Friday, 11 August 2017

ஆடல் வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம் !




னந்தக் கூத்தனாம் நடராஜ பெருமானுக்கு ஆண்டுதோறும் 6 அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதுகுறித்து தமிழ்ப் பாடல் ஒன்று விவரிக்கிறது
சித்திரையில் ஓண முதல் சீர் ஆனி உத்தரமாம்சத்த தனு ஆதிரையும் சார்வாகும் - பத்தி மாசி அரி கன்னி மருவுசதுர்த்தசி மன்னு ஈசர் அபிஷேகதினமாம்...
அதாவது, சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம்; ஆனி- உத்திரம்; மார்கழி- திருவாதிரை ஆகிய நட்சத்திர நாட்கள், மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதி நாட்கள்... என்று வருடத்துக்கு 6 சிறப்பு அபிஷேகங்கள் நடராஜருக்கு நடைபெறுவதாக விவரிக்கிறது இந்த பாடல்.
இவற்றில், மார்கழி- திருவாதிரை மற்றும் ஆனித் திருமஞ்சனம் (ஆனி உத்திர தரிசனம்) இரண்டும் சிதம்பரம் தலத்தில் பிரசித்திப் பெற்ற விழாக்கள் (மற்ற நாட்களில் இங்கு, நடராஜர் சந்நிதியில் உள்ள ஸ்படிக லிங்கத்துக்கே ஆறு கால அபிஷேகங்கள் நடைபெறுகின்றன). இந்த வருடம், ஆனி மாதம் 25-ஆம் தேதி (9.7.2008) புதன்கிழமை அன்று ஆனித் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்துக்கு பத்து நாட்கள் முன்னரே தில்லை (சிதம்பரம்) கோயில் களைகட்டி விடுகிறது. கொடியேற்றத்துடன் துவங்கும் ஆனிப் பெருவிழாவில், ஒவ்வொரு நாளும் விநாயகர், சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மற்றும் தங்க வாகனங்களில் வீதி உலா வருவர்.
9-ஆம் நாளன்று, தேரோட்டம் கோலாகல மாக நடைபெறும். அப்போது நடராஜ பெருமான், சிவகாமி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர் மற்றும் சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் தனித் தனியாக ஐந்து தேர்களில் வீதியுலா வரும் அழகே அழகு! அன்று இரவு தேரிலிருந்து இறங்கும் ஆனந்தக் கூத்தர், அசைந்து அசைந்து ஒய்யாரமாக ஆயிரங்கால் மண்டபத்துக்குச் செல்வார். பிறகு, அவருக்கு அபிஷேக- ஆராதனைகள் நடைபெறும். மறு நாள்- பகல் வேளையில், நடராஜ மூர்த்தியும் சிவகாமி அம்மையும் ஆனந்த நடனம் ஆடியபடி வந்து, சிற்சபையில் எழுந்தருள்வர். பின்னர், தீபாராதனை நடைபெறும். அன்றிரவு கடாபிஷேகம் (இரண்டு தங்கக் குடங்களில் உள்ள தீர்த்தத்தை ஸ்வாமிக்கும் அன்னைக்கும் அபிஷேகம் செய்வது) செய்யப்பட்டதும் கொடி இறக்கப்பட்டு, 'ஆனிப் பெரு விழா' நிறைவுபெறும்.
ஆனித் திருமஞ்சனத் திருநாளில், மூலமூர்த்தியான நடராஜரே உற்சவராக வீதியுலா வருவது, சிதம்பரம் தலத்தின் தனிச் சிறப்பு. இதன் மூலம் வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிகள் மற்றும் உடல் நலமற்றோர் ஆகியோரும்கூட இந்நாளில் மூலவரை (நடராஜ மூர்த்தியை) தரிசிக்கும் பேறு பெறுகிறார்கள்!
தவிர, ஆனி மாத உத்திரத் திருவிழாவின் நடுவே... மக நட்சத்திர நாளில், பஞ்ச மூர்த்திகளுடன் மாணிக்க வாசகர் வீதியுலாவும் நடைபெறுகிறது. மேலும் ஆனி மாதத்தில், அமர்நீதி நாயனார் (பூரம்) மற்றும் ஏயர் கோன் கலிக்காம நாயனார் (ரேவதி) ஆகியோரது திருநட்சத்திரங்களும் வருவது கூடுதல் சிறப்பு!

No comments:

Post a Comment