Friday, 4 August 2017

வள்ளியின் புகழ்பாடும் வெள்ளிகரம்!


காஞ்சியில் ராஜசிம்ம பல்லவன் கட்டிய கயிலாச நாதர் கோயில் ஒரு சிற்பக் கருவூலம். கயிலாயத்தை, காஞ்சியில் படைத் தான் அவன். இங்கு சிவலீலைகளைச் சித்திரிக் கும் அற்புதச் சிற்பங்களுடன், பதினாறு பட்டையுடன் கூடிய தாரா லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்தான் அவன்.
லிங்கத்தின் பின்புறக் கருவறைச் சுவரில் சோமாஸ்கந்தரை வடித்தான். இத்தகு பெருமை யால் இதை ‘தென் கயிலாயம்’ என்பர்.
ஒரு முறை தனது நாட்டின் வட பகுதிக்குப் பரிவாரங்களுடன் விஜயம் செய்தான் ராஜ சிம்ம பல்லவன்.
அவன் முகாமிட்ட இடம் _ மலை, வயல்கள் மற்றும் நீரோடைகள் நிறைந்த ஊர். அன்று சித்திரா பௌர்ணமி. அதனால் அந்தப் பகுதியே வெள்ளி போன்ற ஒளியுடன் காட்சியளித்தது. அங்கிருந்த மலைக்கு ‘ரஜதகிரி’ (வெள்ளி மலை) என்று பெயர். ஊரின் பெயர் வெள்ளிகரம் எனும் வெள்ளி நகர். இந்த இயற்கைச் சூழலைக் கண்ட மன்னன், ‘இங்கு கயிலைநாதனுக்கு ஒரு கோயில் அமைக்க வேண்டும்!’ என்று அன்றிரவே தீர்மானித்தான். காஞ்சி கயிலாசநாதரைப் போன்று பதினாறு பட்டையுடன் கூடிய ‘சந்திரகலா லிங்கத்தை’ பிரதிஷ்டை செய்வதுடன், பஞ்சபூதத் தலங்களில் ‘பிருத்வி’ (மண்- காஞ்சி)யை நினைவுறுத்தும் வகையில் ‘பிருத்வீச்வரர்’ என்று பெயரிடவும் தீர்மானித்தான்.
உடனே பணி தொடங்கப்பட்டது. அடுத்த சித்திரா பௌர்ணமியன்று கோலாகல அபிஷேக வழிபாடுகளுடன் கயிலைநாதனையும், அடியார்க்கு அன்னம் பாலித்து வெள்ளிகரம் மக்களையும் குளிர்வித்தான்.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அருணகிரிநாத சுவாமிகள் வள்ளி மலையை தரிசித்து தல யாத்திரையாக இங்கும் வந்து தரிசித்திருக்கிறார். வெள்ளிகரம் என்றதும் வள்ளியைக் கரம் பற்றிய கந்தனின் திருவிளையாடல் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. வள்ளியைத் தேடி தினைப்புனம் காத்த வள்ளிமலைக்குச் செல்கிறான் கந்தன். காதலால் அவளிடம் சாமர்த்தியமாகப் பேசுகிறான்.
‘‘வள்ளி! எனது ஊர் திருத் தணிகைக்கு வருகிறாயா? அது இங்கிருந்து 25 மைல். ஆனால், குறுக்கே சென்றால் நடுவில் ஒரே ஒரு வயல் மட்டும்தான்!’’ என்று அன்புடன் அழைத்தான். இந்த அன்பு வேண்டுகோள் அருணகிரியாரது திருப்புகழில் உள்ளது. மட்டுமின்றி, வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் (நவ ரத்ன திருப்புகழ்) வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள் மீது மையல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறார். இந்தப் பாடல்களில் வள்ளியைப் பற்றிப் பேசிய அருணகிரியார் தேவசேனையை மறந்தே போனார். இங்கு அருணகிரியார்க்கு எத்துணை அருளை வழங்கி இருப்பான் வள்ளியின் கணவன் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!
திருத்தணி- ராமகிருஷ்ண ராஜுபேட்- பள்ளிப் பட்டு சாலையில், பள்ளிப்பட்டுக்கு முன்பாக இடப் புறம் திரும்பும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் வெள்ளிகரத்தை அடையலாம்.
சிறிய கிராமம். கோபுரம் இல்லாத கிழக்கு நோக்கிய வாயிற்புறம். வெளிப்புற வாகன மண்டம் பழுதடைந்துள்ளது. உள்ளே பலி பீடம். நந்தி மண்டபம். கொடி மரம் இல்லை. தென்புற மதில் சிதைந்துள்ளது. வெளிப் பிராகாரத்தில் தென் மேற்கில் வெள்ளி விநாயகர். சந்நிதியும் விமானமும் பழுதடைந்துள்ளன. தென்புறமாகச் சந்நிதி நுழை வாயில். நுழைந்ததும் மகா மண்டபத்தில் விநாயகர்- பெரிய திருமேனியுடன். ஆறுமுகப் பெருமான் பன்னிரு கரங்களில் ஆயுதங்களுடன் மயில் மேல் அமர்ந்த கோலம். வலப் புறத்தில் கையில் வில்லுடன் கண்ணப்ப நாயனார் (அர்ஜுனன் என்றும் சொல் கிறார்கள்). இவர் அளித்த நைவேத்தியத்தை ஏற்றுக் கொண்ட காளத்திநாதன், தம் கண்ணில் குருதி ஒழுக வைத்து லீலை புரிந்ததை இந்தத் தலத் திருப்புகழில் குறிப்பிடுகிறார் அருணகிரியார். இங்குள்ள தூண் களில் கண்ணப்ப நாயனார், விஷ்ணு துர்கை முதலான சிற்பங்கள் உள்ளன. இந்த மண்டபத்தின் தென்பகுதியில் நவக்கிரக சந்நிதி உள்ளது.
அடுத்து அர்த்த மண்டபம். இங்கு விநாயகர், சோமாஸ்கந்தர், சண்டிகேச்வரர், தனி அம்மன், ஸ்ரீதேவி- பூமிதேவி சமேத விஜயராகவர் ஆகியோரின் ஐம்பொன் சிலைகள் உள்ளன. கஜபிருஷ்ட அமைப்பில் கருவறை. பூட்டப்பட்டிருந்தது. திறக்கச் சொல்லிப் பார்த்தபோது உட்புறத்தில் ஒட்டடையும், தூசியும், குப்பையும் நிறைந்திருந்தது. ராஜசிம்ம பல்லவன் பிரதிஷ்டை செய்த 16 பட்டைகள் கொண்ட ஷோடச தாராலிங்கம். கறுப்பும் வெள்ளையும் கலந்து காட்சி அளிக்கிறது. சுமார் நாலரை ஆண்டு களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு, பூஜையின்றிக் காணப்படுகிறது. சந்திரனின் பதினாறு கலைகளை, பட்டைகளாகக் கொண்டுள்ளதால் இது சந்திரகலா லிங்கம் எனப்படு கிறது. சாயுஜ்ய லிங்கம் என்றும் அழைப்பர்.
பல்லவர்கள் இந்த வகை லிங்கங்களை குளிர்ச்சி மிக்க கல்லில் வடிவமைத்தனர்.
இந்த தாரா லிங்கங்களை உச்சி வேளை யில் தொட்டாலும் குளிர்ச்சியாக இருக்கும். பல்லவ அரசர்கள் மட்டுமே பட்டைகளைத் தீட்டி தாரா லிங்கங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர். இந்த லிங்கத்தின் மீது தாரா பாத்திரத்தை வைத்து அபிஷேகம் செய்யும்போது, அபிஷேகத் தீர்த்தம் பட்டைகளின் வழியே பல கிளைகளாகப் பிரிந்து வழிவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்த தாரா லிங்க மூர்த்தியை திங்கட்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களில் அபிஷேகித்து வழிபடுவோர் பதினாறு பேறுகளும் பெற்று வாழ்வர் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
கோயில் வெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது கர்ப்பக்கிரகத்தின் பின்புறம் விமானம் இல்லாத முருகன் சந்நிதி மிகவும் குறுகலாக உள்ளது. முருகப் பெருமான் சுமார் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது.
அவர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்த அமைப்பு. இரு புறமும் வள்ளி- தேவயானை உள்ளனர். சிற்ப அமைப்பைப் பார்க்கும்போது இங்கு முதலில் முருகனும், வள்ளியும் மட்டுமே இருந்து, பிறகு தேவயானை சிலையை வைத்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெள்ளிகரத்துக்கு மட்டுமே உரியது.
வடக்குப் பிராகாரத்தில் தெற்கு நோக்கி அம்பிகை புவனேச்வரி சந்நிதி அமைந்துள்ளது. இங்கும் விமானம் இல்லை. சுமார் நான்கு அடி உயரத்தில் பாச- அங்குசம் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் அழகா கக் காட்சியளிக்கிறாள். பிருத்வி ஈச்வரருக்குப் பொருத்தமாக இந்த உலகெங்கும் வியாபித்து புவனத் தைக் காப்பவள் இந்த அம்பிகை. ஒரு காலத்தில் கார்வேட்டி நகர் ஜமீன்தார்களால் இந்தக் கோயில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
இதே ஊரில் உள்ள பிற கோயில் களும் சுமாரான நிலையிலேயே காணப்படுகின்றன. ஊரில் விளங்கும் ‘ரஜதகிரி’ மலைக் கோயிலின் பிரதான மூர்த்தியான சோமநாதேச்வரர், சுயம்பு மூர்த்தி. சிறிய லிங்கம். அம்பிகை மரகதவல்லி. இந்த இரு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியுள்ளன.
2003-ல் மலைக் கோயிலில் புதிய கொடிமரம் அமைத்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கு பௌர்ணமி மலை வலம் வருதல் நடைபெறுகிறது. மலைக்குப் படி கட்டும் திருப்பணியும் நடைபெறுகிறது.
ஊருக்கு வெளியே வயல்வெளிப் பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் பிரசன்ன விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது. அதைத் தாண்டி ஆறுமுக சுவாமி கோயில் ஒன்றும் சிவன் கோயில் ஒன்றும் முட்செடிகள் மற்றும் மரங்களால் சூழப்பட்டு நெருங்க முடியாத அளவில் அவல நிலையில் காட்சி அளிக்கின்றன (இங்கிருந்த ஆறுமுக சுவாமி வடிவமே தற்போது பிருதிவீச்வரர் கோயிலில் உள்ளதாகக் கூறுகிறார்கள்).
ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜர் கோயில், ராமர் கோயில் (பஜனை கோயில்), விநாயகர் கோயில் ஆகியவை யும் உள்ளன. வெள்ளிகரத்தைச் சுற்றிலும் உள்ள படுதலம், மோட்டூர், கம்மபள்ளி, திருமல்ராஜபேட்டை, திருநாகராஜபுரம், வெங்கராஜ குப்பம் ஆகிய ஊர்களோடு வெள்ளிகரம் ஊர்ப் பெருமக்களும் சேர்ந்து குசஸ்தலை ஆற்றங்கரையில் உள்ள தர்மராஜர் கோயிலில் ஆண்டுதோறும் பெரிய திருவிழா ஒன்றை நடத்துகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்களாம்.

தகவல் பலகை
தலத்தின் பெயர் : வெள்ளிகரம்
மூலவர் : ஸ்ரீபிருத்வீச்வரர் உடனுறை ஸ்ரீபுவனேச்வரி
அமைந்துள்ள இடம் : திருத்தணி- ராமகிருஷ்ண ராஜுபேட்- பள்ளிப்பட்டு சாலையில், பள்ளிப் பட்டுக்கு முன்பாக இடப்புறம் திரும்பும் சாலையில் சுமார் 2 கி.மீ. சென்றால் வெள்ளிகரம். சென்னையிலிருந்து சுமார் 125 கி.மீ. சென்னை யில் இருந்து நகரி சென்று அங்கிருந்து பள்ளிப் பட்டு வழியாகவும் வரலாம்.

No comments:

Post a Comment