பாண்டிய மன்னன் ராஜசேகரன் பராக்கிரமசாலி; போர்க் கலைகளில் வல்லவன். ஆனால், பரதம் குறித்து அரிச்சுவடியும் அறியாதவன். நாடாளும் மன்னன், தேசத்தின் கலாசார சின்னமான நாட்டியத்தின் அருமை தெரியாமல் இருக்கிறானே... என்று பக்கத்து நாட்டவர் கேலி பேசினர். இதைப் பொறுக்காத மன்னன், பரதம் கற்க முடிவு செய்தான்.
நாட்டியப் பயிற்சியைத் துவங்கினான். வெறித்தனமாக பரதம் கற்றவன், சுழன்று சுழன்று ஆடியதில் களைத்து ஓய்ந்தான். அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. 'நடனம் என்பது எவ்வளவு கடினமான விஷயம்? ஒருநாள் ஆடியதற்கே என்னால் வலி பொறுக்க முடியவில்லையே... எனில், ஒற்றைக் காலை ஊன்றி நிற்கும் சபாபதிக்கு எப்படியிருக்கும்?' என்று சிந்தித்தவன், கோயிலுக்கு ஓடோடி வந்தான்.
நேராக வெள்ளியம்பலத்துக்குள் நுழைந்தவன் ஸ்ரீநடராஜரை வணங்கி, ''அண்ணலே... ஒரு நாள் ஆடியதற்கே என்னால் வலி பொறுக்க முடியவில்லை, தாங்கள் எப்படி சதாசர்வ காலமும் ஒற்றைக் காலை ஊன்றியபடி ஒரே நிலையில் இருக்கிறீர்கள்? எனக்காக, கால் மாற்றி ஆடுங்கள்!'' என்று கண்ணீர் மல்க வேண்டினான். மறு கணம்... இடக் காலை ஊன்றி; வலக்காலை உயர்த்தி, கால் மாற்றி நடனக்கோலம் காட்டினார் நடராஜர்!
இந்தப் பெருமானுக்கு உரிய திருவாதிரை தினத்தன்று, அதிகாலை 330 முதல் 530 மணி வரை பதினாறு அபிஷேகங்களும் நடை பெறுகின்றன. இந்த அபிஷேகத்தைக் காண்பது விசேஷம் என்பதால், எண்ணற்ற பக்தர்கள் ஆலயத்தில் குவிகின்றனர்! நடராஜருக்குத் தைலக்காப்பும் நடைபெறும். பிறகு வெள்ளிக் கவசத்தை சுத்தம் செய்து அணிவிக்கிறார்கள். இந்த தினத்தில் மூலவர் சிவபெருமானுக்கு (மதுரை சொக்கருக்கு) அபிஷேகம் கிடையாது என்பது குறிப்பிடத் தக்கது!
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு, திருவெம்பாவை பாடி வெள்ளி அம்பலத்தானை தரிசிப்பதுடன், அவர் சந்நிதியில் தரப்படும் 'களி'யமுதை வாங்கி உண்டால், சகல துன்பங்களும் தீருமாம். என்ன... மதுரைக்குப் போவோமா!
கோயில் தொடர்புக்கு போன் 0452- 2344360 / 2349868
No comments:
Post a Comment