Wednesday 4 October 2017

ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - 21

     

                                        ஆல மரம்

மீன ராசி, தண்ணீருடன் தொடர்பு கொண்டது. மீன ராசிக்காரர்கள் சட்டென்று உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். திடுமென, நெருங்கிய நண்பர்களையே பகைத்துக் கொள்வார்கள். இத்தகைய மீன ராசிக் காரர்களுக்கும், பிப்ரவரி 19 முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை பிறந்தவர் களுக்கும், நன்மைகள் தருவது ஆல மரம்!
மீன ராசி மண்டல நட்சத்திரக் கூட்டத்தின் கெட்ட கதிர்வீச்சு களால் உண்டாகும் நோய்கள், கெடுதல்கள், தோஷங்கள் ஆகியன ஆலமரத்தால் நீங்கும். மேற்சொன்ன காலகட்டத்தில் பிறந்தவர்களும் மீன ராசிக்காரர்களும் தினமும் ஆலமரத்தை அரைமணி நேரம் கட்டிப்பிடித்து, அதன் நிழலில் சற்றுநேரம் இளைப்பாறலாம். இதனால், வியாழக் கிரகம், மீன ராசி மற்றும் அதன் நட்சத்திர மண்டலத்தின் நல்ல கதிர்வீச்சுகளை உறிஞ்சி, தனக்குள் நிரப்பிக் கொண்டு, அதனை மனித உடலுக்கு மாற்றி வலிமையைத் தரவல்லது ஆலமரம் என்கிறது வானவியல் சாஸ்திரம்!  
அருள்வளர் ஞானாம்பிகை சமேத ஸ்ரீவடமூலேஸ்வரர் (எ) ஸ்ரீஆத்மநாதேஸ்வரர் அருளும் திருஆலம்பொழிலின் ஸ்தல விருட்சமும் ஆலமரமே!
திருவையாறில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், குடமுருட்டி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது திருஆலம் பொழில். அப்பரால் பாடப் பெற்ற தலமும்கூட! ஸ்ரீமூல விநாயகர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், வள்ளி - தெய்வானையுடன் ஸ்ரீமுருகன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீதுர்கை, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, அரசமர விநாயகர், பிரம்மா, பஞ்ச லிங்கங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கே தரிசிக்கலாம். இந்தத் தலத்து இறைவன், மேற்கு நோக்கி அருள்வது விசேஷ அம்சம் என்கின்றனர்! இந்த ஆலயத்தைக் கட்டியவர், மாமன்னன் ராஜராஜ சோழன்.
அஷ்டவசுக்கள் பூஜித்து இட்ட சத்தி பெற்றதும், சூரிய பகவான், வெண்தாமரை தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டு, தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றதும் இங்குதான்.
வருடந்தோறும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை, லிங்கத் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுந்து வணங்குவது கண்கொள்ளாக் காட்சி!
இந்தத் தலத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித் திட்டை. வசிஷ்ட முனிவர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தலத்தில், அந்த முனிவர் வழிபட்ட சிவனாருக்கு ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் என்று திருநாமம் அமைந்தது. காமதேனுவை வசிஷ்டர் வழிபட்டதும் இந்தத் தலத்தில்தான். குரு பரிகாரத் தலம் என்று போற்றப்படுகிற தலமும் இதுதான்.  
ஒருமுறை, மேய்ந்தபடியே ஆலம்பொழிலுக்கு வந்துவிட்டதாம் காமதேனு. அங்கு வசித்த அஷ்டவசுக்கள் காமதேனுவைக் கண்டனர். அதன் சிறப்பு அவர்களுக்குத் தெரியுமாதலால், காமதேனுவைச் சிறைப்பிடித்தனர். இதையறிந்த வசிஷ்டர், அஷ்டவசுக்களைச் சபித்தார். இதையடுத்து காமதேனுவை விடுவித்த அஷ்டவசுக்களும், அங்கேயுள்ள புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீஆத்மநாதேஸ்வரரை வழிபட... சாபவிமோசனம் பெற்றனர்!  
இந்த ஆலயத்தின் திருப்பணிகளை உள்ளூர் மற்றும் வெளியூர் அன்பர்களுடன் சேர்ந்து செய்ததுடன், 2004-ஆம் வருடம் கும்பாபிஷேகத்தையும் செய்தவர், ஸ்ரீநிவாச ஐயர். இன்றளவும் கோயில் பராமரிப்புப் பணிகளில் முழு ஈடுபாடு காட்டிவருகிறார். ''வடமூலேஸ்வரரையும் ஞானாம்பிகையையும் வழிபட்டால், கேட்கும் வரம் கிடைக்கும். குழந்தைகள், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள்!'' என்கிறார் ஸ்ரீநிவாசன்.
குளிர்ச்சி தருவதும், பரந்து வளர்ந்து நிழல் தருவதுமான ஆலமரத்துக்கு ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு. இதன் வேரின் மீது உள்ள பட்டையை வெட்டி, பவுடராக்கி மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய், காய்ச்சல், வெட்டை, கர்ப்பப்பை வீக்கம், அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் வல்லமை கொண்டது. இந்தப் பட்டையை உலர்த்தி, அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து, காலையும் மாலையும் சாப்பிட, விரைவில் குணம் பெறலாம். கர்ப்பப்பை வீக்கம் உள்ளவர்கள், பாலுடன் கலந்து சாப்பிடவேண்டும். சர்க்கரை நோயால் அவதிப் படுவோர், வேர்ப்பட்டையை தண்ணீரில் நனைத்துச் சாறாக்கிக் குடித்தால், விரைவில் குணமாகும்.  
ஆலமரத்துக் கனி, அஜீரணம் தரும் என்பர். ஆனா லும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது, இது! பசுங்கனிகளை நன்றாக உலர்த்தி, அரைத்து, 12 கிராம் அளவு பாலில் கலந்து கொடுக்க, ஞாபக சக்தி அதிகரிக்கும்; தேகக்கட்டு பொலிவுறும். ஆலங் குச்சிகளால் பல் துலக்கினால், ஈறு மற்றும் பற்களில் வலிமையேறும். 'குழந்தை இல்லையே’ என ஏங்குவோர், ஆலமரத்தை தினமும் சுற்றி வந்து, வழிபடுவர். இன்னும்
சிலர், விரதமிருந்த பிறகு ஆலமரப் பூக்களைச் சாப்பிடுவர். இதனால் பிள்ளை பாக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனை, யுனானி மருத்துவமும் உறுதி செய்கிறது. ஆலமரத்தின் பால், புண்களை ஆற்றும்! வலி உள்ள இடங்களில், பாலைப் பூசினால், நிவாரணம் கிடைக்கும்!
திருஅன்பிலாந்துறை, திருப்பழுவூர், திருவாலங்காடு மற்றும் திருமெய்யம், திருவில்லிப்புத்தூர் ஆகிய தலங்களின் விருட்சமாகவும் திகழ்கிறது ஆல மரம். 'அன்றுஆலின் கீழ் இருந்து அறமுரைத்தான்’ என்று  போற்றுகிறார் மாணிக்கவாசகர்.
'கடவுள் ஆலம்’ என்று நற்றிணையில் குறிப்பிடுகிறார் பெரும்பதுமனார் எனும் புலவர். 'மாமரத்தின் கீழும் ஆலமரத்தின் கீழும் உறையும் தெய்வங்களுக்குச் செய்யும் முறைமைகளைப் பரவி, தொழுவிலே பாய்ந்தார்’ என்கிறது கலித்தொகை! அதுமட்டுமா?! 'பல்வீழ் ஆலம் போல’ என அகநானூறும், 'அழல் புரை குழை கொழு நிழல் தரும் பலசினை ஆலமும் கடம்பும்’ என பரிபாடலும் ஆலமரத்தைப் போற்றுகின்றன.
பேரரசர்கள் தனது பெரும்படையுடன் தங்கியிருக்கவும் நிழல் பரப்பித் தரும் மரம் இது! அலெக்சாண்டர் தன்னுடைய ஏழாயிரம் வீரர்களுடன் இளைப்பாறியது ஆலமர நிழலில்தானாம்!
வம்சம் தழைக்க வாழ்த்துபவர்கள், 'ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி...’ என்று ஆலமரத்தை உதாரணம் காட்டித்தானே வாழ்த்துகிறார்கள்!
- விருட்சம் வளரும்

No comments:

Post a Comment