Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 41


🌀🌻🌀🌻 BRS🌀🌻🌀🌻🌀

Ⓜ அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி - நாகப்பட்டினம். Ⓜ



மூலவர் : சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்


உற்சவர் : சோமாஸ்கந்தர்


அம்மன் : பெரியநாயகி, திருநிலைநாயகி


தல விருட்சம் : பாரிஜாதம், பவளமல்லி


தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்


ஆகமம்/பூஜை : பஞ்சரத்திர ஆகமம்


பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்


புராண பெயர் : பிரம்மபுரம், சீர்காழி


ஊர் : சீர்காழி


பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர்

    
🅱 தேவாரப்பதிகம்: 🅱


தோடுடைய செவியன்விடை யேறியோர்

தூவெண் மதிசூடிக்

காடுடைய சுடலைப்பொடி பூசியென்

உள்ளங்கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து

ஏத்தஅருள் செய்த

பீடுடைய பிரமாபுரமேவிய

பெம்மான்இவன் அன்றே. - திருஞானசம்பந்தர்

🐴 தெளிவுரை:🐴

🐲 தோடு என்னும் அணியை அணிந்துள்ள, உமாதேவியை இடப்பாகம் உடைய சிவபெருமான் இடபவாகனத்தில் ஏறி, தூய வெண்மதியைச் சூடி திருவெண்ணீறு மேனியில் பொலிய என் உள்ளத்தைக் கவர்ந்தவன். அப்பெருமான், ஒரு காலத்தில் நான்முகனுடைய வழிபாட்டினை ஏற்று அருள் செய்தவன். அவனே எனக்குக் காட்சி தந்தருளியவன். அவன் இவனே அல்லவா !

🌼 தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 14வது தலம். 🌼

தைரியம், நேர்மை, கண்ணியம், பயண ஆர்வம், நறுமணப் பொருட்கள் மீது பிரியம், பெற்றோரிடம் பாசம் ஆகியவை பூராடம் நட்சத்திரத்துக்காரர்களின் குணங்கள்.


தனுசு ராசி மற்றும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது இந்த நட்சத்திரம். வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 21 முதல் ஜனவரி 19 வரை பிறந்தவர்கள், பூராடம் நட்சத்திரத்தின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இதன் கெட்ட கதிர்வீச்சுகள் பலவித நோய்களையும், நல்ல கதிர் வீச்சுகள் பல நன்மைகளையும் அளிக்கின்றன.


சுக்கிரனின் அம்சமாக வருவது இந்த பூராட நட்சத்திரம். ஜாதக அலங்காரம், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட உடலும் குறுகிய நெற்றியும் உள்ளவர்கள்; வாசனை திரவியங்கள் மீது விருப்பமுள்ளவர்கள்; ஆலோசனை அளிப்பவர்கள்; சுவையான உணவை விரும்பி உண்பவர்கள்; தாய்ப் பாசம் அதிகம் உள்ளவர்கள்; பொய் சொல்லாதவர்கள்; பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர்கள்.


யவன ஜாதகம், பிரகாசமான முகமுள்ளவர்; ஜீவகாருண்யம் உள்ளவர்; துக்கத்துக்குக் கலங்காமல் அதையும் அனுபவிப்பவர் என்று விவரிக்கிறது. வித்யாதரன்இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கனிவான் பார்வையால் அனைவரையும் காந்தமாக ஈர்ப்பார்கள்.

'பூராடம் போராடும்' என்ற கூற்றுக்கு இணங்க எப்பாடு பட்டேனும் நினைத்ததை நடத்தி முடிப்பார்கள். பிரச்னை என்றால், மூலையில் முடங்காமல் தைரியமாக எதிர்கொள்வார்கள். மந்திரியாக இருந்தாலும், மண் சுமப்பவரானாலும் சரிசமமாகப் பழகுவார்கள். இவர்களது வாழ்வில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சம்பவங்களைவிட எதிர்பாராத திடீர் சம்பவங்கள் தான் இவர்கள் வாழ்வை திசை திருப்பும்.


சூது வாது இல்லாமல் பேசுவார்கள். தலை முடி முதல் கால் நகம் வரை அழகு பார்த்து பராமரிப்பார்கள். இவர்கள் ஆவேசப்பட்டாலும் ஆத்திரப்பட்டாலும் அதிலும் ஒரு நளினம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறை காதால் கேட்டால் ,அதை அப்படியே கிரகித்துக்கொள்ளும் கற்பூர புத்தி கொண்டவர்கள்.


அமைதியை மிகவும் விரும்புபவர்கள். பூக்கள், அருவிகள் மற்றும் பசுமையைக் கண்டால் மனதைப் பறிகொடுப்பார்கள். எல்லோரிடமும் மனம் விட்டு பேசுவார்கள். ஆரம்பத்தில் அனைவரையும் முழுமையாக நம்புவார்கள். அனுபவத்தால் பிறகு மாறுவார்கள். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளும் இவர்கள், மற்றவர்களும் அவ்வாறே இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.


பவழ மல்லிகை மரமானது பூராட நட்சத்திரத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலுக்குள் சேமித்து வைத்துக்கொள்ளும். எனவே பூராட நட்சத்திர தோஷம் உள்ளவர்கள், இந்த மரத்தின் நிழலில் தினமும் அரைமணி நேரம் செலவிட்டாலோ, இதனால் தயாரிக்கப்படும் மருந்துகளைச் சாப்பிட்டாலோ நல்ல பலன் கிடைக்கும் என்று வானவியல் மூலிகை சாஸ்திரம் கூறுகிறது.


பவழ மல்லிகை மரம், நாகை மாவட்டம், சீர்காழி ஸ்ரீதிருநிலைநாயகி சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் தல விருட்சமாக உள்ளது.இந்த ஆலயம் தருமை ஆதீன நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
காளிங்கப் பாம்பு பூஜித்த தலம் என்பதால், ஸ்ரீகாளிபுரம் என்று பெயர் பெற்று, அதுவே பின்னாளில் சீகாழி, சீர்காழி என மருவியதாம். இந்தத் தலத்தி மூலவர் ஸ்ரீபிரம்மன் ஸ்தாபித்த சிவலிங்கம் என்பதால், ஸ்ரீபிரம்மபுரீஸ்வர் என்று திருப்பெயர் அமைந்ததாம்.

நாற்புறமும் கோபுரங்கள், திருச்சுற்று மதில்கள், இதனுள் இறைவன், இறைவி மற்றும் திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் உள்ளன. வடக்கு உட்பிராகாரத்தில் ஸ்ரீமுத்து சட்டைநாதரும், தெற்கு உட்பிராகாரத்தில் அறுபத்து மூவரும் உள்ளனர். வடக்குப் பிராகாரத்தில் மேலே மலைக்குப் போக படிக்கட்டுகள் உள்ளன.

முதல் தளத்தில் பெரியநாயகி சமேத பெரியநாயகராக (உமா மகேஸ்வரர்) எழுந்தருளியுள்ள ஸ்ரீதோணியப்பரே குரு மூர்த்தம். ஏழு தீவுகள் அடங்கிய இப்பேரண்டத்தை பெரும் கடலானது ஊழிக்காலத்தில் பொங்கி அழித்தது. பின்னர் இறைவன் உயிர்களைப் படைக்க எண்ணி, பிரணவத்தைத் தோணியாகக் கொண்டு, சுற்றி வருகையில், பிரளயத்திலும் அழியாதிருந்த இந்தத் தலத்தைக் கண்டு இதுவே மூலாதார க்ஷேத்திரம் என அருளி, இங்கு தோணியுடன் வீற்று அருள்பாலிக்கத் தொடங்கினார் இறைவன்.

இரண்டாம் தளத்தில், மலை உச்சியில் ஸ்ரீசட்டைநாதர் இருக்கிறார். ஹரியும் ஹரனும் ஒன்று எனக் காட்டுவதற்காக, மகாவிஷ்ணுவின் தோலையும் எலும்பையும் சட்டையாக அணிந்து சட்டைநாதர் ஆனார் சிவன்.

இந்தத் தலத்தில்தான் திருஞானசம்பந்தருக்கு பார்வதி தேவி திருமுலைப்பால் அருளினாள்.
ஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்ஸவம். இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்ஸவம் மிகவும் விசேஷமானது. ஸ்ரீ திருநிலைநாயகிக்கு ஆடிப்பூர உற்ஸவமும் நவராத்திரி உற்ஸவமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

இந்த ஆலயத்தின் தல விருட்சமாக பவழ மல்லிகை (பாரிஜாதம்) விளங்குகிறது. இதன் மூன்று இலைகளில் விஷ்ணு, சிவன், பிரம்மா ஆகியோர் அமர்ந்திருப்பதாக ஐதீகம்!

இந்த மூலிகையைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. மன்னர் ஒருவருக்கு பாரிஜாதகா என்ற மகள் இருந்தாள். அவள் கதிரவனுடன் காதல் கொண்டாள். ஆனால், அந்தக் காதலைக் கதிரவன் ஏற்றுக்கொள்ளவில்லை. விரக்தியடைந்த பாரிஜாதகா தன்னைத் தானே எரித்துக் கொண்டாள். அதில் வெளிப்பட்ட சாம்பலில் இருந்து பவழ மல்லிகைச் செடி உருவானதாக வரலாறு கூறப்படுகிறது. பவழ மல்லி இரவில் செழிக்கிறது; பகலில் சூரியனுக்கு முன்னால் உதிர்ந்து விடுகிறது.

பொதுவாக இந்துக்கள் மண்ணில் விழுந்த மலர்களை எடுத்து இறைவனுக்கு பூஜை செய்ய பயன்படுத்த மாட்டார்கள்; ஆனால், பவழ மல்லிகை மட்டும் விதிவிலக்கு !

பவழ மல்லியைக் கஷாயமிட்டு நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் மூட்டு வலிக்கு மருந்தாகக் கொடுக்கிறார்கள்.

இதன் இலையை அரைத்துச் சாறாக்கி கொடுத்த்தால் வயிற்றுக் கோளாறைச் சரி செய்யும். பித்தக் காய்ச்சலுக்கும் இது மருந்தாகிறது. இதன் இலை, பின் தொடை நரம்பு வலிகளைக் குணப்படுத்தக்கூடியது. இதன் வேரை மெல்லுவதன் மூலம் பல் ஈறு வலிகள் நீங்கும்.

தளிர் இலைகளை அரைத்து இஞ்சிச் சாற்றில் கலந்து தினமும் இரண்டு வேளை கொடுத்து வந்தால், மூலம், முறை ஜுரம், முதுகு வலி ஆகியவை குணமாகிறது.

இலைகள், பூ, பட்டை ஆகியவற்றை மூலம், முடக்கு வாதம் போக்க உபயோகிக்கலாம். பூக்களும் பிஞ்சுகளும் இருமலைக் குணமாக்குகின்றன. இதன் விதைகளைப் பொடியாக்கி எண்ணெயில் குழைத்துத் தலையில் தடவினால், சொறி, சிரங்கு, நமைச்சல் போகும். மேக நோயைக் குணப்படுத்த பவழ மல்லிகை வேரை அரைத்துப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

பவழ மல்லிகை மலர் குறித்து சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சேடல் செம்மல் சிறு செங்குரலி’ என்று குறிசிஞ்ப்பாட்டில் வரும் ‘சேடல்’ என்ற வார்த்தைக்கு நச்சினார்க்கினியர் ‘பவழக்கால் மல்லிகை’ என்று விளக்கமளித்துள்ளார். தமிழ்த் தாத்தா உ.வே.சா. இதை, ‘பவழ மல்லிகை, பாரிஜாதம் எனவும் வழங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தச் சிறு மரம் முல்லைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

திருத்துறைப்பூண்டியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்களர் ஆலயத்திலும், கும்பகோணத்துக்குத் தென்கிழக்கில் 9 கி.மீ. தூரத்தில் உள்ள திருநரையூர் சித்தீச்சரம் ஆலயத்திலும் பவழ மல்லிகையே, தல விருட்சமாக உள்ளது.
- விருட்சம் வளரும்...
'ஞானம் கிடைக்கும் தலம்!’
''இங்கேயுள்ள ஸ்ரீபிரம்மபுரீஸ்வரரை வணங்கிய பிறகே, தனது படைப்புத் தொழிலைத் துவக்கினார் பிரம்மா என்கிறது புராணம். இந்தத் தலத்து சிவ- பார்வதியை வணங்கினால் ஞானம் கிடைக்கும்; தோஷங்கள் நிவர்த்தியாகும்''. மேலும், ''பிரளயத்தில் உலகம் அழிந்த பிறகு, உலகை இங்கிருந்துதான் இறைவன் உருவாக்கினார். அதனால், இது சக்தி வாய்ந்த திருத்தலமாகப் போற்றப்படுகிறது''.

🅱 பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்ற ஸ்தலம். 🅱

Ⓜ அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில், கடுவெளி, திருவையாறு, தஞ்சாவூர் Ⓜ

மூலவர்: ஆகாசபுரீஸ்வரர்

அம்மன்/தாயார்: மங்களாம்பிகை

இத்தலம் தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பேருந்து நிறுத்தும் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

பூராடம் நட்சத்திரக்காரர்கள் சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் கொள்வர். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழ்வர். பிடிவாத குணத்தோடு மிக கடுமையாகப் பேசும் சுபாவம் இருக்கும். வாக்குவாதங்களில் அடிக்கடி ஈடுபடுவர். ஆடை, அணிகலன்களை விரும்பி அணிவார்கள். வாகனத்தில் வேகமாக வலம் வருவதை விரும்புவார்கள். பொது நலச் சிந்தனை இவர்களுக்கு உண்டு. சக்திக்கு மீறியது எதுவாக இருந்தாலும் ஒதுக்கி விடுவார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டவர்.  உயர்வு, தாழ்வு பார்க்காமல் எல்லோரையும் சமமாக பாவிப்பார்கள்.

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார். அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். 

பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான். இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

பொதுவாக கோபுரத்திற்குள் அமர்ந்திருக்கும் நந்தி, இத்தலத்தில் கோபுரத்திற்கு வெளியே உள்ளது சிறப்பு

சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். 

ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும், வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

No comments:

Post a Comment