன் சிவத்தொண்டில் ஈடுபட்டார்; பின்னர், சிறுத் தொண்டர் எனப் பெயர் பெற்று, நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
தினமும் சிவனடியார் ஒருவருக்கு உணவளித்த பிறகே, சிறுத்தொண்டரும் அவரது மனைவியும் உண்பார்கள். ஒருநாள், அவர்களின் பக்தியைச் சோதிக்க, அடியவர் போல் வந்தார்  சிவபெருமான். அவரை அன்புடன் வரவேற்றாள், திரு வெண்காட்டு நங்கை. ''ஆடவர் இல்லாத வீட்டுக்குள் நான் நுழைவதில்லை. ஆலயத்தின் அருகில் உள்ள ஆத்தி மரத்தடி யில் காத்திருப்பதாக உன் கணவர் வந்ததும் தெரிவி!'' என்று கூறிச் சென்றார் ஈசன்.
இதனிடையில், உணவளித்து உபசரிக்க சிவனடியார் யாரேனும் கண்ணில் தென்பட மாட்டார்களா எனத் தேடிச் சென்ற சிறுத்தொண்டர், யாரையும் காணாமல், வாடிய முகத்துடன் வீடு திரும்பினார். அவரிடம் அவரது மனைவி நடந்ததைக் கூற, முகம் மலர்ந் தார். விறுவிறுவெனச் சென்று, அந்த அடியவரை வீட்டுக்கு அழைத்து வந்தார். அவரோ, சாப்பிடுவதற்கு முன்பு நிபந்தனை ஒன்று விதித்தார். அதைக் கேட்டு, அதிர்ந்து போனார்கள் சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியும்.
'’பெற்றோர் விருப்பத்துடன், ஊனமில்லாத தலைமகனைக் கறி சமைத்துப் பரிமாறினால், விருந்தை ஏற்கிறேன். உன்னால் முடியுமா?'' - இதுதான் அந்த அடியவர் விதித்த நிபந்தனை. இதற்கு மறுத்தால் தன் சிவத்தொண்டுக்குக் குறைவு ஏற்படுமே என்று கலங்கிய சிறுத்தொண்டர், சம்மதித்தார். பள்ளிக்குச் சென்றிருந்த தன் மகன் சீராளனை அழைத்து வந்து, அவனைப் பலியிட்டு சமைக்கத் தந்தார்.  
உணவு சமைத்து, சிவனடி யாருக்குப் பரிமாறப்பட்டது. ''உங்கள் மகனைக் கூப்பிடுங்கள்; என் பக்கத்தில் உட்காரச் சொல் லுங்கள்; இருவரும் ஒன்றாக உணவருந்துகிறோம்!'' என்றார் சிவனடியார். ''என்ன சுவாமி, என் மகன் எப்படி வருவான்? வரமாட்டானே!'' என்றார் சிறுத்தொண்டர், பொங்கி வரும் கண்ணீரை அடக்கியபடி. உடனே சிவனடியார், ''இல்லை. வருவான். வெளியே போய், அவனைக் கூப்பிடுங்கள். வருவான்!'' என்றார்.
தயங்கியபடியே, மனைவி யுடன் வெளியே வந்த சிறுத் தொண்டர், ''மகனே சீராளா!'' என்று கண்ணீர் பெருக்கெடுக்கக் கதறிக் கூப்பிட... என்ன அதிசயம்! சிரித்த முகத்துடன் ஓடி வந்தான், சீராளன். அவனை அள்ளியணைத்துக் கொஞ்சினர் அவனது பெற்றோர். அப்போது, சிவபெருமான் அங்கே திருக்காட்சி தந்து, அனைவரையும் ஆசீர்வதித்தார். அப்படி ஈசன் சிறுத்தொண்டருக்குக் காட்சி தந்த தலம், திருசெங்காட்டங் குடி! நாள்- சித்திரை மாதம், பரணி நட்சத்திர தினம். வருடந்தோறும் இந்த நாளில், பக்தர்களுக்கு அமுது படைக்கும் திருவிழா இங்கே பிரசித்தம்!
ஐந்து நிலை கோபுரம்; கிழக்குப் பார்த்த ஆலயம். தெற்கு நோக்கிய சந்நிதியில் 'வாய்த்த திருகுகுழலி அம்மை’ என்ற பெயரில் அம்பிகை காட்சி தருகிறாள். உட் பிராகாரத்தில் சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சீராளன் ஆகியோரின் விக்கிரகங்களும் உள்ளன. கோயிலுக்கு அருகில், நம் பாவங்களைப் போக்கும் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், காள மேகப் புலவர், அருணகிரிநாதர் ஆகியோர் போற்றிய அற்புதமான இந்தத் தலம், வேளாக்குறிச்சி ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது. இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் ஆத்தி.
ஆத்தி மர மொட்டுக்கள், அதிக ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தும். மரத்தின் தண்டுப் பகுதியிலிருந்து வெளிப்படும் பிசினை, மாதுளை மலருடன் சேர்த்துக் கஷாயம் தயாரித்துக் குடித்தால், தொண்டை வறட்சி நீங்கி, அதிக அளவில் உமிழ் நீர் சுரக்கும். தொண்டை வீக்கம், தொண்டைக் கட்டி, ஆஸ்துமா, அல்சர் ஆகிய நோய்களையும் குணப்படுத்தும்.
ஆத்தி மரத்தின் வேர், பாம்பின் விஷத்தை முறிக்கவல்லது. ஆத்தி மரத்தின் தழையைக் கஷாயமாக்கி, மலேரியா காய்ச்சலால் உண்டாகும் தலைவலிக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். இதன் பட்டை துவர்ப்பாக இருக்கும். சீதபேதிக்கு மருந்தாகும். உடல் வீக்கங்கள் குறைய, ஆத்தி மரப் பட்டையை அரைத்துப் பற்றுப் போடலாம்.
ஒளவையின் ஆத்திசூடி, புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் ஆத்தி மரம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment