Saturday, 5 August 2017

மகேந்திரவாடி திருத்தலம்


ந்திர பகவான் வழிபட்ட சிவத்தலங்கள் பல உண்டு. திங்களூர், புதுச்சேரிக்கு அருகிலுள்ள பிறையூர், சென்னைக்கு அருகில் உள்ள சோமமங்கலம், வட இந்தியாவில் உள்ள சோம்நாத்பூர் என சந்திரன் வழிபட்ட தலங்களின் பட்டியல் நீளும். இதேபோல் சந்திரன் பூஜித்த ஈஸ்வரன்... சோமேஸ்வரர், சந்திரசூடேஸ்வரர், சந்திரசேகரர் எனச் சந்திரனின் பெயரைக்கொண்டு திகழ்வார்.
வேலூர் மாவட்டத்திலும் சந்திரன் வழிபட்ட சிவத்தலம் ஒன்று உண்டு. அதன் பெயர் மகேந்திரவாடி. இங்கே அருளும் இறைவனின் திருநாமம் ஸ்ரீசோமநாதேஸ்வரர்.
அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும் தட்சனின் புதல்விகள். இவர்களைச் சந்திரனுக்குத் திருமணம் செய்து வைத்தார் தட்சன். இந்தப் பெண்களில் கார்த்திகை, ரோகிணி ஆகியோரிடம் மட்டுமே அன்பு பாராட்டினான் சந்திரன். இதனால், ஏனைய மனைவிகள் வருத்தம் அடைந்தனர்; தட்சனிடம் சென்று முறையிட்டனர். கோபம் கொண்ட தட்சன், சந்திரனைச் சபித்தார்.
சாபத்தின் காரணமாக சந்திரனின் அழகு தொலைந்தது; ரோக நோயால் வாடினான். சாப விமோசனத்துக்கு சிவனாரைச் சரணடைவதே உத்தமம் எனப் புரிந்துகொண்டு, தவம் செய்து அவரைத் தரிசித்து வணங்கினான்.
சந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த சிவனார், மூன்றாம் பிறையளவு இருந்த அவனைத் தன் தலையில் சூடிக் கொண்டார். இதனால் அவருக்குச் சந்திரசேகரர் எனும் பெயர் அமைந்தது. அவரின் திருவருளால், இழந்த அழகை மீண்டும் பெற்றான் சந்திரன். தட்சனின் சாபத்தின் காரணமாகத் தேய்பிறையும், ஈசனின் அருளால் வளர்பிறையும் அமைந்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.
அப்படிச் சந்திரன் வழிபட்ட தலத்தின் மகிமையை அறிந்த முதலாம் மகேந்திரவர்ம பல்லவன், அங்கே கோயில் கட்டத் தீர்மானித்தான். செங்கல்- சுண்ணாம்பு கலந்து சிவன் கோயில் திருப்பணி மேற்கொண்ட மன்னன், மலையைக் குடைந்து விஷ்ணு ஆலயமும் எழுப்பினான். அதுமட்டுமின்றி, மிகப் பெரிய நகரையே நிர்மாணித்து, அதற்குத் தன் பெயரையே சூட்டினான். அதன்படி இந்தத் தலம் மகேந்திரபாடி என வழங்கப்பட்டு, தற்போது மகேந்திரவாடி என்ற பெயருடன் திகழ்கிறது.
சைவ- வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், இங்கே விஷ்ணுவுக்கும் சந்நிதி அமைந்ததால், மகேந்திர விஷ்ணு கிரகம் என்றும் இந்தத் தலத்தைப் போற்றுவர் (தற்போது குடைவரை ஆலயத்தில் விஷ்ணு விக்கிரகம் இல்லை). ஆலயத்தின் மண்டபத் தூண் ஒன்றில் பொறிக்கப் பட்டிருக்கும் வாசகங்களின் மூலம்... 'மகேந்திரபுரத்தில், மகேந்திர தடாகக் கரையில், உலகத்தாரால் புகழ்ந்து உரைக்கப்பட்டதும், மக்கள் கண்டுகளிக்கும்படி அழகுக்கு உறை விடமானதுமான முராரி (திருமால்) கிருஹத்தை 'மஹேந்திர விஷ்ணுகிரஹம்' எனும் பெயரில் குணபரன் எனும் அரசன் (மகேந்திரவர்மனின் இன்னொரு பெயராம், இது!) செய்வித்தான்' என்ற தகவலை அறியலாம்.
அதுமட்டுமா? மகேந்திரவாடியில் பெரியதொரு ஏரியை உண்டாக்கிய மன்னன், பாலாற்றில் இருந்து கால்வாய் ஒன்றை வெட்டி, அந்த ஏரியுடன் இணைத்தானாம். இதற்கு மகேந்திர தடாகம் எனப் பெயரிட்டான்.
இந்த ஏரிக்கரையில், சப்தமாதர்களுக்காகவே ஓர் அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கௌமாரி, வராகி, மகேந்திரி, பைரவி, பிராம்மி, சாமுண்டி, வைஷ்ணவி ஆகிய ஏழு தெய்வங்களுடன் ஸ்ரீவிநாயகப் பெருமானும் காட்சி தருகிறார். சப்தமாதர்களில், ஸ்ரீபைரவிதான் இங்கே பிரதான தெய்வம்! ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என ஊர்மக்கள் அழைக்கின்றனர்.
ஒருமுறை, ஏரியின் கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதாம். ஊர் மக்கள் சப்தமாதரை வழிபட்டனர். அப்போது, கரை உடைந்துவிடாமல் ஏரியையும், வெள்ளத்தைத் தடுத்து மக்களையும் காப்பாற்றியதால், இந்த அம்பிகையை ஏரி காத்த அம்மன், மதகு காத்த அம்மன் என்று வழிபட ஆரம்பித்தனராம். இந்தப் பெயர்களே ஏகாத்தம்மன், மதகாத்தம்மன் என மருவியதாகச் சொல்வர்.
ஒருகாலத்தில், இந்தத் தலத்தில் பெரியதொரு கோட்டை இருந்ததாம். இப்போது கோட்டை இருந்த இடத்தில் சிறியதொரு பாறையும், அதன் மீது ஸ்ரீவிநாயகர் கோயிலும் உள்ளன. சற்றே சிதிலமடைந்து கிடக்கும் இந்த விநாயகர் கோயிலில் வழிபாடுகள் இல்லை; திருப்பணியை எதிர் பார்த்துக் காத்திருக்கிறார் இந்தப் பிள்ளையார்.
ஊரின் நடு நாயகமாக, அருள்மிகு சோமநாதேஸ் வரர் ஆலயம் அமைந்துள்ளது. கருங்கல் திருப்பணியால் அமைக்கப்பட்ட, சிறிய ஆலயம்; ஆனால், இறைவன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவர். சந்திரனுக்கு அருள்புரிந்த சிவனார் கிழக்கு நோக்கியும், அம்பிகை ஸ்ரீகாமாட்சி தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
ஆலயப் பிராகாரத்தில், ஆறுமுகனுக்கும் சந்நிதி உள்ளது. ஓராறு முகமும் ஈராறு கரங்களுமாக மயிலின் மீது அமர்ந்த கோலத்தில், தேவியருடன் காட்சி தருகிறார் ஸ்ரீஆறுமுகப் பெருமான்.
கோயிலின் வடக்குப் பகுதியில், சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. திங்கட்கிழமை அன்று இதில் நீராடி, ஸ்ரீசோமநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து, வெள்ளை அரளி சார்த்தி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட, சந்திர தோஷம் விலகும்; சந்தோஷம் நிலைக்கும் என்பது ஐதீகம்!
 மேலும் கோயிலின் திருமதில், சந்திரபுஷ்கரணி தீர்த்தக் குளத்தின் படித்துறை, ஸ்ரீசந்திர பகவான் சந்நிதி, கோயிலின் நுழைவு வாயில் ஆகிய திருப்பணிகளுக்குப் பெரும் நிதி தேவைப்படுகிறது. இங்கே, ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாளும் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
சோளிங்கர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மகேந்திரவாடி திருத்தலம். ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் நெமிலியில் இருந்து, சுமார் 7 கி.மீ. தொலைவு; காஞ்சிபுரத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் பேருந்துகள், மகேந்திரவாடி வழியாகச் செல்லும்.
ஆன்மிக மகிமையும், சரித்திரச் சிறப்புகளும் கொண்ட மகேந்திரவாடி தலத்துக்கு வாருங்கள்; சந்திர தோஷத்தைப் போக்கி சந்தோஷத்தை அள்ளித் தருவார் ஸ்ரீசோமநாதேஸ்வரர்!

No comments:

Post a Comment