Friday, 11 August 2017

கால்களை இடறிய ஸ்ரீகதளிவனேஸ்வரர்!


காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, மதுரை சொக்கநாதர்- மீனாட்சி, காஞ்சி காமக்கோடீஸ்வரி ஆகியோரை ஒரே இடத்தில் தரிசிக்க முடிந்தால்... அது, எவ்வளவு பெரும் பேறு?!
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி யில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்களம்பூர். இங்குள்ள கதளிவனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சென்றால், அந்தப் பெரும் பேறு நமக்கும் வாய்க்கும்!
சரி, அது என்ன திருக்களம்பூர்? முற்காலத்தில், இந்தப் பகுதி அடர்ந்த வனமாக திகழ்ந்ததாம். ஒரு முறை, பாண்டிய மன்னன் ஒருவன் இங்கு வேட்டை யாட வந்தான். அப்போது, அவனது குதிரையின் குளம்படிகள் ஒரு கல்லின் மீது பட்டு கால்கள் இடற... தலைகுப்புற விழுந்தது குதிரை. மன்னனும்தான்! ஒருவாறு சுதாரித்து எழுந்த மன்னன், தாங்கள் கீழே விழக் காரணமான கல்லைக் கவனித்தான். அதில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது மட்டுமா? மறு கணம் மன்னனின் பார்வையும் பறிபோனது.
''இறைவா, நான் செய்த பாவம் என்ன? எனக்கு ஏன் இந்த தண்டனை?''- கதறினான் மன்னன்.
அப்போது அங்கு தோன்றிய முதியவர் ஒருவர், மன்னனின் கண்களில் பச்சிலைச் சாறு பிழிந்ததுடன் பச்சிலை வைத்தும் கட்டினார். சற்று நேரத்தில் பார்வை கிடைத்தது. மிகவும் மகிழ்ந்த மன்னன், நன்றிப் பெருக்குடன் பெரியவரை வணங்கினான்.
''இந்த இடத்தில் கோயில் கட்டு!'' என்று கூறி மறைந்தார் முதியவர். மெய்சிலிர்த்த மன்னன் மீண்டும் அந்தக் கல்லை நோக்கினான். இப்போது அது, சுயம்பு லிங்கமாகக் காட்சியளித்தது. பரவசமானான். வாழை மரங்கள் அடர்ந்திருந்த அந்த இடத்தில், சிவாலயம் அமைக்கும் பணிகளை ஆரம்பித்தான். கோயிலும் எழும்பியது.
குதிரையின் குளம்படிகள் இடற... இறைவன் தன்னை வெளிப்படுத்தியதால் இந்தத் தலம், திருக்குளம்பூர் எனப் பட்டது. இதுவே பிற்காலத்தில் திருக்களம்பூர் ஆனது. வாழை வனத்தின் நடுவே கோயில் கொண்டதால் இறைவன், கதளிவனேஸ்வரர் ஆனார்.
தல புராணத்துக்கு சாட்சியாக, மூலவர் லிங்கத்தின் மீது குதிரை குளம்புகளால் காயம் பட்ட தழும்பையும், மூலவர் சந்நிதியைச் சுற்றிலும் வாழை மரங்கள் இருப்பதையும் காணலாம். கோயிலின் ஸ்தல விருட்சமான இந்த வாழை மரங்கள், மூன்று யுகங்களாக இங்கு இருப்பதாக ஐதீகம். இந்த வாழைக் கன்றுகளை வேறோர் இடத்தில் நட்டால் வளராதாம். அதுபோல, வேறு இடத்தில் இருந்து கொண்டு வரும் வாழையை இங்கு நட்டாலும் பலனில்லை என்கிறார்கள்.
பொதுவாக வாழையில் கதளி, ரஸ்தாளி, மலைப் பழம் என்று பல ரகங்கள் உண்டு. இங்குள்ள வாழைகள் தரும் பழங்கள்... தோற்றத்தில் ரஸ்தாளியைப் போன்றும், சுவையில் மலைப் பழத்தைப் போலவும், தோல் கதளி ரகத்தைப் போலவும் திகழ்வது தனிச் சிறப்பு!
இறைவனுக்குரிய அபிஷேகங்களிலும் இந்தப் பழங்களைப் பயன்படுத்து கிறார்கள். அபிஷேகம் முடிந்து பிரசாதமாக தரப்படும் பழங்களை சாப்பிட்டால், தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம். முற்காலத்தில் இங்குள்ள இறைவன் மிக உக்கிரத்துடன் திகழ்ந்தாராம். இதனால் இந்த பகுதியில் வசித்தவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். இதையறிந்த அப்போதைய காஞ்சி சங்கராச்சார்யர், 'இங்கு அம்பாள் சந்நிதியையும் அமையுங்கள்!' என்று பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். அதன்படி கோயிலின் எதிரில் திருவளர் ஒளீஸ்வரர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் சந்நிதியைத் தனிக் கோயிலாகவே அமைத்தான் மன்னன்.
ஒரு முறை, இந்தத் தலத்தின் பெருமையை அறிந்த காசி மகாராஜா ஒருவர் இங்கு வந்து தரிசித்தார். அப்போது, 'காசிக்கு சென்று வருவதால் கிடைக்கும் பலன்கள், இந்தத் தலத்துக்கு வருவோருக்கும் கிடைக்கும் வகையில், இங்கு என்னை பிரதிஷ்டை செய்!' என்று இறைவன் ஆணையிட்டார். அதன்படி காசி விஸ்வநாதர்- விசாலாட்சி விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார் காசி மகாராஜா. தவிர, பாண்டிய மன்னரால் பிரதிஷ்டை செய்யப் பட்ட மீனாட்சி- சொக்கநாதர் விக்கிரகங்களையும் தனிச் சந்நிதிகளில் தரிசிக்கலாம். கோயில் அருகில் காஞ்சி மகா பெரியவாள் பிரதிஷ்டை செய்த காம கோடீஸ்வரியின் சந்நிதியும் உள்ளது.
பௌர்ணமி தினங்களில் தம்பதி சமேதராக இங்கு வந்து 108 முறை கோயிலை வலம் வந்து கதளிவனேஸ்வரரை வணங்கினால், மனக் குறைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் நீங்குவதாக நம்பிக்கை. தவிர, பிரிந்த தம்பதியர் மனம் ஒருமித்து, சேர்ந்து வாழவும் அருள் பாலிக்கிறார் கதளிவனேஸ்வரர்.
திருமணத் தடையுள்ளவர்கள் தொடர்ந்து மூன்று வாரங்கள் இங்கு வந்து, கதளிவனேஸ்வரருக்கு பாயசம் நைவேத்தியம் செய்து குழந்தைகளுக்கு வழங்கினால், தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை வடிவில் வந்து பாயசம் பருகும் இறைவன், திருமண யோகத்தை அருள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதப் பிறப்பன்று- பால்குடம் மற்றும் சித்ரா பௌர்ணமியில் பூச்சொரிதல் விழா ஆகியவை இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

No comments:

Post a Comment