Saturday, 5 August 2017

மணக்கால் ஐயம்பேட்டை




மறப்பிலா அடிமைக்கண் மனம் வைப்பார் தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதில் எய்த சிலை வல்லர் ஒரு கணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
'தம்மை மறவாத அடியவர் மனங்களில் எப்போதும் தங்கியிருப்பவர்; சிறப்பில்லாத முப்புர அரக்கர்களின் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கியவர்; அழிவில்லாதவர்; துன்பமில்லாதவர்; கேடில்லாதவர்; பிறப்பில்லாதவர்; பெரு வேளூரில் உறையும் பிரியநாதர்' என்று திருஞானசம்பந்தர் பெருமானால் போற்றப்படும் ஸ்ரீபிரியநாதரை நாடிப் பெரு வேளூர் புறப்படலாம், வாருங்கள்!
தேவாரப் பாடல்களில் கூறப்படுகிற பெருவேளூர் எனும் பெயர் சொல்லித் தேடினால், இப்போது கிடைப்பது அரிது. காட்டூர் ஐயம்பேட்டை அல்லது மணக்கால் ஐயம்பேட்டை என்றே விசாரிக்கவேண்டும். திருவாரூருக்கு மேற்கே சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவாரூர்- குடவாசல் மார்க்கத்தில், மணக்கால் எனும் ஊரை அடைந்து, அங்கிருந்து வடமேற்கில் சென்றால், இந்தத் தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்து பேருந்துகளும் வாகனங்களும் உள்ளன.
'வேள்' எனும் பெயர், நம் புராணங்களைப் பொறுத்தவரை, இருவருக்கு வழங்கப்படுகிறது. முருகப்பெருமான் மற்றும் மன்மதன். இந்தத் தலத்தில் முருகப்பெருமான், சிவனாரைப் பூஜித்ததாக ஐதீகம். ஆகவே, வேள் வழிபட்ட தலம், வேளூர் ஆனதாகச் சொல்வர்.
பெருவேள் என்றொரு அரசன், இந்தப் பகுதியில் வாழ்ந்ததாகவும், அதனால் பெருவேளூர் ஆயிற்று என்றும் செவிவழிச் செய்தி வழங்குகிறது. திருவாரூர்- நாகப்பட்டினம் சாலையில், சிக்கல் எனும் தலத்துக்கு அருகில், கீழ்வேளூர் என்றொரு தலம் (கீவளூர் என்பர்) இருக்கிறது. அதுதான் முருகப்பெருமான் வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தேவாரத் தலம். அதனிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகவும், இதனைப் பெருவேளூர் என்றழைக்கின்றனர் போலும்!
சின்னஞ்சிறிய கிராமம்; பழைமையான கோயில். ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் கயிலையில் போட்டி ஒன்று நடந்ததல்லவா... அதன் விளைவாகத் தெறித்து விழுந்த கயிலைச் சிகரங்களில், பெருவேளூர் பகுதியும் ஒன்று எனச் சொல்லப்படுகிறது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போட்டியில், நல்லவர்களான தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்குவதற்காக, மோகினி அவதாரம் எடுத் தார் திருமால். அவ்வாறு பெண் வடிவானவர், மீண்டும் ஆண் வடிவம் பெறுவதற்காகச் சிவனாரை வழிபட்ட தலம் இதுதான்!
ஆலய கோபுரத்தின் முன்னே நிற்கிறோம். மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம். வெகு குறைவான சிற்பங்களே உள்ளன. எனினும், கம்பீரத்துடன் திகழ்கிறது கோபுரம். கிழக்கு நோக்கிய ஆலயம்; இதுவொரு மாடக்கோயில்.
உள்ளே நுழைந்ததும், கொடிமரம், கொடிமர விநாயகர், பலிபீடம், நந்தி தேவர். கொடிமரத்துக்கு நேர் முன் பாக, சற்றே உயரத்தில், உள்மதிலில் ஒரு சாளரம்; உள்ளே இருக்கும் ஸ்வாமி சந்நிதியைக் காண்பதற்கான ஏற்பாடு அது. என்ன இருந்தாலும், முதலில் பிராகார வலம் வருவது தானே நமது வழக்கம்! வாருங்கள், வலம் வருவோம்!
தென்கிழக்கு மூலையில், உயரத்தில் ஒரு மணி. அருகில், கிணறு. தெற்குச் சுற்றில் சந்நிதிகள் ஏதுமில்லை. தென் மேற்கு மூலையில், தல விநாயகரான பிரதான விநாயகர். அடுத்து, ஸ்ரீவைகுந்தப் பெருமாள் சந்நிதி; திருமால் வழிபட்ட தலம் என்பதை மெய்ப்பிப்பதாக உள்ளது. பெருமாள் மூலவர் மட்டுமல்ல; உற்ஸவத் திருமேனிகளும் உள்ளன. தொடர்ந்து, தலமரமான வன்னி மரத்தடியில் நாகர்கள். மூலவருக்கு நேர் பின்புறம் வருவது போன்று முருகப்பெருமான் சந்நிதி. வள்ளி தெய்வானை உடனாய ஸ்ரீசுப்ர மணியர் காட்சி தருகிறார். கந்தன் சந்நிதிக்கும் பின்னால், கோயில் வெளிமதிலில் ஒட்டியதுபோல, யோக சண்டேஸ்வரர் சந்நிதி. மேற்குப் பிராகாரத்திலேயே, அடுத்ததாக ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி.
வடக்குச் சுற்றில் திரும்பும் பகுதியில், கிழக்கு நோக்கியதாக, அம்பாள் சந்நிதி. வடமேற்குப் பகுதியில், நவக்கிரகங்கள்; யாக சாலை. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்புகிறோம். வரிசையாக நிறைய கடவுளர்கள். சனி பகவான் தனிச் சந்நிதியில் தரிசனம் தருகிறார். தோஷ நிவர்த்திக்கான பூஜைகள் இவருக்கே நடைபெறுகின்றன. அடுத்து பைரவ மூர்த்தங்கள். கால பைரவர், ஸ்ரீபைரவர், வடுக பைரவர் என்று வகை வகையான பைரவர்கள். தொடர்ந்து சூரியன், தேவார முதலிகளான மூவர் பெருமக்கள் (திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்திகள்). இன்னும் தொடர்ந்து, வரிசையாகச் சிவலிங்கங்கள். நந்தி முன்னிருக்கும் ராம லிங்கேஸ்வரர், சரஸ்வதீஸ்வரர், ஜம்பு கேஸ்வரர், ஐராவதீஸ்வரர், தாரகேஸ்வரர். அடுத்து, ஸ்ரீதுர்கை. அடுத்ததாக, இன்னுமொரு சிவலிங்கனார். நந்தி முன்பிருக்கும் சதுர ஆவுடையார் கொண்ட பிரம்மபுரீஸ்வரர்.
அடடா..! எத்தனையெத்தனை விதமாகச் சிவனார் அருள்காட்சி தருகிறார் என்று வியந்தபடியே, வலத்தை நிறைவு செய்கிறோம்.
மூலவர் சந்நிதிக்குச் செல்ல யத்தனிக்கிறோம். முன்பே ஒரு சாளரத்தைப் பார்த்தோமே, அதற்கு இடது பக்கமாகச் சில படிகளில் ஏறித்தான் மூலவர் சந்நிதியை அடைய வேண்டும். படிகளில் ஏறி வலப்புறம் திரும்பியதும், நேராக ஸ்ரீநடராஜ சபை. நாம் இப்போது நிற்பது, ஸ்வாமி சந்நிதியின் மகாமண்டபம். நாம் பார்த்த சாளரம், இந்த மண்டபத்தின் முன்சுவரில் இருக்கிறது. நடராஜர் சபைக்கு முன்பாக, ஸ்வாமி வாகனங்களை வைத்திருக்கிறார்கள். சபைக்கு அடுத்த சந்நிதியில், உற்ஸவ மூர்த்தங்கள். மகாமண்டபத்திலிருந்து அர்த்த மண்டபம் செல்லும் வழியில், நந்தி மற்றும் துவார கணபதி. ஓங்கி நிற்கும் துவாரபாலகர்கள். உள்ளே, கருவறையில், அருள்மிகு பிரியநாதர்.
சுயம்புவான சிவலிங்கத் திருமேனி. சதுரபீட ஆவுடையார்; எழிலார்ந்த லிங்க பாணம்.
அண்ணாவும் கழுக்குன்றும் ஆயமலை அவை வாழ்வார் விண்ணோரும் மண்ணோரும் வியந்தேத்த அருள்செய்வார்கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரம் எரித்த பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே என்று பஞ்சமப் பண்ணில் சம்பந்தப் பெருமானும்,மறையணி நாவினானை மறப்பிலார் மனத்துள்ளானைக் கறையணி கண்டன் தன்னைக் கனலெரி ஆடினானைப் பிறையணி சடையினானைப் பெருவேளூர் பேணினானைநறையணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே
- என்று நாவுக்கரசர் பாடிப் பரவுகிற பெம்மான். அபிமுக்தேஸ்வரர், பிரியாஈஸ்வரர், ஆடவல்ல ஈஸ்வரர் என்றெல்லாமும் திருநாமங்கள் பூண்டவர். முக்தி தந்து பிறவிப் பிணி நீக்குபவர்; சபாநாயகராக ஆடுகிற அம்பலவாணர்; அன்பர் நெஞ்சங்களிலும், அம்மையின் வடிவிலும் பிரியாது விளங்குபவர்; கௌதம முனிவராலும், பிருங்கி முனிவராலும் வழிபடப்பட்டவர்.
ஸ்வாமி சந்நிதியைச் சுற்றி வருகிறோம். கோஷ்டங்களில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீவிஷ்ணு துர்கை ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். கோஷ்டச் சுவரில் மிருகண்டு முனிவரின் திருவுருவமும் உள்ளது. தனி மண்டபத்தில், தியானத்தில் அமர்ந்திருக்கிறார் சண்டேஸ்வரர்.
அடுத்து, அம்பாள் சந்நிதிக்கு வருகிறோம்; தனிக்கோயிலாகவே திகழ்கிறது. ஏலவார் குழலி, மின்னனையாள் அம்மை, திருமடந்தை அம்மை, அபின்னாம்பிகை எனும் திருநாமங்களைக் கொண்ட அம்பிகையை வணங்குகிறோம். இவள், சற்றே வித்தியாசமானவள். ஆமாம், சாதாரணமாக, அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருவாள். இங்கே, நான்கு திருக்கரங்கள் கொண்டவளாக, வீராசனத்தில் அமர்ந்து, அபய வரம் காட்டுகிறாள். சிவனோடு இரண்டறக் கலந்தவளாகவும் சிவனாரின் பாகம்பிரியாளா கவும் திகழ்கிற அம்பிகை, வீராசனமிட்டு அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி! அம்பிகையின் மேன்மையும் பெருந்தன்மையும் மென்மையும் மேதைமையும் நெஞ்சமெல்லாம் நிறைகின்றன. அழகான நறுமணமிக்க கூந்த லைக் கொண்டவள்; மின்னல் போன்று தோன்றி அருள் தருபவள்; சிவனாரின் திருவாட்டியானவள்; இறைவனாருடன் இடை வெளியே இல்லாமல் ஒன்று கலந்தவள்.
மூடக தீர்த்தம், சங்கு தீர்த்தம் என்று பலவிதமாக அழைக்கப்பெறுகிற சரவணப் பொய்கை தீர்த்தம், கோயிலின் பின்புறத்தில் இருக்கிறது.
ஏகன்அநேகன் என விளங்கி எங்கும் தமது திருவுருவாம்யோக ஞானநிஷ்கள உருஅருவன் சகல வடிவமதாய்பாகம் பிரியாதருள் பெற்ற பாவை மகிழப் பெருவேளூர்நாகமதன் மேல் பிரியா நாதன் திருத்தாள் வணங்குவாம்
- எனத் தலபுராணம் வாழ்த்துகிற வகையில், நாமும் ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீபிரியநாதரைப் பணிகிறோம்; வணங்கி விடைபெறுகிறோம்!

No comments:

Post a Comment