Friday, 11 August 2017

திருவேடகம்


னைவரும் வைகையாற்றங்கரை யில் கூடியிருந்தனர். சொக்கனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அப்பாவும் அம்மாவும் ஓடி வர, அவனும் அவர்களுடன் வந்து விட்டான்.
தலையில் முத்துக் கிரீடமும் முகத்தில் புன் சிரிப்புமாக நின்றிருந்த அரசரைக் காட்டி அம்மா என்னவோ சொல்ல, அப்பாவும் யோசனையாகத் தலையாட்டினார். எல்லோரும் கிட்டத்தட்ட அதையே பேசிக் கொண்டனர். அரசரது நோய் தீர்ந்து விட்டதாம்.
சொக்கனுக்கு முழுசாகப் புரியவில்லை என்றாலும், ஏதோ புரிந்தது போலவும் இருந்தது. பாண்டிய அரசருக்கு வெப்பு நோய் வந்ததாம். வெப்பு நோயில் உடலெல்லாம் எரியுமாம்; வெப்பம் தாங்காமல் அரசரும் தவியாகத் தவித்தாராம். மாற்றுச் சமயத்தார்கள் நோய் தீர்ப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் எவ்வளவோ மந்திர- தந்திரங்களைச் சொல்லியும் நோய் தீரவில்லை.
பாண்டிமாதேவி, 'மதுரைக்கு வந்திருக்கும் திருஞானசம்பந்தரான காழிவேந்தரை வரவழைத் தால், நோய் தீரும்' என்று யோசனை சொன்னார். அதன்படி நேற்று அரண்மனைக்கு வந்த திரு ஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி, அரசரின் உடம்பில் திருநீறு பூசினார். வெப்பு நோய் தீர்ந்து விட்டது.
அம்மா சுட்டிக்காட்ட, சற்று தொலைவில் பணி யாளர்களுக்கு ஆணை பிறப்பித்துக் கொண்டிருந்த அரசரைப் பார்த்த சொக்கனுக்கு வியப்பாக இருந்தது. 'எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார் அரசர்! இவருக்கெங்கே நோய்?'
'ஆத்துல போடப் போறாங்க. எல்லாரும் நகருங்க' - எவருடைய குரலோ ஓங்கி ஒலிக்க, திடீரென்று ஒரே பரபரப்பு!
இதைக் காணத்தான் அப்பா, அவனையும் அம்மா வையும் அழைத்து வந்திருந்தார். தங்களது வழி சரியில்லை என்று அரசர் கோபித்துக் கொள்வார் என்பதைப் புரிந்து கொண்ட மாற்றுச் சமயத்தவர், 'தாங்களா, ஞானசம்பந்தரா' என்று தீர்மானிக்க வாதம் செய்யலாம் என்று சொன்னார்களாம்.
அதன்படி அனல் வாதமும் செய்து விட்டனர். அனல் வாதம் என்றால், அனலான தீயில் அவரவர் கருத்தை எழுதிப் போடுவது. அப்படியே போட் டனர். மாற்றுச் சமயத்தார் போட் டது நெருப்பில் கருகிப் போனது. ஞானசம்பந்தர் திருநள்ளாறு திருத்தலத்தைப் பற்றிப் பாடியிருந்த பதிகத்தின் ஏட்டைப் போட்டார்கள். அது கருகாமல், சிதையா மல், அப்படியே பச்சை பசேலென்று நெருப்பில் பளபளத்தது.
இதையெல்லாம் சொக்கன் காணவில்லை. அம்மாவும் பக்கத்து வீட்டுக் குமரனும் கதை கதையாகச் சொன்னார்கள். இதைக் கேட்டுத்தான், இப்போது இங்கே வர வேண்டும் என்று சொக்கன் அப்பாவிடம் வாதாடினான். அம்மாவும் சேர்ந்து கொள்ள, எல்லோருமாகப் புறப்பட்டு விட்டனர்.
அனல் வாதம் முடிந்து, இப்போது புனல் வாதத்துக்கு வந்திருக்கிறார்கள். புனல் வாதத்தில், வாதி-பிரதிவாதி ஆகியோர், தத்தம் வாதங்களை எழுதி நீரில் இட வேண்டும். எவருடையது, நீரில் அழியாமல் தங்குகிறதோ அவரே வென்றவர்.
ஆற்றில் ஏடுகளை இடப் போகிறார்கள்! பாண்டிய மன்னர் மீனவர்கோன் செங்கோல் செழியர் நெடு மாறர் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். சற்றே தொலைவில், பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் கண்கள் மெள்ள சுருங்க, புன்சிரித்துக் கொண்டிருந்தார்.
அமைச்சர் குலச்சிறையாரின் பரபரப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது. அமைச்சர்கள், அரண்மனை சேவகர்கள், மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காவலர்கள் என்று எல்லோரிடமும் பரபரப்பு.
புனிதமான வைகை நதி, தனது நீர்த்துளிகளையெல்லாம் வாரி இறைத்துக் கொண்டே கடலரசனைக் காண விரைந்து கொண்டிருந்தது.
'மீனவர்கோன் செங்கோல் செழியர் பஞ்சவன் பெருமானார் நெடுமாற பாண்டிய மன்னர் ஆணையிடுகிறார்' என்று அம்பலமோதி மெய்கண்டானின் குரல் பெருத்து ஒலிக்க, 'ஆற்றில் இடுக அவரவர் ஏடுகளை' என்று கூறிக் கொண்டே அரசர் கையைக் காட்டினார்.
சொக்கன் எட்டிப் பார்த்தான். இரண்டு சுவடிகள் நீரில் மிதந்தன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே, 'அடடா! இதென்ன... ஓர் சுவடி இந்த வேகத்தில் நீரில் சுழித்துக் கொண்டே பாய்கிறது!'
கூட்டத்திலிருந்து பலவிதமான குரல்கள். 'ஓ' என்று ஓலமிட்டனர் சிலர்; 'ஆஹா' என்று ஆச்சரியப்பட்டனர் சிலர்; 'ஹரஹர' என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர் சிலர்; 'போச்சு போச்சு' என்று பரிதவித்தனர் சிலர்; 'சரி மேலே பார்க்கலாம்!' என்று கெக்கலி கொட்டினர் சிலர்... ஒரே அமர்க்களம்!
பக்கத்தில் ஒரு குட்டைக் கல் தெரிந்தது. சொக்கன் ஓடிப்போய் அதன்மீது ஏறிக் கொண்டான். 'அத்தி நாத்தி' என்று ஏட்டில் எழுதி மாற்றுச் சமயத்தவர் ஆற்றில் இட்டிருந்தனர்; அந்தச் சுவடிதான் ஏதோ அம்பு விட்டாற்போல், விரைவாக ஆற்றோடு ஓடியிருந்தது. கண்ணுக்கு எட்டவேயில்லை. காணாமல் போய் விட்டது. ஆற்றுக்கு அடி யில் சென்று கடலோடு சேர்ந்து விட்டதோ என்னவோ!
'இதோ இதோ, சம்பந்தர் இட்ட சுவடி... திருநீறு தடத்துடன், மஞ்சள் மணிக்கயிற்றால் கட்டப்பட்ட சுவடி! ஆற்றோட்டத்து எதிர்த் திசையில் பாய்கிறது!'
பரபரப்பு பதைபதைப்பாக மாற... ஏடு செல்லும் திசையையே எல்லோரும் பார்த்தார்கள். சொக்கனும் பார்த்தான்.
'சற்று முன்னர்தான் சம்பந்தர் அந்தப் பதிகத்தைப் பாடினார்; பாடிக் கொண்டே ஏட்டை நீரில் இட்டார்; எவ்வளவு அழகான பொருள்? எப்படிப் பாடினார்?
வாழ்க அந்தணர் வானவர் ஆவினம்வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக..
எல்லோரையும் வாழ்க என்று வாழ்த்தினாரே, எவ்வளவு பெரிய மனிதர்! 'வயதென்னவோ சிறியதுதான். என்னை விடவும் சிறியவராகத்தான் இருப்பார். ஆனால், மனம் எவ்வளவு பெரியது!'- சொக்கனது சிந்தனையை சுற்றியெழுந்த பேரோசை கலைத்தது.
நீரை எதிர்த்துக் கொண்டு ஏடு ஓட ஓட, அது போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர், பார்வையை விட்டு ஏடு நீங்காமல் இருக்க எம்பி எம்பிப் பார்த்தார். என்ன அதிசயம்! அவர் எம்ப எம்ப... ஆஹா! கூன் பாண்டியன் என்று பெயர் வாங்கியிருந்தவர் இவரா? எம்ப எம்ப, பாண்டிய மன்னரின் கூனல் காணாமல் போய்க் கொண்டிருந்தது. கண்களை நிமிர்த்த நிமிர்த்த, மன்னர் முதுகு நிமிர்ந்து கொண்டிருந்தார்.
ஒரு பக்கம் இந்த வியப்பு நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம்... சுவடி, நீரை எதிர்த்துச் செல்லும் வேகத்துக்கு ஈடுகட்ட முடியாமல், தனது குதிரையின் மீதேறி சுவடியைப் பார்த்தபடியே வைகைக் கரையில் பயணித்தார் அமைச்சர் குலச்சிறையார்.
நீரோடு செல்லாமல், நீரை எதிர்த்துக் கொண்டு, சிந்தாமல் சிதையாமல் விரைகிற ஏடு என்னவாகும்? எல்லோரும் புரியாமல் பார்க்க, அதனை நிறுத்துவதற்காகப் பாடத் தொடங்கினார் சம்பந்தர். உள்ளம் கவர் கள்வனாக நெஞ்சத்துள் இருக்கும் பரம்பொருளை நினைத்து, ஏட்டில் இருப்பவனும் அவன்தானே என்னும் விதமாகப் பாடினார்.
'ஏடகத்து உள்ளானும் அந்த ஏந்தலே அன்றோ' எனும் பொருளில் அவர் பாடப் பாட, குதிரை மீதேறிப் பாய்ந்த குலச்சிறையார் வியப்பு குன்றாமல் கண்களை விழித்து நோக்கினார். அங்கு, வைகையின் நடுவே... ஏதோ பொன்வட்டில் இட்டுப் பிடித்துக் கொண்டாற்போல், சிற்றலையில் மிதந்தபடி சிரித்தது அந்தச் சுவடி!
சொக்கனுக்குச் சிலிர்த்தது. அவனையறியாமல் அவனும் குதிரைக்குப் பின்னாலேயே ஓடி வந்திருந்தான். நின்று திரும்பிப் பார்த்தான். அப்பாவும் அம்மாவும் கண்களுக்குப் புலப்பட வில்லை. அம்மையப்பரின் மகிமையை எண்ணிய படியே அவன் திரும்ப... குலச்சிறையார், நீருக்கு நடுவே பாய்ந்து அந்த ஏட்டினை எடுத்துக் கொண்டிருந்தார்.
'ஏடகத்து ஒருவனே!' என ஞானசம்பந்தர் பாடி யருள, ஏடு நின்ற இடம்தான், 'திரு ஏடகம்' எனும் திருத்தலம். திரு+ ஏடகம் என்பது இணைந்து திருவேடகம் என்னும் பெயரானது.
மதுரை- சோழவந்தான் பாதையில், மதுரையில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அழகான வைகைத் திருத்தலம்.
புனல் வாதம் தொடங்கியதை,
பற்றிய பொருளின் ஏடு படர்புனல் வைகை ஆற்றில்பொற்பு உற விடுவதற்குப் போதுவது என்று கூற
- என்றும், பாண்டியன் கூன் நிமிர்ந்ததை,
அம்புயமலரான் மார்பன் அனபாயன் என்னும் சீர்த்திச்
செம்பியன் செங்கோல் என்னத் தென்னன்கூன் நிமிர்ந்தது அன்றே
- என்றும், சம்பந்தர் பாட ஏடு நின்று ஏடகக் கோயில் அடைந்ததை...
ஏடகம் பிள்ளையார் தாம் வன்னி என்று எடுத்துப் பாடக்கூடிய நீரில் ஏடு குலச்சிறையாரும் கூடி
- என்றும் பெரிய புராணத்தில் பாடுகிறார் சேக் கிழார் பெருமான்.
திருஞானசம்பந்தர் ஆற்றிலிட்ட ஏட்டில் இருந்த பதிகம், 'வாழ்க அந்தணர்' என்பதாகும். அந்த ஏட்டை நிறுத்த அவர் பாடிய பதிகம், 'வன்னியும் மத்தமும்' எனத் தொடங்கும் பதிகம். இதுவே, திரு ஏடகப் பதிகமாகும்.

துரையிலிருந்து திருவேடகம் செல்லும்போது, வைகைக் கரையோடு பயணிக்கிறோம். இந்த வழியாகத்தான் குலச்சிறையாரின் குதிரையும் பறந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மிக அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது ஏடகத் திருக்கோயில். சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது பக்தர்களது வருகை அதிகரித்து வருவதாகச் சொல்கிறார்கள். மதுரையில் உள்ளவர்களுக்கு மீனாட்சியம்மையையும் சொக்கே சனையும் பார்க்காமல் இருக்க முடியாது. ஆனால், இப்போதெல்லாம் அங்கே அளவுக்கதிகமாகக் கூட்டம் சேர்ந்து விடுவதால், பலர் ஏடகம் நோக்கி வந்துவிடுகிறார்களாம். உள்ளூர்க்காரர் ஒருவர் தந்த தகவல் இது.
ஏடகநாதர் திருக்கோயில். கிழக்கு நோக்கிய கோயிலின் முகப்பில், அடிக் கட்டுமானத்தோடு நின்றிருக்கும் கோபுரம். தாண்டிச் செல்ல, ஒரு சிறிய நந்தவனம் போன்ற பகுதி. இங்கே, அருகருகே இரு கோபுரங்கள். சுவாமி சந்நிதிக்கு ஒன்று; அம் மன் சந்நிதிக்கு ஒன்று.
சுவாமி சந்நிதி கோபுரம் முன்பாக நிற்கிறோம். ஐந்து நிலை கோபுரத்தில் நிறைய பொம்மைகள். சிவபெருமான் நடனம், மீனாட்சி திருக்கல்யாணம், தட்சிணாமூர்த்தி, தண்டாயுதபாணி என்று பல் வேறு காட்சிகள். ரசித்துக் கொண்டே உள்ளே நுழைகிறோம். வெளிப் பிராகாரப் பகுதிக்கு வந்து விடுகிறோம். அம்மன் கோபுரம் வழியாக வந்தாலும் வெளிப் பிராகாரத்தை அடையலாம்.
வெளிப் பிராகாரத்தை வலம் வரத் தொடங்கு கிறோம். சுவாமி கோபுரத்திலிருந்து சுவாமி சந்நிதிக்கு நேரடியாகச் செல்லும் விதத்தில், மேலே நிரந்தரப் பந்தல் போல் இட்டிருக்கிறார்கள். சுவாமி சந்நிதி வாயிலுக்கு நேரே கொடிமரம், பலிபீடம், நந்தி. நந்தி சற்றே உயரத்தில் இருக்கிறார். இந்தப் பந்தல் பகுதியிலிருந்து பக்கவாட்டில் சென்று அம்மன் கோபுர உள்பகுதியை அடைகிறோம். அம்மன் சந்நிதிக்குச் செல் லும் உள் வாயிலுக்கு முன்பாக, இரு புறமும் மேடை போன்ற அமைப்பு. 'இதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உண்டா?' என்று கேட்டால், 'இல்லை' என்கிறார்கள். ஒருவேளை முற்காலத்தில், உற்சவங்கள் ஏதேனும் நடைபெற்றனவோ என்னவோ!
சுற்றி வர, திருச்சுற்றுகளில் கோயில் நந்தவனம். ஆங்காங்கே நிறைய மரங்கள். பக்தர்கள் நடப்பதற்கு வசதியான பாதை. இந்தக் கோயிலைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். தூய்மையோ தூய்மை, அபாரமான தூய்மை. கோயிலின் பின்புறம் வைகை நதி. நதியில் நீராடி, ஏறி வருவதற்கு வசதியாகப் பின்புறம் ஒரு வாயில் உள்ளது.
ஞானசம்பந்தப் பெருமானது பதிக ஏடு வைகையில் எதிர்த்துச் சென்றது எப்படியிருந்ததாம் தெரியுமா? பிறவி என்கிற ஆறு. சாதாரண பிறவி எடுத்தவர்கள், இந்த ஆற்றில் வீழ்ந்து மூழ்கி, அமிழ்ந்து கலங்கி அல்லல் படுவார்கள். ஆனால், பெரும் தவசிகள்? அவர்கள் ஆற்றில் மிதப்பார்கள்; ஆற்றுக்குள் மூழ்க மாட்டார்கள். அவ்வளவு ஏன்... ஆற்றின் போக்கை எதிர்த்துச் செல்வார்கள். அதுபோன்று, அதாவது பெரும் தவசிகள் போன்று, இந்த ஏடும் வைகையில் எதிர் நீச்சல் இட்டதாம்!
வைகையைக் கண்டு வணங்கி, வெளிப் பிராகாரச் சுற்றை நிறைவு செய்து, உள் வாயிலுக்கு வருகிறோம். வாயிலின் இரு புறமும் உள்ள விநாயகரையும் முருகரையும் வணங்கிப் புகுகிறோம்.
நேரே மூலவர் தரிசனம். இங்கிருந்து பார்க்கும் போது ஒன்று கவனத்தை ஈர்க்கிறது. மூலவர் கருவறை சற்றே உயரமாக இருக்கிறது. ஆற்றின் கரையில் இருக்கும் ஆலயம் என்பதால், வைகையில் வெள்ளம் வந்தாலும் வழிபாடு தடங்கலின்றி நடைபெறுவதற்காக இவ்வாறு அமைத்தார்கள் போலும்.
ஏடகநாதரைப் பாடிய சம்பந்தப் பெருமான், திருவேடகத்தில் நெடிய மாளிகைகள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் இருந்தனவோ? அப்போதும்கூட மாட- மாளிகை கள் இங்கிருந்ததாகத் தெரியவில்லை. ஆனால், சுவாமியின் அருள் மாளிகை இங்கு மிக உயரமானது என்று குறிப்பிடும் ஆசையில் இப்படிக் கூறினாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
கொடிநெடு மாளிகை கோபுரம் குளிர்மதிவடிவுற அமைதர மருவிய ஏடகத்துஅடிகளை அடிபணிந்து அரற்றுமின் அன்பினால்இடிபடும் வினைகள்போய் இல்லை அதாகுமே...
விண்ணிலுள்ள பிறை அளவு உயர்ந்த மாளிகைகளாம். அவற்றின் மீது கொடிகளாம். உண்மைதானே! முடியில் பிறை சூடிய பெருமானுடைய அருள் மாளிகை, பிறை அளவு உயரம்தான்; அதன்மீது அவர்தம் புகழ் கொடிதான்!
ஏலவார் குழலி அம்மையோடு உடனாய ஏடகநாதர் எழுந்தருளிய இடம், பற்பல வாச மரங்கள் நிறைந்த இடமாம். இந்த நாதரை வணங்கினால் செல்வம் மிகும் என்றும் பாடுகிறார்.
ஏலமார் தருகுழல் ஏழையோடு எழில்பெறும்கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்சாலமாதவிகளும் சந்தனம் சண்பகம்சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே
எதிரில் தெரியும் ஏடகநாதரைக் காணக் காணப் பேரானந்தம்! இந்தத் திருக்கோயில் அலாதியானது. ஏடு எழுந்த இடம் என்பதால் கொண்ட பெருமை மட்டுமல்ல, இன்னும் பல பெருமைகளும் இந்தக் கோயிலுக்கு உண்டு. கருடன், ஆதிசேஷன் ஆகியோர் இங்கு வழிபட்டனர். சாஸ்தாவும் இங்கு வழிபட்டார்.
ஒரு காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் வில்வ வனமாக இருந்ததாம். எனவே வில்வாரண்யம் என்று போற்றப்படும் பகுதிகளில் இதுவும் ஒன்று. வில்வ மரங்கள் செழித்திருந்த பகுதியின் மண்ணைத் தொட்டாலும் போதும், அதுவே பலகோடி நன்மையைக் கொடுக்கும் என்கின்றன சாத்திரங்கள். ஏடக மண்ணில் நிற்கும்போதே, நெஞ்சில் சொல்லொணா பரவசம் எழுகிறது.
மூலவராம் ஏடகநாதரைப் பார்த்துக் கொண்டே, உள் பிராகார வலத்தைத் தொடங்கு கிறோம். கிழக்குச் சுற்றில் சூரியன், தமது தேவியரான சாயா மற்றும் சமிக்ஞை ஆகியோருடன் காட்சி தருகிறார். உள் பிராகார தெற்குச் சுற்றில் திரும்ப, அறுபத்துமூவர். தென்மேற்கு மூலையில் உற்சவ மூர்த்தங்களின் சந்நிதி. ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் என்று ஏராளமான உற்சவத் திரு மேனிகள். அடுத்து மெய்கண்ட சிவம், உமாபதி சிவம், அருள் நந்தி சிவம், மறை ஞான சிவம் ஆகியோரின் சந்நிதி. அடுத்தொரு சித்தர். தனியாக எந்தப் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எல்லா சித்தர்களையும் ஒருசேர எண்ணி வணங்கு கிறோம். அடுத்து வரிசையாக, பஞ்ச லிங்கங்கள்.
வடமேற்கு மூலையில், வள்ளி- தெய்வானை உடனாய முருகப் பெருமான், மயிலோடும் பன்னிரு திருக்கரங்களோடும் அபயஹஸ்தமும் வேலும் தாங்கியவராக தரிசனம் தருகிறார்.
வடக்குச் சுற்றில், சப்த மாதர்களான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்த்ரி, சாமுண்டி ஆகியோர் வரிசையாகக் காட்சி தருகின்றனர். தொடர்ந்து இரட்டை விநாயகர், சுப்பிரமணியர், நாகர், விநாயகர், சுப்பிரமணியர், துர்கை, மகாலட்சுமி.
வடக்குச் சுற்றின் கிழக்குப் பகுதியில், நடராஜ சபை. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்புகிறோம். கால பைரவர் சந்நிதி. அடுத்து வரிசையாக வல்லப கணபதி, பூரணாதேவி ஒருபுறமும் புஷ்கலாதேவி மற்றொரு புறமும் உடனிருக்க நடுவில் ஐயனார், பின்னர் சாஸ்தா (ஐயப்பனும் ஐயனாருமாக வணங்கப்படுபவரே சாஸ்தா என்றாலும் சாஸ்தா திருவுருவமும் உள்ளது). தமது தேவியரான ரோஹிணி யோடும் கார்த்திகையோடும் சந்திரனும் காட்சி தருகிறார். நடராஜ சபைக்கும் கால பைரவர் சந்நிதிக் கும் எதிராக நவக்கிரகங்கள்.
உள் பிராகார வலத்தை நிறைவு செய்துவிட்டு, மூலவர் சந்நிதிக்கு நேராக நாம் நிற்கும் இடத்தை முன் மண்டபம் என்று குறிப்பிடலாம். தூண்களோடு கூடிய மண்டபம். தூண்களில் ஏராளமான சிற்பங்கள். ரிஷப வாகனர், தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலன், அனுமன், மகாவிஷ்ணு, எண்ணற்ற சிவ லிங்கங்கள், சதுர்புஜ அம்மன், நடராஜர், அன்னம் உள்ளிட்ட பறவைகள், பிட்சாடனர், முருகப் பெருமான் என்று ஏராளமான எழில் கோலங்கள். தூண் சிற்பங்களைப் பார்த்துக் கொண்டே மூலவர் சந்நிதிக்குச் செல்ல முற்படுகிறோம்.
நாம் முன்னரே பார்த்தது போன்று சந்நிதி சற்றே உயரத்தில் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் போக வேண்டு மானால், இரண்டு படிகள் ஏறித்தான் போக வேண்டும். நாம், ஏற்கெனவே உள்வாயிலில் பார்த்த நந்தியும் சரி, இங்கே முன்மண்டப நந்தியும் சரி, மூலவர் கருவறையின் உயரத்துக்கேற்ப உயரமான பீடங்களில் அமைக்கப்பட்டுள்ளனர்.
முகப்பின் மேல்பகுதியில் கஜலட்சுமி திருவுருவம்; இரு புறங்களிலும் விநாயகரும் முருகரும். கஜலட்சுமிக்கும் மேலே காளையின்மீது கோலம் கொண்ட சிவன்- பார்வதி. மீண்டும் இரு புறங்களிலும் நின்ற கோல விநாயகரும் தண்டாயுதரும். முகப்பின் இரண்டு பக்கங்களிலும் பெரிய துவாரபாலகர்கள். துவார கணபதியும் துவாரமுருகரும் கூட உள்ளனர். வணங்கி உள்ளே நோக்குகிறோம்.
கண்களைக் கொள்ளை கொள்கிறார் அருள்மிகு ஏடகநாதர். ஏடகேசர், ஏடக நாதேஸ்வரர் என்னும் திருப்பெயர்களையும் கொண்ட இவர், கல்வெட்டுகளில் திருவேடகம் உடைய நாயனார் என்று குறிக்கப்படுகிறார். சிவலிங்கம் சுயம்பு மூர்த்தம். சதுரபீட ஆவுடையாரில் குட்டையான பாணம். பாகனூர்க் கொற்றத்து திருவேடகமுடையார் இவர்தாம்! பார்க்கப் பார்க்க நெஞ்சம் நிறைகிறது. 'ஏட்டில் இருப்பவனே' என்று அழைத்தவுடன் ஏட்டிலும் பாட்டிலும் அருள் தந்த அணுக்கநாதராயிற்றே! ஏட்டிலும் இருப்பார்; பாட்டிலும் இருப்பார்; நீரிலும் இருப்பார்; நெருப்பிலும் இருப்பார்; எங்கும் இருப்பார்; எதிலும் இருப்பார்! ஏற்றங்கள் தரும் ஏடகநாதரை மனம்- மெய்- மொழிகளால் வணங்குகிறோம்.
பிரம்மா, திருமால், வியாசர், அவர் தந்தையான பராசரர் ஆகியோர் இந்த இறைவனை வழிபட்டுள்ள தாகத் தல புராணம் கூறுகிறது. சித்த சுவாதீனம் இல்லாதவர்கள், மனக் கலக்கம், உறக்கமின்மை முதலானவற்றால் அவதிப் படுபவர்கள், ஏடகநாதரை வணங்கி வழிபட்டால், சித்தம் சரியாகும் என்பதும், துன்பங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.
நம்பிக்கையின் ஆழத்தையும் அதன் பலனையும் கண்ணெதிரில் காட்டுவதுபோல், மனங்கலங்கியவர் ஒருவரை அழைத்து வருகிறார்கள்; வரும்போது யாருக்கும் கட்டுப்படாது வருகிற அவர், பிராகாரத்தில் சுற்றும் போதே அமைதியடை வதைக் காண முடிந்தது. ஏடகநாதரின் மகிமைதான் என்னே!
கோயிலுக்கு அழைத்துச் சென்ற மருத்துவர் ஒருவர், தனது தொழிலிலும், இவ்வாறு ஏடகநாதரை வழிபட்டு நோயின் தன்மையும் வீரியமும் கட்டுப்பட்டவர்கள் உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறார்.
மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். கோயிலின் கட்டுமானம் அழகோ அழகு. நின்ற சீர் நெடுமாறர் (அதுதான் ஞானசம்பந்தரால் நோய் தீர்க்கப்பட்டு கூனலும் நிமிர்ந்தவர்) தொடங்கி அவருக்குப் பின் வந்த பாண்டிய மன்னர்கள் பலரும், அதற்கும் பிற்பாடு விஜயநகர அரசர்களும் இந்தக் கோயிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர்.
திருத்தமான தூண்கள், செதுக்குக் கூர்மை குன்றாத சிற்பங்கள், தூண் போதிகைகளில் சிலிர்ப்புடன் தொங்கும் தாமரை மொட்டுகள் என்று பிற்காலக் கட்டுமான முறையின் எடுப்பு, பளிச்சென்று புலப்படுகிறது. கோஷ்டத்தில் பால கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரர்.
உள் பிராகாரத்தின் தெற்குச் சுற்றில், பக்கவாட்டு வாயிலொன்று இருக்கிறது. இதன் வழியாகவே அம்மன் கோயிலுக்குச் செல்லலாம். அம்மன் கோயில் உள் பிராகாரத்தை அடைகிறோம்.
சுவாமி கோயில் அமைப்பில், அதற்கு இணையாக, சுவாமிக்கு வலப் பக்கமாக, கிழக்குப் பார்த்து அமைந்துள்ள அம்மன் கோயில். விசாலமான உள் பிராகாரம். அம்மன் சந்நிதிக்கு எதிரில் பலி பீடம், நந்தி, துவார கணபதியையும் துவார தண்ட பாணியையும் வணங்கி நிற்கிறோம். அம்மன் கோயில் தூண்களிலும் நிறைய சிற்பங்கள். ரிஷப நாதர், நாகலிங்கம், நடனமாதர், சங்கணன், தண்டபாணி, புலிக்கால் முனிவர்(மனித உடம்பும் புலியின் கால்களும் கொண்ட வியாக்ரபாதர்), வினோதமுனி, இசையில் லயித்திருக்கும் தும்புரு, கதாயுதம் தாங்கிய துர்கை, யானைகள் விசிற தவம் செய்யும் முனிவர், அன்னங்கள் உள்ளிட்ட பலவிதமான பறவைகள்... இந்த சிற்பங்களின் அழகு நெஞ்சை கொள்ளை கொள்கின்றன. தவிர, அம்மன் கருவறை வாயிலின் மேல் பகுதியில் ரிஷப வாகனர், கஜலட்சுமி, விநாயகர், முருகர், வீணை ஏந்திய பெண்கள்.
அருள்மிகு ஏலவார் குழலி அம்மன், நின்ற திருக்கோல நாச்சியாராக தரிசனம் தருகிறார். நான்கு திருக்கரங்கள். இரண்டு கரங்களில் அபயமும் வரமும் தாங்கி அருள்பாலிக்கிறார்.
கோஷ்டத்தில் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள். பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி; வடமேற்கு மூலையில் சுப்பிர மணியர் சந்நிதி. பிராகாரத்தின் வடக்குச் சுற்றில் பள்ளியறை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரி.
அம்மன் சந்நிதித் தூண்கள் ஒன்றில் திருஞான சம்பந்தக் குழந்தையின் திருவுருவம் சிற்பமாக உள்ளது. சின் முத்திரையுடன், தலையில் மாலை சூடி, கைத்தாளம் இல்லாமல் அந்தக் குழந்தை நிற்கிற அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
ஏடு எதிர் ஏறிய திருவிழா ஆவணி மாதத்தில் நடைபெறும். கார்த்திகை சோமவாரத்தில் இந்தக் கோயில் தரிசனம் வெகு சிறப்பானது. அம்மன் கோயிலை விட்டு வெளியில் வந்து வெளிப் பிராகாரத்தை அடையும்போது, அங்குள்ள மணி கண்ணில் படுகிறது. இது, மலாயா நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டதாம்.
மணியைப் பார்த்தபடி நிற்கிறோம். ஞான சம்பந்தப் பெருமானுடைய பாடல் காதுகளில் ஒலிக்கிறது. குலச் சிறையாரின் குதிரை குளம்போசை கேட்பதுபோல் தோன்ற... மெள்ள வெளியே வருகிறோம்.

No comments:

Post a Comment