Friday, 4 August 2017

மேல்படப்பை ஸ்ரீதழுவக்கொழுந்தீஸ்வரர் ..!!


இயலாடிய பிரம்மன்னரி இருவர்க்குஅறி வரிய செயலாடிய தீயாய்உரு வாகிஎழு செல்வன் புயல் ஆடுவண் பொழில்சூழ் புனல் படப்பைதடத் தருகே முயல்ஓட வெண் கயல்பாய்தரு முதுகுன்று அடைவோமே!
_ திருஞானசம்பந்தர்
செ ன்னையில் இருந்து தாம்பரம் வழியாக காஞ்சி மாநகரத்துக்குச் செல்லும் வழியில் உள்ளது படப்பை என்ற ஊர். பச்சைப் பசேல் என வயல்வெளிகள் காட்சி தரும் குளுமையான பூமி. இந்த ஊரில் உள்ள சிவாலயங்களை, காஞ்சி செல்லும்போது சைவக் குரவர்களான நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் தரிசித்திருக்கலாம் என்பது செவி வழிச் செய்தி. இதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இந்தச் செவி வழிச் செய்தி படப்பைவாழ் ஆன்மிக அன்பர்களால் இன்று வரை நம்பப்பட்டு வருகிறது.
இதை மெய்ப்பிக்கும் பொருட்டு, நாவுக்கரசரின் திருநட்சத்திரப் பெருவிழாவை ஆண்டு தோறும் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று கீழ்படப்பை ஸ்ரீவீரட்டேஸ்வரர் ஆலயத்திலும், திருஞானசம்பந்தரின் திருநட்சத்திரப் பெருவிழாவை வைகாசி மாதம் மூல நட்சத்திர நன்னாளில் மேல்படப்பை ஸ்ரீதழுவக்கொழுந் தீஸ்வரர் ஆலயத்திலும் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த இதழ் ‘சென்னை நகரின் சீர்மிகு கோயில்கள்’ வரிசையில் மேல்படப்பை தழுவக் கொழுந்தீஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றிருந் தோம். சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்டிருப்பதால், பொலிவுடன் காணப்பட்டது திருக்கோயில்.
அதென்ன தழுவக்கொழுந்தீஸ்வரர்! காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்ப ரேஸ்வரர் ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட அந்தப் புராணக் கதையைத் தெரிந்து கொள்ள ‘ஸ்ரீகாஞ்சி மஹாத்மிய’த்தை நாம் புரட்ட வேண்டும்.
விளையாட்டும் வேடிக்கையும் மாந்தர்களுக்கு மட்டும்தானா? மகேசனுக்குக் கிடையாதா... அவருக்கும் உண்டுதானே! அப்படித்தான் ஒரு நாள் பரமேஸ்வரனும் பார்வதியும் மந்திர மலையில் மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர். கரம் பிடித்த நாயகியாம் பார்வதிதேவி சிரித்து மகிழும் வண்ணம் சில திருவிளையாடல் சம்பவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார் கயிலைவாசன். அதை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்த பார்வதிதேவி, மிகுந்த பரவசத்துடன் காணப்பட்டாள். உற்சாக மிகுதி காரணமாக, அந்த நேரத்தில் ஈஸ்வரனின் பின்புறம் யதேச்சையாக வந்த பார்வதிதேவி, விளையாட்டாக அவரின் கண்களைப் பொத்தினார். தனது இந்த விளையாட்டில் ஈஸ்வரன் எந்த அளவு ஈடுபாடு காட்டுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள, தன் கழுத்தைச் சற்றே முன்பக்கம் நீட்டி அவரின் முக பாவம் பார்த்தார். அவ்வளவுதான். கோபத்தின் விளிம்பில் இருந்த ஈஸ்வரனின் முகம் சிவந்து காணப் பட்டது. சர்வ லோகத்தையும் கட்டிக் காத்தருளும் ஈசனின் கண்கள் மறைக்கப்பட்டதால், உலகில் இருள் சூழ்ந்தது; இயக்கம் நின்றது; எல்லாமே அற்றுப் போயின.
சர்வலோகத்துக்கு அதிபதியான ஈஸ்வரன், உமை யைப் பார்த்துக் கடுகடுத்த குரலில் சொன்னார்: ‘‘உமையே... விளையாட்டின் உச்சத்துக்குப் போவதாக எண்ணி, வினையை உன்னிடம் வரவழைத்துக் கொண்டு விட்டாய். ஒரு நொடிப் பொழுது என் கண்கள் மூடப்பட்டால், என்னென்னவெல்லாம் ஆகும் என்பதை இப்போதாவது உணர்ந்து கொண்டாயா? நம்மை நம்பி இருக்கும் உயிர்களுக்கு நாமே அம்மை- அப்பன் என்பதை ஏன் மறந்தாய்? அவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் காப்பதே நமது பொறுப்பு. இதை அறியாதவளா நீ? போ, பூலோகம்! உன்னைச் சூழ்ந்த வினையை வேரறுத்து விட்டு என்னிடம் வா. இதுதான் உனக்கு சாபம்!’’ என்று இறுக்கமுடன் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஈசன்.
கலகலப்பாக ஆரம்பித்த சூழல், கவலையைத் தனக்கு ஏற்படுத்திக் கொடுத்து விட்டதே என்று வருந்திய தேவி, பூலோகம் வந்தாள். தன்னைச் சூழ்ந்த சாபத்தை விரட்ட அந்த சர்வேஸ்வரனையே துதித்து, அவன் தரிசனம் பெற்று பாவம் போக்க எண்ணினாள். மந்திர மலையில் இருந்து புறப்பட்ட அவள் அப்படி வந்து சேர்ந்த இடம்தான் காஞ்சி மாநகரம். தனது தவத்துக்கு இந்த நகரையே தேர்ந்தெடுத்தாள்.
தெள்ளிய நீர் பொங்கிப் பெருகும் கம்பா நதிக் கரையில் லிங்கத்தை ஸ்தாபித்து, தூய அன்புடன் நறுமலர்கள் கொண்டு பூஜை மற்றும் வழிபாடுகளைச் சிறப்பாகவே செய்து வந்தாள்.
உமையம்மையின் தொடர் வழிபாட்டில் மகிழ்ந்த ஈஸ்வரன், ஒரு நாள் தேவியைச் சோதிக்க நினைத்தார். எனவே, கம்பா நதியில் திடீர் வெள்ளத்தை வரவழைத்தார். திடீரென பெருக்கெடுத்து வரும் வெள்ளம் கண்டு திகைத்தாள் தேவி. தனது, ‘பூஜையில் என்ன குறை வந்ததோ?’ என்று கலங்கினாள். ஈஸ்வரனை நினைந்து பிரார்த்தித்தாள். எனினும், வெள்ளத்தின் வேகம் அடங்க வில்லை. கம்பா நதிக் கரையில், தான் ஸ்தாபனம் செய்து வழிபட்டு வரும் லிங்கத் திருமேனியை இந்த வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமோ என்று பயந்தாள். தவித்தாள். ஒரு கட்டத்தில் ஓடிப் போய் தன் நாயகனாம் சிவலிங்கத் திருமேனியை, மெல்லிய தன் இரு கரங்களால் அணைத்து மார்போடு இறுக்கிக் கொண்டாள்.
பார்வதிதேவியின் தழுவ லுக்குக் குழைந்ததால் (இசைந்ததால்) இறைவன் பின்னாளில் ‘தழுவக் கொழுந்தீஸ்வரர்’ ஆனார். ‘தழுவக்குழைந்தீஸ்வரர்’ என்றும் சொல்வார்கள். அன்னையை ஆட் கொண்டு மணக் கோலத்தில் தம்பதி சமேதராக இறைவன் காட்சி அளித்தார். இந்தக் காட்சியைக் காணக் கிடைத்த தேவர்களும் மகரிஷிகளும் மனம் குளிர்ந்தனர். இதுதான் ‘ஸ்ரீகாஞ்சி மஹாத்மியம்’ சொல்லும் புராணம்.
இந்தப் புராணக் கதையை அப்படியே நினைவுபடுத்துகிறது, காஞ்சி மாவட்டத்தில் மேல் படப்பை கிராமத்தில் உள்ள தழுவக்கொழுந்தீஸ்வரர் திருத்தலம். தாம்பரத்தில் இருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் இந்த அழகிய ஆலயம் அமைந்துள்ளது. இங்குள்ள அன்னையின் பெயர்- காமாட்சி அம்பாள். அப்பனின் பெயர்- அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட திருத்தலம்.
பல்லவர்கள் காலத்தில் ஆலயங்கள் அதிகம் கட்டப்பட்டன; சிவ பக்தி செழித்தோங்கியது.
‘காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த நந்திவர்ம பல்லவன், சிறந்த சிவபக்தன். இவன், காஞ்சி மாநகரத்தை மையமாகக் கொண்டு அதைச் சுற்றியுள்ள ஊர்களில் 108 சிவாலயங்களை எழுப்பினான். இந்த ஆலயங்கள் அனைத்துக்கும் ஒரே நாளில் குடமுழுக்கும் செய்து சாதனை நிகழ்த்தினான். அந்த 108 சிவாலயங்களுள் மேல்படப்பை தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயமும் ஒன்று’ என்று தலக் குறிப்பு சொல்கிறது.
‘தழுவக்கொழுந்தீஸ்வரரை வணங்கி சந்திரன் சாப விமோசனம் பெற்றுள்ளான்’ என்றும் சொல்கிறார்கள். தட்சனின் 27 புதல்விகளை (இவர்களை 27 நட்சத்திரங்கள் என்பர்.) சந்திர பகவான் மணந்து கொண்டான்.
அனைவரோடும் வாழ்ந்து வந்த சந்திரன், ஒரு கட்டத்தில் ரோஹிணியின் மீது மட்டும் அளவு கடந்த அன்பு செலுத்தினான். இது மற்ற மனைவியரின் கோபத் தைத் தூண்டியது. எனவே, ரோஹிணியைத் தவிர்த்து, மற்ற 26 மனைவியரும் தம் தந்தையிடம் சென்று சந்திரனின் பாராமுகம் குறித்துப் புகார் சொன்னார்கள். மகள்களின் குறையைக் கேட்டு கோபம் கொண்ட தட்சன், ‘சந்திரன் கற்ற 16 கலைகளையும் இழந்து அவதிப்படுவான்!’ என்று சபித்தார். சிறந்த பக்தனான தட்சனின் சாபம் பலித்தது. கலைகளை இழந்து சந்திரன் தவித்தான். பலரின் ஏளனத்துக்கும், பரிகசிப்புக்கும் உள்ளானான். ‘சாபத்தின் காரணமாக இழந்த கலைகள் அனைத்தையும் எப்படியாவது திரும்பப் பெற வேண்டும்!’ என்று அவன் வாடித் தவித்தான். அப்போது ஆன்றோர்கள் அவனுக்கு உதவினர். தழுவக்கொழுந்தீஸ்வரரின் பெருமைகளைச் சொல்லி, தட்சனின் இன்னொரு மகளான பார்வதிதேவி, ஊடல் நீங்கி இணைந்த சம்பவத்தைச் சொன்னார்கள்.
எனவே, தழுவக்கொழுந் தீஸ்வரர் என்ற திரு நாமத்துடன் இறைவன் குடி கொண்டிருக்கும் எல்லா ஆலயங்களையும் தரிசித்து வந்தான் சந்திரன். அதன் பின் சாப விமோசனம் பெற்று, இழந்த கலைகளை மீண்டும் பெற்றான் என்கிறது புராணம்.
தழுவக்கொழுந்தீஸ்வரரை வழிபட்டு இழந்த கலைகளை சந்திர பகவான் மீண்டும் பெற்ற தலம் ஆதலால் இங்கு வந்து இறைவனை வழிபட்டால், மனக் குறைகள் சம்பந்தப்பட்ட பிரார்த்தனை கள் நிறைவேறுவதுடன் நம் குழந்தை களுக்கும் கல்விச் செல்வமும் கலைச் செல்வமும் நன்கு வளரும் என்கிறார் ஆலய சிவாச்சார்யர் சந்திரசேகர். அதோடு, ஈஸ்வரனோடு இணைவதற்காக பார்வதிதேவி தவம் இருந்து பூஜித்து வழிபட்ட லிங்கம்- தழுவக்கொழுந்தீஸ்வரர்! எனவே, இவரையும் இங்கு குடி கொண்ட காமாட்சியையும் வழிபட்டால், திருமணம் சம்பந்தப்பட்ட பிரார்த்தனைகள் நிறைவேறுமாம். மூலவர் ஸ்ரீகாமாட்சி அம்பாளை தரிசித்து, பிராகாரத்தில் அமைந்துள்ள மகிழ மரத்தில் மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால் தடைப்பட்ட திருமணமும் கை கூடுமாம்.
தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் முற்றிலுமாகப் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 7.4.2004 அன்று கும்பா பிஷேகம் நடந்தேறியது. இதை அடுத்து, சிவகாம சுந்தரி உடனுறை ஆனந்த நடராஜர், சரபேஸ்வரர், வீரபத்திரர், பைரவர், நல்லழகி அம்பாள் ஆகிய இறை வடிவங்களுக்குப் புது சந்நிதிகள் எழுப்பப்பட்டு கடந்த 3.6.2007 அன்று இன்னொரு கும்பாபிஷேகமும் நடந்துள்ளது. இதே நேரத்தில்தான் திருஞானசம்பந்தர் திருநட்சத்திரத் திருவிழாவும் இங்கு சிறப்பாக நடைபெற்றது.
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
கிழக்குத் திசை பார்த்த ஆலயம். மூன்று நிலை ராஜ கோபுரம். ஐந்து கலசங்கள். உள்ளே நுழைந்தவுடன் தழுவக்கொழுந்தீஸ்வரரைப் பார்த்த வண்ணம் சூரியன் மற்றும் சந்திரனின் விக்கிரகங்கள். பலி பீடம். நந்திதேவர். நந்திதேவர் மண்டபத்தில், ‘நந்தீஸ்வரரின் காதுகளில் பேசுவது ஆகமப்படி தவறான செயல்’ என்று பளிச்சென எழுதி வைத்திருக்கிறார்கள்.
உள்ளே நுழைகிறோம். வலப் பக்கம் அன்னை ஸ்ரீகாமாட்சி சந்நிதி. இதை அடுத்து, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோரின் பஞ்சலோக விக்கிரகங்கள் அமைந்துள்ள தனி மண்டபம். சுதையால் ஆன துவாரபாலகர்களைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தழுவக்கொழுந்தீஸ்வரர் கருவறை. ஈஸ்வரனை வணங்குவதற்கு முன் பிராகார வலம் வருவோம்.
பிராகார வலத்தின்போது முதலில் சைவ நால்வர். தனி மண்டபத்தில் தரிசனம் தருகின்றனர். இதை அடுத்து, கல்வெட்டு மண்டபம். ஆலயத் திருப்பணி குறித்த விவரங்கள் இதில் காணப்படுகின்றன. வீரபத்திரர், சரபேஸ்வரர், வெற்றி விநாயகர், காசி விஸ்வநாதர், நந்தி தேவர்- பலிபீடத்துடன் கூடிய திருவாலீஸ்வரர்- திருநல்லழகி அம்பாள், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வர பகவான், நவக்கிரகம் முதலான சந்நிதிகள் அழகாகக் காட்சி அளிக்கின்றன. தவிர, கோஷ்ட தெய்வங்களான நர்த் தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் தங்களுக்கு உரிய இடத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கின்றனர்.
திருமணப் பேறுக்கு அருளும் மகிழ மரம், பிராகார வலத்தில் இருக்கிறது. எங்கெங்கிருந்தோ வரும் பக்தர்கள் இங்கு மகிழ மரத்துக்கு மஞ்சள் கயிறு கட்டி விளக்கேற்றிப் பிரார்த்தித்துச் செல்கின்றனர். ‘‘குறித்த காலத்துக்குள் அவர்களுக்குத் திருமண பாக்கியம் வாய்க்கிறது!’’ என்றார் ஆலய அர்ச்சகர்.
பிராகார வலம் முடிந்து தழுவக் கொழுந்தீஸ்வரரை தரிசிக்க வருகிறோம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி விசாலமான கருவறை. உள்ளே- தழுவக்கொழுந்தீஸ்வரர், லிங்கத் திருமேனியாகக் காட்சி தருகிறார். உளமாரப் பிரார்த்தித்து வெளியே வந்தால் சுவாமி சந்நிதிக்கு இடப் பக்கம், காமாட்சி அம்பாள் சந்நிதி. தெற்கு நோக்கியது.
கருணையே வடிவமான காமாட்சி தெய்வம். பக்தர்கள் கேட்கும் வரங்களை அருள, காத்திருக்கும் அன்னையவள் பாதம் பணிந்து வெளியேறுகிறோம். அன்னையின் பிராகார வலத்தின்போது கோஷ்ட தெய்வங்கள் வைஷ்ணவி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரது தரிசனம் கிடைக்கிறது.
‘‘சரபேஸ்வரரின் வழிபாடு இங்கே சிறந்ததாக விளங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ராகு கால நேரத்தில் அபிஷேகங்களும் சிறப்பு வழி பாடுகளும் நடக்கிறது!’’ என்றார் ஆலயப் பிரமுகர் ஒருவர். நகரத்தின் சந்தடி எல்லாம் தாண்டி, அழகான ஒரு கிராமத்தில் குடிகொண்டிருக்கும் இந்த தழுவக்கொழுந் தீஸ்வரரின் தரிசனம், மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் வழங்குகிறது என்றால் அது மிகையல்ல!
தகவல் பலகை
தலத்தின் பெயர்: மேல்படப்பை
மூலவர்: அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர், அருள்மிகு காமாட்சி அம்பாள்
அமைந்துள்ள இடம்: சென்னை- தாம்பரம்- காஞ்சி புரம் பாதையில் தாம்பரத்தில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ள படப்பையில்.
எப்படிச் செல்வது?: கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் படப்பையில் நின்று செல்லும். கோயம்பேட்டிலிருந்து இருந்து தடம் எண்- 79, பாரிமுனையில் இருந்து தடம் எண்-579 மற்றும் தி.நகரில் இருந்து தடம் எண் எம்-79 ஆகிய பேருந்துகள் படப்பைக்குச் செல்கின்றன. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஐந்து நிமிட நடை தூரத்தில் கோயில் இருக்கிறது.
ஆலய முகவரி:
அருள்மிகு காமாட்சி உடனுறை 
அருள்மிகு தழுவக்கொழுந்தீஸ்வரர் ஆலயம், 
மேல்படப்பை கிராமம்-601 301, 
ஸ்ரீபெரும்புதூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments:

Post a Comment