Thursday, 3 August 2017

சிவாலயங்களில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் ஏன் ?

 
சிவாலயங்கள் எல்லாவற்றிலும் அம்பிகை சந்நிதி ஒரே மாதிரி அமைவதில்லை. சில தலங்களில் சுவாமிக்கு வலப் புறமாகவும் வேறு சில தலங்களில் இடப் புறமாகவும் அமைந்துள்ளன. தவிர வடமேற்கு மற்றும் வடகிழக்கு முனைகளிலும் சுவாமி சந்நிதிக்கு நேர் எதிராகவும் அம்பிகை சந்நிதி கொண்ட சிவாலயங்களும் உண்டு. சில தலங்களில் சுவாமி சந்நிதி மலைக்கு மேலும், அம்பிகை சந்நிதி கீழேயும் அமையப் பெற்றுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் உரிய சிறப்பான காரணங்களை சான்றோர் கூறியுள்ளனர்.
திருக்கோயில்களில் அம்பிகை, சிவபெருமானுக்கு இணையாக இடப் பாகத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கோலம், அவள் தவம் புரிந்து ஈசனின் இடப் பாகம் பெற்று அவருடன் சேர்ந்து அன்பர்களுக்கு சகல நலன்களையும் அருளும் நிலையாகும்.
சிவபெருமானின் கருவறையை நோக்கியவாறு, அதாவது இருவரும் எதிரெதிரே சந்நிதி கொண்டு அருளும் நிலை- ‘உபதேசக் கோலம்’ என்று போற்றப்படுகிறது (திருக்காளத்தி, திருப்பனந்தாள் போன்றவை உபதேசத் தலங்கள்).
இறைவனின் வலப் பக்கத்தில் (பெரும்பாலும் கிழக்கு நோக்கி) அம்பிகை வீற்றிருக்கும் கோலம், கல்யாணத் திருக்கோலம் ஆகும்! மதுரை (மீனாட்சி), நெல்லை (காந்திமதி) மற்றும் குற்றாலம் (குழல்வாய் மொழியாள்) ஆகிய தலங்களில் அம்பிகை கல்யாணத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளதால் இவை ‘கல்யாணத் தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
மேலும் அம்பிகை, இறைவனுக்கு வலப் பக்கத்தில் வடக்கு நோக்கி எழுந்தருளியிருக்கும் நிலை, அவள் சிவ பூஜை செய்யும் கோலமாகும். காஞ்சி புரத்துக்கு அருகில் உள்ள தக்கோலம் திருத்தலம் இதற்கு ஓர் உதாரணம்.
தமிழ் வளர்த்த சான்றோரில் முதன்மை பெற்றவர் அகத்தியர். சிவனருள் பெற்ற தவ யோகியான இவருக்காக, சிவபெருமான் தமது திருமணக் காட்சியைத் தென்னகத்தில் 21 இடங்களில் காட்டியருளினார். இதன் மூலம் அகத்தியரின் பக்திப் பெருமை எப்படிப்பட்டது என்பது நமக்குப் புலனாகும். சிறப்பு வாய்ந்த இந்த தவ முனிவர் வழிபட்டு பேறு பெற்ற தலங்களை ‘அகத்தீசுவரர் ஆலயங்கள்’ என்று புராணங்கள் கூறும்.
அகத்தியர் பூஜித்த பெரும்பான்மையான தலங்களில், அம்பிகை உள் மண்டபத்தில் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். இந்த நிலை, அம்பிகை உயிர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் கோலம் ஆகும்.
கை கட்டி, வாய் பொத்தி நின்று சிவபெருமானிடம் சிவாகமங்களைக் கேட்கும் உமையம்மையின் திருக்கோலம், ‘சிஷ்யபாவ கௌரி திருக்கோலம்’ என்றழைக்கப்படும். இந்த திருக்கோலம் குறித்து புராணங்களில் காணப்பட்டாலும், திருவுருவங் களாக இந்தக் காட்சியை எங்கும் காண முடியவில்லை.
சிவாலயங்களில் அம்பிகை சந்நிதி ஒன்று மட்டும் இருப்பது பொதுவான நியதி. ஆனால், இதற்கு மாறாகச் சில தலங்களில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். அதற்கான காரணங்களை புராணங்கள் வாயிலாகவும் வட்டார வழக்குகளாலும் அறிய முடிகிறது.
சில சிவத் தலங்களில் நீண்ட காலமாகப் பூஜிக்கப்பட்டு வரும் அம்பிகை விக்கிரகங்கள் பின்னப்பட்டுப் போகலாம். அந்த விக்கிரகங்களை பூஜிக்கக் கூடாது என்று பூஜாவிதி நூல்கள் கூறுகின்றன. ஆகவே, அவற்றை விலக்கிவிட்டுப் புதியதாக அம்பிகை விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்கின்றனர். எனினும், பழைய விக்கிரகத்தை தூக்கிப் போடாமல், அதன் மீதுள்ள அன்பின் காரணமாக உள் மண்டபத்திலோ அல்லது அம்பிகை சந்நிதியின் மாடத்திலோ நிலைப்படுத்துகின்றனர். இதனால் இரண்டு அம்பிகை சந்நிதிகள் உண்டாகின்றன.
தவிர, இறைவனிடம் பேரன்பு கொண்டு, கோயில் பணிகளில் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு வீடுபேறு அடைந்த அரச குடும்பப் பெண்களை, பார்வதி தேவியின் அம்சமாகவே கருதி அவர்களுக்கும் சிவாலயத்தில் தனிச் சந்நிதிகள் அமைத்தனர். இதனாலும் இரட்டை அம்பிகை சந்நிதிகள் ஏற்பட்டன.
சில தலங்களில் அம்பிகையின் சந்நிதி, கருவறையில் இருந்து சிறிது தூரம் தள்ளித் தனித்து அமைக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாகச் சில நேரம் பூஜா காலங்களுக்குத் தாமதம் ஏற்பட்டது. ஆகவே சிவாச்சார்யார்கள், சிவ சந்நிதிக்கு அருகில் புதிய அம்பிகை சந்நிதியை அமைத்துக் கொண்டனர். இந்தக் காரணத்தாலும் இரட்டை அம்பிகை சந்நிதிகள் உருவாகின. மேலும் பல ஆலயங்களில் புராண தத்துவ நிலைகளுக்கு ஏற்பவும் இரண்டு அம்பிகை சந்நிதிகள் அமைந்துள்ளன.
இனி இரட்டை அம்பிகைத் தலங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
கும்பகோணத்துக்கு அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கரு வறைக்கு அருகே பிறையணி அம்மன் எனும் பெயரிலும் அதே ஆலயத்தில் பெரிய வடிவில் கிரிகுஜாம்பிகை எனும் நாமத்துடன் தனிக் கோயில் கொண்டும் பெரிய வடிவில் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.
இதே போல் மயிலாடுதுறை- கும்ப கோணம் சாலையில் ஆடுதுறைக்கு இரண்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது திருநீலக்குடி. இங்குள்ள சிவ ஸ்தலத்தில் அம்பிகை, ‘பக்தாபீஷ்டதாயினி’ எனும் பெயரில் தவக்கோலத்திலும் ‘அனூபமஸ்தினி’ எனும் பெயரில் தவம் முடிந்து இறைவனை மணந்த கோலத்திலும் காட்சி தருகிறாள். இங்கு அம்பிகையே சிவலிங்கத்துக்கு எண்ணெய்க் காப்பு செய்வதாக நம்பப்படுகிறது (இங்குள்ள சிவலிங்கத்தின் மீது எவ்வளவு நல்லெண்ணெய் விட்டாலும் அது முழுவதும் சிவலிங்கத்துக்குள்ளே ஊறி விடுகிறதாம்). இந்தக் கோயிலில் அம்பிகை சந்நிதியில் எண்ணெய் வைத்து வழிபட்ட பின்னரே சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் சுமார் ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள இன்னம்பூர் தலத்தில் இரட்டை அம்பிகை சந்நிதிகள் உள்ளன. வெளிப் பிராகாரத்தில் உள்ள பிரதான பெரிய சந்நிதியில் சுகந்த குந்தளாம்பிகை எனும் பெயருடன் அம்பிகை எழுந்தருளியுள்ளாள். ஆலயத்தின் உள்ளே கருவறைக்கு வலப் புறம் அமைந்த சந்நிதியில் ‘நித்ய கல்யாணி’ எனும் நாமத்துடன் அம்பிகை காட்சி தருகிறாள்.
இன்னம்பூர் தலத்தில் இருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருப்புறம்பயம் ஸ்ரீசாட்சிநாத ஸ்வாமி ஆலயம், திருவிளையாடற் புராணக் கதை நிகழ்ந்த விசேஷ, தலமாகும். இங்கு இக்ஷ§வாணி, குகாம்பிகை ஆகிய பெயர்களில் அமைந்த இரண்டு அம்பிகை சந்நிதிகள் உள்ளன (இந்த ஆலயத்தில் உள்ள ஸ்ரீபிரளயம்காத்த விநாயகர், கிளிஞ்சலால் ஆனவர். ஒவ்வொரு வருடமும் விநாயக சதுர்த்தி அன்று மட்டும் தேனால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் நடப்பது வெகு சிறப்பு).
மயிலாடுதுறை அருகே திருமீயச்சூர் எனும் தலத்தில் அமைந்துள்ள மேகநாதர் ஆலயத்தில் சௌந்தரநாயகி, லலிதாம்பிகை எனும் இரு திருவுருவங்களுடன் அம்பிகை காட்சியளிக்கிறாள். இவற்றுள் லலிதாம்பிகை அமர்ந்த கோலத்திலும், சௌந்தரநாயகி நின்ற கோலத்திலும் காட்சியளிக்கின்றனர்.
கருவூர் (கரூர்) பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சௌந்தரவல்லி, அலங்காரவல்லி என்ற இரண்டு அம்பிகை சந்நிதிகள் உள்ளன. இந்த அம்பிகைகளுள், அலங்காரவல்லி, ‘வடிவுடையாள்’ எனும் பெயரில் இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள அப்பியபாளையத்தில் அவதரித்து சிவபெருமானை மணந்து கொண்டவள்.
திருச்சி அருகே பூவனூர் எனும் தலத்தில் சதுரங்க வல்லபர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி என்ற இரண்டு அம்பிகை சந்நிதிகள் உள்ளன. இவற்றுள் ராஜராஜேஸ்வரி சந்நிதியில் வீற்றிருக்கும் அம்பிகை, குருராஜன் என்கிற மன்னனுக்கு மகளாகப் பிறந்தாள் என்றும், அவளை சிவபெருமான் சதுரங்கப் போட்டியில் வென்று மணந்து கொண்டதால் அவர் சதுரங்க வல்லபர் என்கிற திருநாமம் பெற்றார் என்றும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.
சிதம்பரத்தின் மூல லிங்கத்துக்கு ‘மூலட்டானேஸ்வரர்’ என்று பெயர். இவருக்கு அருகே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் இமய பார்வதி. இந்த ஆலயத்தில் சிற்சபையில் தனிச் சிறப்புடன் ஆனந்த நடனமாடிக் கொண்டிருக்கும் நடராஜ மூர்த்தி உலா மூர்த்தியாக இருந்தாலும், இவருடைய தேவியாகிய சிவகாமசுந்தரி மூலவராகத் தனிப்பெரும் சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள்.
திருவாரூரில் உள்ள தியாகராஜர் ஆலயத்தின் மூல மூர்த்திக்கு மூலட்டானேஸ்வரர் என்று பெயர். அவருக்கு இணையாக எழுந்தருளியுள்ள அம்பிகை நீலோற்பலாம்பாள். வீதிகளில் உலா வரும் விடங்கராக (தியாகராஜ மூர்த்திகளுக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் - விடங்கர்) எழுந்தருளியிருக்கும் தியாகராஜ பெருமானின் தேவியாக, தனிக் கோயிலில் மூல மூர்த்தியாகத் திகழ்பவள் கமலாம்பிகை.
கும்பகோணம் அருகே ஆவூரில் இருக்கும் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் உண்டு. ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீபங்கஜவல்லி ஆகியவை அந்த அம்பாள்களின் பெயர்கள்.

No comments:

Post a Comment