Wednesday, 2 August 2017

திருவக்கரை

சி வலிங்கம் பார்த்திருக்கிறோம். சோமாஸ் கந்தர், பிட்சாடனர், நடராஜர் போன்ற உருவத் திருமேனிகளைக் கண்ணாரக் கண்டிருக்கிறோம். முகத்தோடு கூடிய சிவலிங்கம் பார்த்திருக்கிறோமா?
முகலிங்கம் காண ஆசையாக இருக்கிறதா? ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று முகங்களோடு கூடிய சிவலிங்கத் திருமேனி! வாருங்கள் திருவக்கரை திருத்தலம் செல்வோம்.
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் திருவக்கரை. ரத்னத்ரயம் (மூன்று ரத்தினங்கள்) என்று போற்றப்படும் சிவன், பார்வதி, பெருமாள் ஆகிய மூன்று கடவுளரும் அருள் தரிசனம் வழங்கும் அற்புதப் பதி. வடக்கு நோக்கிய வக்கிர காளியும் மேற்கு நோக்கிய வக்கிர லிங்கமும் தெற்கு நோக்கிய வக்கிர சனியும் காட்சி தரும் ஊர். தமிழரின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செழித்திருந்ததைக் காட்டும் விதத்தில், முதுமக்கள் தாழிக்காக சிறப்புப் பெற்ற இடம். நம்மைப் பெருமிதத்தில் ஆழ்த்தும் புதைபடிவ தேசியப் பூங்கா (பார்க்க- பெட்டிச் செய்தி) ... இவை யாவுமாகித் திகழும் திருவக்கரை செல்வோம்!
திண்டிவனம்- புதுச்சேரி பாதையில், மயிலம் தாண்டிச் சிறிது தூரம் சென்றால், பெரும்பாக்கம். அங்கிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் உள்ளது திருவக்கரை. திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.
திருவக்கரை என்றதும் நினைவுக்கு வருவது வக்கிர காளியம்மன். சாதாரணமாக, காளி கோயில் ஊர் எல்லையில் இருக்கும். ஆனால், இங்கோ ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் வளாகத்துக்குள் காளிதேவி கோயில் கொண்டிருக்கிறாள்.
சிவபெருமானை எண்ணித் தவம் செய்து பூஜித்தான் வக்கிராசுரன். அதனால் பற்பல வரங்களைப் பெற்றான். அந்த வரங்களின் விளைவாகப் பலருக்கும் துன்பம் தந்தான். கொடுமைகள் செய்தான். அவனது கொடுமைகள் தாங்க முடியாமல், பலரும் சிவனாரிடம் சென்று முறையிட்டனர். சிவனாரும் மகாவிஷ்ணுவை அழைத்து, வக்கிரனை வதம் செய்யச் சொன்னார்.
அதன்படி, வக்கிரன் இருந்த இடத்தை அடைந்த மகாவிஷ்ணு, பெரும் போருக்குப் பின் சக்கராயுதத்தைப் பிரயோகித்து அவனை வதம் செய்தார்.
வக்கிராசுரனுக்கு துன்முகி என்றொரு சகோதரி. அண்ணனின் அதிகாரம் தந்த ஆணவத்தால், துன்முகியும் பற்பல கொடுஞ்செயல்களைச் செய்தாள். சிவபெருமான், பார்வதி தேவியை நோக்கினார். திருக்கயிலையிலிருந்து புறப்பட்ட பார்வதிதேவி, துன்முகியை நோக்கிச் சென்றார். துன்முகி அப்போது கருவுற்றிருந்தாள்.
என்னதான் இருந்தாலும் கர்ப்பிணியாயிற்றே! அவள் தவறு செய்திருந்தாலும், அந்தச் சிசு என்ன பாவம் செய்தது? பார்த்தாள் பார்வதி. துன்முகியின் வயிற்றுச் சிசுவை பத்திரமாக எடுத்துத் தன் காதில் மாட்டிக் கொண்டு, துன்முகியை (இப்போது அவள் கர்ப்பிணி இல்லையல்லவா!) வதம் செய்தார். வக்கிரன் வாழ்ந்த இடம் என்பதால், ‘வக்கரை’ ஆன இந்த இடத்தில், காளியாகி நின்று காட்சி கொடுப்பதால் அம்பாள், வக்கிரகாளி ஆனார்.
சிவபெருமான் ஆலயத்துக்குள்ளேயே திருமாலும், செங்கண்மால் திருத்தங்கச்சியாம் வக்கிரகாளியும் கோயில் கொண்டுள்ளார்கள். எனவேதான், ரத்னத்ரயத்தை வணங்கும் சிறப்பு பெறுகிறது திருவக்கரை!
விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் வட்டம் - வராக நதி பாய்கிற இடம். சங்கராபரணி (சங்கரருக்கு ஆபரணம் ஆனவள்) என்றும் அழைக்கப்படும் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளது திருவக்கரை திருக்கோயில்.
பழைமையான, பெரிய கோயில். கிழக்கு வாயிலில், விண்ணளாவி நிற்கும் கிழக்கு ராஜ கோபுரம். இது கண்டராதித்தன் திருக்கோபுரம் என்றும் கண்டர் சூரியன் திருக்கோபுரம் அழைக்கப்படுகிறது.
பிற்காலச் சோழ சாம்ராஜ்யம் உருவாகக் காரணமான ஆதித்த சோழனால், இன்றைக்குச் சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன், செங்கற் கோயிலாக இந்தத் திருக்கோயில் கட்டப்பட்டது. அதற்கு முன்னரேகூட கோயில் சிறிய அளவில் இருந்துள்ளது. பின்னர், முதலாம் பராந்தகனின் மகன்களான ராஜாதித்தனும் கண்டராதித்தனும் இந்தக் கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள் ளனர். கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி (திருவாரூர் அசலேஸ்வரத்தில் நாம் சந்தித்த, அதே செம்பியன் மாதேவியார்) திருவக்கரைக்குப் பற்பல திருப்பணிகள் செய்து தானங் கள் வழங்கியுள்ளார்.
கண்டராதித்தன் கட்டு வித்த கண்டராதித்த கோபுரம், ஏழு நிலைகளுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறது. கோபுர வாயிலில் உள்ள கணபதியை வணங்கி, உள்ளே நுழைந்து அண்ணாந்து பார்க்கிறோம். கூரையில் ஒன்பது கட்டடங்கள் போன்ற அமைப்பு. நடுவில் அழகான தாமரை. மலரைச் சுற்றிலும் எண்திசைக் காவலர்களாம், அஷ்டதிக்குப் பாலர்கள்.
ராஜ கோபுரம் தாண்டியதும், வடக்கு நோக்கிய வக்கிரகாளி அம்மன் சந்நிதி. சந்நிதிக்குள் நுழையும்போது, வாயிலில் உள்ள துவாரபாலகியர் நமது கவனத்தைக் கவர்கிறார்கள். பக்கத்துக்கு இரண்டாக, மொத்தம் நான்கு பேர். இவர்களைப் பற்றிய உள்ளூர்க் கதை நெகிழ்ச்சி தருகிறது.
நான்கு பேரும் பால் வியாபாரம் செய்தவர்களாம். ஆனால், பாலில் அதிகமாகக் கலக்கப்பட்ட தண்ணீரைத்தான், பால் என்று வியாபாரம் செய்தனராம். மக்கள் முறையிட, மன்னன் வரைக்கும் புகார் சென்றது. மன்னன், நால்வருக்கும் தண்டனை வழங்கினான். மொட்டையடித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட நால்வருக்கும், இறுதித் தண்டனை சிரச்சேதம். அந்தக் கடைசி வேளையில் அறிவு வந்தது போலும்! நால்வரும் தவறு உணர்ந்து அழுது புலம்பி அரற்றி, காளியை வழிபட... அவர்கள் மீது இரக்கம் கொண்ட காளி, நால்வரையும் தம்முடைய துவாரபாலகியராக ஆக்கிக் கொண்டார்.
இந்தச் சம்பவம் உண்மையில் நடந்ததோ, இல்லையோ தெரியவில்லை! ஆனால், இரண்டு செய்திகள் புரிகின்றன. ஒன்று, ஏமாற்றும் புரட்டும் செய்தால், தண்டனை கட்டாயம். இரண்டாவது, மனம் உருகிப் பிரார்த்தித்து, தவறுக்கு வருந்தித் திருந்தினால் மன்னிப்பு கிடைக்கும்.
சமயக் கதைகள், கோயில் கதைகள் என்ற பெயர்களில், மக்கள் சமுதாயம், முறையாகவும் வளமாகவும் வாழ வழி காட்டியிருக்கும் நம் முன்னோரின் நுட்ப மான அறிவை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
‘‘அம்மா, வக்கிரகாளி... எங்கள் முன்னோர் கட்டிக் காத்த அறத்தையும் பெருமையையும் நாங்களும் காப்பாற்ற அருள் கொடு, தாயே!’’ என்று வணங்கிக் கொண்டே உள்ளே நுழைகிறோம்.
வக்கிரகாளியம்மன் திருமேனி உள்ளத்தைச் சுண்டுகிறது. லேசாகச் சாய்த்த தலை. கிரீடத்தில் மண்டையோடு. வலக் காதில் சிசுக் குண்டலம். இடக் காதில் ஓலைச்சுருள். வதனத்தில் வசீகரமான புன்னகை. சற்றே கூர்ந்து கவனித்தால், உள்ளத்தில் தெளிவு கலந்த அச்சத்தை ஏற்படுத்துகிறாள். எட்டுத் திருக்கரங்கள். வலக் கரங்களில் பாசம், சக்கரம் (திருமாலின் சகோதரியாயிற்றே!), வாள், கட்டாரி. இடக் கரங்களில், மேல்கரம் உடுக்கையைப் பிடித்தாற் போல இருக்கிறது. அடுத்த இரு கரங்களில் கேடயமும் கபாலமும். கீழ்க்கரம், ஆள் காட்டி விரல் நீட்டி அம்மனின் பாதத்தைச் சுட்டுகிறது. கபாலங்களையே கோத்து முப்புரி நூலாக அணிந்திருக்கிறாள். கோரைப் பற்கள். பெரிய விழிகள்! ‘தவறு செய்தால், அம்மன் தண்டிப்பாள்!’ என்ற அச்சத்தையும் ‘தவறு செய்யக் கூடாது!’ என்ற தெளிவையும் தருகிற வக்கிரகாளியை மீண்டும் வழிபடுகிறோம்.
வக்கிரகாளி சந்நிதியைத் தனியே வலம் வரலாம். வலம் வரும்போது, சிலர் திசை மாறி இடமாகச் சுற்றுவது (அப்பிரதட்சிண மாக) தெரிகிறது. அது என்ன ஐதீகம்?
ஒன்பது கோள்களை நவக்கிரகங்கள் என்று வழிபடுகிறோம் அல்லவா! நவக்கிரகங்களுக்கும் தனித்தனியாக அதிதேவதை கள் உண்டு. ராகு-கேதுவுக்கு காளியம்மனே அதிதேவதை. சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகுவும் கேதுவும் தீயவர்கள். எப்போது தீமை தரலாம் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள். அதிலும் அவர்கள் வக்கரித்துக் கொண்டால், கேட்கவே வேண்டாம். எனவேதான், இந்தக் கோயிலில் புது முறையான வலம் வருதலும் ஏற்பட்டது. நவக்கிரகங்களைச் சுற்றுகிற ஒன்பது சுற்றுகளில், ஏழு சுற்றுகள் சாதாரண வலமாகவும், வக்கரித்துக் கொள்ளும் ராகு- கேதுவுக்காக இரண்டு சுற்றுகள் அப்பிரதட்சிணமாகவும் சுற்றுகிற வழக்கம் தோன்றியது. இந்தக் கோயிலில், சனியும் வக்கிர சனியாகவே உள்ளார். அவருக்கு ஒரு சுற்று. தவிர, அவரவர்க்கு ஏதாவது ஒரு கிரகம் சரியான நிலையில் இல்லாமல் இருப்பது சகஜம். அந்த கிர கத்துக்காக ஒன்று என்றாகி, தற்போது மொத்தம் ஒன்பதில் ஐந்து பிரதட்சிணமாகவும், நான்கு அப்பிரதட்சிணமாகவும் அமைந்து விட்டது.
வக்கிரகாளியை வலம் வந்து மீண்டும் வணங்குகி றோம். காளியின் சந்நிதியிலேயே ஒரு புறம் யோகேஸ்வர லிங்கம். இன்னொரு புறம் வலம்புரி விநாயகர்.
வக்கிரகாளியம்மன் திருக்கோயிலை அடுத்தாற் போல, தீபலட்சுமி கோயில் உள்ளது. திருமணத் தடை ஏற்பட்டுள்ளவர்கள், ராகு காலத்தில் வக்கிரகாளியம்மனை வழிபட்டு, தீபலட்சுமிக்கு விளக்கேற்றி, மாங்கல்யம் கட்டி வணங்கினால், உடனடியாகத் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. வெறும் நம்பிக்கை மட்டுமல்ல; அவ்வாறு நடந்ததாக நிறையப் பேர் சொல்கிறார்கள்.
காளி கோயிலுக்கு எதிரில் (வடக்குப் புறத்தில்) ஆத்மலிங்கக் கோயில். கண்ட லிங்கம் (வக்கிராசுரன் தன் கண்டத்தில்/தொண்டையில் வைத்துப் பூஜித்ததால்) என்றும் வக்கிர லிங்கம் என்றும் பெயர்களுண்டு. மேற்கு நோக்கிய லிங்கம். ஆத்ம லிங்கத்துக்கு ஒரு தனிச் சிறப்பு இருப்பதாகக் கோயிலைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டார்கள். கோடை காலத்தில், லிங்கம் படுகுளிர்ச்சியாக இருக்குமாம். குளிர் காலத்திலோ, லிங்கத்தின் மீது, முத்து முத்தாக நீர்த் துளிகள் காணப்படுமாம். குளிர்ச்சி மிக்கவரான ஆத்ம லிங்கரை வணங்கித் திரும்புகிறோம்.
ராஜ கோபுரத்துக்குள் நுழைந்தோம். இன்னும் நாம் உள் கோபுரத்தை அடையவில்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட விசாலமான இடத்தில்தான், வக்கிர காளியம்மன் சந்நிதியும் ஆத்மலிங்கமும் உள்ளன.
உள் கோபுரம் நோக்கி நடக்கத் தொடங்குகிறோம். நமக்கு இடப் புறத்தில், மரத்தடியில் புற்றும், சுற்றிலும் நிறைய நாகர்களும். நாகராஜாவுக்குப் பால் வார்த்து விளக்குப் போட்டால், நினைத்ததெல்லாம் நடக்குமாம்!
ஏன் திருவக்கரை?
திருவக்கரையின் பெயர்க் காரணம் வக்கிராசுரன் என்று கூறினாலும், இந்த ஊரின் சிறப்பு, மற்றொரு சிந்தனையையும் தருகிறது.
சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், இந்தப் பகுதியில் இருந்த மரங்கள், காலப்போக்கில் பூமியில் புதைந்து போயின. படிந்த மரங்கள் சிதைவடைவதற்கு முன்னால், வேதிம நிகழ்வொன்று இங்கு நடந்தேறிவிட்டது. இந்தப் பகுதியின் மண்ணிலும், நிலத்தடி நீரிலும் சிலிக்கா துகள்கள் இருந்தன. கண்ணாரக்கல் என்று கிராம மக்களால் அழைக்கப்படும் சிலிக்காவின் அணுக்கள், பூமியில் படிந்த மரங்களின் பாகங்களுக்குள் ஊடுருவின. இதனால், மரங்கள், வடிவத்தில் சிதையாமல் வேரோடும் கிளையோடும் கல் மரங்களாகவே தங்கிவிட்டன. எனவே, இங்கு நிறையப் பாறைகள், கற்கள். மரக்காடு கள் இருந்த இடம், இப்போது மரக்கல் காடுகளாகக் காட்சியளிக்கின்றன. இதைத்தான், புதைபடிவ தேசியப் பூங்காவாக்கி, இந்திய நில இயல்துறை சிறப்பித்துள்ளது.
சரி. பெயருக்கு வருவோம். வல் + கரை - வலிய பாறைகளை உடைய இடம் என்று பொருள். வல் + கரை = வக்கரை. கிராம மக்கள், பூமியில் புதைந்து கிடக்கும் மரக்கல் பாறைகளை, வதம் செய்யப்பட்ட வக்கிராசுரனின் எலும்புகள் என்று நம்புகின்றனர்.
கூடவே ஒரு துண்டுச் செய்தி: சற்றுத் தள்ளி, இதே மாதிரி புதைந்த மரங்கள், அங்கிருந்த உவர்நீரின் பாதிப்புக்கு உள்ளாயின. வேதிம வினை நிகழ்ந்து, மரங்கள் கரியாகி, நிலக்கரியாகத் தங்கின. இதுவே, நெய்வேலியில் நிலக்கரி உருவான கதை.


க்கிரகாளியம்மன் திருக்கோயிலின் ராஜ கோபுரத்துக்குள் நுழைந்து உள் கோபுரம் நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம்.
நாகருக்குப் பக்கத்தில், மதிலின் நடுவில், ஒரு வாயில் தெரிகிறது. மதிலுக்கு அப்பால் குளம். குளமா? குளம் போல ஓரிடம். முன்னர் குளமாகத் தீர்த்தம் இருந்த இடம். திருவக்கரைத் திருக்கோயிலுக்கு உரியதாக சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று இரண்டு தீர்த்தங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று தூர்ந்து போய்விட்டதாம்; மற்றது குளம் போன்ற இடம். இப்போது தீர்த்தம் இல்லை என்றாலும், பக்தர்கள் இன்னமும் பழைய வழக்கப்படி அங்கு சென்றுவிட்டுக் கோயிலுக்குள் வருகின்றனர். அதற்கான தெற்கு வாயில்தான், மதில் நடுவில் இருப்பது.
உள் கோபுரம் நோக்கி நடக்கிற நமக்கு வலப் புறத்தில், ஒரு பெரிய மண்டபம். ஆத்மலிங்கத்துக்கு எதிர்த்தாற் போல இருக்கும் இந்த மண்டபம், சக்கரங்களும் குதிரைகளும் பூட்டப்பட்டு, தேர் அமைப்பில் இருக்கிறது. நூறு கால்களைக் கொண்டதால் நூற்றுக்கால் மண்டபம். பிரம்மோற்சவத்தின்போது, சுவாமி-அம்பாள் கல்யாணம் நடைபெறுவதால், திருக்கல்யாண மண்டபம். இதன் சிம்மத் தூண்கள் அழகானவை. அமர்ந்த நிலையில் உள்ள சிங்கம், கம்பீரமாக உத்தரத்தைத் தாங்குவது போல கட்டப்பட்டிருக்கும் தூண்கள். உள்ளே அழகழகான சிற்பங்கள். பார்க்கப் பார்க்கப் பரவசமூட்டும் மண்டபம், ஆங்காங்கே பழுதடைந்திருக்கிறது. சீராக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருக்கல்யாண மண்டபத்துக்கு அருகில், உள் கோபுரத்தை நோக்கிய நிலையில் கழுத்தை
முந்தைய 


மேலே தூக்கிக் கொண்டு காட்சியளிக்கிறது பெரிய நந்தி. கோபுரத்தை நோக்கி னாற்போல இருந்தாலும், ஏதோவொன்று வித்தியாசமாகத் தெரிகிறது.
நின்று நிதானித்துப் பார்த்தால் புரிகிறது. நந்தி சற்றே தள்ளி அமைந்திருக்கிறது. சாதாரணமாக, நந்தி, கொடிமரம், சுவாமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். இங்கோ கோபுரம், நந்தி, கொடிமரம், உள்ளே இருக்கும் மூலவர் எல்லாம் நேர்க்கோட்டில் அமையாமல், ஒன்றுக்கொன்று விலகி, வக்கிரமாக இருக்கின்றன.

உள் கோபுரத்துக்குக் கிளிக் கோபுரம் என்று பெயர். மூன்று நிலைகளைக் கொண்ட இந்த கோபுரம்தான், ஒரு காலத்தில் ராஜ கோபுரமாக இருந்தது. இப்போது, ஆங்காங்கே பழுதுபட்டுக் காட்சியளிக்கிறது.
கிளிக் கோபுரத்துக்கு முன்னால் இருக்கும் துவார கணபதியை வணங்கி, கிளிக் கோபுரத்துக்குள் நுழைந்து இரண்டாம் பிராகாரத்தை அடைந்து விட்டோம். இந்தப் பிராகாரத்திலிருக்கும் கொடிமரமும், கோபுரத்துக்கு நேராக இல்லாமல் சற்றே தள்ளியே இருக்கிறது.
இரண்டாம் பிராகாரத்தை வலம் வரத் தொடங்குகிறோம். நாம் தொடங்கும் கிழக்குச் சுற்றின் ஓரத்தில், சப்த மாதர்களின் சிலைகள். தெற்குச் சுற்றில் திரும்புவதற்கு முன், ஒரு பெரிய மண்டபமும் சந்நிதியும் நம்மை ஈர்க்கின்றன.
இந்தத் தலத்தில் வாழ்ந்தவர் குண்டலினி முனிவர். சித்தரான இவர், இங்கு ஜீவசமாதி அடைந்தார். அவருடைய சமாதியின் மீது லிங்கம் அமைக்கப்பட்டு, பள்ளிப் படைக் கோயிலாக தியானலிங்கச் சந்நிதி எழுந்துள்ளது. அழகான ஆவுடை யாரின் மீது லிங்கம். மேலே ஐந்து தலை நாகவாரி. சித்தர்களை வழிபடுவதும், சித்தர் பீடங்களில் தியானம் செய்வதும் தமிழ்நாட்டின் தொன்மைக்கால வழிபாட்டு முறைகள். அதனால்தான் பெரிய தியான மண்டபம், குண்டலினி முனிவர் சந்நிதிக்கு முன்னால் அமைந்துள்ளது. பக்தர்கள் நிறையப் பேர் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுகிறார்கள். தனி விமானத்தோடு கூடிய இந்தச் சந்நிதிக்குக் கோஷ்ட மூர்த்தங்களாக, தட்சிணாமூர்த்தியும் மகாவிஷ்ணுவும் உள்ளனர்.
தெற்குச் சுற்றில் நந்தவனம் பராமரிக்கப்படுகிறது. மேற்குச் சுற்றில் சிறு சிறு செடிகள். வலம் நடந்து வடக்குச் சுற்றில் திரும்புகிறோம்.
ஆஹா! என்ன இது! அழகான தனிச் சந்நிதி.
வக்கிராசுரனை வதம் செய்தாரே பெருமாள், அவர் வரதராஜராக இங்கு கோயில் கொண் டுள்ளார். மேற்கு நோக்கிய சந்நிதியில் ஆறடி உயரத்துக்கு ஆஜானுபாகுவாகத் தோற்றம் தருகிறார் பெருமாள். நின்ற திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்கள். மேல் கரங்களில் வழக்கம் போல சங்கு-சக்கரம். ஆனால், சக்கரம்தான் சற்று மாறியுள்ளது. சாந்த ஸ்வரூபியாக பெரு மாள் திகழும்போது, சக்கரத்தைக் கையில் ஏந்தியிருப்பார். ஆனால், கொடுமையை அழிப் பதற்குத் தயாரான நிலையில், பிரயோகச் சக் கரத்துடன் காட்சி கொடுப்பார். இங்கும் வலக் கையில் பிரயோகச் சக்கரம்.
வலக் கீழ்க்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக் கீழ்க்கரம் ஊரு ஹஸ்தமாகவும் (தொடையில் வைக்கப்பட்டு) உள்ளன. தாயார் சந்நிதி இல்லை. வக்கிராசுரனுடன் போர் செய்ய வந்ததால், தாயார் வரவில்லையாம். ‘ஊரு ஹஸ்தத்துடன் வேங்கடேசப் பெருமாள் போலத்தானே இந்த வரதராஜரும் காட்சி கொடுக்கிறார். ஸ்ரீநிவாசன் மார்பில் எப்போதும் தாயார் உறைகிறாரே. அதனால்தான் தாயார் சந்நிதி தனியாக இல்லை!’ என்று விளக்கம் கொடுக்கிறார் உள்ளூர் பட்டர். அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் பெருமாளுக்கு சந்தனக் காப்பு உண்டு.
பெருமாள் சந்நிதியின் உள்புறத்தில் இருக்கும் ஒரு சிலை எண்ணி எண்ணி வியத்தற்கு உரியது. பெருமாள்தானே, ராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தார். உள்ளே இருக்கும் நந்தகோபாலர், பாமா-ருக்மணி சகிதமாக, கையில் வில்லும் அம்பும் தாங்கி, ராமகிருஷ்ணராகவே காட்சி தருகிறார். பார்த்து ரசிக்க வேண்டிய கோலம். வரதராஜருக்கு எதிரில், கருடாழ்வார். அருகிலேயே ஆஞ்சநேயர்.
வடக்குத் திருச்சுற்றில், மதில் ஓரமாக லட்சுமி கணபதி. வடக்குச் சுற்றிலேயே நவக்கிரகச் சந்நிதி. நவக்கிரகங்களில் தலையாயவரான சனி, இங்கு வக்கிரச் சனியாகக் காட்சி அளிக்கிறார்.
கிரகங்கள், தத்தம் சுற்றுப் பாதையில் சுழல்கின்றன என்பதை விஞ்ஞானபூர்வமாக அறிவோம். இதையே, நம் முன்னோர்கள், கிரகங்கள் தத்தம் வாகனங்களில் பயணிப்பதாகச் சொன்னார்கள். கிரகங்களின் பயணத்தில், எதிர்த் திசை நகர்வு என்று ஒன்றுண்டு. வக்கிரம் என்பார்கள்.
வழக்கமாகப் பயணிக்கும் திசையில் போகாமல், சில காலத் துக்கு, போன திசையிலேயே அந்த கிரகம் திரும்பி வரும் (அதாவது வழக்கத்துக்கு எதிர்முகமாகப் பயணிக்கும்).
திருவக்கரையில், சனி பகவான் வக்கிரச் சனியாகக் காட்சி தருகிறார். வாகனத்தோடு கூடிய சனியைப் பார்த்தால் புரியும். பிற இடங்களில், காக்கை வாகனத்தின் தலை, சனிக்கு வலப் பக்கம் இருக்கும். இங்கோ, காக்கையின் தலை, சனிக்கு இடப் பக்கம் உள்ளது. திசை மாறிய சனியின் வக்கிரம்!
நவக்கிரகச் சந்நிதி அருகில், கிழக்கு நோக்கிய சஹஸ்ர லிங்கம் தனிச் சந்நிதி. அடுத்து, வள்ளி-தெய்வயானை சமேதரான ஆறுமுகர், தெற்கு நோக்கியவராகத் தனிக் கோயிலில் குடி கொண்டுள்ளார்.
மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்புகிறோம். வடகிழக்கு மூலையில், கிளிக் கோபுரத்தை ஒட்டினாற்போல அம்பாள் சந்நிதி. பிராகார வலத்தை நிறைவு செய்து விட்டோம். கொடிமரத்தின் அடியை நெருங்கி வந்து பணிகிறோம்.
ஒரு சில படிகள் ஏறித்தான் மூலவரை தரிசிக்கச் செல்ல வேண்டும். படிகள் ஏறி, விசாலமாக இருக்கும் மண்டபத்தை அடைந்து விட்டோம். மண்டபத்தில் இருக்கும் கணபதியையும், ஷோடச லிங்கத்தையும் வணங்கி, உயரமான துவாரபாலகர்களைக் கடந்து வாயிலின் வழி உள்ளே போகிறோம்.
இப்போது, உள் பிராகாரத்தை அடைந்து விட்டோம். வாயிலின் அருகிலேயே ஒரு புறம் துர்க்கையம்மன். இன்னொரு புறம் வீரபத்திரர். பிராகாரத்தில் வரிசையாக சைவ நால்வர், கன்னி மூலை (தென்மேற்கு மூலை) மூஷிக வாகன விநாயகர், மகாலட்சுமி, ஷண்முகர், விஷ்ணு துர்க்கை, பைரவர், நாகர், காளி என்று பற்பலத் திருமேனிகள். விஷ்ணுவும் துர்க்கையும் ஒன்று சேர்ந்து சங்கு-சக்ரதாரிகளாகக் காட்சி கொடுக்கும் சிறப்புச் சொல்லி மாளாது. பைரவர் திருமேனிகள் மிக மிக அழகு.
வாகன சமேதராக ஒரு பைரவர் நின்ற கோலத்தில். அருகிலேயே இன்னொரு பைரவர் அமர்ந்த கோலத்தில்.
உள் பிராகார வலத்தை நிறைவு செய்யும் நிலையில், நடராஜர் சபையை அடைகிறோம். தென்முகம் நோக்கித் திருப்பாதம் உயர்த்தி ஆடும் அம்பலக் கூத்தன். இவரும் சற்று வேறுபட்டவராகத் தெரிகிறார்.
ஆமாம்! வழக்கமாக இடப் பாதம் தூக்கி ஆடும் நடராஜப் பெருமான், இங்கு வலப் பாதம் தூக்கி ஆடுகிறார். தூக்கிய திருவடி இடுப்புக்கும் மேலாக வந்துள்ளது. நடராஜரின் சடாமுடியும் விரிந்து பறக்கவில்லை. கூர்ம சடையாகக் கொண்டை முடிந்து கொண்டு ஆடுகிறார் கொன்றைவேந்தர். வித்தியாசமான இந்தத் தாண்டவத்தை வக்கிர தாண்டவம் என்றே குறிப்பிடுகிறார்கள்.
பொன்னடி தூக்கியாடும் பொன்னார்மேனியனை வணங்கி, வலத்தை நிறைவு செய்கிறோம்.
படிகள் ஏறி, மூலவர் கருவறைக்குச் செல்கிறோம். முக மண்டப நந்தியைத் தாண்டி, துவார கணபதியையும் சுப்ரமணியரையும் வணங்கி, அர்த்த மண்டபம் அடைகிறோம். உள்ளே மூலவர். அருள்மிகு சந்திர மௌலீஸ்வரர்.
சந்திர சேகரனே! அருளாய் என்று தண் விசும்பில் இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுதிறைஞ்ச அந்தர மூவெயிலும் அனலாய் விழ ஓரம்பினால் மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே!
என்று திருஞானசம்பந்தர் பாடிய சந்திரசேகரேஸ்வரர். கம்பீரமான லிங்கத் திருமேனி. இந்த மஹேஸ்வரர் முக லிங்கமாக இருப்பவர். சதுரமான அடிப்பாகம். அதன் மீது வட்டமான ஆவுடையார். மேலே லிங்கபாணத்தில், மூன்று முகங்களைக் கொண்ட லிங்கத் திருமேனி.
வேறு எங்கும் காண முடியாத அதிசயம் இந்த முகலிங்க சந்திரமௌலீஸ்வரர். பூஜைக்கு உரிய லிங்க வகைகளாக, ஆறு வகைகளைத் திருமூலர் - தம்முடைய திருமந்திரத்தின் ஏழாவது தந்திரத்தில் குறிப்பிடுவார்.
ஆண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதாசிவ லிங்கம், ஞான லிங்கம், ஆத்ம லிங்கம், சிவலிங்கம் என்று கூறுவார். ஆத்ம லிங்கத்தைத்தான் வக்கிராசுரன் வணங்கினான். ஞான லிங்கமே, மும்முக லிங்கமாக நமக்குக் காட்சி கொடுக்கிற லிங்கம்.
கிழக்கு நோக்கிய தத்புருட முகம், வடக்கு நோக்கிய வாமதேவ முகம், தெற்கு நோக்கிய அகோர முகம் ஆகிய மும்முகங்கள் கொண்டு அருள் பாலிக்கிறார் ஆதிப்பரமனார். அகோர முகத்தில், வாயின் இரண்டு ஓரங்களிலும், நீட்டிக் கொண்டிருக்கும் கோரைப் பற்கள், இறைவன் திருமுகத்துக்கு மேலும் அழகைக் கூட்டுகின்றன.
அதிகாலைகளில் தத்புருட முகத்துக்கு மஞ்சள் பூசியும், உச்சிக்காலத்தில் வாமதேவ முகத்துக்கு சந்தனம் அணிவித்தும், மாலையில் அகோர முகத்துக்குக் குங்குமம் அப்பியும் பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறான பூஜையை தரிசிப்பது அர்த்தநாரீஸ்வரர் பெருமானின் முழுமையான அருளைப் பெற்றுத் தரும் என்று ஆகமங்கள் தெரிவிக்கின்றன. மேலே ருத்ராட்ச விதானமும், குடை பிடிக்கும் ஐந்து தலை நாகவாரியும் கொண்டு, பிறைமதிப் பெருமானாகத் திகழும் அருள்மிகு சந்திரமௌலீஸ்வரரை வணங்கிப் பணிகிறோம்.
எம்மதமும் சார்ந்தார் வினை நீக்கித் தாங்கு திருவக்கரையுள் நேர்ந்தார் உபநிடத நிச்சயமே!
என்று பாடினார் ராமலிங்க வள்ளலார். திருவக்கரை எம் பெருமானை நாடித் துதித்தால், நன்மைகள் பெருகுவது நிச்சயம்.
கார்மலி கொன்றையோடும் கதிர்மத்தமும் வாளரவும் நீர்மலியும் சடைமேல் நிரம்பா மதிசூடி நல்ல வார்மலி மென்முலையாளடும் வக்கரை மேவியவரை வழிபட்டு மீண்டும் உள்பிராகார வலம் வருகிறோம்.
மூலவர் கோஷ்ட மூர்த்தங்களாக சனகாதி முனிவர்களுக்கு உப தேசிக்கும் தட்சிணாமூர்த்தியும், ஊரு ஹஸ்தம் தாங்கிய மகாவிஷ்ணுவும், பிரம்மாவும், துர்க்கையும் அருள் பாலிக்கின்றனர். தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
மும்முகத்து இறையனாரை மீண்டும் மீண்டும் வணங்கி, இரண்டாம் பிராகாரம் அடைகிறோம்.
இரண்டாம் பிராகாரத்து வடகிழக்கு மூலையில் அம்பாள் சந்நிதி. தனிக் கோயில் என்றே சொல்லலாம்.
முன் மண்டபத்துடன் கூடிய சந்நிதி. முன் மண்டபத் தூண்கள், சிற்பக் களஞ்சியமாகவே திகழ்கின்றன.
அம்பாள் நின்ற திருக்கோலம். அருள்மிகு அமிர்தேஸ்வரி என்றும், வடிவாம்பிகை என்றும் திருநாமங்கள் பூண்டு தெற்கு முகமா கக் காட்சி தருகிறாள் அம்பாள்.
அம்பாளையும் போற்றி வழிபட்டு வெளியே வருகிறோம்.
கயிலாய மலையுள்ளார் காரோணத்தார் கந்த மாதனத்துள்ளார் காளத்தியார் மயிலாடுதுறையுள்ளார் மாகாளத்தார் வக்கரையார்!
என்று நாவுக்கரசு சுவாமிகள் போற்றிய பரமனாரைப் பாடி,
காலையில் எம்மையே காளி காப்பாள் மாலையில் எம்மையே மாலினி காப்பாள் அந்தியில் எம்மையே அபிராமி காப்பாள் இரவில் எம்மையே ஈஸ்வரி காப்பாள்!
என்று வக்கிர பத்ரகாளியம்மன் கவசம் ஓதி வெளியே வரும்போது, உள்ளமெல்லாம் நிறைந்து கிடக்கிறது.
முக லிங்கம்
சிவ தத்துவத்துக்கு மூன்று நிலைகள் உண்டு. 1. அருவமான (உருவமில்லாத) நிலை, 2. அருவுருமான நிலை (பாதி உருவம் + பாதி அருவம்), 3. உருவமான நிலை. எந்தக் குறிப்பிட்ட உருவமும் இல்லாமல் அங்கிங்கெனாதபடி எங்கும் பரந்துள்ள பரம்பொருள், மனித இனத்துக்காக, மனிதர்களுக்குப் புரியக் கூடிய வகையில் உருவம் தாங்கி இறங்கி வருகிற தன்மையைத்தான் இந்த மூன்று நிலைகளும் காட்டும்.
அருவமான நிலை, நிர்க்குண பிரம்மமாகும். அதாவது, குணமோ, பண்போ தனித்துக் கூற முடியாத நிலை.
உருவமான நிலை, சகுண பிரம்மமாகும். அதாவது உருவம், நிறம், தன்மை என்று விளக்கப்படக் கூடிய நிலை. சிவ மூர்த்தங்களான நடராஜர், பிட்சாடனர், கால சம்ஹாரர், ரிஷபாரூடர், சோமாஸ்கந்தர் போன்ற திருமேனிகள் உருவ நிலைக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
அருவமும் இல்லாமல் உருவமும் இல்லாமல் (அருவமாக இருப்பது போல - ஆனால், ஏதோவொரு உருவமும் உண்டு), ஆனால் இரண்டுமாக இருக்கிற நிலையே, சிவலிங்க நிலையாகும். அருவத்திலிருந்து அருவுருவம், அருவுருவத்திலிருந்து உருவம் என்று வரிசையாக வெளிப்பட்டுத் தோன்றுவதற்கு, ‘அவிகார பரிணாமம்’ என்று காஷ்மீர சைவம் பெயர் சூட்டுகிறது. சிவலிங்கத்திலிருந்து சிவ மூர்த்தம் தோன்றுகிற வழியில், இடைப்பட்ட நிலையே முக லிங்கம்.
‘லிங்கம், லிங்கோத்பவம், சைவ முக லிங்கம், சதாசிவம், மஹாசதாசிவம், சைவ உமா மஹேச பரம்’ என்று சிவலிங்கம் - சிவமூர்த்தம் வரிசையைப் பற்றிச் சிவப்பராக்கிரமம் எனும் நூல் தெரிவிக்கும்.
அருள் பாலிக்க இறங்கிவரும் சிவப்பரம்பொருள், முகலிங்க நிலையில் காட்சி தருவதென்பது மிகவும் சிறப்பானது.

No comments:

Post a Comment